Wednesday, December 29, 2010

புத்தாண்டு வாழ்த்து

இடுகம்பாளையம் ஆஞ்சநேயர் கோவில் சுவரில் காணப்பட்ட “வாழ்க்கைக் கணக்கே” புது வருட வாழ்த்தாக வாசக அன்பர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். யாவருக்கும் மகிழ்ச்சி தரும் வருடமாக 2011 இருக்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன்
(படத்தை சுட்டினால் பெரியதாக தெரியும் )


அன்புடன்
கபீரன்பன்

Tuesday, October 12, 2010

ஆப்பிரிக்க ஆக்கிரமணம்


[picture courtesy en-wikipedia ]

பெங்களூரில் இப்போது எங்கு பார்த்தாலும் இந்த ஆரஞ்சு வர்ணப்பூக்கள் இறைந்து கிடக்கின்றது. சாலை ஓரங்களில் நிழலுக்காகவும் அழகுக்காகவும் நடப்பட்ட இம்மரங்கள் துப்புறவுத் தொழிலாளர்களுக்கும் பல இல்லத்தரசிகளுக்கும் பெரும் தலைவேதனை.

வருடத்திற்கு இருமுறை பூக்கும், ஜனவரி -மார்ச்; செப்டம்பர்- நவம்பெர். இம்மரத்தின் பூக்கள் அளவில் செம்பருத்திப்பூ போல பெரிதாக இருக்கும்.

மரம் முப்பது அடிக்கும் மேல் உயரம் எட்டுவதால் பல வீட்டு மாடிகளிலும் இதன் பூக்கள் கொட்டிக்கிடக்கும். அதை கவனிக்காமல் விட்டால் மழைநீர் குழாய்களை அடைத்துக் கொண்டு மாடியில் நீர் தேங்க ஆரம்பித்துவிடும். இதனால் சுவரில் நீர் கசிந்து உட்சுவர்களில் ஈரம் படர ஆரம்பிக்கும்.
Madeira 2004 SPATHODEA CAMPANULATA

சரி வாசனையாவது உண்டா என்றால் அதுவும் இல்லை. பூஜைக்கும் பயன்படுவதில்லை. இது என்ன மரம் என்ற தேடலில் ஈடுபட்ட போது கிடைத்த சில தகவல்கள்.

இதன் பெயர் ஆப்பிரிக்கன் டூலிப் (African tulip ; spathodea campanulata). கன்னடத்தில் இதை "நீர்காயி மர" என்றும் சொல்வார்கள். மொட்டுகளுக்குள் நீர் நிரம்பி அதை அழுத்தினால் பீச்சியடிக்கும் குணம் உடையதால் அந்த பெயர். தமிழில் பட்டாடி (patadi) என்பதாகக் கண்டேன்

மரத்தின் விதைகள் அளவில் மிகச் சிறியன. ஒரு கிலோ விதையில் 129000 லிருந்து 300000 விதைகள் வரை இருக்கக்கூடுமாம். காற்றின் மூலம் விதைகள் எளிதாக பரவி விடும். இதில் உள்ள தேனை தேன் சிட்டு, எறும்புகள், தேனீக்கள் தேடி வருமாம். இதன் மகரந்தத்தில் உள்ள நச்சுத்தன்மையால் சில பூச்சிகள் மடிந்து போகுமாம்.

ஆப்பிரிக்காவில் இதன் விதைகளை உணவாகப் பயன் படுத்துகின்றனராம். அதேசமயம் அதில் உள்ள ஒரு நச்சுத்தன்மையை வெந்நீரில் கொதிக்க வைத்துப் பிரித்து மிருகங்களை வேட்டையாட அம்பின் நுனியில் காயவைத்து பயன்படுத்துவது உண்டு.

ஆப்பிரிக்க பழங்குடியினர் இதை மருந்தாகவும் பயன்படுத்துகின்றனராம். காய்ச்சல், நீரிழிவு நோய்களுக்கு மரத்தின் பட்டையை கொதிக்க வைத்து பயன்படுத்தலாம். தற்போது இதன் இலைகளிலிருந்தும் பூக்களிலிருந்தும் பிரிக்கப்படும் சில மூலக்கூறுகளுக்கு சரும வியாதிகளையும் புண்களையும் ஆற்றும் சக்தி உண்டு என்று கண்டறிந்துள்ளனர். ஆரம்ப நிலை மலேரியாவைத் தடுக்க மரப்பட்டையின் கஷாயம் வெகுவாக உதவுகிறது சமீபத்திய விஞ்ஞான சோதனைகள் தெரிவிக்கின்றன.

இந்த மரம் மிகவும் எளிதாக முறிந்து விழக்கூடியது. அதிகக் காற்றால் முறிந்து விழும் இதன் கிளைகள் பெங்களூர் வாகன நெரிசலில் நொந்து கிடக்கும் மக்களை மேலும் நோகச் செய்கிறது. அது அடுப்பெரிக்கக் கூட பயன் படுவதில்லை. எளிதில் தீப்பிடிக்காது.

ஆப்பிரிக்கன் டுலிப் என்ற இந்த மரத்தைக் கண்டு பல நாடுகள் மிகவும் பயப்படுகின்றன. வேகமாக பரவக்கூடிய தன்மையால் பிற மர வளங்களை அழித்து விடும் அபாயம் உண்டு என்று ஆஸ்திரேலியா, ஃபிஜி, ஹவாய், பிரேஜில் போன்ற நாடுகளில் இதன் பரவலைத் தடுக்க முன்னேற்பாடுகள் செய்து வருகின்றனர்.

நம்மவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?. அதன் பயன்களை எண்ணிப்பார்த்து முறையாக பயன்படுத்திக் கொள்ள திட்டங்கள் வகுப்பார்களா அல்லது பிற மரங்களை அழிக்கும் வரை வேடிக்கைப் பார்ப்பார்களா ?

Thursday, September 30, 2010

பழைய வேர் புதுத் தளிர்

நூறு வருடங்களுக்கு மேலான சர்வகலாசாலைக்கு புதுப்புது மாணவர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். அதனுடைய நூறு வருட பாரம்பரியத்தில் அனைவருக்கும் பெருமிதம். பழம் பெரும் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேரும் பொழுது புது தொழிலாளிக்கு ஒரு கூடுதல் பொறுப்பு. அதன் பெருமைக்கு களங்கம் வராதவாறு பணியாற்ற வேண்டும்.



[படம் நன்றி : இண்டியா பிக்ஸ் டாட் காம் ]



வெள்ளி விழா, பவழ விழா எல்லாம் கொண்டாடுவதும் இதை நினைவூட்டத்தானே. நமக்கென்று ஒரு வேர் இருக்கிறது. அது கலாசாரத்தின் ஆழத்திலிருந்து மனிதர்களை நல்வழிப் படுத்திக் கொண்டே இருக்கிறது.

ஏதோ ஒரு காரணத்தினால் இலைகளை பூஞ்சான் நோய் தாக்கினாலும் பெரிய மரம் அவற்றை உதிர்த்து விட்டு மீண்டும் புதிதாக தளிர் விடத் தொடங்குகிறது. அப்படி உயிர்த்து வரும் புது நம்பிக்கை ’மரத்தின் ஆழமான வேர்களால் அல்லவோ’ என்று DVG இந்த இடுகையின் பாடலில் விளக்குகிறார்.


புதுத்தளிரும் பழவேரும் மரத்திற் கழகு
புதுயுக்தி பழந்தத்துவம் வாழ்நெறிக் கழகு
புதுஞானம் மெய்ஞானம் இணைதலு மழகு
இதுமேன்மை மனிதருக்கே- மக்குத் திம்மா
(பழவேர் = பழமையான வேர்)

மனித குலத்துக்கு புதுப்புது விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும் அவசியம். அவை புதுத் தளிர் போல. சூரிய ஒளியிலிருந்து இலைகள் எப்படி ஒளிசக்தியை மரத்திற்கான ஊட்டச் சத்தாக மாற்றுகின்றனவோ அப்படி புது யுக்திகள் நம் வாழ்க்கையை உயிர்ப்புடனும் துடிப்புடனும் இயங்கச் செய்கின்றன. ஆனால் அதற்கு அந்த சக்தியை வழங்குவது மரத்தின் ஆழமான வேர்கள் என்பதையும் மறக்கலாகாது. ஆன்மீகத்தின் மூலம் கண்டறியப்பட்ட அற நெறி வாழ்க்கையையும் கை விட்டு விடலாகாது. எப்போதும் பழமையுடன் புதுமை கலந்து இயங்குவதே மனிதகுலத்துக்கு மேன்மை தரும் என்று குறிப்பிட்டுச் சொல்கிறார் DVG.

கீழே உள்ள பழைய மரத்தில் ஒரு சிற்பி பல்விதமான பறவைகள், மிருகங்கள், ஊர்வன செதுக்கி இருக்கி இருக்கிறான். உங்களால் எவ்வளவு கண்டு பிடிக்க முடியும் என்று முயற்சி செய்யுங்கள். பழமையில் புதுமை !!



இது தெற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் பழைய மரம். பெரிய படத்தைக் காண இங்கே சுட்டவும்.

Thursday, August 26, 2010

தமிழ் வளர்க்கத் தோள் ( வலைப்பூ) கொடுங்கள்

தமிழ் கருவூலம் என்கிற தலைப்பில் எளிய அரிய கருத்துகளை வாசகர்களுக்கு விட்ஜெட் மூலமாக படிக்கச் செய்யும் விட்ஜெட் பொறிகளைத் தயாரிக்கும் முயற்சியை சிறிது காலமாக செய்து வருகிறேன்.

இது அப்படியொன்றும் பிரம்மவித்தையல்ல. :) கொஞ்சம் நேரம் ஒதுக்க வேண்டும் அவ்வளவுதான்.


(மேலுள்ள இணைப்பைச் சுட்டினால் முழு விவரங்களும் அறியலாம்)

கடந்த ஒரு வருட காலமாக பரிசோதித்து இணைப்பில் அவ்வப்போது வந்த பல குறைகளை களைந்து வெளியிடுகிறேன்.

மேலும் சிலவற்றை செய்யும் முன் விவரம் அறிந்த வாசகர்களின் கருத்தை அறிந்து சீர்படுத்த விழைகிறேன். இந்த விட்ஜெட்களை தங்கள் igoogle பக்கத்திலோ அல்லது வலைப்பூக்களிலோ பொருத்தி வாசகர்களுக்கு பயன்படுமாறு செய்யலாம்.



[படத்தை சுட்டி பெரிதாக்கி பார்க்கலாம்]

நம் வலைப்பூவின் அமைப்புக்கு ஏற்ப உயர அகலங்களை மாற்றிக் கொள்ள கூகிள் வகை செய்கிறது. அதற்கான விவரங்களும் மேலே கொடுக்கப்பட்ட இணைப்பில் உள்ளது.

ஸ்ரீ ரமணரின் உபதேச சாரத்தையும் தமிழ் பொருளுடன் தருவதற்கும் முயற்சி செய்திருக்கிறேன். [ http://tinyurl.com/ramanawidget ]. இது தினம் ஒரு கருத்தாக முப்பது பாடல்களையும் முப்பது நாட்களில் படிக்க வகை செய்கிறது. மனப்பாடம் செய்ய விரும்புவர்களுக்கு igoogle-ல் பொருத்திக் கொள்வது பயனளிக்கும்.

தட்டச்சுப் பிழை, பொருட்பிழை போன்ற தவறுகளை சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்ள உதவியாக இருக்கும். அப்படியே விட்ஜெட்டை பொருத்தியபின் அதை பின்னூட்டத்திலோ தனிமடலிலோ தெரிவித்தால் மகிழ்வேன்.

Thursday, July 29, 2010

கறையான் புற்றில் பாம்பு


(Thanks :photo courtesy :http://www.johnbutlerart.com)

மக்குத்திம்மன் கவிதைகள் # 302

இயற்கையின் விந்தைகளை எழுதித் தீராது.

கறையான்கள் கட்டும் புற்றுகள் பெரும் மழையிலும் காற்றிலும் எப்படிக் கரையாமல் உறுதியாக நிற்கின்றன ? அவைகளின் உமிழ்நீரில் வரும் அந்த பசைக்கு மண்ணை உறுதியாக பிணைக்கும் சக்திதான் என்ன !! அடிப்பக்கம் பெரிதாகவும் மேலே செல்லச் செல்ல குறுகியும், எத்தனை வருடங்கள் ஆயின்ம் நிலைபெயராத வகையில் அமைக்கும் கட்டிட வல்லமையை எப்படிப் பெற்றன? மனிதர்களை வெட்கப்படச் செய்யும் இணைந்து தொழிலாற்றும் ஒற்றுமையை எப்படிக் கற்றுக்கொண்டன ? கேள்விகள் நீண்டு கொண்டே போகின்றன.

அதே படைப்பில் காக்கையின் கூட்டில் முட்டையிடும் குயிலையும், கறையான் கட்டிய புற்றில் பாம்புகள் குடி போவதையும் காண்கிறோம். ஒரு சில ஜீவன்களுக்கு கொடுக்கப்பட்டத் திறமை ஏன் எல்லா ஜீவன்களுக்கும் ஒரே அளவில் கொடுக்கப்படவில்லை?

இப்படி ஏகப்பட்ட கேள்விகளுக்கு விடைகிடைக்காது. அப்படியே மனிதர்களிடையே உள்ள வேறுபாடுகளுக்கும் யாரும் விடைகாண முடியாது என்பதை மக்கு திம்மனின் இந்த பாடலில் காணலாம்.

சிறுசிறுத் துகளாய் கறையான் மண்சுமக்கும்
பெரு முனைப்புடனே அவைதம் புற்றமைக்கும்
கருநாக மொன்று அதிலே குடியேறும் -உழைப்போர்
பெருவாரி கதையிதுவே -மக்குத் திம்மா


இந்த பாடலின் உட்கருத்தாக DVG என்ன சொல்ல விழைகிறார் என்ற கேள்வி எழலாம். எனக்கு புரிந்த வகையில் சொல்வதனால்

உன் கடமை ஆற்றிக்கொண்டு இரு; பலன்களை கணக்குப் பார்க்காதே. ஏதோ ஒரு பெரிய காரணத்தால் நமக்கு விளங்காத வகையில் தெய்வம் தன் விருப்பத்தை நடத்திக் கொண்டு செல்கிறது. அப்படிப்பட்ட முரண்பாடுகள் கறையான் - பாம்பு போன்று இயற்கையிலும் உண்டு. எனவே ஒருவர் தன் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கவில்லை என்றோ அடுத்தவன் தன் உழைப்பைத் திருடிவிட்டான் என்றோ புலம்பிக் கொண்டிருப்பதில் பயனில்லை என்ற உண்மை புரிந்தால் மகிழ்ச்சியை இழக்காமல் இருக்கலாம்”

என்பதே ஆகும்.

மொழியாக்க முயற்சி 2


துகள்துகளாய் கறையான் எறும்புகள் மண்ணைச் சுமக்கும்
பகலிரவாய் பூசி உழைத்துத் தம்கூடு சமைக்கும்
புகுமொரு விடசர்ப்பம் தன் புற்றாய் அதைக் கொள்ளும்
வெகுமனிதர் உழைப்பின் கதையிது -மக்குத் திம்மா

Sunday, June 27, 2010

மக்குத்திம்மன் கவிதைகள் (2)

1920-ல் ஆசியாவிலேயே மிகப்பெரிய அணை எனக் கருதப்பட்ட கிருஷ்ணராஜ சாகர் அணை மைசூர் அருகே கட்டப்பட்டு வந்தது. அதன் தலைமை பொறிஞர் சர்.M.விஸ்வேசுவரய்யா ஊரூராக பயணம் செய்து சர்வே செய்ய வேண்டியிருந்தது. உணவகங்கள் இல்லாத அக்காலத்தில் சிறிய ஊர் ஒன்றில் அன்பர் ஒருவரின் வீட்டில் மதிய உணவு ஏற்பாடு ஆகியிருந்தது. மலர்ந்த முகத்துடன் சர் MV சாப்பிட்டு முடித்தார். அவருக்குப் பின் சாப்பிட்டவர்களுக்கு உணவில் உப்பின் அளவு அதிகமாகி விட்டிருந்தது தெரிந்தது. சமைத்தவர் மறந்து இருமுறை அள்ளிப் போட்டாரோ என்னமோ !

பின்னால் சர் MV யிடம் ’சாப்பிடும் போது ஏன் இதைச் சொல்லவே இல்லை’ என்று வினவியதும் ” ஒவ்வொரு நாள் ஒவ்வொரு மாதிரி இருக்கும், நமக்கு உணவின் ருசியா முக்கியம் “ என்று பதிலளித்தாராம்.

அவருக்கு இருந்த கடமை உணர்வு இன்றும் கர்நாடகமெங்கும் போற்றப்படுகிறது. அவருடைய நண்பர் ஒரு மாலையில் அவரை சந்தித்து உரையாட சென்ற போது அலுவல் கோப்புகளை பார்த்துக் கொண்டிருந்தார். அவரை அமரச் சொல்லி விட்டு மேலும் சிறிது நேரம் கோப்புகளில் கவனமாய் இருந்தார். வேலை முடிந்ததும் கோப்புகளை ஒரு ஓரமாக அடுக்கி, எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியை அணைத்து வேறொரு மெழுகுவர்த்தியைப் பற்ற வைத்து நண்பருடன் அளவளாவத் துவங்கினார்.

நண்பருக்கோ ஆச்சரியம். ’அதே மெழுகுவர்த்தி இருந்திருக்கலாமே’ என்று கேட்டார். “ அது அலுவல் காரியங்களுக்காக வாங்கப்பட்டிருப்பது. இப்போது எரிவது என் தனிப்பட்ட காரியங்களுக்காக நான் வாங்கி வைத்திருப்பது “ என்று விளக்கினாராம்.

பாரதத்தின் முதல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது விஸ்வேசுவரய்யாவுக்கு 1955-ல்

D.V.குண்டப்பா அவர்கள் சிறிது காலம் சர் எம்.விஸ்வேசுவரய்யாவுக்கு உதவியாளராக இருந்திருக்கிறார். அதன் தாக்கமோ என்னவோ மக்குத் திம்மனாகிய தனக்கு சொல்லிக் கொள்வது போல் அவர் சொல்லும் புத்திமதியை கேளுங்கள்.

சிரத்தையுடன் கருமம் செய்திடு, சிறிதெனாமல் |
பிரசாதமாய், கிடைத்ததை புசித்திடு முணகாமல்||
மறவாமல் மறைபொருளை, சுமந்திடு இகபாரம்|
புறப்படு கூப்பிட்டதும், அழாமலே -மக்குத்திம்மா||


(மறைபொருள் = வாழ்க்கையின் உட்பொருள், முக்திக்கான தேடல்)

Sunday, May 30, 2010

மக்கு திம்மன் கவிதைகள்

தேவனஹள்ளி வெங்கடரமணய்யா குண்டப்பா-வை தெரிந்திருக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு இருந்திருக்காது. அவரையே D.V. குண்டப்பா என்ற பெயரில் சிலர்- குறிப்பாக கர்நாடகவாசிகள் -கேட்டிருக்கக்கூடும். அவரை DVG என்று சுருக்கமாகவும் குறிப்பிடுவர் (1889-1975).

பத்தாவது வகுப்பிற்குப் பின், வறுமை காரணமாக அவருக்கு படிப்பைத் தொடரமுடியவில்லை. உலகமே பள்ளிக் கூடமாயிற்று குண்டப்பாவிற்கு. சுயமுயற்சியில் கன்னடம் ஆங்கிலம் மற்றும் வடமொழி கற்று அவைகளில் மிக உயர்வான தேர்ச்சி அடைந்திருந்தார். அவருக்கு பத்திரிக்கைத் துறைப் பிடித்திருந்தது. ஒரு வருட காலம் ஒரு கன்னட பத்திரிக்கையில் வேலை செய்த பின்னர் தானே Karnataka என்னும் பெயரில் ஆங்கிலப் பத்திரிக்கை நடத்தினார். அது அவரது நேர்மைக்கும் நடுநிலைமைக்கும் பெயர் வாங்கித்தந்தது. அவர் கர்நாடக பத்திரிக்கையாளர் சங்கத்தில் 1928 -ல் ஆற்றிய உரை இன்றும் இளம் பத்திரிக்கையாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் மிகவும் பொருந்தும் என்று சொல்லப்படுகிறது.

அவர் எழுதிய கோபாலகிருஷ்ண கோகலேயின் வாழ்க்கை வரலாறு மற்றும் திவான் ரங்காசார்லுவின் வரலாறு தகவல்களைத் திரட்டுவதில் அவருக்கு இருந்த முனைப்புக்கும், எழுத்தாற்றலுக்கும் எடுத்துக்காட்டு என்பர். (திவான் ரங்காசார்லு மைசூர் சமஸ்தானத்தை ஒரு முற்போக்கு சமஸ்தானமாக மாற்றிய பெருமை உடையவர். டிவிஜி பிறப்பதற்கு நான்கு வருடம் முன்பே அவர் இயற்கையெய்தினார்).

இதைத் தவிர ஓமர் கயாம்-ன் கவிதைகளையும் ஷேக்ஸ்பியரின் மேக்பெத்தையும் கன்னட மொழிக்கு மொழி பெயர்த்திருக்கிறார். அவர் அறுபத்து ஐந்து புத்தகங்கள் எழுதியுள்ளார். அவரது ஸ்ரீமத் பகவத்கீதா தாத்பர்யம் என்னும் விளக்க நூல் 1976 ல் சாகித்ய அகடெமி விருது பெற்றது

இன்று கன்னட சாகித்ய உலகம் அவரை நினைவு கூர்வது அவரது மகத்தான 'மன்கு திம்மன கக்கா'(Mankuthimmana Kagga) எனப்படும் தத்துவக் களஞ்சியத்திற்காகத்தான். எளிய சந்தத்தில் சாமானியனுக்கும் புரியும் வகையில் வாழ்க்கையின் மேடு பள்ளங்களை சமபாவனையில் எதிர் கொள்ள அவர் எழுதியிருக்கும் இந்த செய்யுள்கள் கன்னட பகவத்கீதை என்று போற்றப் படுகிறது. 935 பாடல்கள் கொண்டது. 1943-ல் இதன் முதற்பதிப்பு வெளிவந்தது. இதுவரை பதினான்கு பதிப்புகள் வெளியாகியுள்ளன.
(photo courtesy : www.sssglobal.org)

Foggy fool's farrago என்றுதான் தன் மக்கு திம்மனை (கன்னடத்தில் மன்கு என்றால் மக்கு,மந்தபுத்தி என்று பொருள்) குண்டப்பா வருணிக்கிறார். திம்மா என்பது திம்மப்பா அல்லது திம்மையா என்ற கற்பனை நாயகனை சுருக்கி அழைக்கும் பெயர்.

அவருடைய மக்கு திம்மனுக்கு ஞானபீட விருது கிடைக்காதப் பொழுது பலரும் கர்நாடகத்தில் பெரிய ஏமாற்றத்திற்குள்ளாகி விருதைத் தீர்மானிக்கும் குழு அங்கத்தினர்களை குறை கூற முற்பட்டனர். அப்போது அவர் நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதம் அவர் மனதில் எவ்வளவு உயர்ந்தவர் என்பதை உணர்த்திற்று. பன்மொழி இலக்கியங்களை ஒரே தராசில் அளவிட முடியாது என்பதையும் விருதுகள்தாம் எழுத்தாளனின் படைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கு அடையாளம் என்று நினைப்பது தவறாகும் என்பதையும் சுட்டிக்காட்டினார். எழுத்தாளனின் படைப்பின் சிறப்பை நிர்ணயிப்பது காலம் ஒன்றே என்பதால் மக்கு திம்மன், காலம் நிர்ணயித்தபடி மக்கள் மனதில் வாழட்டும் என்று கூறினாராம்.

இன்று ஆன்மீகத் துறையிலும் இலக்கியத்துறையிலும் அவருடைய மக்கு திம்மன் ஆராய்ச்சிக்கான பொருளாகி விட்டான். R.K. லக்ஷ்மண் அவர்களுடைய "காமன் மேன்", கார்ட்டூன் உலகில் எப்படிப் பிரசித்தமோ அப்படி கர்நாடகத்தில் கன்னடம் படித்த யாவருக்கும் மன்கு திம்மன் பிரசித்தம்.

மக்கு திம்மனை மேற்கோள் காட்டாத ஆன்மீக உரையாளர்களே இன்று இருக்கமுடியாது. "baaLu jatka bandi" (பிழைப்பு ஜட்கா வண்டி) என்கிற பாடல் மிகவும் புகழ் பெற்றது. சின்மையா மிஷனை சேர்ந்த சுவாமி பிரம்மானந்தாவின் "மக்கு திம்மன்" பற்றிய விளக்கவுரைகள் குறுந்தகடுகளாக வெளிவந்துள்ளன. டாக்டர் ஆர். கணேஷ் என்ற பிரபல ஆன்மீக விரிவுரையாளரும் திம்மனைப் பற்றிய குறுந்தகடுகள் வெளியிட்டுள்ளார்.

தனக்கென்று செல்வம் ஈட்டுவதில் குண்டப்பாவிற்கு ஆர்வம் இருக்கவில்லை. கர்நாடக அரசு அவருக்கு அளிக்க முன்வந்த ஓய்வு ஊதியத்தை அவர் மறுத்து விட்டார். இலக்கிய சேவைக்காக அவருக்கு 1970ல் அளிக்கப்பட்ட ஒரு லட்ச ரூபாய் பணமுடிப்பை அவர் சமூகப் பணிக்கென கொடுத்து விட்டார்.

பெங்களூர் பசவன்குடியில் கோகலே இன்ஸ்டிட்யூட் (Gokhale Institute of Public Affairs) என்பது திரு டிவிஜி அவர்களால் துவக்கப்பட்டு இன்று மிகப்பெரும் இலக்கிய சேவையிலும் சமூக சேவையிலும் ஈடுபட்டுள்ளது. 1974 இந்திய அரசாங்கம் அவருக்கு பத்மபூஷண் விருது அளித்து கௌரவித்தது.

மக்குதிம்மன் பாடல்களின் சில மாதிரி :

சரியாகவில்லை அது, சரியில்லை இதுவென்று
பஞ்சணையில் முள் பரப்ப வேண்டாம்.

நிறைவாகும் ஒன்று, குறையாகும் இன்னொன்று
வாழ்க்கையில் என்றும் முரண் உண்டு -மக்குதிம்மா


அன்னப் பசியினும் சொன்னப்பசி தீவிரம்
சொன்னப் பசியினும் ஆண்பெண் உறவாம்

மன்னு புகழாசை யாவினும் தீவிரம்
தின்னு மவர் நெஞ்சம் -மக்குதிம்மா
(சொன்னம்=சொர்ணம், பொருளாசை)


வானி லுண்டோ பறவைக்கு வரைபடம்
மீனுக் குண்டோ நீந்திட வரையறை
ஏனோ வொன்று தள்ளுது ஒன்றிழுக்குது

நீனொரு காற்றிலாடும் பட்டம்- மக்குதிம்மா


நாளுக்கு நாள் கணத்திற்கு கணமாய்
நாளைய கவலை விட்டு வாழ்ந்திடு
விவரங்கள் தொகுப்பவன் வேறொருவன்
கழித்திடு உன் பிறவிதனை - மக்கு திம்மா

[கொசுறு: DVG பெங்களூரில் எங்களது பாட்டானாரின் வீட்டு பின் தெருவில் குடியிருந்தார் என்பதும் எங்களது பாட்டனாருக்கு நல்ல நண்பர் என்றும் அவ்வப்போது அவரது கையெழுத்துப் பிரதிகளை எனது பாட்டனார் சரி பார்த்துக் கொடுத்திருக்கிறார் என்பதை என் தந்தை வழியாக சமீபத்தில் அறிந்த போது பெருமையாக இருக்கிறது.]

பசவனகுடி, ப்யூகல் ராக் பூங்காவில் டிவிஜிக்கு வைக்கப்பட்டிருக்கும் சிலை. அவர் வாழ்ந்த காலத்தில் அவர் மாலை வேளைகளில் நண்பர்களோடு உரையாட மிகவும் விரும்பிய இடம் என்பதால் அதே இடத்தில் அவருக்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது.

Monday, May 3, 2010

கரி வாங்கலியோ.....கரி

பங்குச் சந்தை போல் உருவாகி வரும் கரி-மாற்று (Carbon exchange) வியாபாரத்தைப் பற்றிய சிறு அறிமுகம்.

கார்பன் டிரேடிங் என்பது சமீபகாலமாக புழக்கத்தில் இருக்கும் ஒரு சொல். நான் இதை கரி வியாபாரம் என்று சுருக்கமாக தமிழ்படுத்திக் கொள்கிறேன். வேண்டுமானால் சர்வதேச கரி-மாற்று வாணிகம் என்றும் வைத்துக் கொள்ளலாம் :))

கூடிவரும் புவி வெப்பம், கடல் மட்ட உயர்வு, உருகும் பனிப்பாறைகள், காற்றில் கரியமலவாயு அதிகரிப்பு, க்யோடோ தீர்மானங்கள் இத்யாதி போன்றவைகளுக்கும் இந்த கரி வியாபாரத்திற்கும் பெரிய தொடர்பு உண்டு.

க்யோட்டோ பற்றிய விவாதங்கள் செய்திகளாக வந்தபோது மனதின் மூலையில் ஏதோ ஒரு கூத்து நடந்து கொண்டிருக்கிறது என்ற எண்ணம் தோன்றிக் கொண்டிருந்தது. ஆனால் முழு உண்மையை புரிந்து கொள்ளாமல் எதைப் பற்றியும் விமர்சிக்கக் கூடாது என்ற எண்ணத்தால் வாளாவிருந்தாயிற்று.

சமீபத்தில் இவைகளைப் பற்றி வேறு ஒரு காரணத்திற்காக சற்று ஆழ்ந்து படிக்க நேர்ந்தது. அதன் விளைவே இந்த கட்டுரை. கட்டுரையின் முடிவில் ஏற்கனவே பாரபட்சமான கருத்துக் கொண்டிருந்ததால்தான் இப்படி முடித்திருக்கிறீர்கள் நீங்கள் குற்றம் சாட்டினால் அதையும் ஏற்றுக் கொள்கிறேன்.

முதற்படியாக மேற்கத்திய நாடுகள்- குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள்- விஞ்ஞானிகள் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் கூக்குரலுக்கு செவிசாய்த்து இந்த கரியமலவாயு அதிகரிப்பு கவலை தரக்கூடிய விஷயம் என்பதை ஏற்றுக் கொண்டு இதற்கு பரிகாரம் காண வேண்டும் என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளன.

ஒரு அமெரிக்கப் பிரஜை ஆண்டொன்றுக்கு 24 டன் கரியமலவாயு உற்பத்திக்கு காரணமாகிறான். அதுவே ஒரு சீனன் 4 டன் உற்பத்திக்கும் இந்தியன் 2 டன் உற்பத்திக்கும் காரணமாகிறான். உலக அளவில் நபருக்கு 6.2 டன் அளவை மிஞ்சாத வரைக்கும் சரியே என்ற கருத்து நிலவுகிறது.

இதன் மூலம் அமெரிக்கா இந்த சுற்றுசூழல் மாசுபாட்டுக்கு முக்கிய பொறுப்பு ஏற்க வேண்டியதாயிற்று.

இவ்வகை அளவீட்டை கார்பன் ஃபுட் பிரிண்ட் (Carbon foot print) என்கின்றனர். தமிழில் கரிமல-அடியொற்று அல்லது எளிமையாக ”கரியொற்று” என்று சொல்லலாம்.

புதுப்பிக்க இயலாத கச்சா எண்ணெய் மற்றும் நிலக்கரியை அதிகமான அளவில் பயன்படுத்தி வருவதால் இது அதிகமாகிவிட்டது. பல லட்சக்கணக்கான ஆண்டுகளில் பூமிக்கு அடியில் சேமிக்கப்பட்ட சூரிய சக்தி திடீரென்று நூறு வருடங்களுக்கு உள்ளாக எரிக்கப்பட்டு வெளிப்படும் போது காற்றில் கரிமல வாயுவின் அளவு கூடுகிறது.

பெரியவர்களெல்லாம் ஒரு வழியாக கூடி 1990 நிலவரப்படி வெளியிட்ட கரிமல அளவை வரும் ஐந்து ஆண்டுகளில் (2008-2012) 5.2 % குறைக்க வேண்டும் என்று தீர்மானித்தனர். ரஷ்யாவிற்கு குறைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆஸ்திரேலியா 8% அதிகம் எரித்துக் கொள்ளலாம் ! ஏனெனில் இந்த நாடுகளில் கரியமல வெளிப்பாடு நபர் ஒருவருக்கு 6.2 டன் அளவை விட மிகக் குறைவாகவே இருக்கிறது.

விவரமாகச் சொன்னால் 2010 ற்கு எதிர்பார்க்கப்பட்ட அளவை வைத்துப் பார்த்தால் இது 29% குறைவாக வேண்டும். அதாவது ஆண்டொன்றுக்கு அமெரிக்கா 7%, ஐரோப்பிய நாடுகள் 8%, ஜப்பான் 6% என்ற அளவில் வருடா வருடம் குறைத்துக் கொண்டே போக வேண்டும்.

இதை ஒவ்வொரு நாட்டிலும் பெரும் நிறுவனங்கள் முதல் தனி பிரஜை வரை பொறுப்பெடுத்து செயலாற்ற வேண்டும்.

உதாரணமாக ஒருவர் வாரத்தில் சுமார் 100 கிமீ வீட்டிலிருந்து அலுவலகம் செல்ல தன் காரை பயன்படுத்தினால் அவரால் 1114 கிலோ கரிமம் ஒரு வருடத்தில் கூடுகிறது. அதுவே அவர் மோட்டார் சைக்கிள் மூலம் போனால் 364 கிலோவும் நகரப் பேருந்தில் சென்றால் 135 கிலோவும் கூடுவதற்கு காரணமாகிறார். நாளொன்றுக்கு 5 மணிநேரம் தொலைக்காட்சி பெட்டி வேலை செய்தால் வருடத்திற்கு 394 கிலோ அளவு கரிமலவாயு வெளியாகிறது.

இவற்றைக் கருத்தில் கொண்டு குடிமக்கள் தேவையற்ற எரிபொருள் செலவை குறைக்க முன்வந்தால் கரியொற்று அளவைக் குறைக்க முடியும்.

அதற்கான விழிப்புணர்வு உண்டாக்குவது அரசுகளின் கடமை. ஆனால் இது அவ்வளவு சுலபமானதா?

பணத்தை செலவழித்தே பழக்கப்பட்ட ஒருவனுக்கு செலவழிக்க கூடாது என்றால் எப்படி முடியாதோ இதுவும் அது போலத்தான்.

சரி, குறைக்க முடியாமல் போனால் என்ன தண்டனை?

கவலை வேண்டாம். குறைவாக பயன்படுத்துபவனிடம் பேசி ’என் கணக்கை அவனுடன் அட்ஜெஸ்ட் செய்து கொள்கிறேன்’ என்று சொல்லிக் கொள்ளலாம். இதற்காக ஏற்பட்டிருக்கும் அமைப்புதான் கரியமில-மாற்று அல்லது கரி-வணிகம். இன்றைய வணிக அளவு சுமார் 28000 கோடி ரூபாய்கள் என்று மதிப்பிடப்படுகிறது.

உதாரணமாக ஒரு தொழில் நிறுவனம் குறிப்பிட்ட அளவு கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைக்க முடியவில்லை என்று வைத்துக் கொள்வோம். இதற்கு ஈடு செய்வது எப்படி? காடு வளர்ப்பு திட்டம், மாசற்ற எரி சக்திகள் போன்ற திட்டங்களுக்கு நிதி உதவி செய்தல் மூலம் கரியமிலக் கணக்கை சரிகட்ட முடியும்.

சூரிய சக்தியில் இயங்கும் நூறு லிட்டர் சுடுநீர் வழங்கி வருடத்திற்கு 1.5 டன் கரியமில வாயு வெளியேற்றத்தைத் தடுக்கிறது.

அப்படி -வேறொருவன் நிறுவி-மிச்சப்பட்டக் கணக்கைக் காட்டி தமது அதிக பயன்பாட்டை சரிகட்டிக் கொள்வதே கரி வணிகத்தின் அடிப்படை. இதை Carbon Credit அல்லது CER (certified emission reduction ) என்பர். இதை அளவு கோலாகப் பயன்படுத்தி கரி-மாற்று வணிகம் நடைபெறும்.

இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் இந்த திட்டங்கள் ஒவ்வொன்றும் க்யோட்டோ முறைப்படி சர்வதேச அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். அதில் இடம் பெற ஏகப்பட்ட கட்டுபாடுகள், கண்காணிப்பு முறைகள், கரியமில வாயு வெளியேற்றத் தவிர்ப்பை உறுதி செய்யும் முறைகள் என பலப்பல கட்டங்களைத் தாண்ட வேண்டும்.

சொல்ல வேண்டுமா? உடனே உலகெங்கும் பெரிய நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்க நிபுணர்கள் என்ற பெயரில் தரகர்கள் தயாராகி விட்டார்கள். எல்லா நாடுகளிலும் ஏஜெண்டுகளை நியமித்து பார்ட்டிகளை பிடிக்கும் முயற்சி நடந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி ஒரு டன் கரியமில வாயுவை சமன் செய்ய 13.88 அமெரிக்க டாலர் ( 17.5% VAT உட்பட) கட்டினால் போதும்.


ஒரு நிறுவனம் 1400 டன் கரியமல வாயு வெளியேற்றத்தை குறைக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தால் அது செய்ய வேண்டியதெல்லாம் க்யோட்டோ அமைப்பின்படி ஒப்புதல் பெற்றிருக்கும் ஒரு திட்டத்திற்கு நிதி அளித்து அதில் தவிர்க்கப்பட்டதாகச் சொல்லப்படும் கரிமல வெளியேற்றத்தை தனது கணக்கில் காட்டினால் போதும். நிறுவனம் தொடர்ந்து தன் போக்கில் செயல்படலாம்.

இதில் ஒரு நல்ல விஷயம். இருபத்தைந்து சதவிகிதம் மட்டுமே வளரும் நாடுகளில் முதலீடு செய்யவோ சமன் செய்யவோ முடியும். மீதி 75%ஐ உள் நாட்டிலேயே குறைத்துக் காட்ட வேண்டும்.

இதனால் உலகெங்கும் காளான் போல சுற்றுச் சூழல் நிறுவனங்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு மாசற்ற எரிசக்தி, மரம் வளர்ப்பு, எரிசக்தி சேமிப்பு என்ற வகையில் புது புது திட்டங்கள் தீட்டி அங்கீகாரத்திற்காக அனுப்பிய வண்ணம் உள்ளன.

டிமாண்ட்- சப்ளை போல, திட்டங்கள் அதிகம் இருந்தால் ஒரு டன்னுக்கான கரி-மாற்று விலை குறைவாக இருக்கும். திட்டங்கள் குறைவாக இருப்பின் டன்னுக்கான விலை அதிகமாகி விடும். இதையும் பங்கு சந்தை போல ஒரு சில குறிப்பிட்ட நாடுகள் அல்லது அங்கத்தினர்கள் பண பலத்தினால் தங்கள் நோக்கம் போல திசை திருப்ப முடியும்.

பொதுவாக டிசம்பர் மாதத்தில் விலைக் கூடுமென்றும் தமது CER ஐ விற்க நினைப்பவர்கள் காத்திருந்து விற்கலாம் என்றும் நிபுணர்கள் சொல்கிறார்கள். இந்த வருடக் கணக்கை -விற்கப்படாமல் இருக்கும் CER களை அடுத்த வருடத்தில் விற்க முடியுமா என்பது தெரியவில்லை.

இதில் தில்லுமுல்லுகள் நடக்க அதிக வாய்ப்புண்டு. எத்தனை திட்டங்கள் வெறும் காகிதத்தில் இருக்கப் போகின்றனவோ! அங்கங்கே இத்திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி மாயமாய் போய்விடும் சாத்தியக்கூறுகளும், வரிக்கணக்கை ஏய்ப்பதற்கான வாய்ப்புகளும் பெருகியுள்ளது.

கோடிகள் கை மாறுவதற்கு புது புது உக்திகள் தோன்றியுள்ளன. வல்லரசு நாடுகள் புத்தி ஜீவிகளின் வாயை அடக்க ஒரு புது வித கண் துடைப்பு நாடகத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். இன்னும் பத்து வருடங்கள் கழித்து இவையெதுவும் பலனளிக்க வில்லை என்று சொன்னால் ஆச்சரியப்படத் தேவையில்லை.

There is always another side for the coin. இப்படியாவது சில நல்ல திட்டங்கள் வரட்டுமே ! சொல்லிக் கொள்வதில் முப்பது நாற்பது சதம் உண்மையானலும் நல்லதே தானே செய்யும். ஏன் எல்லோரையும் ஏமாற்றுக் காரர்கள் என சந்தேகப் பட வேண்டும்.

எப்படியோ மக்கள் மனதில் விழிப்புணர்வு வந்தால் சரிதான் !

Friday, April 30, 2010

Write-Protect virus in pen drive

சமீபத்தில் என்னுடைய pen drive ஐ ஒரு பொறியியல் கல்லூரி வளாகத்தில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது திடீரென்று ரைட்-ப்ரொடெக்ட் ஆகி விட்டது. அதன் காரணம் யாருக்கும் புரியவில்லை.

பெரும்பாலோர் இதை வைரஸ் என்று கூறினர். அதன் பின் பல நாட்கள் பல மென் பொருள் நிபுணர்களிடம் காட்டி பலவாறான வைரஸ் மென்பொருட்கள் மூலம் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. புரியாத கோளாறாகவே இருந்தது.

சில வலைக் குழுமங்கள் இந்தப் பிரச்சனைக்கு பல்வேறு வழிகள் சொல்லியிருந்தன. ஒரு சில, புதிய மென்பொருளை நிறுவி பின்னர் வைரஸை ஒழிக்க வழி சொல்லின. பல புரியவில்லை, சில வேலை செய்யவில்லை. சரி format செய்து விடுவோம் என்றால் 'you don't have right to format' என்று திரும்பத் திரும்ப பூச்சாண்டிக் காட்டியது.

அப்போது ஒரு அன்பர் இதை லினக்ஸ்-ல் திறந்து பார்த்து format செய்து விடலாம் என்றார். நம்பிக்கைத் துளிர்த்தது. லினக்ஸ் பாஷை விண்டோஸ் வைரஸ்க்கு தெரியாதாமே! ஃபோல்டரை திறக்க முடிந்தது பார்க்க முடிந்தது. ஆனா formatting ?

அதிலேயும் மண். என்னங்க பாஷை வேறெ ஆயிட்டா வியாதி போயிடுமா ன்னு ஒருத்தர் கிண்டலும் பண்ணினார்.

சரி போச்சா 4 GB pen drive அப்படீன்னு வெறுத்து கிடந்த நேரத்துல ஒரு நாள் திடீரென்று சகோதரன் ’இந்தா format பண்ணியாச்சு’ ன்னு தூக்கி முன்னாடி போட்டான்.

பெங்களுர் டவுன் ஹால் அருகில் ஆந்திரா பாங் மாடியில் ஏதோ ஒரு நிறுவனம் இதை இலவச சேவையாக செய்வதாகச் சொன்னான். மனிதர்களின் வியாதிகளுக்கு இலவச வைத்தியம் பார்ப்பவரை தெய்வமென்போம். இவர்களையும் அந்த லிஸ்டில் சேர்க்க வேண்டியது தான் என எண்ணிக் கொண்டேன்.

பின்னர் ஒரு நாள் அதனுடைய job card ஐக் காண நேர்ந்தது. கேள்விப்பட்ட பெயராக இருக்கிறதே என்று பார்த்தால் Accel Frontline என்கிற பெரிய நிறுவனம் என்று புரிந்தது.

பெங்களூர் அன்பர்கள் தொடர்பு கொள்ள தொலைபேசி 41231496. அவர்கள் Transcend தயாரிப்புகளுக்கு இந்த சேவை தருவதாக சொல்லக் கேள்வி.

எல்லா தயாரிப்புகளுக்கும் பொருந்தக் கூடிய கை வைத்தியம் இருந்தா யாராவது சொல்லுங்க. புண்ணியமா போவும் ! ஏனென்றால் இந்த வியாதி திரும்பத் திரும்ப வரக்கூடியது.

தெய்வமா உங்களை வாசகர்கள் கும்பிடுவார்கள்.

Sunday, February 28, 2010

நல்லாப் பாடுறே ! கொஞ்சம் உச்சரிப்பு....

வண்ண மயமான விளக்குகள் ஒளியூட்டிய மேடையிலே உயிரைக் கொடுத்து “உயிரே உயிரே” என்று அந்த சிறுமி பாடி கொண்டிருக்கிறாள். பல லட்சம் ரூபாய் பெறுமான பரிசு என்றால் சும்மாவா!

“கேக்க சகிக்கில. சேனலை மாத்து” அப்படின்னு தம்பி. அவனுக்கு ஜேக்கி-சான் படம் பார்க்கணும்

ரிமோட்டை கையில பிடித்துக் கொண்டிருக்கும் அக்காவோ “போடா ஒனக்கு பாட்டு வராது, புரியாது....”

ஆமாமா, நீ மட்டும் பெரிசா பாடிக் கிளிச்சியாம். அந்த பாட்டு டீச்சர், ’சுருதியே சேரல உங்கப் பொண்ணுக்கு’அப்படீன்னு அம்மாகிட்ட மூஞ்சில் அடிச்ச மாதிரி சொல்லி அனுப்பிச்சாங்களே. எங்களுக்குத் தெரியாத உங்க பாட்டு லட்சணம்..

இது ஓயாத சண்டை. சண்டை நடுவில பாட்டை விட்டாச்சு, ஜட்ஜஸ் ரவுண்ட் வந்தாச்சு.

ஜட்ஜ் கள் அந்த சிறுமியை பார்த்து, ஒப்புக்காக

”நல்லா பாடினே, கொஞ்சம் மாடுலேஷன்ல கவனம் வேண்டும்”

”உன் காஸ்ட்யூம் சூபர், யூ ஹேவ் வொண்டர்புல் ப்ரஸன்ஸ். கொஞ்சம்..கொஞ்சம் உச்சரிப்பை சரியா பார்த்துகணும். வல்லினம் மெல்லினம் எல்லாம் தெளிவா இருக்கணும்.”

இத்யாதி இத்யாதி..

”தேங்க்யூ மேடம்.... ஓகே ஸர்... என்று சொல்லிக் கொண்டு வந்த டென்ஷன் சிறுமிக்கு தான் தேர்ந்தெடுக்கப் படவில்லை என்றதுமே அழுகை பொத்துக் கொண்டு வந்தது. அவளை விட அவள் தாயாருக்கு கோபம் அதிகமாயிற்று. அங்கேயே விவாதம் சூடு பரக்க ஆரம்பித்தது. சஸ்பென்ஸை தொடர்வதற்காக சேனல் தயாரிப்பாளர் பிரேக் கொடுத்தாரோ நாம பிழச்சோமோ :)))

இந்த மாதிரி நேரத்துலதான் நினைவுக்கு வருவார் சினா-சோனா.


IT IS DIFFICULT TO
ESTEEM A MAN
AS HIGHLY AS
HE WOULD
WISH

யாவருமே அவரவர் நினைப்பில் பெரிய ஆர்டிஸ்ட்தான், படிப்பாளிதான். ஆனால் பிறர் அதை அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொண்டு விடுகிறார்களா என்ன ?

அதற்கான தகுதி, உழைப்பு, பொறுமை இவற்றை வளர்த்துக் கொள்ளாமல் அங்கீகாரத்திற்காக அவசரப்படும் போது பிறருடைய நகைப்பு ஆளாகி விடுகிறார்கள்.

இதைதான் ஆங்கிலத்தில் “sitting in his own ivory tower" என்கின்றனரோ! அப்போது வளர்ச்சி நின்று போகிறது.

Tuesday, January 12, 2010

வீரத்துறவியின் சலியா வழி



இலக்கு ஒன்றை தேர்ந்திடு
இரவும் பகலும் உழைத்திடு

இலக்கு அதுவே வாழ்க்கை
இலக்கு அதுவே கனவாம்

நாடி நரம்பு மூச்செல்லாம்
நாடி நிற்கட்டும் நும் இலக்கு

அணுஅணுவும் உயிர்க்கட்டும்
அனுதினமும் உந்தன் இலக்கு

வெற்றிக்கு இல்லை வேறுவழி
பற்றுவோர்க்கு வெற்றியே, வாழி
!

Take an idea, make that one idea your life; think of it, dream of it, live on idea. Let the brain muscles nerves everyy part of your body be full of that idea and just leave every other idea alone. This is the way to success. - swami vivekananda

இன்றைக்கு இளைஞர் தினமாகக் கொண்டாடப்படும் விவேகானந்தர் பிறந்தநாள் சமர்ப்பணம்.
(thanks to " ibibo.com” for
picture courtesy)

Friday, January 1, 2010

மனம் விட்டு சிரியுங்கள்

புது வருடம் சந்திர கிரகணத்தில் துவங்கியது. அடுத்து வரும் அமாவசையன்று -இன்னும் பதினைந்து நாளில் சூரிய கிரகணம் வேறாம். அடுத்தடுத்து இப்படி கிரகணங்கள் வருவது நல்லது இல்லையாம், பொழுது போகாதவர்கள் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். ஆனால் இதை வைத்தே காமெடி பண்ண ஒருத்தருக்கு தெரிஞ்சிருக்கு [2002 லேயே :))]

புது வருடத்தை சந்தோஷமாக ஆரம்பிக்கலாமே என்று இந்த பதிவு. ஆங்கிலத்திலே இருந்தாலும் சிரிப்புக்கு பஞ்சமில்லை. இதை அனுப்பி வைத்த புண்ணியவான் வாழ்க.



[படத்தை சொடுக்கி முழுபக்கத்தில் திறந்து படிக்கவும். எஞ்சாய் ]

மக்குப் பையன் ஒருவன் கிரகணங்களைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறான்.

What is eclipse of the moon ?
Shadow of earth on the moon is known as eclipse of the Moon

What is eclipse of the Sun ?
Shadow of moon on the sun is known as eclipse of the Sun.

எவ்வளவு முறை படித்தும் பாவம் பையனுக்கு எதனுடைய shadow எதன் மேல் என்பதில் குழப்பம் வந்து கொண்டே இருந்தது. moon... earth.... sun.. என்று மாற்றி மாற்றி உளறிக் கொண்டிருந்தான். பொறுமை இழந்த அவனுடைய தந்தை

வாட் ஈஸ் எக்ளிப்ஸ் ஆஃப் தெ எர்த் ? என்று கேட்டார்.

எக்ளிப்ஸ் ஆஃப் எர்த்தா ??? இன்னும் குழம்பிப் போனான் மக்குப் பையன்.

ஷேடோ ஆஃப் ஸன் ஆன் தெ எர்த்து " விளக்கினார் தந்தை

சன்னுக்கு ஷேடோவா ?

ஷேடோ ஆஃப் மை ஸன் (my son) ஆன் தெ எர்த்து என்று நொந்து போனார் மனிதர் :))))

{கன்னடத்து சாகித்ய உலகில் புகழ் வாய்ந்த D.P.கைலாஸம் அவர்களின் நகைச்சுவை துணுக்கு இது]