Sunday, December 23, 2007

இப்படியும் சிலர்

"அன்பரே நான் போட்டியிடும் இந்த பெரும்சபையின் அங்கத்தினர் போட்டியில் என்னைவிட என்னை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர் பெருமானே பல மடங்கு தகுதி வாய்ந்தவர்" என்று வோட்டு வேட்டை நடந்த இடத்தில் முன்பின் முரணாகப் பேசி வெற்றிக்காக உழைக்காமல் தோல்விக்காக உழைத்தார் நோபல் பரிசு பெற்ற (1903) அந்த விஞ்ஞானி.

பின் எதற்காக போட்டியிட்டார்? அவர் பிரான்ஸ் தேசத்தின் Academy of Sciences-ல் உறுப்பினரானால் அவருக்கு ஸோர்போன் (Sorbonne) பல்கலைகழகத்தில் பேராசியர் பதவியும் அவருக்கென தனி சோதனைச் சாலையும் ஒதுக்கப்படும் என்ற காரணத்தால் முதலில் ஒத்துக்கொண்டார்.

ஆனால் வெட்கம் அவரை பிடுங்கித் தின்றது. அவரால் தன் சாதனைகளைப் பட்டியல் போட்டு தன் வேட்பு தாக்கலின் உண்மை நிலையை எடுத்துக்கூற முடியாமல் அவரது தன்னடக்கம் தடுத்தது. தன்னைப் பற்றி பீற்றிக்கொள்ள நா கூசியது. ஆனால் அடுத்தவரை பாராட்டும் பொழுது அவருடைய இதயம் விசாலமானது. வார்த்தைகள் சரளமாக வந்தன.

முடிவு அவர் விரும்பியபடியே புகழைத் தவிர்ப்பதில் வெற்றி அடைந்தார். சரி இவர்தான் இப்படி இவரது மனைவி எப்படி ?

இரண்டாம் முறையாக(1911) நோபல் பரிசுக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவரை ஒரு அமெரிக்க பத்திரிக்கையின் நிருபர் அவரைத் தேடிச்சென்றார். எளிமையான கறுப்பு கவுன் அணிந்து வாசல் படிக்கட்டில் அமர்ந்திருந்த பெண்மணியிடம் பேச்சுக்கொடுத்தார்.

" நீங்கள்தான் இந்த வீட்டை பார்த்துக்கொள்கிறீர்களா?"
"ஆமாம் "
"அம்மையார் இருக்கின்றாரா?"
"இல்லை. வெளியே போய் இருக்கிறார்கள்"
"அவர்களை விரைவில் எதிர்பார்க்கலாமா?"
"இல்லை. எனக்கு அப்படித் தோன்றவில்லை"
படிக்கட்டின் கீழே அமர்ந்து கொண்டு "அவர்கள் குடும்பத்தைப் பற்றிய தகவல்களை கொஞ்சம் சொல்லுங்களேன்" என்று கிசு கிசு பேச்சிற்கு காதை தீட்டிக்கொண்டார்.
"குறிப்பாக ஒன்றுமில்லை. ஆனால் அம்மையார் எல்லா நிருபர்களுக்கும் ஒரு பொதுவான செய்தி சொல்லுவார். பிறரின் தனிப்பட்ட வாழ்க்கையில் காட்டும் ஆர்வத்தை பெரிய விஞ்ஞான உண்மைகளைத் தெரிந்துகொள்வதில் காட்டட்டும்".

ஏமாற்றத்தோடு திரும்பிய அந்த நிருபருக்கு தெரியாமல் போன இன்னொரு விஷயம், தான் தேடிவந்த நபரான மேடம் மேரி க்யூரி தான் அதுவரை தன்னோடு பேசிக்கொண்டிருந்தது என்பது தான்.

என்ன குடும்பம் அய்யா இது. ! விளம்பரம்தான் வேண்டாம் சரி. ஆனால் தேடி வரும் லட்சுமியையுமா வேண்டாம் என்பார்கள்.

பல வருடங்கள் கணவனும் மனைவியுமாக சேர்ந்து இரவுபகலாக உழைத்து வெளிக்கொணர்ந்த ரேடியம் மற்றும் போலோனியம் கதிர் வீச்சுகளுடைய மூலக்கூறுகளின் மருத்துவ பயன்களைப் பற்றிய ஆராய்சிக் கண்டுபிடிப்புகளை காப்புரிமைப் பெற்றுக்கொள்ளுமாறு பலரும் பலமுறை வற்புறுத்தியும் கூட அதை நிராகரித்து விட்டார்கள். அவைகள் இயற்கை தந்த பிச்சை. உலகோருக்கெல்லாம் சொந்தம் அதை நாங்கள் சொந்தம் கொண்டாட முடியாது என்பதே அவர்கள் வாதம்.

அவர்கள் அந்நேரத்தில் விளம்பரத்தை வெறுத்தாலும் பல நூற்றாண்டுகளுக்கு அவர்களை உலகம் நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில் இறைவன் செய்துவிட்டான்.

மீண்டும் ஒருமுறை நோபல் பரிசு அக்குடும்பத்தைத் தேடி வந்தது இம்முறை (1935) அவரது மூத்த மகளும் (Irene), மருமகனும் செய்த வேதியியல் ஆராய்சிகளுக்காக வழங்கப்பட்டது. அதற்குப்பின்னும் இறைவனுக்கு திருப்தியாகவில்லை போலும். அவரது இரண்டாவது மகளுக்கு (Eve) குழந்தைகள் மேம்பாட்டிற்காக ஐ.நா. சபையின் மூலம் ஆற்றிய பணிகளுக்கு நோபல் சமாதான பரிசு 1965-ல் வழங்கப் பட்டது.

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்க்கு நான்கு முறை வெவ்வேறு துறைகளுக்காக நோபல் பரிசை வென்றது சரித்திரத்திலேயே இல்லை.

இவர்கள் தான் கர்ம யோகத்திற்கு எடுத்துக்காட்டோ?

Sunday, December 16, 2007

குட்டக் குட்ட குனிபவன் : சினா சோனா-2

குட்ட குட்ட குனிபவனும் முட்டாள் குனியகுனிய குட்டுபவனும் முட்டாள் அப்படீன்னு சொல்லுவோம் இல்லையா அதே மாதிரி

'The First faults are theirs that commit them - The second ,theirs that permit them"


முதல் தப்பு அதை செய்யறவன், இரண்டாவது தப்பு அதை விட்டு வச்சவன்

சினா-சோனா தன் வீட்டுக்காரியிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டு புலம்புவது போல் இருக்கும் இந்த சித்திரம் எல்லா இடத்துக்கும் பொருத்தம் .

சினா சோனா -சொன்னா சரிதான்

Thursday, December 13, 2007

Chiனா-Choனா சொன்னது என்னா ?

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் பல ஆண்டுகாலம் Ching Chow என்கிற கேலிச் சித்திரத் துணுக்கு ஒன்றைப் பிரசுரித்து வந்தது. இதை Chicago Tribune என்ற அமெரிக்கப் பத்திரிக்கையினிடமிருந்து பதிப்புரிமை பெற்று வெளியிட்டது.

1927ல் ஸிட்னி ஸ்மித் என்பவரும் ஸ்டான்லி லிங்க் என்பவரும் அப்பத்திரிக்கையில் கருத்துப்படத் தொடர் ஒன்றைத் துவங்கினர். நம் தினத்தந்தியில் வரும் சாணக்கியன் சொல் போல என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் ஆட்டு தாடி சாணக்கியனை போல் வெறுமனே நின்று கொண்டிருக்காமல், சீனத்துக் குடுமி வைத்த சிங்-சோவ் ஏதாவது ஒரு செயலில் ஈடுபட்டிருப்பது போலவோ அல்லது இக்கட்டில் சிக்கிக் கொண்டிருப்பது போலவோ அவர்கள் கேலிப்படம் வரைந்தனர். பிற்காலத்தில் குடுமியை மாற்றி அவனது சிகையை நவீன முறையிலேயே சித்தரிக்க ஆரம்பித்தனர்.

மேலும் விவரங்களுக்கு இங்கே சுட்டவும்.

சிங் சோவ் கேலிச் சித்திரங்களில் மெல்லிய நகைச்சுவையும் உட்கருத்தும் பொதிந்திருக்கும். ஒரு சிலவற்றில் ஆங்கில வார்த்தைகளை வைத்து சிலேடைகள் இருக்கும். பல இடங்களில் சித்திரம் இல்லாமல் புரியாது. இவை தவிர உப்பு சப்பு இல்லாமல் வந்த துணுக்குகளும் உண்டு.

கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நாட்களில் இதனால் கவரப்பட்டு என்னிடம் காலியாக இருந்த நாட்குறிப்பேட்டில் தினமும் வரைந்து வைத்துக்கொள்ள ஆரம்பித்தேன். சிங் சோவ் மட்டுமல்லாது அன்றைய தேதியில் வெளியான Think it over யும் சேர்த்தே எழுதி வைத்துக்கொண்டேன்.

மாலையில் வீடு திரும்பியதும் காபி குடித்துக் கொண்டே முதலில் செய்யும் காரியம் இது தான். இதற்கு தேவைப்பட்ட நேரம் சுமார் பத்து நிமிடங்கள். பலரும் இதை பாராட்டவே சுமார் நான்கு வருட காலம் (1978-1982)தொடர்ந்து செய்து வந்தேன். அதாவது நான்கு டைரிகள்.தொடராததற்குக் காரணம் அந்த தொடர் நின்று போனது தான். இப்பொழுது என்னிடம் உள்ளது இரண்டு டைரிகளே. இன்னும் இரண்டு யாரிடம் உள்ளது என்று தேடிக்கொண்டிருக்கிறேன்.

பிற்காலத்தில் அவற்றை புரட்டிப் பார்க்கும் போது முன்பு புரியாதிருந்த பல கருத்துப் படங்கள் புரிந்தன. பல நிர்வாக உண்மைகள் புரிய ஆரம்பித்தன. மீண்டும் மீண்டும் புரட்டும் பொழுது என் அனுபவத்திற்கேற்ப பல புது பரிமாணங்கள் தெரிந்தன. இதில் எனக்குப் பிடித்த சிலவற்றை அவ்வப்போது நம் இணைய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்கிற எண்ணத்துடன் "சினா-சோனா சொன்னது என்னா" என்ற தலைப்பில் பதியவிருக்கிறேன்

சிங்-சோவ் (Ching Chow)என்பதை சினா சோனா என்று நாம் தமிழ் படுத்திக் கொள்வோம். அதனோடு எனக்கு தோன்றும் கருத்துகள் இருப்பின் அவற்றையும் சொல்லுவேன். படித்தபின் உங்களுக்கு தோன்றுவதை நீங்களும் சொல்லுங்கள்.

Give a big hand to Chiனா Choனா


'its wisely written
More important than seeing through things is, seeing things through

பனிமழையில் முன்னே இருப்பதை பார்க்க முடியவில்லை என்பதால் பயணத்தை ரத்து செய்யாமல் காரியமே கண்ணாக பயணத்தை தொடர வேண்டும் என்று தனக்குத் தானே சொல்லிக் கொள்வது போல் உள்ளது இந்த படம்.

சற்று யோசித்துப் பார்த்தால் seeing through things என்பது நடப்பனவற்றை கவனித்துக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல் நிகழ்சிகளின் உள்நோக்கங்களையும் ஆராய்வது. "Seeing things through" என்பது எடுத்த காரியத்தை வெற்றிகரமாக நடத்திச் செல்வது.

நாம் அன்றாடும் காணும் உண்மை ஒன்று.

ஒரு முக்கியமான project-ல் உள்ள உறுப்பினர்கள் அதை வெற்றிகரமாக முடிக்க செயல்படுவது seeing things through ஆகும். அங்கே உட்பூசலும் குழப்பமும் இருந்தால் ஒருவரின் செய்கையை, முடிவுகளை மற்றவர் சந்தேகக் கண்கொண்டு அணுகுவதே seeing through things. வெற்றிக்கு எது தேவை ?

சினா-சோனா சொல்வது சரிதான்!
More important than "seeing through things" is, "seeing things through

Thursday, December 6, 2007

சித்திரமும் கைப் பழக்கம்.

பள்ளி பருவத்திலிருந்தே ஓவியத்தில் ஆர்வம் உண்டு. எட்டு ஒன்பது வகுப்பு படிக்கும் காலத்தில் பரிசுகள் வாங்கியிருக்கிறேன். இருமுறையும் இரண்டாம் பரிசு. ஆரம்ப காலங்களில் கேம்லின் கம்பெனி தயாரித்து வந்த தண்ணீரில் கரையும் வண்ண வில்லைகள் பெட்டியும் அதனோடு வரும் ஒரு ஒத்தை பிரஷும் தான் எனது பொக்கிஷம். ப்ரஷ் எலி கடித்தது போல இருக்கும். அதை வைத்தே பொழுதை போக்கக் கற்றுக்கொண்டேன். ஆயில் பெயிண்ட் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் கல்லூரி காலம் முடியும் மட்டும் முயற்சி செய்ய வாய்ப்பு இல்லாமல் இருந்தது.

எனது விருப்பமான படம் பிள்ளையார். சுலபமான யானை முகம். மூக்கு கோணியது, வாய் கோணியது என்று யாரும் கமெண்ட் அடிக்க முடியாது. எப்படி இருந்தாலும் ஓகே. அவருக்கு கிரீடம் போடுவதிலும் பாசாங்குசம் மற்றும் ஆபரணங்கள் தீட்டியே மஞ்சள் வில்லை ஓட்டையாகிவிடும். அப்படியும் அந்த தங்க கலர் வராது. அதற்கு காரணம் ஒளி-நிழல் வேற்றுமை புரிந்து கொள்ளாததாலும் அதை சொல்லித்தர யாரும் இல்லாததுமே காரணம்.

படம் போட்ட பின்பு அது மனதுக்கு சரியாகாவிட்டால் அதை தூக்கிப்போட்டு விடுவேன். பின்னர் என் அம்மாவிடம் திட்டு வாங்குவேன். "சாமி படம் வேணாம்னு சொன்னாலும் போட்டு எல்லாரும் மிதிக்கிற மாதிரி இங்கேயும் அங்கேயும் தூக்கி போடறியே உனக்கு படிப்பு வராது". நல்லவேளை பிள்ளையாருக்கு அப்படி ஒன்றும் என் மீது கோபம் வந்ததாகத் தெரியவில்லை. ஓரளவு நல்ல முறையிலே தேறி வந்து விட்டேன்.
என்னுடைய நோட்டுப் புத்தகங்களின் பின்பக்கங்களில் அன்றைய தேதிகளில் வந்திருக்கும் கோபுலு, மாயா வினு,ஜெயராஜ் போன்றவர்களின் ஓவியங்களை வரைய முயற்சித்திருப்பேன்.எல்லா கத்துகுட்டி ஓவியர்கள் போலவே பெரும்பாலும் கையும் விரல்கள் அமைப்பும் வராமல் சண்டித்தனம் செய்யும். ரப்பரால் அழித்து அழித்து பேப்பரே ஓட்டையாகி போவது சர்வசாதாரணம்.ஓட்டைக்குப் பின்னால் துண்டு பேப்பர் ஒட்டி அட்ஜஸ்ட் செய்ததும் உண்டு.

அப்புறம் இயற்கைக் காட்சிகள், கி்ருஷ்ணருடன் மாடு மயில் இப்படியாக சிலவற்றை அவ்வப்போது வரைந்து வந்தேன். நவராத்திரி போது எங்கள் வீட்டிலும் நண்பர்கள் வீட்டிலும் வண்ணப்பொடியில் ரங்கோலிக்கு ஏற்ப படங்கள் போட்டுத்தருவது என் பிரத்யேக வேலை. தேர்தல் நேரத்தில் பசுவும் கன்றும் (காங்கிரஸ் பிளவிற்கு முன்னர்) சின்னம் கேட்டு வரைந்து வாங்கி செல்லும் நண்பர்களும் இருந்தனர். உதய சூரியன் சின்னம் மிகவும் சுலபமானதால் அதற்கு என்னைப் போன்ற ஸ்பெஷலிஸ்டுகள் தேவையில்லை.

எஸ் எஸ் எல் ஸி தேர்வுகளுக்கு பின் வந்த பெரிய விடுமுறையில் ரீடர்ஸ்-டைஜஸ்ட் பத்திரிக்கையின் பின் அட்டையில் வந்த நல்ல பெயிண்டிங்களை வாட்டர் கலரில் செய்ததில் தன்னம்பிக்கை சற்று அதிகமானது.

பொதுவாக என்னுடைய ஓவிய ஆர்வம் குளிர் ஜுரம் போல விட்டு விட்டு வரும். ஏதாவது ஓவியக் கண்காட்சி அல்லது பத்திரிக்கையில் ஓர் ஓவியரைப் பற்றிய கட்டுரையை காண அல்லது படிக்க நேரும் பொழுது அதன் தாக்கம் சிறிது காலம் இருக்கும்.அதன் விளைவாக ஓரிரண்டு படைப்புகள் தோன்றும். படைத்த எதையும் முறையாக பாதுகாத்தது கிடையாது.

ஒரு நாள் திடீரென்று ஞானோதயம் வந்தது.

என்னுடைய மாமாவின் மகன் (என்னை விட பதினோரு வயது இளையவன்) அடிக்கடி ஓவியக் கண்காட்சிகளை அமெரிக்காவில் வெற்றிகரமாக நடத்தி விற்பனையும் செய்கிறான். ஒரு பேட்டியில் அவனுடைய உள் உந்துதலுக்கு என்னை முக்கியமான காரணமாகக் காட்டியது பெருமிதப் பட வைத்தாலும் ஒரு குற்ற உணர்வு பற்றிக்கொண்டது. மென்பொருள் வல்லுனனாக இருக்கும் அவன் முழு நேர ஓவியனாக இல்லாவிட்டாலும் முறையாக எல்லாப் படைப்புகளையும் பாதுகாத்து வந்திருக்கிறான். பல வெளிநாட்டு கிளப்புகளில் உறுப்பினராகி தன் திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறான். நான் இது போல எதையும் செய்யவில்லை.

ஞானோதயத்தின் முதல் படியாக ஒரு பெரிய வரைபட புத்தகம் வாங்கி அதில் பக்கத்திற்கு ஒன்றாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் பென்ஸில் படங்கள் போட்டு வைத்திருகிறேன். பின்னர் சில வண்ணப் படங்களையும் பென்ஸில், பேஸ்டல்,ஆயில் இப்படியாக பல முயற்சிகளையும் செய்திருக்கிறேன். சில நாட்கள் rediffiland-ல் பல ஓவியங்களை மக்கள் பார்வைக்கு வைத்திருந்தேன். ஏதோ தவறுதல் காரணமாக எல்லாம் காணாமல் போய்விட்டது.

இவற்றை ஒரு தனி வலைப்பூவாக அமைத்து வெளியிட்டால் ஓவியத்தில் விருப்பமுள்ள இணைய நேயர்களுடன் தொடர்ந்து கருத்து பறிமாற்றம் செய்து வர முடியும் என்று தோன்றியது.

இனி ஒரு தனி வலைப்பூவில் சித்திரமும் கைப் பழக்கம் என்ற பெயரில் (http://en-chithirangal.blogspot.com/) அவ்வப்போது பகிர்ந்து கொள்வேன். இரு பதிவுகளும் பதிவு செய்தாகி விட்டது. திரட்டிகளில் வருவதற்கு இன்னும் ஓரிரு பதிவுகள் தேவைப்படும்.