Sunday, February 24, 2008

பின்னூட்டமிட விரும்பும் மென்பொருட்கள்:எச்சரிக்கை

என்னுடைய வலைப்பூவில் வழக்கத்திற்கு அதிகமாக ஒரே IP யிலிருந்து, அதிலிருக்கும் ஏறக்குறைய எல்லா பதிவுகளுக்கும் வருகை காணப்பட்டது. முதலில் சற்று மகிழ்சியாக இருந்தாலும் கூடவே சந்தேகமும் வந்தது. நாமென்ன தேவனா (துப்பறியும் சாம்பு) அல்லது சாண்டில்யனா, நம்முடைய எழுத்தை எவனாவது இப்படி விழுந்து விழுந்து படிக்க ! பின்னர் மின்னஞ்சலை திறந்து பார்த்தால் Duran என்பவரிடமிருந்து ஒரு பின்னூட்டம். அதைப் பிரித்தால் முக்கியமான செய்தி எதுவும் இல்லாமல் Publish, Reject என்ற Blogger குறிப்புகளுக்கு மேலாக அதே எழுத்துருவில் Warning or visit Here என்ற வலை இணைப்புகளோடு காணப்பட்டது.

அங்கேதான் அய்யா ஏமாந்து போய்விட்டேன். அது Blogger தரும் செய்தி என்று தெரியாத்தனமாய் க்ளிக்கித் தொலைத்தேன்.

அது உடனே XPvirusscan என்ற வலைக்குத்தாவி மின்னல் வேகத்தில் scan செய்து, என் கணிணினியில் மூன்று அபாயகரமான வைரஸ்கள் இருப்பதாகவும் அவற்றை நீக்கும்படியும் பயமுறுத்தியது. Remove என்று ஆணை கொடுத்ததுமே ஒரு புது மென்பொருளை .exe ஐ தரவிறக்கம் செய்ய அனுமதி கோரியது என் கணிணி. அப்பா அந்த அளவிற்காவது ஒரு வேகத்தடை இருந்ததே என்று இப்போது சந்தோஷமடைகிறேன்.

உடனே அதை cancel செய்தேன். விடாகண்டன் மாதிரி அந்த ஜன்னல் மூட மறுத்தது. இன்னொரு ஜன்னலில் Cancel செய்தால் ஆபத்து என்கிற விதமாக புது செய்தி முளைத்தது. இப்போது கொஞ்ச நஞ்ச சந்தேகமும் போய்விட்டது. கண்டிப்பாக இது ஒரு திருட்டு கும்பல் என்று புரிந்து விட்டது. கவலையே படாமல் அந்த வலைப்பக்கத்தை மூடிவிட்டு என் McAfee ஐ எல்லா கோப்புகளையும் மென்பொருட்களையும் ஒரு முறை புரட்டிப்பார்க்கச் சொன்னேன். அதற்கு தேவைப்பட்ட நேரம் 40 நிமிடங்கள்.

நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள். 40 நிமிட வேலையை 40 செகண்டுகளில் யாராவது செய்து 3 வைரஸ்களை பிடித்துத் தரமுடியுமா?

ஆனால் அந்த கும்பலை நமது நண்பர்கள் கண்டிப்பாக புரட்டி எடுக்க முடியும்.அவர்களது IP விலாசம் 161.107.18.136..McLean Virginia United States.

இந்த செய்தியை எல்லா சக பதிவாளர்களுக்கும் சொல்லி முளையிலேயே கிள்ளி எறிய அறிவுறுத்துங்கள்.

இடுக்கண் களையும் இடுகம்பாளையத்தான்

இந்த இடுகை இடுமுன் பலமுறை இடுகம்பாளையம் ஆஞ்சநேயரைப் பற்றி கூகளில் தேடிப் பார்த்தேன். இடுகம்பாளையம் என்ற சொல்லே அதற்கு கிடைக்கவில்லை. ஆச்சரியம் கோவை மற்றும் ஆஞ்நேயர் என்று தேடியதில் வந்ததெல்லாம் நாமக்கல்லாரும் பீளமேட்டு ஆஞ்சநேயரும்தான்.

அதெப்படி வலைப்பதிவாளர்களின் பாசறையான கோவைக்கு அருகிலிருக்கும் இந்த ஜெயமங்கள ஆஞ்சனேயர் விட்டு வைக்கப்பட்டார் என்று புரியவில்லை. சரி நமக்கு அடிச்சது ஒரு மொக்கை பதிவுக்கு சான்ஸ் என்று துணிந்து விட்டேன்.

கோவையிலிருந்து சுமார் 35 கிமீ தூரத்தில், சிறுமுகைக்கு அருகே இருக்கும் ஜெய மங்கள ஆஞ்சநேயர் கோவில் சுமார் 700 ஆண்டுகள் பழையது.

இவர் ஒரு மணமான ஆஞ்சநேயர்.

அடடா! நான் சொல்லவந்தது அவர் ஊரைச் சுற்றி ஒரே ஜாதி மல்லி சாகுபடி. 2006-ல் கும்பாபிஷேகம் நடைபெற்று ஒரு புது பொலிவுடன் கோவிலும் பிரகாரமும் திகழ்கிறது. பிராகரம் முழுவதிலும் சிந்திக்கத் தக்க வாசகங்கள். அதுதான் இப்பதிவின் ஹைலைட்.

ஒரு சுற்று சுற்றி வந்து ஆஞ்சநேயரையும் தரிசித்துக் கொள்ளுங்கள். முறையான வைஷ்ணவ சம்பிரதாயத்துடன் பூஜை நடந்து வருகிறது.

அமைதியான தலம். தலவரலாறு தெரிந்து கொள்ளாமல் வந்து விட்டேன். அதை வேறொரு பதிவர்க்கு விட்டு வைக்கிறேன். :))










“கோபுர தரிசனம் பாபவிமோசனம்”




திக்கு நிறை புகழாளன் தீவேள்விச் சென்றந்நாள்
மிக்கபெருஞ் சபை நடுவே வில்லிறுத்தான் மோதிரம் கண்டு
ஒக்குமாலடையாளம் அநுமான் என்று உச்சிமேல்
வைத்துக் கொண்டு உகந்தனளாள் மலர்குழலாள் சீதையுமே

-பெரியாழ்வார்

ஊக்கமுடமை ஆக்கத்திற்கு அழகு என்பதற்கு அனுமனை விட நல்ல சான்று கிடைப்பது அரிது. அதைப்பற்றி வேறொரு முறை பார்ப்போம்.

Thursday, February 7, 2008

சிரித்து வாழ வேண்டும் பிறர்...சினா-சோனா-4

என்னமோ தெரியல, இப்போ எல்லாம் பதிவுக்கு தலைப்பு வைக்கணும்-னா உடனே சினிமா பாட்டுதான் ஞாபகம் வருது.அந்த அளவுக்கு இந்த பாட்டெல்லாம் நம்மோட பின்னி பிணஞ்சு போச்சுங்க. இந்த பாட்டுக்கும் சினா சோனா சொல்ல வர்றதுக்கும் என்ன சம்பந்தம்?

ரொம்ப இருக்குங்க.முதல் படம், பாட்டுல முதல் வரிக்கு பொருந்தும். இரண்டாவது வரி இரண்டாவது படத்துக்கு பொருந்தும். என்ன ரொம்ப ப்ளான் பண்ணி சினா-சோனா சொன்ன மாதிரி இருக்குல்ல!

அக்டோபர் 5 : "One cannot think ill of anyone, while one is singing "


ஜாலியா பாடிக்கிட்டு இருக்கிறவங்களுக்கு பிறத்தியாரப் பத்தி தப்பா நெனைக்க தோணாதாம். இதை முதல் முதல்ல படிச்ச போது பெரிசா ஒண்ணும் தோணலை. பின்னால என்னோட 'Boss ' ஒரு நாள் என்னப் பாத்து ஒண்ணு சொன்னதும் திரும்ப இது நெனப்புக்கு வந்துச்சு.

அப்போ (1981)வேலைக்கு சேர்ந்த புதுசு. சின்மயா நகரிலிருந்து தரமணிக்கு ஒரே பஸ் 5D. அதனோட டையத்துக்குத்தான் நாம போயாகணும். இப்படியா எட்டு மணி ஆபீசுக்கு ஏழேகாலுக்கே போய் விடுவேன். அதை விட்டா எட்டரைக்குத்தான் போகமுடியும்.

பொதுவா நான் தான் போயி கடையத் தொறக்கணும். ஒரோரு சமயம் யாராவது தொறந்து ஆபீசக் கூட்டிக்கிட்டு இருப்பாங்க. அன்னிக்கு யாராவது ஸ்பெஷல் கெஸ்ட் வர்ற நாளா இருக்கும்.

ஒருநாளைக்கு, நான் தொறந்து கெடந்த ஆபீஸுக்குள்ள ஜாலியா (கல்யாணம் ஆகவில்லை!!) பாடிக்கிட்டே உள்ளே போனேனா, எம்பேரச் சொல்லி எங்க டைரக்டர் கணீர்ன்னு கூப்புடறது கேட்டது. அவரு அப்படித்தான் வெங்கல கடையில புகுந்த யானை மாதிரி. எங்க அப்பாவோட வயசு அவருக்கு. இந்த மனுஷன் எட்டுமணிக்குத்தான வருவாரு. இப்போ எப்படிங்கற கேள்வியோட நாடியெல்லாம் ஒடுங்கி போய் அவரு ரூமுக்குள்ள எட்டிப்பாத்து 'குட்மார்னிங் சார்' அப்படீன்னேன்.

ஹிண்டு பேப்பர பிரிச்சு பாத்துக்கிட்டு இருந்தவரு தலைய வெளிய எடுக்காமெயே 'என்ன சீக்கிரம் வந்துட்டீங்களா?'ன்னு கேட்டார். அத கேக்கிறதிலேயும் ஏதோ தப்பு பண்ணியவன விசாரிக்கிற மாதிரி ஒரு தோரணை.

“ எஸ் ஸார். இதுதான் என் பஸ் டைம். அடுத்த பஸ்ஸுன்னா லேட் ஆயிடும்” அப்படீன்னு ஏதோ முணு முணுத்தேன்.

'குட். நல்லா பாடுவீங்களா ?' கிண்டலா குத்தலா புரியல. 'எதுக்கு குட். சீக்கிரமா வந்ததுக்கா' அப்படீன்னு மனசுல ஒரு போராட்டம்.

”ஸாரி சார். நீங்க இருக்கீங்கன்னு தெரியல”

உடனேயே ஒண்ணும் சொல்லாம, பேப்பர மடிச்சு டேபிள் மேல தொப்புன்னு போட்டு, நாற்காலிய வேகமா பின்னுக்குத் தள்ளி என்னத் தாண்டிக்கிட்டே வெளில ஷெட் பக்கமா போனாரு. நானும் பின்னாடியே ஓடினேன். அங்கிருந்த 'புல்லட்'ட ஸ்டார்ட் செஞ்சு 'நோ,நோ. அப்படித்தான் ஜாலியா இருக்கணும். ஐ ஆம் ஹாப்பி'ன்னு சொல்லிட்டு வீட்டுக்குப் போய் விட்டார்.

அப்படியே ஸ்டன்னாயி நின்னுட்டேன். இன்னிக்கு ஏன் புல்லட்-ல இவ்வளவு சீக்கிரமா வந்தாரு? அவரோட ஜிப்ஸி எங்க போச்சு? இப்படி பல கேள்வி மனசுக்குள்ள. அதுக்கான விடையெல்லாம் இந்த பதிவுக்கு சம்பந்தம் இல்லேங்கறதுனால எழுதலை. ஆனா அவரு பெரிய விஞ்ஞானி மட்டுமல்ல பெரிய சைகாலிஜ்ஸ்ட் கூட. அவரு பெயரு Dr.C.V.சேஷாத்ரி, திவான் பகதூர் Sir C.P.ராமஸ்வாமி அய்யர் அவர்களின் பேரன்.

காலப்போக்கில புரிஞ்சிக்கிட்டேன். கள்ளம் இல்லா மனசுலதான் சந்தோஷம் இருக்கும் சந்தோஷம் இருக்கிற எடத்துலதான் பாட்டு இருக்கும். நான் சந்தோஷமாயிருக்கிறதப் பார்த்து அவரு சந்தோஷப் பட்டிருக்காரு. ரொம்ப பெரிய மனசு !

இதைத் தான் சினா சோனா கொஞ்சம் மாத்தி சொல்லியிருக்காரு. “பாட்டுப் பாடிக்கிட்டு இருக்கிற நேரத்துல கெட்ட எண்ணங்கள் வராது”. இது சாதாரண ஜனங்கள் விசயத்துல அனுபவ பூர்வமான உண்மை. அதனால எப்போவெல்லாம் மனசு தளர்ந்து பொகுமோ அப்போதெல்லாம் சத்தம் போட்டு பாடுங்க. யாரு என்ன நெனப்பாங்களோங்கற கவலையெல்லாம் வேணாம். எதிர்மறை எண்ணங்கள் ஓடிப்போயிடும். பாட்டரி சார்ஜ் ஆயிடும்.

ரெண்டாவது சினா-சோனா வும் (அக்டோபர் 6) நல்லா யோசிக்க வேண்டிய விஷயம் தான். இதுல odd even ங்கிற வார்த்தைகளை நல்லா பயன் படுத்தியிருக்காரு. At odds அப்படின்னா சரியா புரிஞ்சுக்க முடியாம சங்கடப்படுவது. get even அப்படீன்னா சரியாப் போச்சு, புரிஞ்சுக்கிட்டதா அர்த்தம். ஒரு சுய பரிசோதனை.

“ Most men remain at odds with themselves trying to get even "

“பெரும்பாலான மக்கள் தங்களை தாங்களே புரிஞ்சுக்கிறதுக்காக ரொம்ப சங்கடப்படுறாங்க”

உதாரணத்துக்கு, சிலருக்கு சட்டு புட்டுன்னு மூக்குக்கு மேல கோவம் வரும். எதிர்ல இருக்கிறவரை சரியோ தப்போ திட்டிடுவாங்க.

அப்புறம் உக்காந்துகிட்டு 'சே ஏன் தான் இப்படி இருக்கேனோ' அப்படீன்னு யோசிக்கிறாங்க பாருங்க அது தாங்க சுய பரிசோதனை. அப்படி யோசிக்கிறதே ஒரு நல்ல அறிகுறிதான். கொஞ்சம் கொஞ்சமா மாறிடுவாங்க!

ஆரம்பத்துல சினிமாப் பாட்டோட ரெண்டாம் லைன் ரெண்டாவது படத்துக்கு பொருந்தும்னு சொன்னேன். ”...பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே”

சுய சோதனை செஞ்சுகிட்டு நம்மோட தப்பு தண்டாவெல்லாம் நாமே மாத்திக்கிட்டாத்தானே இன்னொருத்தர் நம்மப் பார்த்து சிரிக்காம வாழ முடியும்.

என்ன சொல்றீங்க ? 'சினா சோனா சொன்னா சரிதான்' இல்லே !