Thursday, March 19, 2009

சிறு துளி.....- உலகத் தண்ணீர் தினம்


மண் மரம் மழை மனிதன் வலைப்பூவில் வின்சென்ட் ஐயா உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு பதிவர்கள் தம்மால் முடிந்த அளவு விழிப்புணர்வு ஏற்படுத்தக் கோரி ஒரு வேண்டுகோள் முன் வைத்தார். ஆசானின் வார்த்தைகளை சிரமேற் கொண்டு இதோ ஒரு இடுகை.

சில வருடங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி. நீர் சேமிப்பைப் பற்றியது.

ஒரு முறை எங்கள் தொழிற்சாலை தரக்கட்டுபாடு சோதனைச் சாலையிலிருந்து ரிப்போர்ட்டுகள் வெளியிடுவதில் தேக்கம் கண்டது. காரணம் சுத்திகரிக்கப்பட்ட நீர் பற்றாக்குறை. நீர் சுத்திகரிக்கும் உபகரணம் (Distillation unit) பழுதாகி பல சோதனைகளை மேற்கொள்ள முடியவில்லை. வெளியிலிருந்து வாங்குவதற்கு முயற்சி செய்தும் பல காரணங்களால் வந்து சேரவில்லை. இதனால் கைவசம் சரக்கு இருந்தும் அனுப்ப முடியாத நிலைமை. பெட்ரோல் பங்கிலிருந்து பாட்டரி நீரையாவது வாங்கி செய்யலாம் அவற்றின் தரம் சரியில்லை என்று பதில் வந்தது.

இதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு தொழிற்சாலையை சுற்றி வரும்போது குளிர்பதன அறைக்கான எந்திரத்திலிருந்து நீர் ஒரு சிறிய ப்ளாஸ்டிக் குழாய் வழியாக ஒழுகிக் கொண்டிருப்பதைக் கண்டேன். இதை ’காண்டென்சேட்’ என்று சொல்வார்கள். இது காற்றிலிருக்கும் அதிகமான ஈரப்பதம் கம்ப்ரெஸரின் உயர் அழுத்தத்தில் கனிந்து திவலைகளாகக் மாறி வெளியேறுவது.

இப்படி சதா நீர் வெளியேறிக் கொண்டிருப்பது வழக்கமான காட்சிதான் என்றாலும், அன்று மின்னலென ஒரு எண்ணம். நேரடியாக காற்றிலிருந்து கனிந்து வருவதால் அதுவும் சுத்திகரிக்கப்பட்ட நீர் தானே! அதில் எவ்வித உப்புகளும் கரைந்திருக்க முடியாதல்லவா !

உடனடியாக ஒரு நல்ல சுத்தமான குழாயை செருகி அந்த நீரை சுத்தமான கண்ணாடி குடுவையில் பிடிக்கச் சொல்லி சோதனைச் செய்யச் சொன்னேன். மூன்று முக்கிய பரிசோதனைகளிலும் வெற்றி.

1) pH =7.63; 2) conductivity= 0.0 ; 3) Total Dissolved Solids= 0.0 ppm

அன்றிலிருந்து நீரை தனிப்பட்ட முறையில் சுத்திகரிக்க மின்சார சக்தியை பயன்படுத்துவது நின்றுவிட்டது. ஏற்கனவே மின்சாரத்தால் இயங்கும் குளிர்பதன இயந்திரம் சுத்திகரிக்கப்பட்ட நீரை ஒரு உப பொருளாக தந்து கொண்டிருக்கிறது.

ஒரு நாளைக்கு 12 லிருந்து 15 லிட்டர் வரை சுத்தமான பரிசோதனைகளுக்கேற்ற நீர் கிடைக்கிறது. ஆனால் தேவையோ 10 லிட்டருக்கும் குறைவு.

10 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட நீருக்கென 3KW மின்சார சக்தியை பயன்படுத்தினால் இரண்டரை மணிநேரங்கள் தேவைப்படும். அதற்கான மின்சக்தி ஏழரை யூனிட்டுகள், ஒரு மாதத்தில் சுமார் 200 யூனிட்கள் சேமிக்கப் படுகின்றது.

தொழிற்சாலையின் முழு மின்சக்தித் தேவையில் இந்த சேமிப்பு சொல்லிக்கொள்ளும் வகையில் ஒன்றும் இல்லை. ஆயினும் இதை யாவரும் கடைபிடிக்க முன்வந்தால் கணிசமான நீர் சேமிப்பும் மின்சார சேமிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் குறிப்பிடுகிறேன்.

உதாரணத்திற்கு 1.5 ton அறை குளிரூட்டும் எந்திரம் எட்டு மணிநேரம் வேலை செய்தால் 2.5 லிருந்து 3.0 லிட்டர் தண்ணீர் வெளியேற்றும். பெரிய திரை அரங்குகள், ’மால்’களில் நிறுவப்பட்டிருக்கும் ராட்சஸ குளிரூட்டும் எந்திரங்களால் ஒரு நகரத்திற்குத் தேவையான ஜெனரேட்டர் மற்றும் வாகனங்களுக்கான பாட்டரி தர சுத்திகரிக்கப்பட்ட நீரை சுலபமாக சேமிக்கலாம்.

இப்படி நம் முன் இருக்கும் பலப்பல வழிகளை முனைப்புடன் ஒருங்கு படுத்தினால் நீர் மட்டுமல்ல மின்சக்தியையும் சேமிப்பவர்களாவோம்.



இவ்வருட தலைப்பு Transboundry water அதாவது ”எல்லைகளைக் கடக்கும் நீர்பெருக்கு” மேலும் விவரங்களுக்குhttp://www.worldwaterday.org/
மற்றும் http://www.unwater.org/

அப்பாடா ! சிறு துளிப் பெருவெள்ளம். நானும் ஒரு இடுகையை உலக தண்ணீர் தினத்திற்காக எழுதி சமர்ப்பணம் பண்ணியாச்சு.

Tuesday, March 10, 2009

...புதுப் புது உலகமும் அவரவர் உள்ளங்களே

சுமார் இருபத்தியைந்து வருடங்களுக்கு முன் ஒரு அனுபவம்.
திருவள்ளுவர் பேருந்தில் திருச்சி செல்வதற்காக இரவு ஒன்பதரை மணியளவில் வண்டியேறி அமர்ந்தேன்.
சென்னையின் வியர்வை கசகசப்பு எப்போதடா வண்டி கிளம்பும் என்று நினைக்கத் தோன்றியது. ஒருவழியாக நடத்துனர் வண்டியிலேறினார்.சரி பேருந்து கிளம்பப் போகிறது என்று நினைத்தால் அவர் மையப் பகுதியில் நின்று பேச ஆரம்பித்தார்.

மாலை வணக்கங்கள்.பயணிகள் கவனத்திற்கு.

தாம்பரம்,செங்கல்பட்டு,மதுராந்தகம்,திண்டிவனம், விழுப்புரம் உளுந்தூர்பேட்டை, சமயபுரம், மார்க்கமாக திருச்சி செல்லும் பேருந்து சில நிமிடங்களில் புறப்படவிருக்கிறது. ஓட்டுனர் பெயர் xxxx, பத்திரமாக பேருந்தை ஓட்டிச்செல்வதில் அனுபவம் மிக்கவர். நடத்துனராகிய என் பெயர் XXXX. பயண தூரம் 310 கிமீ.பயண நேரம் எட்டு மணி நேரம். திருச்சி சேரும் நேரம் காலை 6மணி .


பயணச்சீட்டு இல்லாத பயணம் சட்டப்படி குற்றம். அபராதம் ரூபாய் 500-ம் புறப்பட்ட இடத்திலிருந்து சேரும் இடத்திற்கான கட்டணமும் வசூலிக்கப்படும்.


பயணிகள் வசதிக்காக பேருந்தில் சுகாதாரமான குடிநீர் வைக்கப்பட்டுள்ளது.

பயணிகள் தம் உடமைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டுகிறோம். தங்கள் கவனக்குறைவால் ஏற்படும் இழப்புகளுக்கு நிர்வாகமோ ஊழியர்களோ பொறுப்பாக மாட்டார்கள்.

தங்கள் பயணம் இனிதாகட்டும். நன்றி


கணீரென்ற குரலில் ஆரம்பித்து கடைசிவரையில் ஒரு நிரடலும் இல்லாமல் தேவைக்கேற்ற ஏற்ற இறக்கங்களுடன் அந்த நடத்துனர் அறிவிப்பை முடித்தவுடன் கடமையில் அவர் காட்டிய உற்சாகத்தை கைத்தட்டி சிலர் பாராட்டினர்.

விமானங்களில் வரும் அறிவிப்பை போல-சொல்லப்போனால் -இன்னும் சிறப்பாகவே செய்த அந்த நடத்துனருக்கு கண்டிப்பாக ஏதும் அதிக ஊதியம் கொடுத்திருக்க மாட்டார்கள்.அப்படி ஒரு அறிவிப்பை செய்ய வேண்டும் என்ற அவசியமும் அவருக்கு இருக்கவில்லை.

அவர் அறிவிப்பை செய்த விதம் பலவருடங்களாகவே அவர் இதை ஒரு கடமையாகவே செய்து வருகிறார் என்பது தெரிந்தது. அப்பேற்பட்ட ஊழியர்கள் கிடைப்பது அரிது,கிடைத்தாலும் அவர்களுக்குரிய திறமையை சரியாக பயன்படுத்திக்கொள்ளும் நிர்வாகங்களும் அரிது.

நாம் வேலையில் காட்டும் உற்சாகம்தான் பலரையும் கவர்கிறது.நாம் முழுமனதுடன் உற்சாகத்துடன் செய்யும் எந்த வேலையும் மிகச் சிறப்பாக அமைகிறது. அதை குறிப்பிடுவது தான் இந்த இடுகையின் சினா-சோனா




"OUR BEST WORK IS THAT WHICH WE DO EASILY AND JOYFULLY"

நமக்க அளிக்கப்பட்ட வேலை மிகவும் சாதாரணமானதாக இருப்பினும் அதை மேற்கொள்வதில் பல வழிகள் இருக்கும். ஒருவரது பர்ஸனாலிடி எனப்படும் தனித்தன்மையை அவர் வேலையை அணுகும் விதத்தை வைத்தே அறிந்து விடலாம்.

சந்தோஷத்துடன் நாம் மேற்கொள்ளும் எந்த வேலையும் சிறப்பானதாகவே அமையும். அதற்கு, என் நினைவில் நிற்கும்- மறக்கமுடியாத - அந்த நடத்துனரே உதாரணம்.
................
போய்வரும் உயரமும்
புதுப்புது உலகமும்
அவரவர் உள்ளங்களே!
நெஞ்சினில் துணிவிருந்தால்
நிலவுக்கும் போய்வரலாம் !!