Friday, September 11, 2009

பாரதி ஒரு மனோ வைத்தியன்

விளையாட்டுக் குழந்தை மனப்பான்மை மேதைகளின் லட்சணமோ என்னவோ? கணிதத்தில் மகா மேதை என்று கொண்டாடப்பட்ட ஸ்ரீ ராமனுஜம் அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு கிட்டிற்று. மிகச் சாதாரணம் என்று கருதப்படுவதைக்கூட அவர் கேட்டால், குழந்தை போல முகத்தை வைத்துக் கொண்டு “அப்படியா” என்பார். கிண்டலுக்காகத்தான் அப்படி செய்கிறாரோ என்று முதலில் நான் சந்தேகப்பட்டேன். கணிதத்தில்தான் அவர் மேதாவி ! மற்ற விஷயங்களில் குழந்தை மாதிரி என்பதைப் பிறகு தெரிந்து கொண்டு ஆச்சரியப்பட்டேன்.

ராமனுஜத்தைப் போலவே பாரதியும் சில விஷயங்களில் குழந்தையாய் இருந்தார்.
..........
லேசாகப் பைத்தியம் பிடித்த பையன் ஒருவன் பாரதியாரின் கண்ணில் தென்பட்டான். அவனுக்குச் சித்தபிரமை. அவன் அதிகமாக உளறுவதில்லை. மௌனமாக இருப்பான். அவனைக் கண்டதும் பாரதியாருக்கு பரிதாபம். சித்தப் பிரமையை எப்படியாவது போக்கி விட வேண்டும் என்று சங்கற்பம் செய்து கொண்டார். “பைத்தியம் என்பது மனதைப் பிடித்தக்கோளாறு தானே பார்த்துக் கொள்ளலாம்” என்று எங்களுக்குத் தைரியம் சொல்லுவார்.

பையனை அனேகமாக எப்பொழுதும் தொட்டுக் கொண்டே இருப்பார். பழ வகைகளைத் தாமே உரித்துத் தமது கையாலேயே அவனுக்குக் கொடுப்பார்; சில சமயங்களில், ஊட்டவும் செய்வார். இரவில், தம்முடன் கூடவே பக்கத்தில் படுக்க வைத்துக் கொள்வார். கொஞ்சுகிற மாதிரி , ‘என்ன கண்ணு! என்ன ராஜா!’ என்று அவனை அழைப்பார். அவனுக்கு ராஜோபசாரந்தான்.

பையனுடைய சித்தப்பிரமையை நீக்க முயலுவது முயல் கொம்பு வேட்டை என்பது எங்கள் அழுத்தமான எண்ணம்.

பாரதியார் இல்லாத இடங்களில் இல்லாத காலங்களில் நாங்கள் ஒருவரை ஒருவர், ‘என்ன கண்ணு சாப்பிடடி அம்மா! தங்கமோன்னோ! தாமரமோன்னோ! அட குப்பைத் தொட்டியே! சோற்றை முழுங்கேன்! என்று பேசி,நையாண்டி பண்ணிக் கொண்டிருப்போம்.

சித்தப் பிரமை சிகிச்சை,சுமார் ஒரு மாதத்துக்கு மேல்,மிகவும் கிரமமாக நடந்து வந்தது.

கடைசியில், நையாண்டி பண்ணிக் கொண்டிருந்த எங்களை பாரதியார் அடி முட்டாளாக ஆக்கி விட்டார். பையனுடைய சித்தப் பிரமை சிறிது சிறிதாகத் தெளிந்து போய், அவன் நல்ல படியாகப் பேசவும் நடக்கவும் ஆரம்பித்து விட்டான். பாரதியார் ஆனந்தம் அடைந்தார். ஆனால் வெற்றி பெற்றுவிட்டோம் என்ற அகம்பாவக் குறி எதையும் அவரது முகத்திலும் நடையிலும் நாங்கள் காணவில்லை. இந்த நாட்களில், ஈசுவரப் பிரார்த்தனைதான் மிகவும் வலுவாக இருந்தது.

பையனுடைய பெற்றோர்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார்கள். சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து, பாரதியாரை வாழ்த்தினார்கள். அசடு தட்டின முகங்களை வைத்துக் கொண்டு, நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம்.

--------------------------------------
மகாகவி பாரதியார், ஆசிரியர் வ.ரா; பழனியப்பா பிரதர்ஸ். எட்டாம் பதிப்பு (1974)
--------------------------------------
அன்பு நிறைந்த மனது யாவற்றிலும் தெய்வத்தைக் காண்கிறது. அப்போது அதன் சக்தி அளப்பரியது; அதனால் சாதிக்க முடியாதது ஏதும் இல்லை. அது புரியாத வ.ரா. வும் நண்பர்களும் பாரதியை எள்ளி நகையாடினர். ஆனால் தெய்வம் பாரதியின் பக்கம் நின்று நகைத்தது. குழந்தை மனம் கொண்ட கவிஞனோ தன் போக்கிலே ஆனந்தத்தில் திளைத்திருந்தான்.

உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன் றில்லை
ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;
பயிலுமுயிர் வகைமட்டு மன்றி யிங்குப்
பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்
வெயிலளிக்கும் இரவி,மதி,விண்மீன்,மேகம்
மேலுமிங்குப் பலப்பலவாம் தோற்றங் கொண்டே
இயலுகின்ற ஜடப் பொருள்களனைத்தும் தெய்வம்;
எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்.


அந்த மகாகவியின் நினைவு நாளான இன்று அவரை நினைவுகூரும் வகையி்ல் இடப்பட்டப் பதிவு

Wednesday, September 9, 2009

கடவுளின் செயல்பாடு

இன்று (09 /09/09 )மின்னஞ்சலில் கடவுளைப் பற்றி வந்த ஒரு அழகிய ஆங்கில மேற்கோளின் தமிழாக்கம். படத்தை சுட்டினால் பெரிய அளவில் காணலாம்.

இந்த தேவாலயம் திருச்சூர் நகரில் உள்ளது.

விருப்பப்பட்டவர்கள் save image செய்து அதை நண்பர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கலாம்.

Friday, September 4, 2009

முரண்டு பிடிக்கும் ப்ளாகர் -பின்னூட்டம்

திடீரென்று ப்ளாகர் பின்னூட்ட வார்ப்பு கட்டமைப்பில் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. முன்பெல்லாம் முன்னோட்டம்(preview) மஞ்சள் வர்ணத்தில் பிற பின்னூட்டங்களுக்கு கீழே காட்டப்பட்டு வந்தது. இப்போது தனி பெட்டியில் திரைக்கு நடுவே பெரிய எழுத்துகளில் பயமுறுத்துவது போல் zoom செய்து காட்டுகிறது.

போகட்டும். இன்னொரு பிரச்சனை-இந்த மாற்றம் எதைப் பற்றியது என்றால் பிற வலைப்பூ இணைப்பு நிரல்களை(hyper links) சேர்க்க முடியவில்லை. கீழே உள்ள படத்தை காணுங்கள்.


இதில் "http" not allowed என்று வருகிறதே :(

முன்பெல்லாம் சர்வ சாதாரணமாக மேற்கண்ட முறையில் இணைப்பு கொடுக்க முடிந்தது. இப்போது ஒட்டு மொத்தமாக அந்த நிரலை நிராகரிக்கிறது.

சரியென்று நிரலில் “http://" பகுதியை மட்டும் நீக்கிவிட்டு செய்தால் ஏற்றுக்கொண்டது. ஆனால் அப்படி வரும் இணைப்பைச் சுட்டினால் ‘Page Not Found' என்ற பக்கத்திற்கு இட்டுச் செல்கிறது ?????


இதற்கு ஏதாவது நாட்டுமருந்தோ, அலோபதியோ, ப்ளாகர்பதியோ தெரிந்தால் சொல்லுங்களேன்,ப்ளீஜ்ஜ்ஜ் :))