Friday, July 27, 2007

வள்ளுவர் ஆணாதிக்கத்தை ஆதரிப்பவரா ?

வாழ்க்கையில் தவிர்க்க வேண்டியவற்றை சொல்ல வரும் பொழுது அதிகாரம் 91 முழுவதுமாக பெண் வழி சேறல் என்ற தலைப்பில் மனைவிக்கு அடங்கி வாழும் மனிதரை பலவிதமாக குறைத்துப் பேசுகிறார் வள்ளுவர். உதாரணத்திற்கு சில:

1. மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாதவன் ஒரு தொழிலைச் செய்யும் தன்மை, பெருமை பெற்று விளங்க முடிவதில்லை (904)

2. மனைவிக்கு அஞ்சி வாழ்பவன் எந்நாளும் நல்லவர்களுக்கு நல்லதை செய்ய அஞ்சுவான் (905)

3. மனைவியின் விருப்பப்படி நடப்பவன், தன் நண்பனின் குறையையும் நீக்க மாட்டான்; நல்ல செயலும் செய்ய மாட்டான் (908)

4. அறச் செயலும், பொருள் தேடும் முயற்சியும், மற்ற கடமைகளும் மனைவியின் ஏவல் செய்பவனிடம் இல்லை (909)

5. நல்லதைச் சிந்தித்து அதை மனதில் கொள்ளும் தகுதி உடையவன் எக்காலத்திலும் மனைவியின் கட்டளைக்கு இணங்கும் அறியாமை உடையவன் ஆகான் (910)

இதில் விசேஷம் என்னவென்றால் 'எத்தகைய மனைவி' என்பதற்கான குறிப்பு (disclaimer) அந்த அதிகாரத்தில் எங்கும் தரப்படவில்லை. கணவனுக்கு அடங்கா மனைவி என்று நாமாகவே புரிந்து கொள்ள வேண்டுகிறது.

எல்லா சமயங்களிலும் கணவன் சரியாக செயல்படுவான் என்பதில் என்ன நிச்சயம் ? முரட்டு கணவன்மார்களையும் பொறுப்பற்ற கணவன்களையும் வழிக்குக் கொண்டுவர மனைவியானவள் சற்று மன உறுதியுடன் (Assertive) செயல்படும் நிலை ஏற்பட்டால் அதை தவறென்று கொள்ள முடியுமா ?
வெளியார்கள் முன்னிலையில் மனைவியை அன்போடு நடத்துவது போல் நடந்து தனிமையில் குத்தலும் கோபமுமாக கொடுமைப்படுத்தும் சில பேரையும் கண்டிருக்கிறோம்.

அத்தகைய மனைவிமார்கள் அச்சந்தர்பங்களில் தமது சுய மரியாதையை காத்துக் கொள்ளும் முறை பற்றி இது போலவே ஒரு அதிகாரம் ஒதுக்கி வழி சொல்லியிருந்தால் வள்ளுவரை நடுநிலையாளர் என்று போற்றியிருக்கலாம்.

போகட்டும், பெண்களைப் போற்றி என்ன சொல்கிறார் பார்ப்போம் என்று சில குறள்களைத் தேடினதில் 6 ஆவது அதிகாரத்தில் வாழ்க்கைத் துணைநலம் கிடைத்தது.

1. பிற தெய்வங்களைத் தொழாது தன் கணவனையே தெய்வம் என தொழுது துயில் எழுபவள் 'பெய்' என்று சொல்ல மழை பெய்யும் (55)

2. தங்கள் கணவன்மார்களை வழிபடும் பெண்கள் தேவர் உலகத்தவராலும் சிறப்பிக்கப் படுவார்கள்.(58)

3. மனையறத்திற்கு ஏற்ற நற்குண செய்கைகளையும் கணவனின் வருவாய்க்கு தகுந்த வாழ்க்கையும் நடத்துபவளே இல்வாழ்க்கையின் துணையாவாள் (51)

இங்கு சொல்லப்படுவதிலும் நாம் காண்பது பெண் என்பவள் ஒரு ஆணைச் சார்ந்து அவனுக்கு அடங்கியவளாகவே வாழ்வது சிறப்பு என்ற கண்ணோட்டமே.

ஒரு வகையிலே இந்த முறை ஒரு சமுதாயக் கட்டுக்கோப்பை வளர்க்க, காக்க பயன்பட்டது என்றாலும் அக்காலங்களில் பெண்ணுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய அநீதிகளையும் அதற்கான சமூகத் தீர்வுகளையும் பற்றி எங்குமே காணப்படாதது ஆச்சரியமே.

இவ்விஷயங்களில் தேர்ச்சி உள்ளவர்கள் என் போன்ற அரைகுறைகளுக்கு உண்மை நிலையை சிறிது புரிய வைக்கலாமே !

(நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியை வரவேற்கும் பதிவு இது )

Thursday, July 19, 2007

அன்பின் வழி அறிவாரோ இவர்

இன்று நான் படித்த ஒரு கட்டுரையின் தாக்கம் இதை எழுதத்தூண்டியது. வன்முறை வழிகளால் வெறும் தனிப்பட்ட தலைமை நபரின் அரசியல் நோக்கங்கள் ஈடேறப்படுவதே அன்றி போராளிகளும் வெகுஜனங்களும் பெருமளவு பாதிக்கப் படுகின்றனர். யாஸர் அரஃபாத் பற்றிய இக்கட்டுரையில் சொல்லப்படும் கருத்துகள் சிந்திக்கவைப்பவை. இதைப் படித்தபின் 'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது' என்று பாடப்பெற்ற காந்திஜீயின் தலைமையைப் பெற நம் நாடு என்ன தவம் செய்திருந்ததோ என்றே எண்ணத் தோன்றுகிறது. அக்கட்டுரையிலிருந்து என்னை பாதித்த ஒரு சில வரிகள்.

But if one sees him as a man motivated by the spirit of destruction — as someone who hated his enemies without ever much loving his own peoplewho measured his success in the grief he inflicted on others without much caring what his supporters suffered in return: In that case, Arafat scored success after success.

In the words of his fairest and best informed biographers, Barry Rubin and Judith Colp Rubin: "This was the ultimate irony of his life: Arafat, the man who did more than anyone else to champion and advance the Palestinian cause, also inflicted years of unnecessary suffering on his people, delaying any beneficial redress of their grievances or solutions to their problems."


ஒவ்வொரு வார்த்தையும் மிக்க கவனத்துடன் கையாளப்பட்டுள்ளது. ஆழமாக சிந்திக்க வைக்கக்கூடியன. பல நேரங்களில் ஈழ சகோதர சகோதரிகளின் துயர்களைப் படிக்கும் பொழுது என் மனதில் தோன்றிய எண்ணங்களை ஒரளவு அந்த கட்டுரை பிரதிபலிப்பதாகவே நினைக்கிறேன். இடமும் காரணங்களும் சற்று வேறானவை, அவ்வளவே.

வன்முறைகளை விட்டு 'அன்பின் வழியில் தேடினால் தானே ஒளி கிடைக்கும்' என்ற நம்பிக்கையோடு செயல்பட்டால் அமைதியான உலகு பிறக்கும்.

Thursday, July 5, 2007

நலம் தரும், இதை வாசி: சுருள் பாசி- A.I.Ds க்கு ஒரு AID


SPIRULINA (ஸ்பிருலீனா) எனப்படும் சுருள் பாசி உலகத்திலேயே அதிப் பழமையான உயிரினமான சயனோபாக்டீ்ரியா குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஒரு நன்னீரில் வளரும் நுண்பாசி. கடல் பாசி அல்ல. அதன் நீளம் 200 micron. ஒரு மைக்ரான் ஒரு மில்லிமீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு. இதைப் பார்க்க மைக்ராஸ்கோப் அவசியம். இந்தப் படம் 100 மடங்கு பெரிதாக்கப்பட்ட சுருள்பாசியின் படமாகும்.


சுருட்பாசி இன்று மருத்துவ ஆராய்ச்சிகளிலே மிக முக்கியத்துவம் பெற்று வருகிற ஒரு இயற்கை உணவாகப் போற்றப்படுகிறது.


புற்றுநோய் தடுப்பாற்றலிலிருந்து எய்ட்ஸ் நோய்க்கான தீர்வும் இதில் இருப்பதாக ஆராய்சியாளர்கள் கருதுகிறார்கள். சுருள்பாசியில் உள்ள Cynovirin N என்னும் 11Kda (da என்பது டால்டன், புரதங்களின் நீளங்களை குறிக்கும் ஒரு அளவை) நீளமுள்ள ஒரு புரதம் வைரஸ் கிருமிகளின் பெருக்கத்தை தடுத்து எய்ட்ஸ்-ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு கவச உணவாக பயன்படுகிறது. எய்ட்ஸ் நோயின் முக்கிய அறிகுறி இரத்தத்தில் குறைந்து போகும் வெள்ளணுக்களும், மாக்ரோபேஜ் எனப்படும் தடுப்புசக்தியும் ஆகும்.

கதிரியக்கத்தால், உருஷ்ய நாட்டில், பாதிக்கப் பட்ட குழந்தைகளுக்கு சுருள்பாசி கொடுக்கப்பட்ட போது அக்குழந்தைகளின் உடலில் பிற (சுருள்பாசி கொடுக்கப்படாத) குழந்தைகளைக் காட்டிலும் இரத்தத்தின் வெள்ளணுக்கள் வேகமாக வளர்ந்ததைக் கண்டனர்.

இவ்விரண்டையும் இணத்துப் பார்க்கும் போது சுருள்பாசி வெறும் வைரஸின் போக்கைக் கட்டுப்படுத்துவது மட்டுமன்றி நோயெதிர்பிற்க்கு தேவையான இரத்த அணுக்களின் பெருக்கத்தையும் பலப்படுத்துகிறது என்பது புலனாகிறது.

சில வருடங்களுக்கு முன் ஒரு உயர்ந்த ஊட்டச்சத்துள்ள உபவுணவாக (Food supplement) மட்டுமே கருதப் பட்டது சுருள் பாசி. இன்று புற்று நோய் மற்றும் எய்ட்ஸ் போன்ற உயிர் கொல்லி வியாதிகளுக்கு (Killer diseases) ஒரு பெரும் தடுப்பு சக்தியாக, ஒரு காப்புணவாக (Protective food) , உருவெடுத்து வருகிறதென்றால் அது மிகையில்லை.

அது என்ன காப்பு-உணவு ?

ஆரோக்கியமான தேகம் தன்னைத் தானே ஓரளவு நல்ல முறையில் காத்துக் கொள்ளக் கூடியது தான். ஆனால் தற்போதைய இயற்கைக்கு முரணான வாழ்க்கை முறை (தூக்கம் கெட்டு ஷிப்டில் வேலை செய்வது, இரவில் கண் முழித்து வண்டி ஓட்டுவது), பிற பழக்கவழக்கங்கள் (மது, புகைப்பிடித்தல், உணவு நேரங்களில் ஒழுங்கின்மை) போன்றவை உடலின் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கக் கூடியன. வயிற்றில் அல்சர் வருவதற்கும் இவை காரணமாகின்றன. இவை physical stress வகையைச் சாரும்.

இவை தவிர அளவுக்கு மீறி கவலைப்படுதல் (தொழிலில் கடன் திண்டாட்டம், அலுவலகத்தில் அதிகாரிகளின் தொல்லை, மாமியார்-மருமகள் சண்டை, குழந்தைகள் பொறுப்பற்ற போக்கு, கணவன்-மனைவி தகராறுகள்.. இத்யாதி ) உடலுள் பலவிதமான இரசாயன மாற்றங்களை விளைவிக்கிறது. அதன் மூலம் உற்பத்தியாகும் இரசாயன பொருட்கள் உடலின் பல்வகையான திசுக்களை பாதித்து அவற்றின் செயல் திறனை முழுமையாகவோ அல்லது ஓரளவோ பாதித்து விடுகின்றன. இவைகளில் முதலில் பாதிக்கப்படுவது சுரப்பி வகை உறுப்புகளே. இன்சுலீன், தைராய்டு போன்றவை பாதிக்கப்பட்டால் சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் போன்றவை அதிகரிக்கின்றன. அதன் தொடர் வினையாக மூட்டு வலிகள், மூத்திர கோசக் கோளாறுகள் வருகின்றன. இவ்வகையில் வந்து சேரும் வியாதிகளை (நோய்வாய் படுதலை) degenerative diseases என்று கூறுவர். இவை mental stress ஆகும். இது ஒரு வகையில் உடல்மேல் மனம் செய்யும் ஆட்சியை புலப்படுத்துகிறது.

இவை மட்டுமல்லாது வேறு வகைகளில் உடலின் திசுக்களுக்கு ஊறு விளையக் கூடிய - பூச்சிக் கொல்லிகள் போன்ற - நச்சு ரசாயனங்கள், மாசுக்காற்று, மிக அதிகமான வெயில், சக்திக்கு மீறிய உடல் உழைப்பு இவைகளின் காரணமாகவும் திசுக்கள் பாதிக்கப்படுகின்றன. இந்த பாதிக்கப்பட்ட திசுக்களே (Malignant cells) பின்னர் புற்று நோயாக உருவெடுக்கின்றன.

இவைகளுக்கான மூலக்காரணம் மேலே கூறிய ரசாயன மாற்றத்தால் வெளிப்படும் நிறைவுறா-ஆக்ஸீகரணிகளே (ஆக்ஸீகரணி= an oxidising agent)என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

பல சமயங்களில் ஒரு வியாதிக்கென கொடுக்கப்படும் மருந்து பக்க விளைவை ஏற்படுத்தி வேறு ஒரு புது வியாதியைக் கொடுக்கக் கூடும். உதாரணத்திற்கு ப்ளாஸ்டிக் சர்ஜரிக்குப் பின் சைக்லோஸ்போரின் கொடுக்கப்படும் பொழுது பக்க விளைவாக மூத்திர கோசங்கள் பாதிக்கப்படுகின்றன. Chemotherapy என புற்று நோய்க்கென வழங்கப்படும் வெகுவான மருந்துகள் தலைமுடியெல்லாம் கொட்டிப்போகச் செய்யும்.
இத்தகைய பாதிப்பை எதிர்கொள்ள நமது உணவில் போதுமான அளவு காப்புப் சத்துக்கள் இருக்கவேண்டும். நாம் சத்துள்ள உணவு என்று கருதும் இறைச்சி, முட்டை, பால் எல்லாம் உடல் வளர்ச்சிக்கு அல்லது போஷாக்கிற்கு தேவையான ஊட்டச் சத்துகளை தருவனவே அன்றி, காப்பு-உணவு என்ற முறையில் செயல் படுவது மிகக்குறைவே. ஆகவே போஷாக்கு உணவையும் காப்புணவையும் பிரித்தறியும் காலம் வந்து விட்டது.

சரிபோதும், காப்புணவு என்ன என்பதை சொல்லித் தொலையும் என்கிறீர்களா? இதோ...

ஆங்கிலத்தில் இதை Antioxidants என்று பொதுப்படையாக சொல்வர். பலவிதமான நச்சுப் பொருட்களை சமனம் செய்ய பலவிதமான காப்புச் சத்துக்கள் தேவைப்படுகின்றன. இவைகள் நமது ஆகாரத்தில் இடம் பெற்றிருந்தால் சமனவினைக் கிரியைகள் தன்பாட்டுக்கு தானே நடந்து உடலின் திசுக்கள் காக்கப் படுகின்றன. இதற்கு ஒரு நல்ல உதாரணம் மஞ்சள். பண்டைகாலத்திலிருந்தே இதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த நம் முன்னோர்கள் இதைப் பலவிதமாகவும் பயன் படுத்தும் முறைகளை சொல்லிவைத்துள்ளனர். இதற்கு புற்று நோயை தடுக்கும் குணம் மிக அதிகமாகவே உள்ளது என்பது இன்று உலகளவிலே விஞ்ஞான பூர்வமாக ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு உண்மையாகும். காப்புணவுக்கு என்பதற்கு மஞ்சள் ஒரு நல்ல உதாரணம். மஞ்சளிலுள்ள குர்குமினாய்ட்(curcuminoids) எனஅழைக்கப்படும் (இயற்கை) ரசாயனக் கூறுகளே மேலே சொன்ன காப்புத் தன்மைக்குக் காரணம்.

சுருட்பாசியின் சிறப்புத் தன்மைகள் என்னென்ன ?

முன்பே சொன்னது போல ஸயனோ-விரின்-N என்ற ரசாயனக்கூறு எச்.ஐ.வி. வைரஸ் பெருக்கத்தை பெருமளவு கட்டுப்படுத்துவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். இது ஒரு சில கடல் பாசிகள் மற்றும் நீலப்பச்சைப் பாசிகளில் மட்டுமே காணப்படும் ஒரு இயற்கையின் வரமாகும். இதில் பைகோஸயனின் (Phycocyanin) எனப்படும் நீலச்சத்து பல விந்தையான குணங்களைக் கொண்டதாகத் தெரிகிறது. தரையில் வளரும் எந்த தாவரத்திலும் இந்த சத்து கிடையாது. ஏனெனில் நீரில் வெளிச்சம் ஊடுருவல் குறைவை சரிகட்ட குறைந்த ஒளியிலும் ஒளிச்சேர்க்கை தொடர்ந்து செய்ய சுருள் பாசி தயாரித்துக்கொள்ளும் ஒரு விசேஷ ரசாயனக்கூறு இது. இதன் மூலம் பச்சையத்தால் பயன்படுத்த முடியாத ஒளிக்கூறுகளையும் பயன்படுத்திக்கொண்டு சுருட்பாசி வளர்கிறது. இதை ஆங்கிலத்தில் பில்லி ப்ரோட்டீன்ஸ் என்றும் கூறுவர்.

சுருட்பாசியை சிறந்த காப்புணவு என்பதற்கு காரணம் அதில் காணப்பெறும் அசாதாரண ஊட்டச்சத்துகளான நீலச்சத்து (Phycocyanin), ஜி.எல்.ஏ( Gama Linolenic Acid) எனப்படும் நிறைவுறா கொழுப்பு அமிலம், மஞ்சள் சத்து எனப்படும் கரோடீனாய்ட் (carotenoids) மற்றும் பலவிதமான நுண்சத்துகளுமாகும் (micronutrients). இவை ஒவ்வொன்றும் தனித்தனியே ஆன்டி ஆக்ஸிடென்ட் பணிபுரிய வல்லது. அதாவது பலவகையான ரசாயன கூறுகளின் தாக்கத்தையும் அதற்கேற்ற எதிர் கூறுகள் மூலம் முறியடிக்க வல்லமை தருகிறது. இதை, ஒரு ராணுவம் பல்வகையான தளவாடங்களுடன் போரை எதிர் கொள்வதைப் போன்றது. வலுவான ராணுவம் தேசத்தைக்காக்கும். வலுவான காப்புணவு தேகத்தைக் காக்கும்.

அவ்வகையில் சுருட்பாசிக்கு நிகர் சுருட்பாசிதான்.

ஆப்பிரிக்காவில், காங்கோ நாட்டில், மேற்கொண்ட ஒரு சோதனையில் நாற்பது பேர் எயிட்ஸ் நோயாளிகளில் 20 பேருக்கு வழக்கமான மருந்தும் மற்ற 20 பேருக்கு அதனோடு கூட 5 கிராம் சுருள்பாசியும் 3 மாதங்களுக்கு கொடுக்கப்பட்டது. அதனிறுதியில் சுருள் பாசி கொடுக்கப்பட்ட 85 சதவிகித நோயாளிகளில் வெள்ளணுக்களின் அளவு 4000 முதல் 6000 ஆகப் பெருகியிருந்தது. வெறும் மருந்து உட்கொண்டவர்களில் 11சதவிகிதம் பேரே இத்தகைய முன்னேற்றம் கண்டிருந்தனர். இது வெகு தெளிவாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதில் சுருள்பாசியின் செயல்திறனை எடுத்துக் காட்டுகிறது. இந்த ஆராய்சிக்கட்டுரை 2007 மே மாதம் கென்யா நாட்டில் எய்ட்ஸ் நோய் பற்றிய ஒரு கருத்தரங்கில் வாசிக்கப்பட்டது. * இதுமட்டுமல்லாமல் சுமார் 60 சதம் நோயாளிகளின் முகவீக்கம் (facial odema)குணமாகியிருந்தது. ஆனால் வெறும் மருந்து மட்டுமே உட்கொண்டவர்களிடம் எவ்வித வீக்கக்குறைவும் காணப்படவில்லை. இதன் காரணம் சுருள் பாசி ஒரு டையூரெடிக் (diuretic) காகவும் செயல்படுவதுதான். அதிக ரத்தக்கொதிப்புள்ள நோயாளிகளுக்கு டையூரெடிக் மருந்துகள் கொடுக்கப்படும். இதனால் ரத்தத்தில் உள்ள அதிக அளவு நீர் வெளியேற்றப்பட்டு இதயத்தின் வேலைப் பளு குறைக்கப்படுகிறது. வெளியேற முடியாமல் திசுக்களில் கோர்த்துக் கொண்டிருக்கும் நீர் இவ்வாறு வெளியேற்றப்படும் பொழுது வீக்கம் குறைகிறது.

சுருள் பாசியின் பயன்களை கூற பல பதிவுகள் தேவைப்படும். அவைகளை பின்னால் பார்ப்போம்.

இதன் அடுத்தப் பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்

* 4th SAHARA Conference on Social Aspects of HIV /AIDS : Innovations in Access to Prevention and treatmant and care, Kisumu, Kenya 29 April to 2 May 2007