Thursday, July 5, 2007

நலம் தரும், இதை வாசி: சுருள் பாசி- A.I.Ds க்கு ஒரு AID


SPIRULINA (ஸ்பிருலீனா) எனப்படும் சுருள் பாசி உலகத்திலேயே அதிப் பழமையான உயிரினமான சயனோபாக்டீ்ரியா குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஒரு நன்னீரில் வளரும் நுண்பாசி. கடல் பாசி அல்ல. அதன் நீளம் 200 micron. ஒரு மைக்ரான் ஒரு மில்லிமீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு. இதைப் பார்க்க மைக்ராஸ்கோப் அவசியம். இந்தப் படம் 100 மடங்கு பெரிதாக்கப்பட்ட சுருள்பாசியின் படமாகும்.


சுருட்பாசி இன்று மருத்துவ ஆராய்ச்சிகளிலே மிக முக்கியத்துவம் பெற்று வருகிற ஒரு இயற்கை உணவாகப் போற்றப்படுகிறது.


புற்றுநோய் தடுப்பாற்றலிலிருந்து எய்ட்ஸ் நோய்க்கான தீர்வும் இதில் இருப்பதாக ஆராய்சியாளர்கள் கருதுகிறார்கள். சுருள்பாசியில் உள்ள Cynovirin N என்னும் 11Kda (da என்பது டால்டன், புரதங்களின் நீளங்களை குறிக்கும் ஒரு அளவை) நீளமுள்ள ஒரு புரதம் வைரஸ் கிருமிகளின் பெருக்கத்தை தடுத்து எய்ட்ஸ்-ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு கவச உணவாக பயன்படுகிறது. எய்ட்ஸ் நோயின் முக்கிய அறிகுறி இரத்தத்தில் குறைந்து போகும் வெள்ளணுக்களும், மாக்ரோபேஜ் எனப்படும் தடுப்புசக்தியும் ஆகும்.

கதிரியக்கத்தால், உருஷ்ய நாட்டில், பாதிக்கப் பட்ட குழந்தைகளுக்கு சுருள்பாசி கொடுக்கப்பட்ட போது அக்குழந்தைகளின் உடலில் பிற (சுருள்பாசி கொடுக்கப்படாத) குழந்தைகளைக் காட்டிலும் இரத்தத்தின் வெள்ளணுக்கள் வேகமாக வளர்ந்ததைக் கண்டனர்.

இவ்விரண்டையும் இணத்துப் பார்க்கும் போது சுருள்பாசி வெறும் வைரஸின் போக்கைக் கட்டுப்படுத்துவது மட்டுமன்றி நோயெதிர்பிற்க்கு தேவையான இரத்த அணுக்களின் பெருக்கத்தையும் பலப்படுத்துகிறது என்பது புலனாகிறது.

சில வருடங்களுக்கு முன் ஒரு உயர்ந்த ஊட்டச்சத்துள்ள உபவுணவாக (Food supplement) மட்டுமே கருதப் பட்டது சுருள் பாசி. இன்று புற்று நோய் மற்றும் எய்ட்ஸ் போன்ற உயிர் கொல்லி வியாதிகளுக்கு (Killer diseases) ஒரு பெரும் தடுப்பு சக்தியாக, ஒரு காப்புணவாக (Protective food) , உருவெடுத்து வருகிறதென்றால் அது மிகையில்லை.

அது என்ன காப்பு-உணவு ?

ஆரோக்கியமான தேகம் தன்னைத் தானே ஓரளவு நல்ல முறையில் காத்துக் கொள்ளக் கூடியது தான். ஆனால் தற்போதைய இயற்கைக்கு முரணான வாழ்க்கை முறை (தூக்கம் கெட்டு ஷிப்டில் வேலை செய்வது, இரவில் கண் முழித்து வண்டி ஓட்டுவது), பிற பழக்கவழக்கங்கள் (மது, புகைப்பிடித்தல், உணவு நேரங்களில் ஒழுங்கின்மை) போன்றவை உடலின் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கக் கூடியன. வயிற்றில் அல்சர் வருவதற்கும் இவை காரணமாகின்றன. இவை physical stress வகையைச் சாரும்.

இவை தவிர அளவுக்கு மீறி கவலைப்படுதல் (தொழிலில் கடன் திண்டாட்டம், அலுவலகத்தில் அதிகாரிகளின் தொல்லை, மாமியார்-மருமகள் சண்டை, குழந்தைகள் பொறுப்பற்ற போக்கு, கணவன்-மனைவி தகராறுகள்.. இத்யாதி ) உடலுள் பலவிதமான இரசாயன மாற்றங்களை விளைவிக்கிறது. அதன் மூலம் உற்பத்தியாகும் இரசாயன பொருட்கள் உடலின் பல்வகையான திசுக்களை பாதித்து அவற்றின் செயல் திறனை முழுமையாகவோ அல்லது ஓரளவோ பாதித்து விடுகின்றன. இவைகளில் முதலில் பாதிக்கப்படுவது சுரப்பி வகை உறுப்புகளே. இன்சுலீன், தைராய்டு போன்றவை பாதிக்கப்பட்டால் சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் போன்றவை அதிகரிக்கின்றன. அதன் தொடர் வினையாக மூட்டு வலிகள், மூத்திர கோசக் கோளாறுகள் வருகின்றன. இவ்வகையில் வந்து சேரும் வியாதிகளை (நோய்வாய் படுதலை) degenerative diseases என்று கூறுவர். இவை mental stress ஆகும். இது ஒரு வகையில் உடல்மேல் மனம் செய்யும் ஆட்சியை புலப்படுத்துகிறது.

இவை மட்டுமல்லாது வேறு வகைகளில் உடலின் திசுக்களுக்கு ஊறு விளையக் கூடிய - பூச்சிக் கொல்லிகள் போன்ற - நச்சு ரசாயனங்கள், மாசுக்காற்று, மிக அதிகமான வெயில், சக்திக்கு மீறிய உடல் உழைப்பு இவைகளின் காரணமாகவும் திசுக்கள் பாதிக்கப்படுகின்றன. இந்த பாதிக்கப்பட்ட திசுக்களே (Malignant cells) பின்னர் புற்று நோயாக உருவெடுக்கின்றன.

இவைகளுக்கான மூலக்காரணம் மேலே கூறிய ரசாயன மாற்றத்தால் வெளிப்படும் நிறைவுறா-ஆக்ஸீகரணிகளே (ஆக்ஸீகரணி= an oxidising agent)என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

பல சமயங்களில் ஒரு வியாதிக்கென கொடுக்கப்படும் மருந்து பக்க விளைவை ஏற்படுத்தி வேறு ஒரு புது வியாதியைக் கொடுக்கக் கூடும். உதாரணத்திற்கு ப்ளாஸ்டிக் சர்ஜரிக்குப் பின் சைக்லோஸ்போரின் கொடுக்கப்படும் பொழுது பக்க விளைவாக மூத்திர கோசங்கள் பாதிக்கப்படுகின்றன. Chemotherapy என புற்று நோய்க்கென வழங்கப்படும் வெகுவான மருந்துகள் தலைமுடியெல்லாம் கொட்டிப்போகச் செய்யும்.
இத்தகைய பாதிப்பை எதிர்கொள்ள நமது உணவில் போதுமான அளவு காப்புப் சத்துக்கள் இருக்கவேண்டும். நாம் சத்துள்ள உணவு என்று கருதும் இறைச்சி, முட்டை, பால் எல்லாம் உடல் வளர்ச்சிக்கு அல்லது போஷாக்கிற்கு தேவையான ஊட்டச் சத்துகளை தருவனவே அன்றி, காப்பு-உணவு என்ற முறையில் செயல் படுவது மிகக்குறைவே. ஆகவே போஷாக்கு உணவையும் காப்புணவையும் பிரித்தறியும் காலம் வந்து விட்டது.

சரிபோதும், காப்புணவு என்ன என்பதை சொல்லித் தொலையும் என்கிறீர்களா? இதோ...

ஆங்கிலத்தில் இதை Antioxidants என்று பொதுப்படையாக சொல்வர். பலவிதமான நச்சுப் பொருட்களை சமனம் செய்ய பலவிதமான காப்புச் சத்துக்கள் தேவைப்படுகின்றன. இவைகள் நமது ஆகாரத்தில் இடம் பெற்றிருந்தால் சமனவினைக் கிரியைகள் தன்பாட்டுக்கு தானே நடந்து உடலின் திசுக்கள் காக்கப் படுகின்றன. இதற்கு ஒரு நல்ல உதாரணம் மஞ்சள். பண்டைகாலத்திலிருந்தே இதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த நம் முன்னோர்கள் இதைப் பலவிதமாகவும் பயன் படுத்தும் முறைகளை சொல்லிவைத்துள்ளனர். இதற்கு புற்று நோயை தடுக்கும் குணம் மிக அதிகமாகவே உள்ளது என்பது இன்று உலகளவிலே விஞ்ஞான பூர்வமாக ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு உண்மையாகும். காப்புணவுக்கு என்பதற்கு மஞ்சள் ஒரு நல்ல உதாரணம். மஞ்சளிலுள்ள குர்குமினாய்ட்(curcuminoids) எனஅழைக்கப்படும் (இயற்கை) ரசாயனக் கூறுகளே மேலே சொன்ன காப்புத் தன்மைக்குக் காரணம்.

சுருட்பாசியின் சிறப்புத் தன்மைகள் என்னென்ன ?

முன்பே சொன்னது போல ஸயனோ-விரின்-N என்ற ரசாயனக்கூறு எச்.ஐ.வி. வைரஸ் பெருக்கத்தை பெருமளவு கட்டுப்படுத்துவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். இது ஒரு சில கடல் பாசிகள் மற்றும் நீலப்பச்சைப் பாசிகளில் மட்டுமே காணப்படும் ஒரு இயற்கையின் வரமாகும். இதில் பைகோஸயனின் (Phycocyanin) எனப்படும் நீலச்சத்து பல விந்தையான குணங்களைக் கொண்டதாகத் தெரிகிறது. தரையில் வளரும் எந்த தாவரத்திலும் இந்த சத்து கிடையாது. ஏனெனில் நீரில் வெளிச்சம் ஊடுருவல் குறைவை சரிகட்ட குறைந்த ஒளியிலும் ஒளிச்சேர்க்கை தொடர்ந்து செய்ய சுருள் பாசி தயாரித்துக்கொள்ளும் ஒரு விசேஷ ரசாயனக்கூறு இது. இதன் மூலம் பச்சையத்தால் பயன்படுத்த முடியாத ஒளிக்கூறுகளையும் பயன்படுத்திக்கொண்டு சுருட்பாசி வளர்கிறது. இதை ஆங்கிலத்தில் பில்லி ப்ரோட்டீன்ஸ் என்றும் கூறுவர்.

சுருட்பாசியை சிறந்த காப்புணவு என்பதற்கு காரணம் அதில் காணப்பெறும் அசாதாரண ஊட்டச்சத்துகளான நீலச்சத்து (Phycocyanin), ஜி.எல்.ஏ( Gama Linolenic Acid) எனப்படும் நிறைவுறா கொழுப்பு அமிலம், மஞ்சள் சத்து எனப்படும் கரோடீனாய்ட் (carotenoids) மற்றும் பலவிதமான நுண்சத்துகளுமாகும் (micronutrients). இவை ஒவ்வொன்றும் தனித்தனியே ஆன்டி ஆக்ஸிடென்ட் பணிபுரிய வல்லது. அதாவது பலவகையான ரசாயன கூறுகளின் தாக்கத்தையும் அதற்கேற்ற எதிர் கூறுகள் மூலம் முறியடிக்க வல்லமை தருகிறது. இதை, ஒரு ராணுவம் பல்வகையான தளவாடங்களுடன் போரை எதிர் கொள்வதைப் போன்றது. வலுவான ராணுவம் தேசத்தைக்காக்கும். வலுவான காப்புணவு தேகத்தைக் காக்கும்.

அவ்வகையில் சுருட்பாசிக்கு நிகர் சுருட்பாசிதான்.

ஆப்பிரிக்காவில், காங்கோ நாட்டில், மேற்கொண்ட ஒரு சோதனையில் நாற்பது பேர் எயிட்ஸ் நோயாளிகளில் 20 பேருக்கு வழக்கமான மருந்தும் மற்ற 20 பேருக்கு அதனோடு கூட 5 கிராம் சுருள்பாசியும் 3 மாதங்களுக்கு கொடுக்கப்பட்டது. அதனிறுதியில் சுருள் பாசி கொடுக்கப்பட்ட 85 சதவிகித நோயாளிகளில் வெள்ளணுக்களின் அளவு 4000 முதல் 6000 ஆகப் பெருகியிருந்தது. வெறும் மருந்து உட்கொண்டவர்களில் 11சதவிகிதம் பேரே இத்தகைய முன்னேற்றம் கண்டிருந்தனர். இது வெகு தெளிவாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதில் சுருள்பாசியின் செயல்திறனை எடுத்துக் காட்டுகிறது. இந்த ஆராய்சிக்கட்டுரை 2007 மே மாதம் கென்யா நாட்டில் எய்ட்ஸ் நோய் பற்றிய ஒரு கருத்தரங்கில் வாசிக்கப்பட்டது. * இதுமட்டுமல்லாமல் சுமார் 60 சதம் நோயாளிகளின் முகவீக்கம் (facial odema)குணமாகியிருந்தது. ஆனால் வெறும் மருந்து மட்டுமே உட்கொண்டவர்களிடம் எவ்வித வீக்கக்குறைவும் காணப்படவில்லை. இதன் காரணம் சுருள் பாசி ஒரு டையூரெடிக் (diuretic) காகவும் செயல்படுவதுதான். அதிக ரத்தக்கொதிப்புள்ள நோயாளிகளுக்கு டையூரெடிக் மருந்துகள் கொடுக்கப்படும். இதனால் ரத்தத்தில் உள்ள அதிக அளவு நீர் வெளியேற்றப்பட்டு இதயத்தின் வேலைப் பளு குறைக்கப்படுகிறது. வெளியேற முடியாமல் திசுக்களில் கோர்த்துக் கொண்டிருக்கும் நீர் இவ்வாறு வெளியேற்றப்படும் பொழுது வீக்கம் குறைகிறது.

சுருள் பாசியின் பயன்களை கூற பல பதிவுகள் தேவைப்படும். அவைகளை பின்னால் பார்ப்போம்.

இதன் அடுத்தப் பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்

* 4th SAHARA Conference on Social Aspects of HIV /AIDS : Innovations in Access to Prevention and treatmant and care, Kisumu, Kenya 29 April to 2 May 2007

No comments: