Friday, July 27, 2007

வள்ளுவர் ஆணாதிக்கத்தை ஆதரிப்பவரா ?

வாழ்க்கையில் தவிர்க்க வேண்டியவற்றை சொல்ல வரும் பொழுது அதிகாரம் 91 முழுவதுமாக பெண் வழி சேறல் என்ற தலைப்பில் மனைவிக்கு அடங்கி வாழும் மனிதரை பலவிதமாக குறைத்துப் பேசுகிறார் வள்ளுவர். உதாரணத்திற்கு சில:

1. மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாதவன் ஒரு தொழிலைச் செய்யும் தன்மை, பெருமை பெற்று விளங்க முடிவதில்லை (904)

2. மனைவிக்கு அஞ்சி வாழ்பவன் எந்நாளும் நல்லவர்களுக்கு நல்லதை செய்ய அஞ்சுவான் (905)

3. மனைவியின் விருப்பப்படி நடப்பவன், தன் நண்பனின் குறையையும் நீக்க மாட்டான்; நல்ல செயலும் செய்ய மாட்டான் (908)

4. அறச் செயலும், பொருள் தேடும் முயற்சியும், மற்ற கடமைகளும் மனைவியின் ஏவல் செய்பவனிடம் இல்லை (909)

5. நல்லதைச் சிந்தித்து அதை மனதில் கொள்ளும் தகுதி உடையவன் எக்காலத்திலும் மனைவியின் கட்டளைக்கு இணங்கும் அறியாமை உடையவன் ஆகான் (910)

இதில் விசேஷம் என்னவென்றால் 'எத்தகைய மனைவி' என்பதற்கான குறிப்பு (disclaimer) அந்த அதிகாரத்தில் எங்கும் தரப்படவில்லை. கணவனுக்கு அடங்கா மனைவி என்று நாமாகவே புரிந்து கொள்ள வேண்டுகிறது.

எல்லா சமயங்களிலும் கணவன் சரியாக செயல்படுவான் என்பதில் என்ன நிச்சயம் ? முரட்டு கணவன்மார்களையும் பொறுப்பற்ற கணவன்களையும் வழிக்குக் கொண்டுவர மனைவியானவள் சற்று மன உறுதியுடன் (Assertive) செயல்படும் நிலை ஏற்பட்டால் அதை தவறென்று கொள்ள முடியுமா ?
வெளியார்கள் முன்னிலையில் மனைவியை அன்போடு நடத்துவது போல் நடந்து தனிமையில் குத்தலும் கோபமுமாக கொடுமைப்படுத்தும் சில பேரையும் கண்டிருக்கிறோம்.

அத்தகைய மனைவிமார்கள் அச்சந்தர்பங்களில் தமது சுய மரியாதையை காத்துக் கொள்ளும் முறை பற்றி இது போலவே ஒரு அதிகாரம் ஒதுக்கி வழி சொல்லியிருந்தால் வள்ளுவரை நடுநிலையாளர் என்று போற்றியிருக்கலாம்.

போகட்டும், பெண்களைப் போற்றி என்ன சொல்கிறார் பார்ப்போம் என்று சில குறள்களைத் தேடினதில் 6 ஆவது அதிகாரத்தில் வாழ்க்கைத் துணைநலம் கிடைத்தது.

1. பிற தெய்வங்களைத் தொழாது தன் கணவனையே தெய்வம் என தொழுது துயில் எழுபவள் 'பெய்' என்று சொல்ல மழை பெய்யும் (55)

2. தங்கள் கணவன்மார்களை வழிபடும் பெண்கள் தேவர் உலகத்தவராலும் சிறப்பிக்கப் படுவார்கள்.(58)

3. மனையறத்திற்கு ஏற்ற நற்குண செய்கைகளையும் கணவனின் வருவாய்க்கு தகுந்த வாழ்க்கையும் நடத்துபவளே இல்வாழ்க்கையின் துணையாவாள் (51)

இங்கு சொல்லப்படுவதிலும் நாம் காண்பது பெண் என்பவள் ஒரு ஆணைச் சார்ந்து அவனுக்கு அடங்கியவளாகவே வாழ்வது சிறப்பு என்ற கண்ணோட்டமே.

ஒரு வகையிலே இந்த முறை ஒரு சமுதாயக் கட்டுக்கோப்பை வளர்க்க, காக்க பயன்பட்டது என்றாலும் அக்காலங்களில் பெண்ணுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய அநீதிகளையும் அதற்கான சமூகத் தீர்வுகளையும் பற்றி எங்குமே காணப்படாதது ஆச்சரியமே.

இவ்விஷயங்களில் தேர்ச்சி உள்ளவர்கள் என் போன்ற அரைகுறைகளுக்கு உண்மை நிலையை சிறிது புரிய வைக்கலாமே !

(நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியை வரவேற்கும் பதிவு இது )

1 comment:

Pandian R said...

உங்கள் சந்தேகத்திற்கு பதில் உங்கள் கடைசி வரியிலேயே உள்ளது.
/****************
(நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியை வரவேற்கும் பதிவு இது )
************/
ஒருவேளை அந்த மாதிரி அம்மையார்களுக்காக எழுதியிருப்பாரோ என்னவோ.

அழகான பார்வை. மிக்க நன்றி.