Friday, May 25, 2007

ஒரே நாளில் நஷ்டம், நூறு வருடம் !

Avoid Calf-Paths என்று நிர்வாக இயலில் ஒரு சொற்றொடர் உண்டு. 1895-ல் Walter Foss என்ற கவிஞரின் ஒரு கவிதையின் ஆரம்ப வரிகளே அதற்கு காரணம். அது இப்படிச் செல்கிறது.

A hundred thousand men were led
By one calf near three centuries dead
They followed still his crooked way
And lost one hundred years a day....

'மனிதர் யாவரும் சுயமாக சிந்தித்து செயல்பட வேண்டும் என்ற கருத்தை கூற வந்த கவிதையின் முதல் நான்கு வரிகள் அவை. ஒரே நாளில் நூறு வருட இழப்பா ? எப்படி??

முதலில் நான் கண்ட இரு உதாரணங்களை சொல்லி விடுகிறேன்.
சென்னையில் கோட்டூர்புரத்திற்கும் நந்தனத்திற்கும் இடையே பாலம் இல்லாத காலம் 1980 வரை என்ற நினைவு. அப்போது நந்தனம் பகுதி நீச்சல் குளத்தை அடைய சுமார் ஆறு அல்லது ஏழு கி.மீ சுற்றிக்கொண்டு போக வேண்டும். அந்த மேம்பாலத்தை பல பெருங்குடிகள் கட்ட விடாமல் தடுத்ததாகக் கேள்வி. வாகனப் போக்குவரத்து அதிகமானால் அவர்கள் வசிக்கும் பகுதியின் அமைதியைக் கெடுத்து விடுமாம். அந்த அமைதிக்கு ஊறு ஏற்படாதவாறு 18B பேருந்துக்குக் காத்திருந்து, காந்தி மண்டபம், ராஜ்பவன், சைதாப்பேட்டை என்று சுற்றிக்கொண்டு போய்சேர ஒருமணி நேரம் வரை கூட தேவைப்படும். அதுவே பாலம் இருந்திருந்தால் பத்து அல்லது பதினைந்து நிமிடங்களிலே அடைய வேண்டிய தூரம் அது.

சரி சென்னையிலிருந்து தில்லி செல்வோம்.

10000 கோடி ரூபாய்களில் உருவாகிவரும் தில்லியின் மெட்ரோ ரயில் முதல் கட்டமாக 2002-ல் துவக்கப்பட்டது. அப்போது வெளியான விளம்பரத்தில் காணப்பட்ட ஒரு முக்கியமான விஷயம்: மெட்ரோ ரயிலைப் பயன்படுத்தினால் ரூ3 -8 பில்லியன் வருடத்திற்கு கச்சா எண்ணை சேமிக்க முடியும். மேலும் ஒரு மணி நேரத்திற்கு 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பயணிகளின் பயண நேரம் 50 முதல் 75 சதம் மிச்சப்படுத்தப்படுகிறது. இதனால் ஒரு நாளைக்கு 20 லட்சம் மனித மணித்துளிகள் ( Man-hours) மிச்சமாகும்.

இதை உழைப்பின் நேரமாக கணக்கிடுவோம். அதாவது ஒரு நாளைக்கு 8 மணி நேர உழைப்பாக வைத்துக் கொண்டால் 685 மனித உழைப்பு வருடங்கள் மிச்சமாகும். வேறு விதமாக சொல்ல வேண்டுமானால் சுமார் 685 மனிதர்கள் ஒரு வருடம் முழுவதும் உழைத்துத் தரக்கூடிய உற்பத்தித் திறன் ஒரு நாளிலேயே மிச்சப்படுகிறது!

ஆகையால் கவிஞர் Walter Foss கூற்று மிகச்சரியே ! நமது திட்டமிடும் முறையில் உள்ள கோளாறுகளையே அவரது கவிதை படம் பிடிக்கிறது.
அவர் இரண்டே வரிகளில் கூறியதை சற்றே விளக்கும் வகையில், கன்றின் பாதை எப்படி நகரத்தின் பாதையாக மாறியது என்பதையும் கால விரயம் மற்றும் எரிபொருள் விரயம் பற்றிய கவிதை இது.

அடவியுள் அன்றொரு குழக்கன்றும்
மறந்து திரிந்தது திரும்பும் வழியும்
சுற்றிச் சுற்றி சேர்ந்தது வீடும்
மறந்தே போனது சுற்றிய வகையும்


மறுநாட் காலையில் இடையன் நாயும்
மோப்பம் பிடித்ததே கன்றின் வழியும்
பின்னே சென்றது இடையன் மந்தையும்
அதுவே ஆனது பயணியின் பாதையும்


பாதையில் சென்றன வேந்தன் படையும்
முளைத்தன அருகே சாவடி பலவும்
வாணிபம் வந்தது வர்த்தகம் வளர்ந்தது
பட்டி தொட்டியும் பட்டணம் ஆனது


கன்றின் கால்கள் போன அப்பாதையில்
கணக்கிலா பேரும் வந்து போயினர்
மாறுதல் விரும்பா அவரும் நினைப்பது
முன்னவன் வழியே சாலச் சிறந்தது.


வேறு வழிகள் யோசியா இவரும்
இழைப்பரே என்றும் நட்டம் பலவும்
நாடும் இழந்தது ஒப்பிலாச் செல்வம்
மனிதவளம் தரும் உழைப்பின் நேரம்


கணித்தனர் அதையும் அறிஞர் பலரும்
நாளும் இழந்தோம் பன்னூறு வருடம்
விரயம் ஆகும் எரிபொருள் செலவும்
மீந்தால் தீர்க்குமே பசிப்பிணி யாவும்


விரயம் ஒழிந்தால் விந்தைகள் விளையும்
நேரம் போற்றின் ஏற்றம் சேரும்
சிக்கனம் என்பது சிந்தையில் வருவது
கன்றின் பாதை தவிர்ப்பது நல்லது.


(அடவி = காடு, சாவடி= வழிப்போக்கர் தங்கும் இடம் )

மிச்சப்பட்ட நேரம் சற்று அதிக நேரத் தூக்கத்திலோ அல்லது கிரிகெட் பார்ப்பதிலோ வெட்டிப் பேச்சிலோ போய்விடுமே ஒழிய தொழில் உற்பத்திக்கென பயன்படாது என்பதாக ஒருவர் கமெண்ட் அடித்தார். இன்னொரு கிண்டல்காரர் கண்டிப்பாக உற்பத்திக் கூடும் என்று வாதித்தார். அவர் சொல்வது, கூடுகின்ற மனிதவளம். இருந்தாலும் இருக்கலாம் !!

Wednesday, May 2, 2007

மனம் குன்றிய பிஞ்சுகள் :நல்வாழ்வு குழுமம்

குழந்தைகள் என்றாலே மனம் இளகும். அதிலும் மனம் குன்றிய குழந்தைகளென்றால் உருகிவிடும். அத்தகைய குழந்தைகளின் நல்வாழ்வுக்கென எவ்வளவு செய்தாலும் சொன்னாலும் போதாது. அவர்களின் மேம்பாட்டுக்கென குழுமம் (FORUM) வடிவமைப்பில் ஒரு வலை துவக்கப்பட்டுள்ளது. இது ஒரு பள்ளிக்கென செய்யப்பட்டிருப்பினும் இத்தகைய சேவையில் ஈடுபட்டுள்ள அனைவரையும்ஒன்று சேர்க்கும் வகையிலும், உலகத்தின் பல பாகங்களில் இது விஷயமாக நடைபெற்றுவரும் நல்ல காரியங்களையும் பரிமாற்றம் செய்து கொள்ளும் நோக்கோடு இவ்வடிவமைப்பு தரப்பட்டுள்ளது.

மனநலம் குறைப்பாடுள்ள குழந்தைகளின் பெற்றோர், ஆசிரியர்கள் எவருமே இதில் அங்கத்தினராகி கருத்துக்கள் சொல்லலாம். தனியாக வலையில்லாமல் செயல்பட்டுவரும் பள்ளிகளும் இத்தளத்தை, தங்களுடைய நடவடிக்கைகளை எல்லோருக்கும் தெரியும் வகையில் பயன்படுத்தலாம்.

தமிழ் பயணி நாடோடி இந்த வலையகத்தை அழகாக வடிவமைத்துக் கொடுத்துள்ளார்.

வாசகர்கள் அனைவரும் இதை தேவைப்பட்டவர்களுக்கு- இவ்வகை சேவையில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும், எந்த நாட்டினராயினும்- எடுத்துச் சொல்லி உறுப்பினராக்குங்கள். நீங்களும் ஆகுங்கள்

வலையகம் மற்றும் குழுமம் பார்வையிட இங்கே சொடுக்கவும்.