Thursday, July 31, 2008

'மின்னல் வேக' நியோ-வார்ப்புரு (Neo template)

கடந்த இரண்டு நாட்களாக ஒரு புது வார்ப்புரு நிரலை என்னுடைய ஆங்கில வலைப்பூவிற்காக தேடிக் கொண்டிருந்தேன். 'அன்னியலோகம்' ரமணியின் மிகப்
பிரபலமான நியோ வார்ப்புரு (Neo template) நினைவுக்கு வந்தது. அதை நிறுவிய போது கண்ட சில அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.

இது ப்ளாகரின் புதிய வார்ப்புரு பயனர்களுக்கு பொருந்தும்.

விண்ணும் மண்ணும் என்று பெயர் சூடப்பட்ட என்னுடைய பரீட்சார்த்த வலப்பக்கத்தில் இந்த வார்ப்புருவின் செயல்பாட்டைக் காணலாம். இதற்கு கீழே உள்ள பகுதியை அந்த இணைப்பிலேயே சென்று படித்தால் சொல்லப்படும் விஷயங்களை நேரடியாகவே செய்து பார்க்கலாம். எதற்கும் ஒரு முறை இங்கே முழுவதுமாகப் படித்தபின் அங்கு செல்லவும்.

(அந்த வலைப்பக்கம் அடிக்கடி மாறுதலுகளுக்கு உட்படுமாதலால் முழு கட்டுரையும் கீழே தருகிறேன்.)

நியோவின் முக்கிய கவர்ச்சி அதன் ”மின்னல் வேகம்”.

(பெரிது படுத்திப் பார்க்கவும் )

வலைப்பக்கத்தின் 'பதிவு சட்டத்துள்' ளேயே ( Post Frame) பழைய பதிவுகளை உடனடியாகத் தெரிய Neo வகை செய்கிறது. ஒவ்வொரு முறையும் பதிவுகளின் பக்கங்கள் புதிதாக வலையேற்றம் செய்யப்படுவதில்லை. அதோடு பழைய பதிவினுடைய பின்னூட்டங்களும் சேர்ந்தே தெரிகிறது.

வார்ப்புருவை வலையேற்றிய பின் Lay out , Font & color முதலிய தெரிவுகளில் வேண்டிய வடிவத்திலும் வர்ணத்திலும் வடிவமைத்துக் கொள்ளலாம். எல்லா
பதிவுகளில் உள்ளது போலவே பல விட்ஜெட் இணைப்புகளும் கொடுக்க இயலும். எல்லாவற்றையும் விட மூன்று பத்திகள் கொண்ட வார்ப்புருவாகும். இதனால்
வலைப்பக்கத்தில் அதிக விஷயங்களை ஒரே பார்வையில் தர இயலும்.

ஆரம்பத்தில் ரமணி நிறுவியிருக்கும் இரண்டு Label மெனுக்கள் பெரும் குழப்பம் விளைவித்தது. நீலவர்ண பெட்டிக்குள் இருப்பது RECENT POSTS என்ற பெட்டியுடன் தொடர்பு உள்ளது. வெளியே தெரியும் இன்னொரு Label, பதிவுப் பெட்டியுடன் நேரடி தொடர்பு உள்ளது. நான்கைந்து 'மாதிரி' பதிவுகளை பதிந்து
பார்த்த பின்னரே இது புரியத் தொடங்கியது.

உதாரணத்திற்கு நீங்கள் spiritual என்ற Label ஐ நீலப் பெட்டியில் சொடுக்கினால் அது சம்பந்தமான பதிவுகள் அதன் மேலே உள்ள Recent Post பெட்டியில் தெரிகிறது. அதனோடு அதன் RSS ஓடையும் காட்டப்படுகிறது. அங்கே தெரிவு செய்யப்படும் பதிவு, பெரிய பதிவு பெட்டியில் பின்னூட்டங்களோடு உடனடியாகக் காட்டப்படுகிறது. இந்த முறையில் வலைப்பக்கம் மூடித் திறக்கப் படுவதில்லை (does not reload).

அதே 'spiritual' Label ஐ வெளியில் இருக்கும் இணைப்பிலிருந்து சுட்டினால் வலைப்பக்கம் மூடி, புதிதாக திறக்கப்படுகிறது அதற்குண்டான எல்லா பதிவுகளும் மொத்தமாக (ஒன்றன் கீழ் ஒன்றாக) பதிவுப் பெட்டியில் காட்டப்படுகிறது. இப்போது பின்னூட்டங்கள் காட்டப்படுவதில்லை. இது தான் முக்கிய வேறுபாடு.

எதற்காக இந்த ( இரண்டு Label) ஏற்பாடு என்பது புரியவில்லை. ஒன்றே போதும் என்று ஒன்றை நீக்கியபோது இன்னொன்று செயலிழந்து விட்டது. எனவே
நிரலியில் இரண்டுக்கும் பொதுவான ஒரு நிரலோட்டம் உள்ளது என்று புரிந்தது. மென்பொருள் வல்லுனர்கள் இதை விளக்க முடியும்.

இன்னும் ஒரு புதிய விஷயம் ( இதைப் பற்றி யாரும் குறிப்பிட்டதாக தெரியவில்லை) :
ஒரு முறை வலைப்பக்கம் திறந்தவுடன் இணையத்தின் இணைப்பைத்
துண்டித்து விடுங்கள். அதன் பின்னும் நீல நிறப் பெட்டிக்குள் இருக்கும் பதிவுகளின் தலைப்பை சொடுக்கினால் அதற்குரிய பக்கங்கள் பதிவுக்கானப் பெட்டியில் உடனே தெரியும். கிட்டத்தட்ட பத்து பதினைந்து பதிவுகளை இப்படியாக off-line ஆகப் படிக்க முடியும். ஆனால் படங்கள் மட்டும் தெரிவதில்லை

இம்மாதிரியான வசதி வேறு எந்த வார்ப்புருவை பயன் படுத்தினாலும் கிடைக்குமா என்பது சந்தேகமே !

IE மற்றும் Fire Fox உலாவிகளில் நியோ பொருத்திய வலைப்பக்கம் சற்றே வித்தியாசமாய்த் தெரிகிறது. ஃபையர் ஃபாக்ஸில் பெட்டிகளின் மூலைகள் அழகாக வளைந்து காணப்படுகிறது (rounded corners); அதுவே எக்ஸ்ப்ளோரலில் மூலைகளில் கட்டம் கட்டமாகத் தெரிகிறது. ஏனிந்த வித்தியாசம்?

நான் இதுவரை கண்ட வரையில் நியோ வார்ப்புரு மிகவும் பயனுள்ள ஒன்று. தமிழ் பதிவர்கள் இதை ஏன் பரவலாகப் பயன் படுத்த முன் வரவில்லை என்பது
புரியவில்லை. ஒருவேளை தமிழ்மணம் கருவிப் பட்டையை பொருத்துவதில் ஏதேனும் சிரமம் உண்டோ, அல்லது ஒரு வரவிலேயே பல பக்கங்களை படித்த விட முடியும் என்பதால் வாசகர் வருகை குறைவாகக் காட்டப்படும் என்ற எண்ணமோ தெரியாது. புதிய பதிவர்கள் அல்லது வெகு சில பதிவுகளே உடைய பதிவாளர்கள் சுலபமாக நியோ வார்ப்புருவுக்கு மாற்றிக் கொள்ளலாம். வெகுவான விட்ஜெட்கள் இருந்தால் மாற்ற முயல்வது சற்று தொந்தரவான விஷயம்தான்.

இடது பக்கத்தில் இருக்கும் பக்கப் பட்டைகளை வலது பக்கத்திற்கு மாற்ற வேண்டுமானால் என்ன செய்யவேண்டும்? அதை Layout-ல் மாற்ற முடியவில்லை.

ரமணி அவர்கள் இன்னும் பல உபயோகமான மென்பொருட்களை வlலைப் பதிவர்களுக்கென தன் வலைப் பக்கமான Hackosphere-ல் பதிந்து வருகிறார். கண்டு பயன் பெறலாம்.

நியோ செயல்பாட்டு முறைப் பக்கம் காண விண்ணும் மண்ணும் இணப்பைச் சுட்டவும்.

Thursday, July 24, 2008

தண்ணீர்... தண்ணீர்


(படத்தை சொடுக்கி முழு செய்தியும் படிக்கலாம்)

சுமார் இருபது வருடங்களுக்கு முன் முதன் முதலாக செட்டிநாட்டில் கால் வைத்தேன். புதிதாக தொடங்க வேண்டிய ப்ராஜெக்ட் ஒன்றிற்காக ஊர் ஊராக நிலம் தேடி சுற்றி வந்தோம். அப்போது சவேரியார்புரத்தில் ஒரு மதியம், பள்ளத்தூர் செல்ல, பேருந்துக்காக காத்திருந்த வேளை. ஆள் நடமாட்டமே இல்லாத கிராமம்.

உடனிருந்த அன்பர்களில் ஒருவர் குடிப்பதற்கு அருகிலிருந்த வீட்டிற்கு சென்று தண்ணீர் கேட்டார். ஒரு வயதான பெண்மணி ஒரு சொம்பு நிறைய தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். கையில் வாங்கிய அன்பர் அதைப் பார்த்துவிட்டு இன்னொருவரிடம் கொடுத்தார். அவரும் பார்த்து விட்டு என்னிடம் கொடுத்தார். எனக்கு அதைப் பார்த்த உடனே பகீரென்றது. மண்வாசனை கூடிய கலங்கலான மஞ்சள் நிறத் தண்ணீர். ஒருவரை ஒருவர் பார்த்து முழிப்பதைக் கண்ட பெண்மணிக்கு புரிந்து விட்டது.

“அது ஒண்ணும் பண்ணாதுங்க. ஊரணித் தண்ணிதான். நாங்க எல்லாம் குடிக்கிறோமில்ல !” என்று தைரியம் கொடுத்தார். பசித்தவனுக்கு எட்டிக்காயும் தித்திக்குமாம். தவிப்பவன் தாகசாந்திக்கு ஊரணி நீரே அமிர்தம் என்று குடித்து வைத்தோம். ஆயினும் சென்னை திரும்பும் வரை சற்று கவலையாகவே இருந்தது. யாருக்கும் ஒரு தொந்தரவும் வரவில்லை. அதன் பிறகு எட்டு ஆண்டுகள் செட்டிநாடு வாசமும் ஆரோக்கியமாகவே இருந்தது.

எதற்கு சொல்லவந்தேன் என்றால் இப்போதெல்லாம் பாக்டீரியா, காலரா, ஜாண்டீஸ் என்றெல்லாம் அளவுக்கு அதிகமாக பயமுறுத்தி வீட்டுக்கு வீடு தண்ணீர் சுத்திகரிப்பு கருவிகளை பெரிய அளவில் விற்பனை செய்வது வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

அதி சுத்தமான நீரை குடித்து வளர்பவர்களுக்குள் ஒருவருக்கு இயல்பாக இருக்க வேண்டிய நோய் எதிர்ப்புத் திறனை வளரவிடாமல் தடுக்கின்ற அபாயம்தான் இதில் அதிகம்.

இதை என் அனுபவத்திலேயே உணர்ந்துள்ளேன். 1991-ல் ஆறு வாரகாலம் இஸ்ரேலுக்கு போக வேண்டியிருந்தது. பம்பாய்க்கு இரண்டு தினங்கள் முன்பே சென்று, சகோதரனுடன் தங்கி விசா, அன்னிய செலாவணி இத்யாதி எல்லாம் முடித்துக்கொண்டு பயணமானேன். அங்கே விருந்தினரகத்தில் வழங்கப்பட்ட நீரில் ஒரு வித மருந்து வாடை அதிகமாகவே இருந்தது. விசாரித்ததில் நீரை காய்ச்சி விட்டால் அந்த வாடை போய்விடும் என்றும் அது பொது வினியோகத்திற்கு முன் கலக்கப்படும் கிருமி நாசினியினால் வருவது என்றும் தெரிந்தது. மற்றபடி பிரச்சனை ஏதுமின்றி கழிந்தது.

திரும்பவும் மும்பையில் இறங்கி சகோதரன் வீட்டை அடைந்து உணவு உட்கொண்டு நீர் அருந்தினேன். அடுத்த அரை மணிக்குள் பேசக்கூட இயலாத அளவுக்கு தொண்டை கட்டி விட்டது !!

“ஓ! அங்க ட்ரீடெட் வாட்டர். அதனாலத்தான் இங்க வந்ததும் உனக்கு ஒத்துக்கல” என்றான் சகோதரன். பயணத்திற்கு முன்பு ஏற்புடையதாக இருந்த அதே நீர் ஆறு வாரங்களில் ஏற்பில்லாததாகி விடுகிறதென்றால் என் உடலில் ஏதோ ஒரு தடுப்பு சக்தி குறைந்து விட்டதாகத்தானே பொருள்.

நோய் கிருமிகளால் வரக்கூடிய அபாயத்தை காய்ச்சி ஆறிய நீரே தடுக்க முடியும். எளிதும் கூட. ஆனால் காலராவோ ஜாண்டீஸோ எப்போதுமே தலைமேல் தொங்கும் கத்தி (Damocle's sword) போல் கொல்வதற்கு காத்திருப்பதில்லை. சுத்திக்கரிக்கப் படாத நீரினால் எப்போதாகிலும் சிறு அசௌகரியங்கள் உண்டாகலாம். அதற்காக அளவுக்கு மீறி பயமுறுத்துவது வெறும் சந்தைப் படுத்தும் போக்கையே காட்டுகிறது.

எனது முந்தைய தலைமுறையை விட என் தலைமுறை, நோய் எதிர்ப்பு விஷயத்தில், சற்றே பலவீனமானதுதான். அதை விட அடுத்த தலைமுறை இன்னும் பலவீனமாவதைக் காண்கிறேன். இதன் முக்கிய காரணம்
இயற்கையோடு ஒன்றி வாழ்வது குறைந்து கொண்டே வருவதால் தானோ என்று தோன்றுகிறது.

சலனப் படத்தில் ஒரு Reverse Osmosis முறை சுத்திகரிப்பு கருவியில் சுத்திகரிக்கப் பட்ட நீரின் தன்மையை காணலாம்.

Monday, July 21, 2008

தமிழ் இசைப் பிரியர்களுக்காக....

ஒரு சிறிய இசைத் திரட்டு உருவாக்கலாமே என்று தோன்றியது. ஞானிகளின் மொழிக்கு மந்திர சக்தியுண்டு என்று சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆகவே அது நம் தமிழ் ஞானிகளின் மொழி வழியால் வந்த பாடல்களாக இருந்தால் சிறப்பாக இருக்கும் எனவும் பட்டது.

இரண்டு தேவாரப் பாடல்களும்,கந்தர் அலங்காரத்திலிருந்து 'நாளென் செயும்' என்ற பாடலும் சீர்காழி கோவிந்தராசன் அவர்கள் குரலில். அவர் பாடுவதில் தமிழும் பக்தியும், பூவும் மணமுமாகக், கமழும். தெள்ளிய உச்சரிப்பும் பாவனையும் மனதை உருக்கும். தமிழ் பண் இசையை முறையாகப் பயின்றவர் என்பதும் ஒரு காரணமாய் இருக்கலாம். எந்த நாட்டில் எந்த நேரத்தில் கேட்டாலும் மனம் உடனே தமிழ் நாட்டிற்கு பயணித்துவிடும்.

அபிராமி பதிகத்திலிருந்து ‘கலையாத கல்வியும்' பாடலை பாடியிருப்பவர் ராஜ்குமார் பாரதி. இவருடைய பாணியிலும் ஒரு அலாதி ஈர்ப்பு எனக்கு உண்டு. பாடலைக் கேட்ட பின்பு உங்களுக்கே புரியும் ஏன் அப்படி சொன்னேன் என்று.

சஞ்சய் சுப்பிரமணியின் குரலில் ’மானாடா மழுவாட’ என்ற விருத்தம். நடராஜர் பத்து என்ற தொகுப்பிலிருந்து ஒரு பாடல். எழுதியவர் சிறுமணவூர் முனுசாமி.
விருத்தம் பாடுவதும் ஒரு கலை. ஒரு சிலரால் மட்டுமே சிறப்பாக செய்ய முடியும். சஞ்சய் மிகமிக சிறப்பாகவே பாடியிருக்கிறார். கேட்டு அனுபவியுங்கள்.

திருப்புகழைப் பாடப் பாட வாய்மணக்கும். மும்பை சகோதரிகளின் குரலில் ஏவினை நேர்வழி என்ற திருப்புகழைக் கேட்டும் பாடியும் மகிழுங்கள். கூடவே பாடிப் பார்ப்பதற்கு வசதியாக திருப்புகழை எழுத்து வடிவிலும் கீழே தருகிறேன்.

தருமபுரம் சுவாமிநாதன் அவர்களின் குரலிலும் இதேப் பாடலை இணையத்தில் ஓதுவார் டாட் காம்-மில் கேட்டு மகிழலாம். அங்கே அவரது குரல் மட்டும் அல்லாது பல ஓதுவார்களின் குரலில் தமிழிசைக் கேட்கலாம், தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஏவினை நேர்விழி மாதரை மேவிய
ஏதனை மூடனை---- நெறிபேணா
ஈனனை வீணனை ஏடெழு தாமுழு
ஏழையை மோழையை....அகலாநீள்
மாவினை மூடிய நோய்பிணி யாளனை
வாய்மையி லாதனை----யிகழாதே
மாமணி நூபுர சீதள தாள்தனி
வாழ்வுற ஈவது .....மொருநாளே
நாவலர் பாடிய நூலிசை யால்வரு
நாரத னார்புகல் ...குறமாதை
நாடிய கானிடை கூடிய சேவக
நாயக மாமயி....லுடையோனே
தேவிம நோமணி ஆயிரப ராபரை
தேன்மொழி யாள்தரு...சிறியோனே
சேணுயர் சோலையி நீழலி லே திகழ்
சீரலை வாய்வரு ...பெருமாளே

இனி இந்த இசைத் திரட்டை எப்போதும் கற்கை நன்றே மற்றும் சித்திரமும் கைப்பழக்கம் வலைப்பூக்களின் பக்கப் பட்டையி(side bar) லிருந்து கேட்டு மகிழலாம்.