Wednesday, October 30, 2019

பங்குச் சந்தை என்னும் கவர்ச்சி உலகம்-3

       சென்ற இதழில், பங்குச் சந்தையில் கவனமாக முதலீடு செய்வதால் வங்கிகளிடமிருந்து பெறும் வட்டி விகிதத்தை விட அதிகமாகவே வருமானம் பெற வாய்ப்புள்ளது என்பதை கண்டோம். இதில்  சூதாட்ட மனப்போக்கை விலக்கி முதலுக்கு மோசமில்லாமல் வருவாயை அதிகப்படி பெருக்கிக் கொள்ள என்ன வழி என்பதே நமது முயற்சி.

       குறிப்பாக இதில் ஆன்லைன் DEMAT கணக்கு வைத்திருப்பவர்கள் சுலபமாகவே பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட முடியும். இதை எளிமையாக்குவதற்கு பெரும்பாலான பெரும் வங்கிகள் பங்கு விற்பனை பிரிவு ஒன்றை ஏற்படுத்தியுள்ளனர். தேவைப்படுவோர்க்கு அவர்களின் சேவைப்பிரிவு முதலீடுகள் பற்றி தம்முடைய அறிவுரைகளையும் வழங்குகிறார்கள். 

      அவர்கள் தரும் பெரும்பாலான அறிவுரை தம்முடைய வங்கியின் பரஸ்பரநிதி (Mutual Fund) அல்லது அதனோடு இணைக்கப்பட்ட ஆயுள் பாதுகாப்பு சேமிப்பு முதலியவற்றில் முதலீடு செய்தால் பயன் அதிகம் என்பர்.

     பரஸ்பரநிதி என்பது  நம்மைப் போல் நேரமும் பொறுமையையும் இல்லாத சிறு முதலீட்டாளர்களின் முதலீடுகளை ஒன்று திரட்டி வங்கிகளே நேரடியாக பங்கு பரிவர்த்தனையில் ஈடுபடுகின்றன. இதன் மூலம் பல நிபுணர்களின் அனுபவமும் முன்னோக்கும் அந்தந்த நிதியில் பயன்பட்டு லாபம் ஈட்ட ஏதுவாகிறது.     

    சமீபத்திய மிக லாபகரமான பரஸ்பர நிதிகளின் செயல்பாடும் கடந்த 3 அல்லது 5 வருடங்களில் அவைகள் கொடுத்திருக்கும்  வருமானமும் கீழ்கண்ட புள்ளிவிவரத்தின் மூலம் அறியலாம். (30/10/2019)


                           ( படத்தை சொடுக்கி பெரிதாக்கவும்)  

Best Returns என்று குறிப்பிடப்பட்டுள்ள எந்த பரஸ்பர நிதியும்  10% விட அதிகம் காட்டவில்லை.  ஆனால் அதே 3  வருட காலத்தில் பங்கு சந்தையின் வளர்ச்சி 50% என்பதை சென்ற கட்டுரையில் கண்டோம். 

அப்படியானால் முதலீட்டாளர்களின் லாபமெல்லாம் எங்கே போகிறது?  நாம் செய்த முதலீடு நிபுணர்களின் பார்வையில் பங்கு சந்தையில் கொஞ்சமுமாக  வைப்பு நிதியங்களில் (Debt funds)  கொஞ்சமாக வைக்கப்பட்டிருந்தாலும் 25% அல்லது 30% ஆவது விருத்தி அடைந்திருக்க வேண்டாமா?   இது இன்று நேற்றல்ல பலவருடங்களாக என் மனதை குடைந்து கொண்டிருக்கும் கேள்வி.

இன்னொரு வேடிக்கையையும் நீங்கள் அந்த அட்டவணையில் காணலாம். அதாவது முதல் வருடத்தில் 12%லிருந்து 18 % வரை லாபம் காட்டிய அதே நிதி 3 வது வருடம் 7%க்கும் 8 % இறங்கி விடுவதுதான். இது எப்படி? 

 சில வங்கி தொடர்பாளர்களுடன்  பேச்சு வாக்கில் நான் அறிந்து கொண்டது   தங்களுடைய நிறுவன செலவுகள் ( Administrative &Marketing expenses) போக இருக்கும் லாபத்தையே  பங்கு போட முன் வருகின்றனர் என்பதாகும். 

அதாவது நிறுவனச் செலவு எவ்வளவு %  இருக்க வேண்டும் என்பதில்   Reserve Bank, SEBI போன்ற  நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் வேண்டிய அவசியமில்லை. வாடிக்கையாளருக்கும் தெரியவேண்டிய அவசியமில்லை என்ற நிலைதான் இன்று நிலவுகிறது.  எல்லா பரஸ்பரநிதி  நிர்வாக நிறுவனங்களும் பொடி எழுத்துகளில் Investment risk is subject to market conditions என்று எழுதி தம்மை பாதுகாத்துக் கொள்கின்றன.

அதாவது செலவு கணக்கைக்  கூட்டி லாபத்தை குறைப்பது ஒரு வியாபார தந்திரமாகக் கடைபிடிக்கப்படுகிறது.  நம்மூர் வழக்கு மொழியில் சொல்வதானால் இது ஒரு கூட்டுக் களவாணித் திட்டம்.

”உண்மையில் எவ்வளவு லாபம் ஈட்டினேன் என்று சொல்லமாட்டேன். ஆனால் நஷ்டம் வந்தால் அது உன் தலையெழுத்து” 


தேவையான கட்டுப்பாட்டு செயல்முறை என்னவென்றால் பங்கு சந்தை குறியீட்டிற்கு ( BSE  NSE Index)  60 % முதல் 70% க்கு குறையாமல்  டிவிடெண்ட் கொடுக்கப்பட வேண்டும் என்று சட்ட ரீதியாக வலியுறுத்தப்படவேண்டும்.  அப்படி இல்லாமல் போனால் நட்டக்கணக்கு எழுதும் கூட்டம் பெருகிவிடும்.

முதன் முதலாக Unit Trust of India இந்த பரஸ்பர நிதியை 1986 ஆம் வருட வாக்கில்  Master Share என்ற பெயரில் அறிமுகப்படுத்திய போது 10 ரூபாய் யூனிட்கள் 45 ரூபாய் வரை மூன்றாண்டு காலத்தில் வளர்ச்சி அடைந்ததை (350%) கண்டவன் என்ற முறையில் இப்போது நடத்தப்படும் பரஸ்பர நிதி திட்டங்களில் வெறும் கண்துடைப்பு நாடகம் நடப்பதாகவே நினைக்கிறேன்.

இந்த காரணங்களால் எனக்கு Mutual Fund -ல் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லை.

முந்தைய பதிவைக் காண                   அடுத்த பதிவிற்கு