Saturday, September 21, 2019

பங்கு சந்தை என்னும் கவர்ச்சி உலகம்-2

    சென்றப் பதிவில் பங்கு சந்தையைப் பற்றிய என் கட்டுரையைப் பார்த்து முதலில் என்னிடம் கேட்கப்பட்டக் கேள்வி “நீ யாருக்காக இதை எழுதுகிறாய்?” 

       பயணக்கட்டுரைகளை பலர் எழுத நாம் படிக்கிறோம். இதில் அவர்களுடைய அனுபவங்களை புரிந்து கொள்ளவும், போகின்ற இடத்தில் சந்திக்கக் கூடிய எதிர்பாராத  பிரச்சனைகளையும், அங்கே இன்னது கிடைக்கும் அல்லது கிடைக்காது என்கிற விவரங்களை தெரிந்து கொள்ளவும் முடிகிறது. அதனால் ஓரளவு நம் மனநிலையை தயார் படுத்திக் கொள்ளலாம். சில சமயம் சொல்பவருடைய அனுபவம் நன்றாக இருந்தால் நாமும் ஒரு தடவை போய்விட்டு வரலாமே என்று தோன்றும். மோசமாக இருப்பின் ‘ஐயோ வேண்டாம்’ என்று தோன்றும். ஆர்வமுள்ளவர்கள் பலருடைய அனுபவங்களைக் கேட்டுத் தானாக ஒரு முடிவுக்கு வருவார்கள்.

என்னுடைய அனுபவத்தையும் புரிதலையும் அப்படிப்பட்ட ஆர்வமுடையவர்களோடு பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு. இதுவும் ஒரு அனுபவம். முடிவல்ல. இங்கே சொல்லப்படும் கருத்துகளுக்கு மாற்றுக் கருத்துகள் நிச்சயம் இருக்கும்.  சரி தவறு என்று ஏதும் கிடையாது. மேலும் தவறுகளை சரி செய்து கொள்ள வாய்ப்புகள் எப்போதும் உண்டு.

     இந்த பதிவுகளில்  பங்குச் சந்தையை நான் எப்படி அணுகுகிறேன் என்பதை மையமாக வைத்து உங்கள் கருத்துகளுடன்  ஒப்பிட்டுக்  கொள்ளவும்.

    சரி இப்போது விஷயத்திற்கு வருவோம். நம்மிடம்  ரூ. ஒரு லட்சம் முதலீடு செய்ய சேமிப்பு இருப்பதாக வைத்துக் கொள்வோம்.

       என்னைப்போல் சாமானியன் முதலில் பார்ப்பது பாதுகாப்பான வங்கி வைப்புநிதி ( Fixed Deposit).  இதில் வருடத்திற்கு 7 முதல் 7.6 சதம் வட்டி கிடைக்கும். அதாவது ஒரு லட்சம் என்பது ஒரு வருட இறுதியில் ரூ 7600 வரை ஈட்டும்.  அஞ்சல் சேமிப்பிலும் ஏறக்குறைய அதே அளவு தான் இருக்கும். ஏனெனில் இவை மத்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிற்குள் செயல்படுபவை.

        இந்நிலையில்,  நம் பொருளாதாரத்தின் பணவீக்கம்  5% என்று வைத்துக் கொண்டால் நம்முடைய நிகர வருமானம் ரூ 2600/ மட்டுமே. அதாவது சென்ற வருடம் ரூ 1 லட்சத்திற்கு வாங்கிய பொருளின் இன்றைய விலை ரூ 1லட்சத்து ஐந்தாயிரம். என்னுடைய வாங்கும் திறன் குறைந்து விட்டது.  அதற்கு அடுத்த வருடம் அது 1 லட்சத்து ஐயாயிரத்து இருநூற்று ஐம்பதாகும். அப்போது நிகர வருமானம் 2350 ஆகக் குறையும்.  கவலைக்குரிய விஷயம் இது தான்.

  நான் ஒரு  வங்கியின் அறிவுரைப்படி  தொடர் வட்டியில் (Compound interest) வைத்தால் அதன் மதிப்பு ரூ.125518 ஆக  மூன்று வருடங்களில் வளர்ச்சியுறும்.

இதையே பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்தால்?   இதை எப்படி அறிவது?

இதற்கு சென்செக்ஸ் என்ற குறியீட்டை பயன்படுத்துகின்றனர். இது 50 அல்லது 100 மிக அதிகமாக விற்பனை பரிவர்த்தனையில் கைமாறிய பங்குகளின் ஏற்ற இறக்கத்தைக் கொண்டு கணிக்கப்படுகிறது.   மும்பை சந்தையில் 2019 மார்ச் மாதத்தில் இந்த குறியீடு 38762 ஆக உள்ளது.  இதுவே மூன்று வருடங்களுக்கு முன்பு ( 2015-16)-ல் 25341 ஆக இருந்தது.  இதை எளிமைப்படுத்திச் சொன்னால் 52.9% சதவீத வளர்ச்சி.


    இதன்படி நம்முடைய முதலீடான ஒரு லட்சம் ரூபாய் 152900 ஆக வளர்ந்திருக்கும்.  வளர்ச்சி வேகம் வருடத்திற்கு 17.6 %  ஆகிறது. இது வங்கிகள் தரும் வட்டி விகிதத்தை விட 10% அதிகம்.

   [மும்பை பங்குச் சந்தை குறியீடு போலவே தேசிய பங்கு சந்தை குறியீடு என்றும் ஒன்றுள்ளது. இது ஒரு தனி அமைப்பு.  இவர்கள் குறியீடு ஏப்ரல் 2016 -ல் 7713 ஆக இருந்து 2017 மார்ச் மாதத்தின் இறுதியில் 8592 ஆக முடிந்தது. அதுவே 11570 ஆக 2019 மார்ச் இறுதியில் வளர்ந்தது. இதன்படி மூன்று வருடங்களில் 50 % வளர்ச்சியாகும்  நம்முடைய முதலீடு ரூ.150000 ஆகியிருக்கும்.]

    ஆனால் இது தனிப்பட்ட சிறு முதலீட்டார்களுக்கு அப்படியே பொருந்தும் என்று சொல்ல முடியாது.  ஒருவேளை இதைவிட அதிகமாகவும் இருக்கலாம் அல்லது குறைந்தும் போகலாம். அது அவர்கள் வைத்திருக்கும் கம்பெனிகளின் தனிப்பட்ட அன்றைய  சந்தை மதிப்பைப் பொறுத்தது.

அப்படியானால் நல்ல கம்பெனிகளை தேர்வு செய்வது எப்படி?

   நம் போன்ற சாமானியர்களுக்கு எளிதாகும் வகையில் எல்லா பெரிய வங்கிகளிலும் முதலீடு  செய்வதற்கு பல வகைகளில் உதவுகின்றனர்.

இதில் மியுட்சுவல் ஃபண்ட், காப்பீட்டுடன் கூடிய முதலீடு என்பவையும் அடக்கம்.  இவற்றைப் பற்றி என் பார்வையை அடுத்த பதிவில் காண்போம்.

முந்தைய பதிவை படிக்க                                                 அடுத்த பதிவை படிக்க


No comments: