Saturday, November 14, 2020

ப்ளாப்பியின் புது அவதாரம் -New avatar of Floppy disc

 எல்லோருக்கும்  "சத்தமில்லா தீபாவளி "  நல்வாழ்த்துகள்.

முன் எப்போதையும் விட இப்போது சுற்றுப்புறத் தூய்மை பாதுகாப்பு அதிமுக்கியத்துவம் பெற்று வருகிறது. 

ஒரு நாள் பட்டாசு வெடிப்பதால்  காற்றின் மாசு அதிகரிக்கிறது என்று சொல்லும் அரசாங்கம்  பிளாஸ்டிக் பொருட்கள் எங்கும் இறைந்து கிடப்பதை கண்டு கொள்வதே இல்லை. அதை பரிகரிக்கும் செயல்திட்டங்களை அமல்படுத்துவதிலும் மெத்தனத்தைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை.  

இவற்றிற்கு மேலாக இப்பொழுதெல்லாம் ஈ-குப்பை   (e-waste ) எனப்படும் உபயோகமற்ற எலக்ட்ரானிக், கணினி , அலைபேசிகள் மற்றும் அவை   சம்பந்தமான எலக்ட்ரிக் உபகரணங்கள் யாவற்றையும் எப்படி கையாளுவதே என்று தெரியாமல் விழிக்கும் நிர்வாகங்கள் இன்னும் சுற்றுச் சூழல் பிரச்சனையை பெரிதாக்கிக் கொண்டே போகின்றன.

இதை கையாளவே  ஈ -பரிசரா  என்னும் நிறுவனம் பெங்களூரில் வணிக ரீதியாகவே செயல்பட்டு வருகிறது.  அவர்கள் பல முக்கிய நகரங்களில் உங்கள் வாயிலுக்கே வந்து  ஈ-குப்பையை பத்திரமாக அப்புறப்படுத்தி பின்னர்    கண்ணாடி ,பிளாஸ்டிக்  உலோகம்  என்று  வகைப்படுத்துகின்றனர்.  பின்னர் உயர்ந்த உலோகங்களான தங்கம் வெள்ளி போன்றவற்றை மின்னணு கலங்களைப் பயன்படுத்தி   பிரித்தெடுத்து  மீண்டும் பயன்பாட்டுக் கொண்டு வருகின்றனர். பெல்ஜியம் ஜெர்மனி போன்ற நாடுகளில் இதே துறையில் உள்ள நிறுவனங்களுடன் கூட்டுறவு ஒப்பந்தங்கள் செய்து கொண்டு பிரிண்டட் போர்ட் குப்பைகளை ஏற்றுமதி செய்கின்றனர். 

மொத்தத்தில் குப்பை என்பது கிடையாது, முறையாகக் கையாண்டால் எதையும் பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியும்  என்பதை உறுதி செய்கின்றனர்.

என்னிடம் பழைய கணினிகளில் பயன்படுத்தப்பட்ட  பிளாப்பிகள் தற்போது உபயோகமில்லாமல் கிடக்கின்றன.  இதற்காக ஈ-பரிசராவைத் தேடிக்கொண்டு போகமுடியுமா ? அல்லது அவர்களை வரச்சொல்வதும் நியாயமாகுமா?  என்ன செய்வது என்று பல நாட்களாக யோசித்தேன்.

யூ டியூபிலும் உபயோகமான  தகவல் ஒன்றும் கிடைக்கவில்லை. 

திடீரென்று ஒரு யோசனை ..ஏன்  இதை உணவு மேஜையில் கோஸ்டர்ஸ் (Coasters)  ஆக பயன்படுத்தக் கூடாது?

இப்போது பிளாப்பிகள் மறு அவதாரம் எடுத்திருப்பதை தான் கீழே உள்ள படத்தில் காண்கிறீர்கள்'


நான் செய்ததெல்லாம் வீட்டில் இருந்தபடியே இணையம் வழியாக ஒரு  டேப் ரோல்  ஆர்டர் செய்தேன். மற்றும்  ஒரு  ஸ்டிக்கர் டிசைன் செய்து அதை  வேறொரு நிறுவனம் மூலம் பிரிண்ட்  செய்தேன்.  சென்ற வாரம் வந்து சேர்ந்தது. இரண்டும் வாட்டர்  ஃப்ரூப். முப்பது  உருப்படிகளுக்கு  ஆகும் செலவு ரூ. நானூற்று ஐம்பது மட்டுமே.

 இன்று தீபாவளி ரிலீஸ்!!  இனி பலருக்கும் இதை அன்பளிப்பாக கொடுத்து ஒரு புது யுக்தியை பரவலாக்கலாம்.

கொசுறு : ஈ-பரிசராவை  தொடங்கி, நடத்தி வருவது என் னுடன் படித்த  கல்லூரித்  தோழர்  திரு   Dr. பார்த்தசாரதி. அப்துல்கலாம் உட்பட பல ஜனாதிபதிகளிடம்  அவருடைய சிறப்பான முயற்சிக்கு விருதுகள் பல வாங்கியவர்.  அவருடைய சாதனைகளுக்கு  முன் என்னுடைய இந்த  யோசனை தங்கத்தின் முன் பித்தளை இளித்தது போலத்தான். ஆனாலும் ஒரு சிலருக்கு பயன்படலாம் என்ற எண்ணத்தில் வலையேற்றுகிறேன்.

Wednesday, July 22, 2020

சுற்றி நில்லாதே போ பகையே ......


   தரக்கட்டுப்பாடு என்பது ஆதிகாலம் முதலே நாமறிந்ததுதான். 

 ஏதேனும் காரணத்தால் வீட்டில் செய்யும் பண்டம் சரியாக வில்லை என்றால் முதல் காரணம் பெரும்பாலும் அதற்கான இடுபொருளை குறை சொல்வதாகத்தான் இருக்கும். “இந்த தடவை அரிசி புது அரிசி போல இருக்கு அது தான் சாதம் குழஞ்சு போச்சு “ என்பதாகவோ “எந்த கடையில காப்பிப் பொடி வாங்கின, காப்பி கசப்பா இருக்கே” என்றோ பலரீதியில் இருக்கும். “முதல்ல ஒரு சாம்பிள் வாங்கிப் பார்த்து சரியா இருந்தா மொத்தமா மாசத்துக்கு வேண்டியதா வாங்கிக்கலாம்” என்பது அதற்கு தீர்வாகவும் இருக்கும். இந்த சாம்பிள் அல்லது மாதிரி என்பது பூரணத்தின் தன்மையை சொல்லி விடுகிறது. ஒரு மூட்டை அரிசியின் தன்மையை அறிந்து கொள்ள கால்படி சாதம் வடிப்பதில் தெரிந்து விடும். 

அதே போல் பெரும் தரக்கட்டுப்பாடு உள்ள தொழிற்சாலைகளில் இந்த மாதிரியை தேர்ந்தெடுக்கும் முறைகளையும் (random sampling techniques ) வரையறுத்துள்ளார்கள். நூறு டன் சரக்கு, கப்பலில் வந்து இறங்கும் போது அதை முழுவதையும் பிரித்து அறிய முடியாது. ஆனால் ஒரு மாதிரியை வைத்து பரிசோதனை சாலையில் பல சோதனைகள் மூலம் அதன் தரத்தை நிர்ணயம் செய்து விடலாம். 

 இந்த யுக்தியை டிவிஜி நம்முன் வைக்கின்றார். ஒரு பகுதியில் உள்ள கடல் நீரின் தன்மையை அறிவதற்கு ஒரு குடுவை நீரை கொண்டு வந்து பரிசோதித்தால் போதும். [ சில பகுதிகளில் உப்புத்தன்மை கூடி வருவதாகவும், வேறு சில பகுதிகளில் மாசுபடுதல் அதிகமானதாகவும் நமக்குத் தெரிவது இதனால்தான்.

 சூரிய ஒளியின் அன்றைய நிலவரம் அறிய சன்னலைத் திறந்து வைத்தாலே போதும். வானம் மேக மூட்டத்துடன் உள்ளதா வெயில் அதிகமாகக் காய்கிறதா என்று தெரிந்து கொள்ளலாம். 

    அதைப் போன்றே அந்த எல்லையற்ற பரம்பொருளை அறிந்து கொள்ள பக்தன் ஒருவனுக்கு இறைவன் என்று பாவிக்கும் ஒரு சிறு பிம்பமே போதும். அதன் மூலம் தன் உணர்வுகளை எல்லாம் கொட்டி பொழிந்து பக்தியை பெருக்கிக் கொள்கிறான். அதிலேயே பரம இன்பம் அடைகிறான். இது எப்படி இருக்கும் என்றால் பரம ஏழை ஒருவனை எல்லா செல்வங்களும் உள்ள அறையில் விட்டு வேண்டியதை எடுத்துக் கொள் என்று விட்டு விட்டால் எப்படி திக்குமுக்காடிப் போவானோ அப்படியான ஒரு நிலையை பக்தன் அடைகிறான் என்று உவமிக்கிறார் டிவிஜி. (DVG)

 ಅಂಬುಧಿಯ ಮಡಕೆಯಲಿ, ಹೊಂಬಿಸಿಲ ಕಿಟಿಕಿಯಲಿ| 
ತುಂಬಿಕೊಳ್ಳುವ ಬಡವನೈಶ್ವರ್ಯದಂತೆ|| 
ಬಿಂಬದೊಳಗಮಿತ ಸತ್ತ್ವವ ಪಿಡಿದಿಡುವ ಭಕ್ತಿ| 
ಯಿಂಬು ಕಿಂಚಿನ್ಮತಿಗೆ - ಮಂಕುತಿಮ್ಮ|| ( 491) 
பெருங்கடலும் குடுவையுள், பெருஞ்சுடரும் பலகணியில் 
பெருஞ்சீரை அள்ளத் துடிக்கும் ஏழைபோல் 
பெரும்பொருளை பக்தியும் பிடித்தது பிம்பத்தில் 
சிறுமதிக்கு (இ)து (இ)ன்பமே -மக்குத் திம்மா (# 491) 

[பெருஞ்சுடர்=சூரியன் ; பலகணி =சன்னல்; சீர்= செல்வம்

 கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு. ஆகையால் என்றுமே மனிதரின் அறிவு நிலை பேரறிவாளனாகிய இறைவன் முன் ‘சிறுமதியே ஆகும். 

 இலட்சோப லட்ச மக்களின் பக்தி எப்படி கந்தனின் வேலில் அடங்கியது என்பதற்கு இந்தப் பாடல் நல்ல உதாரணம். இயற்கையின் கட்டமைப்பில் -கடலுள் -ஒரு சிறு விரிசல் வந்ததால் பெரும் சுனாமி வந்தது.

 பக்தியின் கட்டமைப்பில் விரிசல் வந்தால் அதன் பரிணாமும் சுனாமி போன்றே இருக்கும் என்பதை இப்பாடலின் மூலம் தெளியலாம். 

 சுற்றி நில்லாதே போ, பகையே துள்ளி வருகுது வேல் -பாரதியார்.


Tuesday, April 14, 2020

சீனர்தம் சீதனம் -தீருமோ துயரம்?

அனைத்து வாசகர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்து

காலையிலிருந்து ஒரு நச நசப்பு. "சீனர்தம் சீதனம்" என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் மனதை அரித்துக் கொண்டே இருந்தது. அதன் காரணமாகவோ என்னவோ புத்தாண்டு வாழ்த்து சொல்லலாம் என்று முயலுகையில் இந்த சீனத்து சீதனத்திலிருந்து விடுதலை கிடைக்க பிரார்த்திப்பதே இன்றைய கட்டத்தில் பொருத்தமாகும் என்று தோன்றியது.

அதைத் தொடர்ந்து எழுந்ததுதான் இந்தக் கவிதை.

பின்னர் இதை வாட்ஸ் அப், டிவிட்டர் யாவற்றிலும் பகிர்ந்து கொண்டாயிற்று. என்னுடைய வலைப்பூ வாசகர்களுக்காக  இங்கும் வலையேற்றுகிறேன்.
சார்வரி ஆண்டில் அனைத்து குழப்பங்களும் மறைந்து உலகம் மீண்டும் சகஜ நிலைக்கு வருவதாக.

சார்வரியில் தீருமோ துயரம்

கலக்கத்தில் பிறக்குதே சார்வரி
கலக்கத்தை போக்கிடு ஈஸ்வரி

சீனர்தம் சீதனம் என சீண்டும் உலகம்-தம்
சீமைக்குள் வரவிடவும் காட்டுமே தயக்கம்

‘சீமானே எட்டி நில்லு’ ஆச்சுதே மந்திரம்
சீக்காளி ஆகாமல் தப்பிடவே தந்திரம்

மூடிய முகங்கள், மூடிய கோவில்கள்
மூடாத ஒரே இனம் காட்சி ஊடகங்கள்

ஊரடங்கி உயிரடங்கி கிடக்கையிலே
ஊடகங்களில் செவி கிழியக்  கூச்சலே

கொரோனா- கொரோனா- கொரோனா !!

அகந்தையிலே அழிவை தேடும் மனிதருக்கு
புகட்டுவேன் பாடம் என வந்தாயோ ? 

மமதையிலே மனம் போன போக்கில் சென்றவனை
மண்ணுக்குள் உன் இடம் தூரமில்லை என்றாயோ ?

மனித நேயம் மலரவும் இது தருணம் 
மக்களின் பசி யாம் அறிந்திட நீ ஒரு காரணம்

உழவனுக்கு சந்தை இல்லை
உழைப்பவனுக்கு வேலை இல்லை
தினக்கூலி இல்லாமல்
தின்பதற்கும் ஏதுமில்லை

கையில் காசிருந்தும் கடைகளில்லை- பாவம்
வாங்கித் தின்ன உணவகம் திறப்பதில்லை

ஏழையின் பாடு பெரும் பாடு 
போக்கிடு நீயும்  -சார்வரியே ! 

போதும் போதும் விகாரி தந்த பாடமே
போதாது எம் சேமிப்பு, வீட்டில் முடங்கிடவே

தீர்வொன்றை தந்திடு, சுலபமாய் குணமாக்கிட
மருந்தொன்றை அளித்திடு, மனக்கிலேசம் போக்கிட 
மாரியை பொழிந்திடு பாரெங்கும் செழித்திட 
வாழிய வையகம் வாழிய வாழியவே

Wednesday, March 25, 2020

இடர் அடி காக்க : Social distancing


    ஊரடங்கு உத்தரவு  இருபத்தியொரு    நாட்களுக்கு வந்தாச்சு. கண்ணிற்குப் புலப்படாத கொரானா வைரஸ்  வல்லரசுகளை மண்டியிட வைத்துள்ளது.  

       யாவரிடமும் எட்டி நின்று  பழகும்படி அரசாங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.  எப்படி நடந்து கொள்ள வேண்டும் அல்லது கூடாது என்பது பற்றி நூற்றுக்கணக்கான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றன.

 பல நாட்டு அதிபர்களும் ‘இந்திய’ முறை  வணக்கத்தை வணக்கத்துடன் ஏற்றுக் கொள்வதே சிறந்தது என்று பரிந்துரைக்கிறார்கள்.  

    இதற்கு இன்றைய நவீனப் பெயர் பொது விலகல் அல்லது  சமூக விலகல் ( Social distancing).  “எட்டி-நில்”  என்றும் வைத்துக் கொள்ளலாம்.

    ஆனால் எப்படிப் பார்த்தாலும் இந்த சொற்றொடர்கள் ஆங்கிலத்தில் உள்ள அந்த உணர்வை சரியாகப் படம் பிடிக்கவில்லை என்றே தோன்றுகிறது.

 சமூக விலகல் : சமூகத்திலிருந்து விலகி நிற்க என்பதாகப் பொருள் தொனிக்கிறது
எட்டி-நில் என்பதில் நீ வேண்டாதவன் என்ற பொருள் தொக்கி நிற்கிறது

அப்படியானால் சரியான உணர்வை பிரதிபலிக்க வேண்டுமானால் சாலையில் வண்டியோட்டும் போது பயன்படுத்தப்படும் Defensive driving என்கிற  சொற்றொடரின் கோணத்திலிருந்து பார்க்கலாம்.

தன்னைப் பாதுகாத்துக் கொள்வது முக்கிய நோக்கம் ஆதலால் அதையொட்டி ஒரு பெயரை யோசிக்கலாம்.

சில வருடங்களுக்கு முன் - சோப்பு விளம்பரமோ அல்லது பற்பசை விளம்பரமோ நினைவில்லை- விளம்பரத்தில் அவர்கள் அடிக்கடி  காட்டிய படம் ஒரு “பாதுகாப்பு வளையம்”.

கொரானோ போன்ற தொத்து வைரஸ்களிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் ஒரு தற்காப்பு வளையத்தை நம்மைச் சுற்றி நாமே வகுத்துக் கொள்ள வேண்டும். அதை  ஆறடி தூரம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.  

அதைவிடக் குறைவானால் அது தொத்து என்னும் இடர் தரும் தூரமாகும். எனவே  "இடர் அடி காக்க"  என்பதாக எச்சரிக்கைக் கொள்ளலாம். சுருக்கமாக இடரடி காப்போம்.

இதை சுய வேலி என்றோ அல்லது தனி அரண் என்றோ அழைக்கலாம்.  அப்படி குறிப்பிடும் போது வேறு எந்த வகையிலும் தவறாக புரிந்து கொள்ள முடியாது.

Maintain social distance =  இடரடி விலக்கு   ; சுய வேலிக்குள் இருங்கள்.

இப்போது கடைகளில் ஒருவரோடு ஒருவர் தொட்டுக் கொள்ளாமல் இருக்கும் பொருட்டு  முன்னெச்சரிக்கை  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

ஆனாலும் நம் எச்சரிக்கையில் நாம் ஒரு சுயவேலி அமைத்துக் கொண்டால் அதற்குண்டான இடைவெளி விட்டு நடமாடினால் சிறந்த தற்காப்பு ஓட்டுனராகலாம்.



    எவ்வகை இடர் வரினும்  சம்பந்தர் பெருமான் அருளிய திரு நீற்றுப்பதிகம் அதைப் போக்கக் கூடியது. அது  எல்லா வகை நோய்களினின்றும் காப்பாற்ற வல்லது என்பது அடியார்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.  

  கூன்பாண்டியனின் தீராத வெப்பு நோய் சமணர்களால் தீர்க்க முடியாதிருந்தது. அப்போது  இப்பதிகத்தை ஓதி சிவபெருமானை துதி செய்து அவனுக்கு திருநீறு வழங்கினார். மன்னனது நோயும் நீங்கி சம்பந்தப் பெருமானின் பாதங்களைத் தொழுதார்.

   கொரோனாவின் இடர் களைய, நம்பிக்கையுள்ளவர்கள், இப்பதிகத்தை சொல்லி திருநீற்றையணிந்தால் தம்மைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக் கொண்டவராவார்கள்.

முதற்பாடல் மட்டும்
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு  துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
செந்துவர் வாய் உமைபங்கன் திரு ஆலவாயான் திருநீறே

உலகம் ஒரு கடினமான கால கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. விரைவிலேயே  அந்த இறைவன் அருளால் யாவரும் நல்ல வண்ணம் மீள, வாழப் பிரார்த்திப்போம்.

திருச் சிற்றம்பலம்.


Sunday, January 12, 2020

சோலர் பவரும் என் அனுபவங்களும்-6

      அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

      ஏப்ரல் 2017 க்குப் பிறகு மீண்டும் இந்த தலைப்பில் ஏதோ சொல்ல வருகிறேனென்றால் என்னுடைய (சோலார்) தேர் இன்னும் நிலைக்கு வரவில்லை என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.  வேறுவிதமாக சொல்வதானால் இன்னும் கற்றுக் கொள்வது (Learning curve) இருக்கிறது.  இங்கே கற்றுகொள்வது என்பது தொழில்நுட்பத்தை அல்ல.

     நம் நடைமுறை தேவைகளுக்கு முரணாகாமல், நம் முதலீடு விரையமாகாமல் எப்படி தொழில்நுட்பத்தைக்  கையாளுவது  என்பதில் தான் ’கற்பது’ அடங்கியுள்ளது.  இதில் அனைவர் அனுபவமும் ஒன்றாக இருக்கமுடியாது.  என் அணுகுமுறை வாசகர்களுக்கு உபயோகமாக இருக்கக் கூடும் என்பதால் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

 2 KW  தனி உபயோகத்திற்கென (OFF Grid)  போடப்பட்டிருந்த என் சோலார் தகடுகள் திருப்திகரமாய்  2016  ஜூன் முதல் வேலை செய்து வந்தன.  என்னுடைய (அரசாங்க) மின்சார பயன்பாடு 120 யூனிட்டிலிருந்து குறைந்து 30 யூனிட்டுக்குள் வந்துவிட்டது. மாதம் 200 யூனிட் உற்பத்தியானாலும் 85 முதல் 90 யூனிட் அளவே பயன் கிடைத்தது. 60 சதம் இழப்பு அதிகம் எனத் தோன்றியது. இதை சென்ற பதிவிலேயே குறிப்பிட்டிருந்தேன்.

      மேலும் 4 பேட்டரிகளை மாற்ற வேண்டிய அவசியம் இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் வரும் போது சுமார் ரூ. 40000க்கு செலவு வரும் என்ற யோசனை பிடித்தாட்டியது. இதைக் குறைப்பதற்கான ஒரே வழி  மின்சார உற்பத்தியைக் கூட்டி  சர்காருக்கு விற்பதுதான் எனத் தோன்றியது. என் சுற்று வட்டாரத்திலும் இதை ஆமோதிக்கவே  அதற்கான ஏற்பாடுகளைத் துவங்கினேன்.  ஏற்கனவே இருந்த 2 KW உடன் மேலும்  2KW சேர்த்து  4 KW ஆக்கினேன். இதில் 3KW சர்காருக்கு விற்பதெனவும் 1 KW எனக்குத் தனியாக (OFF Grid)  வைத்துக் கொள்வதெனவும்  தீர்மானித்தேன். என் அதிருஷ்டத்திற்கு இதை செய்துத் தர ஒரு கம்பெனியும் முன் வந்தது. பொதுவாக ஒரு கம்பெனியின் விஷயத்தில் இன்னொரு கம்பெனி கைவைக்க முன்வராது.  இரண்டு வருட கியாரண்டி தாண்டியிருந்ததால் இதில் பிரச்சனை எதுவும் வராது என்று புரிய வைத்து ஒத்துக் கொள்ள வைத்தேன். ஆறு வாரத்தில் முடித்துக் கொடுப்போம் என்று சொல்லி ஆறு மாதங்கள்  ஆக்கி விட்டனர் என்பது வேறு விஷயம்.


எப்படியோ செப்டம்பர் 2018 ஆரம்பித்து மார்ச் 2019 க்கு செயல்படுத்தி விட்டனர்.  அன்றிலிருந்து டிசம்பர் 31 வரை அரசாங்கத்துக்கு ஏற்றுமதி செய்த மின் அளவு 3450 யூனிட்டுகள்.  அதே சமயம் என்னுடைய  தனி இணைப்பு 1 KW ஆக குறைந்து விட்டதால்  என்னுடைய பயன்பாடு 30  யூனிட்டிலிருந்து  80 யூனிட்டாக அதிகரித்து விட்டது.   இன்னமும் 40 யூனிட் அளவிற்கு தனி இணைப்பினால் மிச்சம் பிடிக்க முடிகிறது.

சரி, இதன் வரவு செலவு என்ன என்கிறீர்களா?

இந்த மாற்றத்தை மேற்கொள்ள செய்த செலவு  ரூ 185000/   ஒரு யூனிட் மின்சாரத்திற்கு கர்நாடக அரசாங்கம் கொடுப்பது ரூ 4.15/  அதன் படி மின்சாரத்தின் மதிப்பு  14317/  இது 9 மாதங்களுக்கானது. அதே விகிதத்தில் 12 மாதங்களில்  ரூ.19089 ஆகும்.   மேலும்  1 KW Off-grid லும் மாதம் சுமார் ரூ 230க் கான சேமிப்பு தெரிகிறது. அதன்படி இன்னொரு ரூ 2760/  வருடத்திற்கு மிச்சமாகிறது. இதன் மூலம் மொத்தம் 4 KW  க்கு  21850/ மதிப்பு வருகிறது.

இதில் 1 KW-ல் ஏற்பட்ட 60 % இழப்பு நேர் செய்யப்பட்டது என்பது ஒரு திருப்தி. அதாவது 2+1 -ன் முழு உற்பத்தியும் Grid க்கு அனுப்பப் படுவதால் இழப்பு எதுவும் இல்லை. பேட்டரிகளை மாற்றுகின்ற நேரம் வரும் போது இரண்டு பேட்டரிகளிலேயே சமாளிக்க முடியுமா என்பதையும் பார்க்க வேண்டும்.

  என்னுடைய எதிர்பார்ப்பு என்னவென்றால் இன்னும் ஒரு வருடத்திற்கு பேட்டரிகள் தாக்குப் பிடித்தால் புதிய பாட்டரி செலவை  இதன் மூலமாகவே ஈடுகட்ட முடியுமே என்பது தான்.  முதலீட்டிற்கு வட்டிக் கணக்கு பார்த்தாலும் 11.8 % வருகிறது. நட்டமில்லை.

     ஒரு பிரச்சனை என்னவென்றால்  அரசாங்கத்திடமிருந்து  உடனுக்குடன் பணம் வராது. எப்போதும் இரண்டு  மூன்று மாதங்கள்  கழித்தே வரும். என் வங்கிக் கணக்குக்கு  நேரடியாக கிரயம் எவ்வெப்பொழுதோ  செய்யப்படும். எதற்கும் விவரம் இருக்காது. மாதாந்திர பில் என்பது கிடையவே கிடையாது.  அரசாங்கங்களின்  திறன் மேம்பட இன்னும் பல வருடங்கள் ஆகும் போலிருக்கிறது.