Sunday, November 18, 2012

மலர்கள் ஏற்றிய மத்தாப்பு

இந்த வருஷம் கொஞ்சம் வித்தியாசமான தீபாவளி.

நாங்கள் வசிக்கும் ரிலயன்ஸ் கம்பெனியின் குடியிருப்பு பகுதிக்கு இரண்டு அல்லது மூன்று கி.மீ  தூரத்தில் பிரதான சாலையிலிருந்து விலகி  ஒரு கி.மீ  உட்புறமாக ஒரு கோவில் உண்டு. இறைவியின் பெயர் ஆஷாபுர தேவி. ஜாம்நகர் அரச குடும்பத்தாரால் ஒரு காலத்தில் வணங்கப்பட்டு வந்த தெய்வமாம். மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் என்று ரிலயன்ஸ் எஸ்ஸார் கம்பெனிகளை சேர்ந்த குடும்பங்கள் அடிக்கடி தரிசனத்திற்கு வருவதுண்டு.



இந்த ஆஷாபுரத்தை சுற்றி குடியிருப்பவர்கள் முக்கியமாக பால் வணிகம் செய்பவர்கள்.  எருமைகள் மெஜாரிட்டி, பசுக்கள் மைனாரிட்டி. எளிமையான மக்கள். சராசரிக்கும் குறைவான வாழ்க்கைத்தரம் என்றே சொல்லலாம். தீபாவளியன்று காலை சத்யசாயி சமிதி அன்பர் ஒருவர் தொலைப் பேசியில் ‘ஆஷாபுரத்து அருகே ஜோகாவாத் கிராமத்தில் தீபாவளி கொண்டாடலாம் வருகிறீர்களா’ என்று கேட்டார். சரியாக ஆறு மணிக்கு மாலை மெயின் கேட்டருகே வந்துவிடுங்கள் என்றார்.
மேடும் பள்ளமுமான சாலையில் ஏறி இறங்கி மின்சாரம் இல்லாத ஒரு கட்டி முடிக்கப்படாத ஒரு கட்டிட வளாகத்தை ஆறேகால் மணிக்குப் போய் சேர்ந்தோம். போய் இறங்கியது நான்கு குடும்பங்கள் , கார் டிக்கி நிறைய பட்டாசு, ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்த சுமார் முப்பது நாற்பது சிறுவர் சிறுமியர் இது தான் அங்கே நிலவிய காட்சி. அடுத்த ஒன்றரை மணி நேரம் அந்த குழந்தைகளின் உற்சாகமும் சந்தோஷமும் கொடுத்த மன நிறைவு வேறு எவ்வகையிலும் பெறமுடியாதது.
அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள சில படங்கள் இங்கே;






கடைசியாக இனிப்பு தின்பண்டங்கள் வினியோகம். அனைத்துக் குழந்தைகளும் குஜராத்தி மொழியில் கல கலப்பாக பேசிக்கொண்டது மரங்களில் பறவைகள் பேசிக்கொள்வது போல் இருந்தது.

 உங்களுடைய இல்லங்களிலும் குழந்தைகளுடன் தீபாவளியை  மகிழ்ச்சியுடன் கழித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.