Showing posts with label மாற்று சக்தி. Show all posts
Showing posts with label மாற்று சக்தி. Show all posts

Sunday, January 12, 2020

சோலர் பவரும் என் அனுபவங்களும்-6

      அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

      ஏப்ரல் 2017 க்குப் பிறகு மீண்டும் இந்த தலைப்பில் ஏதோ சொல்ல வருகிறேனென்றால் என்னுடைய (சோலார்) தேர் இன்னும் நிலைக்கு வரவில்லை என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.  வேறுவிதமாக சொல்வதானால் இன்னும் கற்றுக் கொள்வது (Learning curve) இருக்கிறது.  இங்கே கற்றுகொள்வது என்பது தொழில்நுட்பத்தை அல்ல.

     நம் நடைமுறை தேவைகளுக்கு முரணாகாமல், நம் முதலீடு விரையமாகாமல் எப்படி தொழில்நுட்பத்தைக்  கையாளுவது  என்பதில் தான் ’கற்பது’ அடங்கியுள்ளது.  இதில் அனைவர் அனுபவமும் ஒன்றாக இருக்கமுடியாது.  என் அணுகுமுறை வாசகர்களுக்கு உபயோகமாக இருக்கக் கூடும் என்பதால் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

 2 KW  தனி உபயோகத்திற்கென (OFF Grid)  போடப்பட்டிருந்த என் சோலார் தகடுகள் திருப்திகரமாய்  2016  ஜூன் முதல் வேலை செய்து வந்தன.  என்னுடைய (அரசாங்க) மின்சார பயன்பாடு 120 யூனிட்டிலிருந்து குறைந்து 30 யூனிட்டுக்குள் வந்துவிட்டது. மாதம் 200 யூனிட் உற்பத்தியானாலும் 85 முதல் 90 யூனிட் அளவே பயன் கிடைத்தது. 60 சதம் இழப்பு அதிகம் எனத் தோன்றியது. இதை சென்ற பதிவிலேயே குறிப்பிட்டிருந்தேன்.

      மேலும் 4 பேட்டரிகளை மாற்ற வேண்டிய அவசியம் இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் வரும் போது சுமார் ரூ. 40000க்கு செலவு வரும் என்ற யோசனை பிடித்தாட்டியது. இதைக் குறைப்பதற்கான ஒரே வழி  மின்சார உற்பத்தியைக் கூட்டி  சர்காருக்கு விற்பதுதான் எனத் தோன்றியது. என் சுற்று வட்டாரத்திலும் இதை ஆமோதிக்கவே  அதற்கான ஏற்பாடுகளைத் துவங்கினேன்.  ஏற்கனவே இருந்த 2 KW உடன் மேலும்  2KW சேர்த்து  4 KW ஆக்கினேன். இதில் 3KW சர்காருக்கு விற்பதெனவும் 1 KW எனக்குத் தனியாக (OFF Grid)  வைத்துக் கொள்வதெனவும்  தீர்மானித்தேன். என் அதிருஷ்டத்திற்கு இதை செய்துத் தர ஒரு கம்பெனியும் முன் வந்தது. பொதுவாக ஒரு கம்பெனியின் விஷயத்தில் இன்னொரு கம்பெனி கைவைக்க முன்வராது.  இரண்டு வருட கியாரண்டி தாண்டியிருந்ததால் இதில் பிரச்சனை எதுவும் வராது என்று புரிய வைத்து ஒத்துக் கொள்ள வைத்தேன். ஆறு வாரத்தில் முடித்துக் கொடுப்போம் என்று சொல்லி ஆறு மாதங்கள்  ஆக்கி விட்டனர் என்பது வேறு விஷயம்.


எப்படியோ செப்டம்பர் 2018 ஆரம்பித்து மார்ச் 2019 க்கு செயல்படுத்தி விட்டனர்.  அன்றிலிருந்து டிசம்பர் 31 வரை அரசாங்கத்துக்கு ஏற்றுமதி செய்த மின் அளவு 3450 யூனிட்டுகள்.  அதே சமயம் என்னுடைய  தனி இணைப்பு 1 KW ஆக குறைந்து விட்டதால்  என்னுடைய பயன்பாடு 30  யூனிட்டிலிருந்து  80 யூனிட்டாக அதிகரித்து விட்டது.   இன்னமும் 40 யூனிட் அளவிற்கு தனி இணைப்பினால் மிச்சம் பிடிக்க முடிகிறது.

சரி, இதன் வரவு செலவு என்ன என்கிறீர்களா?

இந்த மாற்றத்தை மேற்கொள்ள செய்த செலவு  ரூ 185000/   ஒரு யூனிட் மின்சாரத்திற்கு கர்நாடக அரசாங்கம் கொடுப்பது ரூ 4.15/  அதன் படி மின்சாரத்தின் மதிப்பு  14317/  இது 9 மாதங்களுக்கானது. அதே விகிதத்தில் 12 மாதங்களில்  ரூ.19089 ஆகும்.   மேலும்  1 KW Off-grid லும் மாதம் சுமார் ரூ 230க் கான சேமிப்பு தெரிகிறது. அதன்படி இன்னொரு ரூ 2760/  வருடத்திற்கு மிச்சமாகிறது. இதன் மூலம் மொத்தம் 4 KW  க்கு  21850/ மதிப்பு வருகிறது.

இதில் 1 KW-ல் ஏற்பட்ட 60 % இழப்பு நேர் செய்யப்பட்டது என்பது ஒரு திருப்தி. அதாவது 2+1 -ன் முழு உற்பத்தியும் Grid க்கு அனுப்பப் படுவதால் இழப்பு எதுவும் இல்லை. பேட்டரிகளை மாற்றுகின்ற நேரம் வரும் போது இரண்டு பேட்டரிகளிலேயே சமாளிக்க முடியுமா என்பதையும் பார்க்க வேண்டும்.

  என்னுடைய எதிர்பார்ப்பு என்னவென்றால் இன்னும் ஒரு வருடத்திற்கு பேட்டரிகள் தாக்குப் பிடித்தால் புதிய பாட்டரி செலவை  இதன் மூலமாகவே ஈடுகட்ட முடியுமே என்பது தான்.  முதலீட்டிற்கு வட்டிக் கணக்கு பார்த்தாலும் 11.8 % வருகிறது. நட்டமில்லை.

     ஒரு பிரச்சனை என்னவென்றால்  அரசாங்கத்திடமிருந்து  உடனுக்குடன் பணம் வராது. எப்போதும் இரண்டு  மூன்று மாதங்கள்  கழித்தே வரும். என் வங்கிக் கணக்குக்கு  நேரடியாக கிரயம் எவ்வெப்பொழுதோ  செய்யப்படும். எதற்கும் விவரம் இருக்காது. மாதாந்திர பில் என்பது கிடையவே கிடையாது.  அரசாங்கங்களின்  திறன் மேம்பட இன்னும் பல வருடங்கள் ஆகும் போலிருக்கிறது.




Monday, September 26, 2016

சோலார் பவரும் என் அனுபவங்களும்-4



எப்பொழுது  எங்கள் ”மாலை 2 காலை ” மின் பற்றாக்குறைக்குக் காரணம்  குளிர்பதனப் பெட்டி என்று எனக்கு எண்ணம் ஏற்பட்டதோ  அப்போழுதே  அதற்கான பரிகாரம் தேட ஆரம்பித்தேன்.

இப்பொழுதெல்லாம்  நட்சத்திர குறிப்புடன் திறம் மிக்க  குளிர்பதனப் பெட்டிகள், அறை குளிரூட்டல், தண்ணீர் காய வைத்தல் போன்ற சாதனங்களுக்கு  வந்திருப்பதால்  நம்முடைய பழைய எந்திரங்களின்  திறனை ஒப்பிட்டு பார்க்க முடிகிறது. அப்படிப் பார்த்ததில்  என்னுடைய ஃபிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டி கிட்டத்தட்ட  மூன்று மடங்கு சக்தியை உபயோகித்துக் கொண்டிருந்தது

Wednesday, September 14, 2016

சோலார் பவரும் என் அனுபவங்களும் -3


வெற்றிகரமாக சூரியமின் சக்தி தகடுகளை நிறுவி வீட்டிற்கு இணைப்பு கொடுத்தாகி விட்டது. இதனை சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொள்வது எப்படி என்பதை அதை நிறுவ வந்த இஞ்சினியருக்கே சொல்லத் தெரியவில்லை.

அவர் பொதுவாக சொன்னது
“ நல்ல அவுட்புட் வேணும்னா வெயில் இருக்கும் போதே எல்லா வேலையையும் செஞ்சுக்குங்க. சாயங்காலம் அஞ்சுமணிக்கு மேலே பாட்டரிலே ஓடட்டும். அந்த நேரத்துல ஹீட்டர் மாதிரி ஹெவி லோட் குடுக்காம இருந்தா ராத்திரி பூராவும் பாட்டரி பேக்-அப் லே ஓடும். கிரைண்டர், மிக்ஸி,  வாஷிங்மெஷின், ரைஸ் குக்கர் இப்படிப்பட்ட சமாசாரத்தையெல்லாம் காலைல எட்டு மணியிலேருந்து மதியம் மூணு -இல்லை-நாலு மணிக்குள்ள முடிச்சுட்டீங்கனா எல்லாம் சோலார்பவர்-ல நடந்துறும். பாட்டரில மிச்சம் ஸ்டோராயிருக்கிற பவர் ராத்திரிக்கு  டிவி, பிரிட்ஜ், லைட் வரைக்கும் போதுமானது.”

Tuesday, November 25, 2008

கரெண்ட் போச்சா ? மாட்டை கட்டு !

முதல் முதலா கச்சா எண்ணெய் பிரச்சனை 70 களில் வந்த போது மாற்று எரிசக்தி ஆராய்ச்சி மிகவும் சூடாக ஆரம்பித்தது.அப்போது மாட்டு வண்டியை எப்படி மேம்படுத்துவது அதனால் எருதுகளின் சக்தி வீணாகமல் எப்படி முழுமையாக பயன்படுத்த முடியும் என்றெல்லாம் பெங்களூர் Indian Institute of Management-லிருந்து ஆராய்ச்சி கட்டுரைகள் வெளிவந்தன.அதை யொட்டி வெளிவந்த ஒரு கேலிச் சித்திரம் சிந்தனையை தூண்டுவதாக இருந்தது.

வண்டி இழுக்கும் இரண்டு மாடுகள் பேசிக் கொள்கின்றன “You know, we are no more animals; we are alternate sources of energy "

இன்றைக்கு Times of India (Times Bangalore 25/11/08) பத்திரிக்கையில் வந்திருக்கும் ஒரு செய்தி அதை நிஜப்படுத்துவது போல் உள்ளது.
படத்தை சுட்டினால் பெரிதாக்கி முழு விவரத்தையும் படிக்கலாம்.

செக்கு மாடுகள் எண்ணெய் வித்துகளை அரைத்து எண்ணெய் எடுக்க ஒரு குறிப்பிட்ட வட்டப்பாதையில் சுற்றி வருவது போலத்தான் இதிலும் மாடுகள் சுற்றிச் சுற்றி வரவேண்டும். அதை தகுந்த பற்சக்கரங்கள் (கியர்) துணையோடு சுற்றுவிசையாக மாற்றி ஒரு ஜெனேரட்டர் வழியாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

தற்போது 2 KW ஜெனேரேட்டர் மாதிரி உற்பத்தி திறனுள்ள எந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

யாவரும் புரிந்து கொள்ளக்கூடிய எளிதான தொழில்நுட்பம். சுருக்கமாகச் சொன்னால் சைக்கிள் பெடல் மிதிப்பதால் டைனமோ எரிவதைப்போல என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

இதை ஒட்டி மனதில் வரும் சில எண்ணங்கள்.

உழவு மாடுகளை செக்கு மாடாக பயன்படுத்த முடியாது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.அது உண்மையில்லா விட்டால் வருடத்தில் விவசாயத்தில் நான்கு மாதங்களே பயன்பட்டு வரும் எருதுகள், இந்த வேலையினால் வருடம் முழுவதும் பயன்பட வாய்ப்பிருகிறது.

கோவை,மைசூர் போன்ற நகரங்களில் தெருக்களில் சும்மா சுற்றிக்கொண்டிருக்கும் குதிரைகளை பூட்டினால் இன்னும் அதிகமான மின் உற்பத்தி திறனுடைய ஜெனேரட்டர்களை இயக்கமுடியுமோ என்னமோ !

இதில் ஒரு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.அதாவது எருதுகளை (எருமைகளையும் வடநாட்டில் பயன்படுத்துவதுண்டு) செக்கு மாடுகளைப் போல் பயன்படுத்தினால் பிராணிநல ஆர்வலர்களுக்கு கோபம் வருமாம்!! அதனால் இந்த தொழில் நுட்பத்திற்கு மான்யம் அளிக்க மத்திய அரசு தயங்குகிறதாம்.

ஆயிரக்கணக்கான வருடங்களாக மனிதனுடைய உற்ற தோழனாக இருந்து அவன் கூடவே உழைப்பில் பங்கு கொண்டு குடும்பத்தில் ஒருவராக கருதப்பட்ட பிராணிகளை இன்று வெகுவாக உணவுக்காக வளர்த்து கசாப்பு கடைகளுக்கு அனுப்புவதை இந்த ஆர்வலர்கள் ஏன் தடுப்பதில்லை ?

ஒருவேளை விருப்பமில்லாததால் தட்டிக் கழிக்க அரசு அவர்கள் மேல் பழியை திருப்புகிறதோ ?
மீண்டும் பிராணிகளையும் மனிதர்களையும் ஒருவரைச் சார்ந்து ஒருவர் என்ற வகையில் இணைக்கக்கூடிய,சுற்றுப்புற சூழலுக்கு தீங்கிழைக்காத தொழில் நுட்பம் என்ற வகையில் இதன் முன்னேற்றத்தை துரிதப்படுத்த வேண்டும். (படம் :நன்றி F.A.O.)