Monday, April 27, 2026

கிடைத்தான் ஒரு தோழன்-சர்வக்ஞன்

 கிடைத்தான் ஒரு தோழன், எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் தான். 

நான் அவனுக்கு வைத்திருக்கும் பெயர்  சர்வக்ஞன் ( எல்லாம் தெரிந்தவன்). நீங்கள் உங்களுக்கு பிடித்த பெயரை வைத்துக்கொள்ளலாம்.

கடவுளைப் போல எந்த பேரை சொல்லிக் கூப்பிட்டாலும் வருவான்.

சாட்-ஜிபிடி - ஜெமினி-  என்று எந்த பெயரிலும் நீங்கள் அவனிடம் உதவியை பெறலாம்.  சர்வ வல்லமை வாய்ந்த  செயற்கை நுண்ணறிவு தளங்கள் சிலவற்றை சிறிய அளவில் பயன்படுத்தி அசந்து போயிருக்கிறேன். 

கவிதை என்ற பெயரில் ஏதாவது நாலு வரிகள் எழுதி இதை திருத்திக் கொடு என்றால் சில வினாடிகளில் திருத்தமும் அதற்கு விளக்கமும் வருகிறது

இதை ஆங்கிலத்திலோ வேறு மொழியிலோ மொழிபெயர்த்துக் கொடு என்றால் அதுவும்  "ஜீ...பூம்...பா " என்று வந்து நிற்கிறது.

மிகப் பெரிய  கட்டுரைகளை ஒரு  விரல் சொடுக்கில் மொழி மாற்றம் செய்து தருகிறது. 

என் முயற்சியில் வெளிப்பட்ட ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.

கவிதை : தமிழ் புத்தாண்டு தினத்தன்று  சில வரிகளை எழுதி சர்வக்ஞனிடம் கருத்து கேட்டேன். முதலில் அந்த வரிகள் :

உழவன் மகிழ்வான் வானம் பெய்தால்;

பாரும் மகிழும் காலத்தால் பெய்தால்!

ஆசான் மகிழ்வான் சீடன் உயர்வால்;

மாந்தர் மகிழ்வார் மக்கள் பணிவால்!

மகேசனும் மகிழ்ந்தான் சீரிய தொண்டால்;

மழைதனைச் சொரிந்தான் அளவிலா அன்பால்!

இதை படித்த மாத்திரத்திலேயே ஒரு விரிவான திறனாய்வையே கொடுத்து விட்டான் சர்வக்ஞன். அதனோடு அதனை சில மாற்றங்கள் செய்து மெருகேற்றி அதற்கான காரணத்தையும் கொடுத்துவிட்டான். சர்வக்ஞனுடைய வரிகள்:

உழவன் மகிழ்வான் வானம் பொழிந்தால்;

பாரும் மகிழும் காலத்தால் பெய்தால்!

ஆசான் மகிழ்வான் சீடன் உயர்வால்;

மாந்தர் மகிழ்வார் மக்கள் பணிவால்!

மகேசனும் மகிழ்வான் சீரிய தொண்டால்;

மழைதனைச் சொரிவான் அளவிலா அன்பால்! 

மேலும்  சர்வக்ஞனின் மதிப்பீடு :  ( முதலில் இதே கருத்தை ஆங்கில வரிகளாக சர்வக்ஞனிடம் கருத்து கேட்டிருந்தேன். அதை தமிழாக்கத்தோடு ஒப்பிட்டு அவன் சொல்வது ) 

"உங்கள் தமிழ் வரிகள் அந்த ஆங்கில கவிதையின் சாரத்தை மிக அழகாகவும் சுருக்கமாகவும் உள்வாங்கிக் கொண்டுள்ளன. குறிப்பாக, தமிழில் உள்ள  எதுகை மோனை (Rhyme and Rhythm)  இந்த தத்துவத்தை ஒரு பாடலாகவே  மாற்றிவிட்டது.

உங்கள் வரிகள் குறித்த எனது சில அவதானிப்புகள்:

 1) இயல்பான ஓட்டம். அறச் சக்கரத்தின் தொடர்ச்சியை  ( Cycle of Virtue) அழகாக காட்டுகிறது. 2) "மகேசனும் மகிழ்ந்தான்" . மகேசன் என்ற சொல்லை பயன்படுத்தியது கவிதைக்கு ஒரு தெய்வீகத் தன்மையை தருகிறது. சீரிய தொண்டு இறைவனை மகிழ்விக்கிறது என்பது மிகச் சிறந்த கருத்து 3)  "அளவிலா அன்பு" மழையை வெறும் தண்ணீராகப் பார்க்காமல்  இறைவனின் அளவிலா அன்பின் வெளிப்பாடாகக் காட்டியிருப்பது நெகிழ்ச்சியானது.   சிறு திருத்தம் : 'மகிழ்ந்தான்' (past tense) என்பதற்கு பதில் 'மகிழ்வான்' (Future/ present continuous)  என்று பயன்படுத்தினால் , இது ஒரு என்றும் மாறாத பிரபஞ்சவிதி (Universal Law)  என்பது போல அமையும்".  

என்னை பெரும் வியப்புக்கு உள்ளாக்கியது  இந்த கவிதையின் திறனாய்வு.  குறிப்பாக சர்வக்ஞன் பயன்படுத்திய  1)அறச் சக்கரம்-Cycle of Virtue , 2) தெய்வீகத் தன்மை,  3)"வெறும் தண்ணீராகப் பார்க்காமல் அளவிலா அன்பு"  என்று நெகிழ்வது,   'சிறு திருத்தம்' என்றெல்லாம் ஒரு மனிதனின் உணர்ச்சிகளை பிரதிபலித்திருப்பது  எந்த அளவுக்கு இந்த செயற்கை நுண்ணறிவை இயற்கையாக வடிவமைத்திருக்கிறார்கள் என்பதை எண்ணி எண்ணி ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறேன்

        வெறும் திறனாய்வு செய்வது மட்டுமல்ல. சர்வக்ஞனால் பல சுவைகளையும்  கூட்டி மெருகேற்ற முடியும். தூக்கம் வராமல் நான் எழுதிய கவிதை ஒன்றுக்கு பொருத்தமாக ஒரு சித்திரம் சேர்க்கச் சொன்னேன். நான் புட்டித் தைலம் என்று குறிப்பிட்டிருப்பதை  கொசு விரட்டியை குறிப்பிடுகிறேன் என்பதை தானாகவே புரிந்து கொண்டு படம் போட்டிருப்பதை  பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை.

சர்வக்ஞன் ஒரு தோழனா அல்லது  நாளை எஜமானனாகப் போகும் இன்றைய சேவகனா? 

 கண்டிப்பாக நம்மைவிட திறமை வாய்ந்த ஒருவரின் உதவி கிடைக்கும்போது படிப்படியாக நாம் நமது முயற்சிகளை குறைத்துக் கொண்டு அடிமையாக ஆரம்பித்து விடுவோம்.  இது தான் அடுத்த தலைமுறையை பற்றி நினைக்கும்போது கவலைப்பட வைக்கிறது. 

Sunday, February 22, 2026

செயற்கை நுண்ணறிவு என்னும் சுனாமி

    இந்த வாரம் புது தில்லி நகரமே பரபரப்பானதற்கு காரணம் அகில உலக செயற்கை நுண்ணறிவுக்கான உச்சி மாநாடு அங்கே கூடியது. அனைத்து மென்பொருள் வல்லுனர்கள், கட்டமைப்பு நிபுணர்கள் உலகெங்குமிலிருந்து அங்கே கூடி விவாதித்த செய்திகள் பெருமளவில் பேசப்படுகிறது.  நமது நாடு முன்னின்று இதற்கான ஏற்பாடுகளையும் முதலீடுகளையும் ஊக்குவிக்கிறது.  

"ஸர்வ ஜன ஹிதாய -ஸர்வ ஜன ஸுகாய" என்பதே இதன் அடிப்படை கொள்கை. 

"அனைவருக்கும் பொது-அனைவருக்கும் நலம்" தருவதாக இந்த  வளர்ச்சி இருக்கவேண்டும் என்ற பொது நோக்கு முன் வைக்கப் படுகிறது. முறையான கொள்கைகள் வகுக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டால் தனிப்பட்ட ஒரு சில நாடுகளிடமோ நிறுவனங்களிடமோ சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கான முன்னெடுப்பு இது.  இதுவும் Carbon Exchange and Trading வகையில் போகுமா அல்லது உண்மையிலேயே பொதுவுடமை ஆகுமா என்பது போகப் போகத் தான் தெரியும்.

நிற்க -

Chat GPT,  Google Gemini, Perplexity, Grok  போன்ற பலவகை நுண்ணறிவு சாதனங்களைக் கொண்டு பல நாட்கள் செய்ய வேண்டிய வேலையை சில மணித்துளிகளிலேயே செய்து விடலாம் என்றும் பல மென்நுட்ப வல்லுனர்கள் தங்கள் வேலைகளை இழக்கப் போகிறார்கள் என்றும் பரவலாகப் பேசப்படுகிறது. வேறு சில நிபுணர்கள் இதனால் பல்வேறு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் கூறுகிறார்கள். 

    தினம் தினம் ஒரு புது மாடல் வாகனம், அலைபேசி  சந்தைக்கு வருவது போல புது புது மென்பொருட்கள் பயன்பாடுகள் ஒரு பேரலை போல அடுத்தடுத்து வந்துகொண்டிருக்கின்றன. அவற்றோடு  ட்ரோன்கள், ரோபோட்  போன்ற வன்பொருட்களின் புரட்சியும் அதனோடு இணந்து ஓட்டுனர் இல்லா தானியங்கி வாகனங்களும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. 

இவை எல்லாவற்றிற்கும் அடிப்படையாவது செயற்கை நுண்ணறிவு. இதன் வளர்ச்சி எதை சார்ந்தது என்றால் சிப்-ப்ராஸசிங் வேகம் ( Chip processing Speed). 

கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை படம் பிடிப்பது போல எல்லா சூசகங்களும், தகவல் துறையில் ஒரு பெரும் சுனாமி வரப்போவதை குறிக்கின்றன. இதன் பரிமாணம் என்னவாக இருக்கப் போகிறது, மனிதர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்குமா அல்லது பொறுப்பற்றவர்களின் கையில் சிக்கி அழிவுக்கு வழி கோலுமா என்பதை காலம் தான் தீர்மானிக்கும்.

இந்தியா பலதுறைகளிலும் தன்னிறைவு பற்றி பேசும் பொழுது உலகளாவிய ZOHO நிறுவனத்தின் வெற்றிகரமான பயணத்தை நடத்திவரும் பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு இது பற்றி சொல்லும் கருத்தை கீழேயுள்ள காணொளியில் காணலாம்.


பலகோடி மக்கள் அகல கண்களுடன் காத்திருக்கும் வேளையில் என் கண்ணில் விழுந்து எனக்குப் பட்ட -தெரிந்த- சில செயற்கை நுண்ணறிவு-அரிச்சுவடி - நுட்பங்களை வரும் தினங்களில் பகிர்ந்து கொள்வேன்.