Showing posts with label D V குண்டப்பா. Show all posts
Showing posts with label D V குண்டப்பா. Show all posts

Wednesday, July 22, 2020

சுற்றி நில்லாதே போ பகையே ......


   தரக்கட்டுப்பாடு என்பது ஆதிகாலம் முதலே நாமறிந்ததுதான். 

 ஏதேனும் காரணத்தால் வீட்டில் செய்யும் பண்டம் சரியாக வில்லை என்றால் முதல் காரணம் பெரும்பாலும் அதற்கான இடுபொருளை குறை சொல்வதாகத்தான் இருக்கும். “இந்த தடவை அரிசி புது அரிசி போல இருக்கு அது தான் சாதம் குழஞ்சு போச்சு “ என்பதாகவோ “எந்த கடையில காப்பிப் பொடி வாங்கின, காப்பி கசப்பா இருக்கே” என்றோ பலரீதியில் இருக்கும். “முதல்ல ஒரு சாம்பிள் வாங்கிப் பார்த்து சரியா இருந்தா மொத்தமா மாசத்துக்கு வேண்டியதா வாங்கிக்கலாம்” என்பது அதற்கு தீர்வாகவும் இருக்கும். இந்த சாம்பிள் அல்லது மாதிரி என்பது பூரணத்தின் தன்மையை சொல்லி விடுகிறது. ஒரு மூட்டை அரிசியின் தன்மையை அறிந்து கொள்ள கால்படி சாதம் வடிப்பதில் தெரிந்து விடும். 

அதே போல் பெரும் தரக்கட்டுப்பாடு உள்ள தொழிற்சாலைகளில் இந்த மாதிரியை தேர்ந்தெடுக்கும் முறைகளையும் (random sampling techniques ) வரையறுத்துள்ளார்கள். நூறு டன் சரக்கு, கப்பலில் வந்து இறங்கும் போது அதை முழுவதையும் பிரித்து அறிய முடியாது. ஆனால் ஒரு மாதிரியை வைத்து பரிசோதனை சாலையில் பல சோதனைகள் மூலம் அதன் தரத்தை நிர்ணயம் செய்து விடலாம். 

 இந்த யுக்தியை டிவிஜி நம்முன் வைக்கின்றார். ஒரு பகுதியில் உள்ள கடல் நீரின் தன்மையை அறிவதற்கு ஒரு குடுவை நீரை கொண்டு வந்து பரிசோதித்தால் போதும். [ சில பகுதிகளில் உப்புத்தன்மை கூடி வருவதாகவும், வேறு சில பகுதிகளில் மாசுபடுதல் அதிகமானதாகவும் நமக்குத் தெரிவது இதனால்தான்.

 சூரிய ஒளியின் அன்றைய நிலவரம் அறிய சன்னலைத் திறந்து வைத்தாலே போதும். வானம் மேக மூட்டத்துடன் உள்ளதா வெயில் அதிகமாகக் காய்கிறதா என்று தெரிந்து கொள்ளலாம். 

    அதைப் போன்றே அந்த எல்லையற்ற பரம்பொருளை அறிந்து கொள்ள பக்தன் ஒருவனுக்கு இறைவன் என்று பாவிக்கும் ஒரு சிறு பிம்பமே போதும். அதன் மூலம் தன் உணர்வுகளை எல்லாம் கொட்டி பொழிந்து பக்தியை பெருக்கிக் கொள்கிறான். அதிலேயே பரம இன்பம் அடைகிறான். இது எப்படி இருக்கும் என்றால் பரம ஏழை ஒருவனை எல்லா செல்வங்களும் உள்ள அறையில் விட்டு வேண்டியதை எடுத்துக் கொள் என்று விட்டு விட்டால் எப்படி திக்குமுக்காடிப் போவானோ அப்படியான ஒரு நிலையை பக்தன் அடைகிறான் என்று உவமிக்கிறார் டிவிஜி. (DVG)

 ಅಂಬುಧಿಯ ಮಡಕೆಯಲಿ, ಹೊಂಬಿಸಿಲ ಕಿಟಿಕಿಯಲಿ| 
ತುಂಬಿಕೊಳ್ಳುವ ಬಡವನೈಶ್ವರ್ಯದಂತೆ|| 
ಬಿಂಬದೊಳಗಮಿತ ಸತ್ತ್ವವ ಪಿಡಿದಿಡುವ ಭಕ್ತಿ| 
ಯಿಂಬು ಕಿಂಚಿನ್ಮತಿಗೆ - ಮಂಕುತಿಮ್ಮ|| ( 491) 
பெருங்கடலும் குடுவையுள், பெருஞ்சுடரும் பலகணியில் 
பெருஞ்சீரை அள்ளத் துடிக்கும் ஏழைபோல் 
பெரும்பொருளை பக்தியும் பிடித்தது பிம்பத்தில் 
சிறுமதிக்கு (இ)து (இ)ன்பமே -மக்குத் திம்மா (# 491) 

[பெருஞ்சுடர்=சூரியன் ; பலகணி =சன்னல்; சீர்= செல்வம்

 கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு. ஆகையால் என்றுமே மனிதரின் அறிவு நிலை பேரறிவாளனாகிய இறைவன் முன் ‘சிறுமதியே ஆகும். 

 இலட்சோப லட்ச மக்களின் பக்தி எப்படி கந்தனின் வேலில் அடங்கியது என்பதற்கு இந்தப் பாடல் நல்ல உதாரணம். இயற்கையின் கட்டமைப்பில் -கடலுள் -ஒரு சிறு விரிசல் வந்ததால் பெரும் சுனாமி வந்தது.

 பக்தியின் கட்டமைப்பில் விரிசல் வந்தால் அதன் பரிணாமும் சுனாமி போன்றே இருக்கும் என்பதை இப்பாடலின் மூலம் தெளியலாம். 

 சுற்றி நில்லாதே போ, பகையே துள்ளி வருகுது வேல் -பாரதியார்.


Sunday, May 30, 2010

மக்கு திம்மன் கவிதைகள்

தேவனஹள்ளி வெங்கடரமணய்யா குண்டப்பா-வை தெரிந்திருக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு இருந்திருக்காது. அவரையே D.V. குண்டப்பா என்ற பெயரில் சிலர்- குறிப்பாக கர்நாடகவாசிகள் -கேட்டிருக்கக்கூடும். அவரை DVG என்று சுருக்கமாகவும் குறிப்பிடுவர் (1889-1975).

பத்தாவது வகுப்பிற்குப் பின், வறுமை காரணமாக அவருக்கு படிப்பைத் தொடரமுடியவில்லை. உலகமே பள்ளிக் கூடமாயிற்று குண்டப்பாவிற்கு. சுயமுயற்சியில் கன்னடம் ஆங்கிலம் மற்றும் வடமொழி கற்று அவைகளில் மிக உயர்வான தேர்ச்சி அடைந்திருந்தார். அவருக்கு பத்திரிக்கைத் துறைப் பிடித்திருந்தது. ஒரு வருட காலம் ஒரு கன்னட பத்திரிக்கையில் வேலை செய்த பின்னர் தானே Karnataka என்னும் பெயரில் ஆங்கிலப் பத்திரிக்கை நடத்தினார். அது அவரது நேர்மைக்கும் நடுநிலைமைக்கும் பெயர் வாங்கித்தந்தது. அவர் கர்நாடக பத்திரிக்கையாளர் சங்கத்தில் 1928 -ல் ஆற்றிய உரை இன்றும் இளம் பத்திரிக்கையாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் மிகவும் பொருந்தும் என்று சொல்லப்படுகிறது.

அவர் எழுதிய கோபாலகிருஷ்ண கோகலேயின் வாழ்க்கை வரலாறு மற்றும் திவான் ரங்காசார்லுவின் வரலாறு தகவல்களைத் திரட்டுவதில் அவருக்கு இருந்த முனைப்புக்கும், எழுத்தாற்றலுக்கும் எடுத்துக்காட்டு என்பர். (திவான் ரங்காசார்லு மைசூர் சமஸ்தானத்தை ஒரு முற்போக்கு சமஸ்தானமாக மாற்றிய பெருமை உடையவர். டிவிஜி பிறப்பதற்கு நான்கு வருடம் முன்பே அவர் இயற்கையெய்தினார்).

இதைத் தவிர ஓமர் கயாம்-ன் கவிதைகளையும் ஷேக்ஸ்பியரின் மேக்பெத்தையும் கன்னட மொழிக்கு மொழி பெயர்த்திருக்கிறார். அவர் அறுபத்து ஐந்து புத்தகங்கள் எழுதியுள்ளார். அவரது ஸ்ரீமத் பகவத்கீதா தாத்பர்யம் என்னும் விளக்க நூல் 1976 ல் சாகித்ய அகடெமி விருது பெற்றது

இன்று கன்னட சாகித்ய உலகம் அவரை நினைவு கூர்வது அவரது மகத்தான 'மன்கு திம்மன கக்கா'(Mankuthimmana Kagga) எனப்படும் தத்துவக் களஞ்சியத்திற்காகத்தான். எளிய சந்தத்தில் சாமானியனுக்கும் புரியும் வகையில் வாழ்க்கையின் மேடு பள்ளங்களை சமபாவனையில் எதிர் கொள்ள அவர் எழுதியிருக்கும் இந்த செய்யுள்கள் கன்னட பகவத்கீதை என்று போற்றப் படுகிறது. 935 பாடல்கள் கொண்டது. 1943-ல் இதன் முதற்பதிப்பு வெளிவந்தது. இதுவரை பதினான்கு பதிப்புகள் வெளியாகியுள்ளன.
(photo courtesy : www.sssglobal.org)

Foggy fool's farrago என்றுதான் தன் மக்கு திம்மனை (கன்னடத்தில் மன்கு என்றால் மக்கு,மந்தபுத்தி என்று பொருள்) குண்டப்பா வருணிக்கிறார். திம்மா என்பது திம்மப்பா அல்லது திம்மையா என்ற கற்பனை நாயகனை சுருக்கி அழைக்கும் பெயர்.

அவருடைய மக்கு திம்மனுக்கு ஞானபீட விருது கிடைக்காதப் பொழுது பலரும் கர்நாடகத்தில் பெரிய ஏமாற்றத்திற்குள்ளாகி விருதைத் தீர்மானிக்கும் குழு அங்கத்தினர்களை குறை கூற முற்பட்டனர். அப்போது அவர் நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதம் அவர் மனதில் எவ்வளவு உயர்ந்தவர் என்பதை உணர்த்திற்று. பன்மொழி இலக்கியங்களை ஒரே தராசில் அளவிட முடியாது என்பதையும் விருதுகள்தாம் எழுத்தாளனின் படைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கு அடையாளம் என்று நினைப்பது தவறாகும் என்பதையும் சுட்டிக்காட்டினார். எழுத்தாளனின் படைப்பின் சிறப்பை நிர்ணயிப்பது காலம் ஒன்றே என்பதால் மக்கு திம்மன், காலம் நிர்ணயித்தபடி மக்கள் மனதில் வாழட்டும் என்று கூறினாராம்.

இன்று ஆன்மீகத் துறையிலும் இலக்கியத்துறையிலும் அவருடைய மக்கு திம்மன் ஆராய்ச்சிக்கான பொருளாகி விட்டான். R.K. லக்ஷ்மண் அவர்களுடைய "காமன் மேன்", கார்ட்டூன் உலகில் எப்படிப் பிரசித்தமோ அப்படி கர்நாடகத்தில் கன்னடம் படித்த யாவருக்கும் மன்கு திம்மன் பிரசித்தம்.

மக்கு திம்மனை மேற்கோள் காட்டாத ஆன்மீக உரையாளர்களே இன்று இருக்கமுடியாது. "baaLu jatka bandi" (பிழைப்பு ஜட்கா வண்டி) என்கிற பாடல் மிகவும் புகழ் பெற்றது. சின்மையா மிஷனை சேர்ந்த சுவாமி பிரம்மானந்தாவின் "மக்கு திம்மன்" பற்றிய விளக்கவுரைகள் குறுந்தகடுகளாக வெளிவந்துள்ளன. டாக்டர் ஆர். கணேஷ் என்ற பிரபல ஆன்மீக விரிவுரையாளரும் திம்மனைப் பற்றிய குறுந்தகடுகள் வெளியிட்டுள்ளார்.

தனக்கென்று செல்வம் ஈட்டுவதில் குண்டப்பாவிற்கு ஆர்வம் இருக்கவில்லை. கர்நாடக அரசு அவருக்கு அளிக்க முன்வந்த ஓய்வு ஊதியத்தை அவர் மறுத்து விட்டார். இலக்கிய சேவைக்காக அவருக்கு 1970ல் அளிக்கப்பட்ட ஒரு லட்ச ரூபாய் பணமுடிப்பை அவர் சமூகப் பணிக்கென கொடுத்து விட்டார்.

பெங்களூர் பசவன்குடியில் கோகலே இன்ஸ்டிட்யூட் (Gokhale Institute of Public Affairs) என்பது திரு டிவிஜி அவர்களால் துவக்கப்பட்டு இன்று மிகப்பெரும் இலக்கிய சேவையிலும் சமூக சேவையிலும் ஈடுபட்டுள்ளது. 1974 இந்திய அரசாங்கம் அவருக்கு பத்மபூஷண் விருது அளித்து கௌரவித்தது.

மக்குதிம்மன் பாடல்களின் சில மாதிரி :

சரியாகவில்லை அது, சரியில்லை இதுவென்று
பஞ்சணையில் முள் பரப்ப வேண்டாம்.

நிறைவாகும் ஒன்று, குறையாகும் இன்னொன்று
வாழ்க்கையில் என்றும் முரண் உண்டு -மக்குதிம்மா


அன்னப் பசியினும் சொன்னப்பசி தீவிரம்
சொன்னப் பசியினும் ஆண்பெண் உறவாம்

மன்னு புகழாசை யாவினும் தீவிரம்
தின்னு மவர் நெஞ்சம் -மக்குதிம்மா
(சொன்னம்=சொர்ணம், பொருளாசை)


வானி லுண்டோ பறவைக்கு வரைபடம்
மீனுக் குண்டோ நீந்திட வரையறை
ஏனோ வொன்று தள்ளுது ஒன்றிழுக்குது

நீனொரு காற்றிலாடும் பட்டம்- மக்குதிம்மா


நாளுக்கு நாள் கணத்திற்கு கணமாய்
நாளைய கவலை விட்டு வாழ்ந்திடு
விவரங்கள் தொகுப்பவன் வேறொருவன்
கழித்திடு உன் பிறவிதனை - மக்கு திம்மா

[கொசுறு: DVG பெங்களூரில் எங்களது பாட்டானாரின் வீட்டு பின் தெருவில் குடியிருந்தார் என்பதும் எங்களது பாட்டனாருக்கு நல்ல நண்பர் என்றும் அவ்வப்போது அவரது கையெழுத்துப் பிரதிகளை எனது பாட்டனார் சரி பார்த்துக் கொடுத்திருக்கிறார் என்பதை என் தந்தை வழியாக சமீபத்தில் அறிந்த போது பெருமையாக இருக்கிறது.]

பசவனகுடி, ப்யூகல் ராக் பூங்காவில் டிவிஜிக்கு வைக்கப்பட்டிருக்கும் சிலை. அவர் வாழ்ந்த காலத்தில் அவர் மாலை வேளைகளில் நண்பர்களோடு உரையாட மிகவும் விரும்பிய இடம் என்பதால் அதே இடத்தில் அவருக்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது.