Wednesday, July 22, 2020

சுற்றி நில்லாதே போ பகையே ......


   தரக்கட்டுப்பாடு என்பது ஆதிகாலம் முதலே நாமறிந்ததுதான். 

 ஏதேனும் காரணத்தால் வீட்டில் செய்யும் பண்டம் சரியாக வில்லை என்றால் முதல் காரணம் பெரும்பாலும் அதற்கான இடுபொருளை குறை சொல்வதாகத்தான் இருக்கும். “இந்த தடவை அரிசி புது அரிசி போல இருக்கு அது தான் சாதம் குழஞ்சு போச்சு “ என்பதாகவோ “எந்த கடையில காப்பிப் பொடி வாங்கின, காப்பி கசப்பா இருக்கே” என்றோ பலரீதியில் இருக்கும். “முதல்ல ஒரு சாம்பிள் வாங்கிப் பார்த்து சரியா இருந்தா மொத்தமா மாசத்துக்கு வேண்டியதா வாங்கிக்கலாம்” என்பது அதற்கு தீர்வாகவும் இருக்கும். இந்த சாம்பிள் அல்லது மாதிரி என்பது பூரணத்தின் தன்மையை சொல்லி விடுகிறது. ஒரு மூட்டை அரிசியின் தன்மையை அறிந்து கொள்ள கால்படி சாதம் வடிப்பதில் தெரிந்து விடும். 

அதே போல் பெரும் தரக்கட்டுப்பாடு உள்ள தொழிற்சாலைகளில் இந்த மாதிரியை தேர்ந்தெடுக்கும் முறைகளையும் (random sampling techniques ) வரையறுத்துள்ளார்கள். நூறு டன் சரக்கு, கப்பலில் வந்து இறங்கும் போது அதை முழுவதையும் பிரித்து அறிய முடியாது. ஆனால் ஒரு மாதிரியை வைத்து பரிசோதனை சாலையில் பல சோதனைகள் மூலம் அதன் தரத்தை நிர்ணயம் செய்து விடலாம். 

 இந்த யுக்தியை டிவிஜி நம்முன் வைக்கின்றார். ஒரு பகுதியில் உள்ள கடல் நீரின் தன்மையை அறிவதற்கு ஒரு குடுவை நீரை கொண்டு வந்து பரிசோதித்தால் போதும். [ சில பகுதிகளில் உப்புத்தன்மை கூடி வருவதாகவும், வேறு சில பகுதிகளில் மாசுபடுதல் அதிகமானதாகவும் நமக்குத் தெரிவது இதனால்தான்.

 சூரிய ஒளியின் அன்றைய நிலவரம் அறிய சன்னலைத் திறந்து வைத்தாலே போதும். வானம் மேக மூட்டத்துடன் உள்ளதா வெயில் அதிகமாகக் காய்கிறதா என்று தெரிந்து கொள்ளலாம். 

    அதைப் போன்றே அந்த எல்லையற்ற பரம்பொருளை அறிந்து கொள்ள பக்தன் ஒருவனுக்கு இறைவன் என்று பாவிக்கும் ஒரு சிறு பிம்பமே போதும். அதன் மூலம் தன் உணர்வுகளை எல்லாம் கொட்டி பொழிந்து பக்தியை பெருக்கிக் கொள்கிறான். அதிலேயே பரம இன்பம் அடைகிறான். இது எப்படி இருக்கும் என்றால் பரம ஏழை ஒருவனை எல்லா செல்வங்களும் உள்ள அறையில் விட்டு வேண்டியதை எடுத்துக் கொள் என்று விட்டு விட்டால் எப்படி திக்குமுக்காடிப் போவானோ அப்படியான ஒரு நிலையை பக்தன் அடைகிறான் என்று உவமிக்கிறார் டிவிஜி. (DVG)

 ಅಂಬುಧಿಯ ಮಡಕೆಯಲಿ, ಹೊಂಬಿಸಿಲ ಕಿಟಿಕಿಯಲಿ| 
ತುಂಬಿಕೊಳ್ಳುವ ಬಡವನೈಶ್ವರ್ಯದಂತೆ|| 
ಬಿಂಬದೊಳಗಮಿತ ಸತ್ತ್ವವ ಪಿಡಿದಿಡುವ ಭಕ್ತಿ| 
ಯಿಂಬು ಕಿಂಚಿನ್ಮತಿಗೆ - ಮಂಕುತಿಮ್ಮ|| ( 491) 
பெருங்கடலும் குடுவையுள், பெருஞ்சுடரும் பலகணியில் 
பெருஞ்சீரை அள்ளத் துடிக்கும் ஏழைபோல் 
பெரும்பொருளை பக்தியும் பிடித்தது பிம்பத்தில் 
சிறுமதிக்கு (இ)து (இ)ன்பமே -மக்குத் திம்மா (# 491) 

[பெருஞ்சுடர்=சூரியன் ; பலகணி =சன்னல்; சீர்= செல்வம்

 கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு. ஆகையால் என்றுமே மனிதரின் அறிவு நிலை பேரறிவாளனாகிய இறைவன் முன் ‘சிறுமதியே ஆகும். 

 இலட்சோப லட்ச மக்களின் பக்தி எப்படி கந்தனின் வேலில் அடங்கியது என்பதற்கு இந்தப் பாடல் நல்ல உதாரணம். இயற்கையின் கட்டமைப்பில் -கடலுள் -ஒரு சிறு விரிசல் வந்ததால் பெரும் சுனாமி வந்தது.

 பக்தியின் கட்டமைப்பில் விரிசல் வந்தால் அதன் பரிணாமும் சுனாமி போன்றே இருக்கும் என்பதை இப்பாடலின் மூலம் தெளியலாம். 

 சுற்றி நில்லாதே போ, பகையே துள்ளி வருகுது வேல் -பாரதியார்.