Monday, April 30, 2007

அற்புதத் தீவில் தேர்தல் சீர்திருத்தங்கள் -2

முதல் பகுதிக்கு >>>

ஜனாதிபதி கௌரவ் சிரோமணியின் புதிய தேர்தல் முறை வெளிநாட்டு அறிஞர்களின் பெருத்த ஆதரவைப் பெற்றாலும் அவர் எதிர்பார்த்தது போலவே அற்புதத் தீவின் அரசியல் கட்சிகள் தமது எதிர்ப்பை துவக்கின.

ஒருவரே ஒரே சமயத்தில் பலருக்கு ஓட்டளிக்க முற்படும் பொழுது தம் மனவிருப்பப்படி இல்லாமல் வாக்குப்பெட்டியின் வரிசைப்படி வாக்களித்து விட்டால் மதிப்பெண்கள் தலைகீழ் ஆகிவிடும். மதிப்பெண்கள் அளிக்கப்படும் முறை எல்லோருக்கும் புரியாது. புரியாத ஒரு செயலை செய்யச் சொல்லி வாக்குப்பெறுவது வாக்காளரை ஏமாற்றுவது போலாகும் என்று சிலர் வாதித்தனர்.

ஒரு சில கட்சிகள், ஏற்கனவே கணிணியில் முன்னேற்பாடு செய்யப்பட்டு ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு எந்தப் பொத்தானை அழுத்தினாலும் மதிப்பெண்கள் கூடும்படியான மென்கருவிகள் நிறுவப்படும் வாய்ப்புகள் அதிகம் என்று தமது அச்சத்தைத் தெரிவித்தன.

இது மக்கள் விரோத தேர்தல்; இதை திணிப்பதானால் தேர்தல்களைப் புறக்கணிப்போம் என்று சில தலைவர்கள் அறிக்கை விட்டனர்.

ஆனால் மக்களிடையே புது தேர்தல் முறை வரவேற்பை பெற்றது. இத்தகைய முறையில் கட்சிகள் இரண்டாவது மூன்றாவது ஓட்டுக்களை தக்க வைத்துக்கொள்ளவாவது நல்ல வேட்பாளர்களை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதன் மூலம் சட்டப் புறம்பான அடியாட்களின் ஆதிக்கம் குறைவதற்கான வாய்ப்புகள் பெருகும் என்று தொலைக்காட்சி கருத்து கணிப்புகளில் தெரிவித்தனர்.

விடாமுயற்சியினால் சிரோமணியும் ஞானதீபனும் மற்றும் ஒத்தக் கருத்துக் கொண்டிருந்த சமூக நல அமைப்புகளும் சில வருடங்கள் போராடி ஒரு வழியாக புதிய தேர்தல் முறைக்கு பாராளுமன்றத்தின் ஒப்புதலை நிறைவேற்றினர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே தேர்தல் தினமும் அறிவிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிரத்யேகமான வாக்குப்பெட்டிகள் அதன் செயல் முறை, திறந்த முறை (Transparent operations) செயல்பாட்டு விளக்கங்கள் தொலைக்காட்சிகளிலும் பத்திரிக்கைகளிலும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.

வாக்காளர்களுக்கு எவ்வித குழப்பமும் இருக்கவில்லை. "என்ன சார் இது! ஒன் டே கிரிகெட்-ல் இல்லாத ரூலா ! அதையே எல்லாரும் கரைச்சு குடிச்சிருக்காங்க. மூணு பேருக்கு நம்ம இஷ்டப்படி பர்ஸ்ட், செகண்ட் தர்டு சொல்லத் தெரியாதா ? என்று கிண்டலடித்தார்கள்.

கட்சிகளுக்கிடையே மக்கள் செல்வாக்குப் பெற்றவர்களை வளைத்துப்போடும் போட்டி துவங்கியது. சிவனே என்றிருந்த சில பழைய தலைவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கதவைத் தட்டியது. வேட்பு மனு தாக்கல் துவங்கிய தினத்தன்று மாலையே ஒரு அதிர்ச்சி தரும் செய்தி வந்தது. செய்தியின் விவரம்.

(உங்களுக்கு பிடித்த செய்தி வாசிப்பாளரின் நடையில் படித்துக் கொள்ளவும்)

" தேர்தல் ஆணையத்தில் பெரும் குழப்பம். தேர்தலை நடத்தமுடியுமா என்பதே சந்தேகத்திற்கு இடமாகியுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் இருநூறுக்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பாதி பேரை தகுதி நீக்கம் செய்தாலும் சுமார் நூறு பெயர்களை இடம்பெறச் செய்யும் மின் வாக்குப்பெட்டிகள் தேவை. ஆனால் இப்போது உள்ளவை ஐம்பது பேர்களை மட்டுமே கொள்ள வல்லது. மேலும் இரு பெட்டிகளை இணையாக இயக்கி தேவையைப் பூர்த்தி செய்யலாமென்றால் அதில் interlock வேலை செய்யாது. இந்த தொழில்நுட்பத் தேவைக்கென இந்திய வல்லுனர்களை தொடர்பு கொண்டபோது தேவையான மாற்றங்களை செய்து தர பல மாதங்கள் பிடிக்குமென தெரிகிறது. மின்வாக்குப் பெட்டிகளை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பிவைக்க கோரியுள்ளனர். இந்நிலையில் தேர்தல் நடத்துவதை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆலோசகர்களுடன் கலந்து முடிவு செய்வாரெனத் தெரிகிறது................."

அதை ஒட்டிய பல ஒளிப்பதிவு காட்சிகளும் விவரமாக காட்டப்பட்டன.

உயர்மட்ட ஆலோசனையில் பலிக்கடாவைத் தேடினர் சில அதிகாரிகள். "ஆர்டரிலேயே நூறு பெயர்களுக்காக என்று குறிப்பிட்டிருந்தால் இந்த குழப்பத்தைத் தவிர்த்திருக்கலாம்" என்று தேர்தல் ஆணையத்தின் கொள்முதல் அதிகாரியை குற்றம் கண்டனர் சிலர். இதுவரை எந்த தேர்தலிலும் அதிகபட்சமாக முப்பத்திரெண்டு வேட்பாளர்களே எட்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு தொகுதியில் தாக்கல் செய்திருந்தனர். சராசரியாக பத்து முதல் பதினைந்தே வேட்பாளர்கள் நாம் எதிர்பார்ப்பது. ஆகவே ஐம்பது என்பதே மிக அதிகமாகக் கருதப்பட்டது என்று தேர்தல் ஆணையம் தன் நிலையை எடுத்து சொல்லியது. தேர்தலை இரண்டு அல்லது மூன்று கட்டங்களில் நடத்தக்கூடிய சாத்தியக் கூறுகளை ஆராய தலைப்பட்ட போது மூன்று அல்லது நான்கு மடங்கு செலவுகள் கூடும் என பயமுறுத்தினர் கணக்குத் துறை பிரிவினர்.

இது மிகப்பெரிய சதிதிட்டம் என குற்றம் சாட்டினர் சிரோமணியின் ஆதரவாளர்கள்.

மக்கள் விரோத கொள்கைகளுக்கு மக்களே பதிலடி கொடுத்து விட்டனர் என்று கொக்கரித்தனர் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் அரசியல்வாதிகள்.

அற்புதத் தீவின நடைமுறைக்கு பொருந்தாது என்று நீதிமன்றத்தில் புதிய தேர்தல் முறையை ரத்து செய்யக் கோரி சிலர் மனு தாக்கல் செய்தனர்.

இந்த குழப்பங்களுக்கிடையே வேறொரு இடத்தில் சில கோடிகள் கைமாறிக் கொண்டிருந்தன. " இன்னாங்க இது ஒவ்வொரு தொகுதிக்கும் இருநூறு பேர் ஆள் புடிச்சு அவனுங்களுக்கு வேண்டிய பத்திரமெல்லாம் உஸாரா தயாரிச்சு டெபாசிட் கட்டி, அவுனங்களை வண்டியில கூட்டியாந்து ஆபீஸர் முன்னாடி கையெழுத்து போட வக்கறது வெளயாட்டா? ஒண்ணர மாசமா எவ்ளோ அலஞ்சிருப்போம்" என்று தமது உழைப்புக்கேற்ற ஊதியத்தை பெறுவதில் கண்ணும் கருத்துமாக இருந்தனர் பல தாதாக்கள்.

நேரமின்மைக் காரணமாகவும், நிதிப் பற்றாக்குறையாலும் அற்புதத் தீவில் தற்காலிகமாக மீண்டும் பழைய முறையிலேயே தேர்தல் நடத்துவது என்று உயர் மட்டக் குழு பரிந்துரை செய்தது. அதை ஜனாதிபதியும் ஏற்றுக் கொண்டார்.

தன் முயற்சியில் சற்றும் மனம் தளரா விக்கிரமன் ,மன்னிக்கவும், சிரோமணி பேரா. ஞானதீபனுக்கு , மாலை தேநீரில் கலந்து கொள்ள அழைப்பு அனுப்பினார். வேறெதற்கு எல்லாம் தேர்தல் சீர்திருத்தங்களை விவாதிக்கத்தான்.

Sunday, April 29, 2007

அற்புதத் தீவில் தேர்தல் சீர்திருத்தங்கள்

முதல் பாகம்:

அற்புத தீவு என்பது ஆங்கிலேயர்களின் கப்பற்படைத் தளமாக இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்டது. அங்கே பெரும்பாலும் இந்திய வம்சாவழியினரே குடிமக்களாக இருப்பதால் அவர்களின் மனப்போக்கும் இந்திய மக்களைப் போலவே இருந்ததில் ஆச்சரியம் இல்லை. அத்தீவின் மக்கள் தொகை ஐம்பது லட்சத்திற்கும் குறைவே. ஆயினும் அவர்களுள் எத்தனை போட்டி, பொறாமை !!. என்னென்ன பெயர்களைச் சொல்லி மக்களைப் பிரித்து வைக்க முடியுமோ அத்தனையும் அங்கே அரசியல்வாதிகளால் வெற்றிகரமாக நிறைவேற்றி வைக்கப்பட்டிருந்தது.

ஆங்கிலேயர் அத்தீவை விட்டு வெளியேறியபின் அங்கே ஜனாதிபதி முறை குடியாட்சி அமலுக்கு வந்தது. அதாவது மக்கள் நேரடியாக ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பர். ஆனால் அன்றாட அலுவல்களை பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மை கட்சி கவனிக்கும். அவசர நிலை நடவடிக்கைகளை நிறைவேற்ற தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கும்.

அற்புத தீவின் அரசியல் அலங்கோலமாக இருந்தது. எந்த ஒரு கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை என்பது துர்லபமாக இருந்தது. அடிக்கடி கட்சி மாற்றங்களும் ஆட்சி கவிழ்ப்புகளும் நிலையற்ற ஒரு தன்மையை உண்டு பண்ணியது. பத்து ஆண்டுகளில் பதிமூன்று ஆட்சிகள் வந்து போயின. இதனால் அத்தீவின் முன்னேற்றம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது.


அதிருஷ்டவசமாக அத்தீவிற்கு ஒரு நல்ல ஜனாதிபதி வாய்த்திருந்தார். நல்லவர், வல்லவர், சிந்திக்கத் தெரிந்தவர். அவர் பெயர் கௌரவ் சிரோமணி. அவருடைய தந்தையார் மக்களிடம் மிகுந்த செல்வாக்குப் பெற்றத் தலைவராய் இருந்து சுமார் நாற்பது ஆண்டுகள் ஜனாதிபதியாக இருந்தவர். அவருடைய காலத்திற்குப் பின் சிரோமணிக்கு அப்பதவிக்கு வருவதில் எந்த சிரமமும் இருக்கவில்லை. உலகின் மிக உயர்ந்த பல்கலைகழங்களில் கற்றுத் தேர்ந்தவர். எதையும் விஞ்ஞான பூர்வமாய் அணுகுபவர். எத்தகையப் பிரச்சனைக்கும் ஒரு விஞ்ஞான தீர்வு கண்டறிவதில் நாட்டம் உடையவர்.

இனம் இனத்தோடு சேரும். நல்ல ஜனாதிபதியான கௌரவ்சிரோமணிக்கு ஒரு நல்ல ஆலோசகர் இருந்தார். அவருடைய பெயர் Prof. ஞானதீபன். பல நாடுகளின் அரசியல் முறைகளை ஆராய்ந்தறிந்தவர். அற்புத தீவுகளின் அரசியல் முறையில் உள்ள குறைபாடுகளை அவர் சுட்டிக்காட்டினார்.

- பெரும்பான்மை இடங்களை வென்ற கட்சி மொத்த ஓட்டுப் பங்கில் மிக குறைவாகவே முன்னிலையில் இருக்கிறது. ஆகவே ஓட்டளிப்புக்கும் வெற்றி பெற்ற இடங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லாதிருப்பது ஜனங்களின் உண்மை மன நிலையை பிரதிபலிப்பதாகாது.

- பெரும்பாலான மக்கள் தாம் ஓட்டளித்தவர் தோற்று விட்டால் தமது ஓட்டு வீணாகிவிட்டது என்ற வருத்தப்படும் வகையை சேர்ந்தவர்கள். அவர்கள் அதிக வெற்றி வாய்ப்புள்ளவர்க்கே தனது ஓட்டு என்று தீர்மானிக்கின்றனர். இதுவும் உண்மை நிலையை பிரதிபலிப்பதில்லை.

- எல்லாவற்றிலும் முக்கியமாக நல்லவர்கள், சமுதாயத்திற்கு நன்மை விரும்பிகள் தேர்தலைக் கண்டாலே அஞ்சி ஒதுங்கிவிடுகின்றனர். இதனால் சுயநலமிகள் அரசியலில் பெருமளவில் ஆட்டம் போட ஏதுவாகிறது.


ஜனாதிபதி சிரோமணியும் ஞானதீபனும் பலநாள் ஆலோசனைக்குப்பின் ஒரு புதிய தேர்தல் முறையை அறிமுகப் படுத்தத் துணிந்தனர். அதன்படி மேற்க் கண்ட குறைகளை எல்லாம் பெருமளவில் களைய முடியும் என்று எண்ணினர். அவர்களின் முறைப்படி முன்கூட்டியே வெற்றி வாய்ப்புகளை கணக்கிடும் பத்திரிக்கைகள் மற்றும் பொது கணிப்புத் தேர்வுகள் இவைகளின் கணிப்பு முறையை தகர்த்தால் பொதுமக்கள் தம் சுய சிந்தனையுடன் ஓட்டளிக்க வழியுண்டாகும் என்று கருதினர். உடனடியாக சர்வதேச அமைப்புகளின் உதவியோடு சிரோமணி தமது திட்டத்திற்கு பக்கபலம் கூட்ட ஆரம்பித்தார்.

அதற்கு ஒரு காரணம் இருந்தது. உள்நாட்டில் அரசியல் கட்சிகள் தன்னுடைய திட்டத்திற்கு ஆதரவு தரும் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கவில்லை. அக்கட்சிகள் திட்டத்தை முறியடிக்க எதை வேண்டுமானாலும் செய்ய ஒற்றுமையுடன் (இந்த ஒரு விஷயத்தில்) செயல் படும் என்றும் அறிந்திருந்தார். ஆகவே பேரா. ஞானதீபன் மூலம் அதை வெளிநாட்டுப் பத்திரிக்கைகளிலும், கருத்தரங்கங்களிலும் ஆதரவான விமரிசனங்களை திரட்டினார்.

பேரா. ஞானதீபன் பிரபலப்படுத்திய அத் தேர்தல் முறைதான் என்ன?

அம்முறைப்படி வாக்காளர்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு வாக்களிக்க அவர்கள் விரும்பிய வரிசையில் வாக்களிக்க முடியும். அதாவது ஓட்டு என்பது ஒருவருக்கு மட்டுமே அன்றி மூன்று அல்லது ஐந்து வாக்களர்களுக்கு ஓட்டு பதிவு செய்ய இயலும்.

மின்வாக்குப்பெட்டி ஒருவருக்கான ஓட்டை ஒருமுறைதான் பதிவு செய்யும். ஒருவரே பலமுறை ஒரு வேட்பாளருக்கு ஓட்டளிக்க முடியாது.

வாக்காளர்களின் தேர்வு படி முதல் பதிவாளருக்கு அதிக மதிப்பெண்களும்(points) இரண்டாமவர்க்கு அதிவிட குறைந்த மதிப்பெண்களும் மூன்றாமவர்க்கு அதற்குண்டான மதிப்பெண்களும் கணிணியில் தானே பதிவாகிவிடும்.

தேர்தலின் முடிவு மொத்த மதிப்பெண்களைக் கொண்டே தீர்மானிக்கப்படும். ஒருவரின் கணிப்பில் முதலாம் இடத்தில் உள்ள வேட்பாளர் இன்னொருவர் கணிப்பில் மூன்றாம் இடத்தில் இருக்கக் கூடும். ஒரு வேட்பாளர் யாருடைய கணிப்பிலும் முதலிடம் பெறவில்லை என்றாலும் இரண்டாம் இடத்திலோ மூன்றாம் இடத்திலோ இருந்து கொண்டு மதிப்பெண்களை அள்ளிக் கொண்டிருக்க வாய்ப்புண்டு. இதை weighted average கணிப்பு என்பர் ஆங்கிலத்தில்.

ஞானதீபன் கருத்தரங்களில் பயன்படுத்திய ஒரு உதாரண தேர்தல் முறையையும் முடிவுகளையும் பார்ப்போம். வேட்பாளர்கள் ஆறு பேர்.



அவர்கள் பிண்ணணி : பப்பூ குப்பா -பெரிய தொழில் சங்கத் தலைவன்.
வீரமணி ராஜாவும் மொய்தீனும் இரு பெரும் கட்சிகளின் வேட்பாளர்கள். மற்ற மூவரும் சுயேச்சைகள். இதில் சுரேன் பாக்சி ஒரு மருத்துவர். மக்களிடையே அவருக்கு நல்ல பெயர் இருந்தது. தன்னலமில்லாமில் தொண்டாற்றுபவர் என்று மக்கள் அவரை அறிந்திருந்தனர்.

இவர்களுக்குக் கிடைத்த ஓட்டுக்களும் மதிப்பெண்களும் கீழே அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளது. முதல் விருப்பத்திற்கு 3, இரண்டாம் விருப்பம் 2 மற்றும் மூன்றாம் விருப்பம் 1 மதிப்பெண்களும் பெறும்.



வாக்காளரகள் 971 : மொத்தம் அளிக்கப்பட்ட வாக்குகள் : 971 x 3 = 2913. அதிகப்பட்ச மதிபெண்கள்ஒரு வேட்பாளர் பெறக்கூடியது 2913. இதன் பொருளென்ன? அத்தனை வாக்காளர்களும் ஒருவருக்கே முதல் வாக்கைத் தந்திருந்தால் பெறக்கூடிய குறியீடுகள் 2913 ஆகும். இந்த ஆறு பேரும் பெற்ற மதிப்பெண்களை அட்டவணையில் காணலாம்.

வழக்கமான தேர்தல் முறைப்படி 291 ஓட்டுகள் பெற்ற வீரமணியே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படும். ஆனால் சிரோமணி ஞானதீபன் முறைப்படி வேறுவிதமான முடிவு வந்தது.

மிக பலம் வாய்நத கட்சிகளைச் சேர்ந்த வீரமணியும் மொய்தீனும் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் பின்னுக்குத் தள்ளப்பட்டனர். பொதுநலத் தொண்டர் பாக்சீ மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் முன்னுக்கு வந்து விட்டார். அவருக்கு கிடைத்தது = 58 x 3 +280 x 2+ 430 x1 = 1164

ஆனால் பெரும்பாலோர் அவருக்கு கொடுத்த இடமோ மூன்றாவது.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் மக்களின் எண்ணங்களை மேலும் முறையான வழியில் அறிந்து கொள்ள முற்பட்டால் வெளியாகும் முடிவுகளும் சரியான விதத்தில் அதை பிரதிபலிக்கக் கூடும்.

இக்கருத்தை ஞானதீபன் வெற்றிகரமாக நிலைநாட்டி பல நாட்டு அறிஞர்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தினார். பத்திரிக்கைகள் இது நல்லவர்களை அரசியல் வட்டத்திற்குள் கவர்ந்திழுக்க ஒரு நல்ல வழி என்று பாராட்டின. பணமுதலைகளின் ஆட்டத்திற்கு இது ஒரு முடிவு என்றும் கருத்துக்கள் வெளியாயின. ரவுடிகளின் ராஜ்ஜியம் இனி அரசியல்வாதிகளின் ஆதரவுக்காக அலைய வேண்டிருக்கும்; கருத்துக் கணிப்புகள் அர்த்தமற்ற கூட்டல் கழித்தல் ஆகிவிடும் என்றெல்லாம் பேசப்பட்டன.

(அற்புத தீவில் தேர்தல் நடந்ததா முடிவுகள் என்ன என்பதை அடுத்த பதிவில் காணலாம் )

Sunday, April 22, 2007

செல்போனும் ஆன்மீகமும்

1974 ல் தஞ்சாவூரில் முதல் முறையாக தொலைப்பேசி இணைப்பு வீட்டிற்கு வந்த போது பெரும் கொண்டாட்டம். யாரும் பெறாத பேறு பலநாள் காத்திருந்து பெற்றது. தொலைப்பேசியின் முன் பகுதி மொட்டையாக இருந்தது. எண் சுழற்றும் வசதி கிடையாது. எவருடனாவது பேச வேண்டுமானால் ரிஸீவரை எடுத்து காதில் வைத்துக் கொண்டு சற்று பொறுத்திருக்க வேண்டும். "நம்பர் சொல்லுங்க" என்று இணைப்பகத்திலிருந்து ஒரு குரல் கேட்கும். அதிர்ஷ்டம் இருந்தால் சில நிமிடங்களிலேயே கிடைக்கும். இல்லாவிட்டால் அதன் முன் தவமிருக்க வேண்டும். 
    வந்த இரண்டு மூன்று நாட்களிலேயே சுரத்து போய் விட்டது. முதல் காரணம் நமக்கு வேண்டியவர்களுக்கு இன்னும் தொலைப்பேசி தெய்வத்தின் வரம் கிடைக்கவில்லை. இரண்டாவது, நமக்கு சாமியின் வரம் கிடைத்திருந்தாலும் இணையகத்தின் பூசாரிகளின் வரம் கிடைப்பது அதனினும் அரிது. யாரிடம் தொலைப்பேசுவது ? வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை மணியடித்திருந்தால் அதுவே பெரிய விஷயம். 

    முப்பது வருடங்களுக்குள் நிலைமை தலைகீழ். செயற்கைக்கோள், கணிணி மற்றும் கைப்பேசிகள் (செல்போன்) உலகில் தகவல் தொடர்பை ஒரு விளையாட்டு ஆக்கி விட்டன. இதில் செயற்கைக்கோள் கடவுள் போல. எங்கோ கண்ணிற்குத் தெரியாத தூரத்தில் இருந்து இயக்குவது. கணிணிகள் ஆத்மாவைப்போல. எல்லா உயிர்களிலும் "உள்ளிருந்து இயக்குவது ஒரே ஆத்மா"தான் என்பதைப் போல. கைப்பேசிகள் மனிதரின் வடிவங்கள். வெறும் கூடு. ஒவ்வொன்றும் ஒரு ரகம்; பலவிதம் மனிதர்களைப் போலவே !

 பிறவிகளின் தொடர்ச்சி ஏற்படுவதற்கு காரணம் மனிதர்களின் பூர்வ ஜன்ம வாசனைகளே என்று ஆன்மீகம் கூறுகிறது. இதை Bundle of Thoughts என்று கூறுவர். ஆசைகள் அறுமின் ஆசைகள் அறுமின் என்பது திருமூலர் வாக்கு. அதாவது பிறவிகளுக்கு காரணமான வினைப் பதிவுகளை விலக்குவீர் என்று பொருள். 

    இதை புரிந்து கொள்வது எப்படி. நாம் ஒரு குறுஞ்செய்தி (SMS) அனுப்புகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அது எப்படி பல நூறு அல்லது ஆயிரம் கிலோமீட்டர்கள் தள்ளி உள்ள இன்னொரு கைப்பேசியை தேடி அடைகிறது ? செய்தி என்பது Bundle of characters. கணிணி அதை பூஜ்யம் மற்றும் ஒன்று என்ற இலக்கங்களின் கூட்டாகத்தான் அதை அடையாளம் கொள்ளும். அது அதற்குரிய விலாசம் கிடைக்கும் வரை எங்கோ ஒரு கணிணியுள் சேமிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட கைப்பேசி இயக்கப்பட்டதும் உடனடியாக கணிணி அதைக்கண்டறிந்து அனுப்பி வைக்கிறது. நமது கைப்பேசி அக்கூட்டு இலக்கங்களை குறி பெயர்த்து மீண்டும் நாம் புரிந்து கொள்ளும் வகையில் அளிக்கிறது. செய்தி அனுப்பிய காரியம் நிறைவேறியது. 

    ஆனால் அத்துடன் நிற்பதில்லையே. பெற்றவர் உடனே பதில் செய்தி பதிகிறார். விளையாட்டு தொடர்கிறது. வினை, எதிர்வினை என்னும் இந்த சுழலில் சிக்குண்டு எப்பொழுதும் வினைப்பதிவுகள் நிகழ்ந்து கொண்டே உள்ளன. ஒரு கைப்பேசி வேலை செய்யாவிட்டால் புதிதாக ஒன்றை மாற்றிக் கொள்வது போல நமது பூதவுடல் ஒத்துழைக்க மறுக்கும் பொழுது, சூக்ஷ்ம  உடல் (வினைப் பதிவுகளின் தொகுப்பு SIM card) இன்னொரு பூதவுடலுக்கு மாற்றப்படுகிறது. மீண்டும் வினப்பதிவுகளின் coding decoding விளையாட்டு. இருள் சேர் இருவினையும் சேரா இறைவன்.... என்பது வள்ளுவரின் வாக்கு. "இருவினை தன்னை அறுத்து இருள் கடிந்து...." என்பது அவ்வையின் அகவல். பாவம் புண்ணியம் என்ற இருவினையுமே இருள் (அஞ்ஞானம்) சேர்ப்பவையே. இறைவனுக்கு எந்த வினையும் இல்லை. அவைகளை கடந்த நிலையே பிறவியை கடக்கும் வழி. வெறும் வினைதான் இரண்டு என்பது இல்லை.

      இயற்கையின் அமைப்பே pairs of opposites எனப்படும் துவைதநிலைதான். ஆண் பெண்; இரவு பகல்; வெப்பம் தணிப்பு ; புரோட்டான் எலக்ட்ரான் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். மரபணு அளவிலே DNA வின் கூறமைப்பும் double helix. உலகில் படைத்தல் நிகழ அடிப்படை காரணத்திலேயே துவைதம் ஒளிந்து கொண்டுள்ளது. இதைத்தான் சிவம் என்றும் சக்தி என்றும் வகைப்படுத்தி வைத்துள்ளனரோ பெரியோர்கள் ! இந்த துவைதம் கணிணியையும் விட்டு வைக்கவில்லை. பூஜ்யம் (0) மற்றும் ஒன்று(1) இல்லாவிட்டால் Binary code ஏது ? பின்னர் கணிணிதான் ஏது ? கணிணியில் பார்த்து மகிழும் எல்லா வர்ணங்களும் ஆட்டம் பாட்டம் எல்லாம் இந்த (0) (1) க்குள் அடக்கம். மனிதனை விட மிக மிகப் பெரிய Designer இறைவன். அதனால் அவன் அதை ஒரு மெகா சைஸில் செய்து நாடகம் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறான். 

அவன் நம் SIM CARD ஐ எங்கே ஒளித்து வைத்திருக்கிறான் ?