Monday, April 30, 2007

அற்புதத் தீவில் தேர்தல் சீர்திருத்தங்கள் -2

முதல் பகுதிக்கு >>>

ஜனாதிபதி கௌரவ் சிரோமணியின் புதிய தேர்தல் முறை வெளிநாட்டு அறிஞர்களின் பெருத்த ஆதரவைப் பெற்றாலும் அவர் எதிர்பார்த்தது போலவே அற்புதத் தீவின் அரசியல் கட்சிகள் தமது எதிர்ப்பை துவக்கின.

ஒருவரே ஒரே சமயத்தில் பலருக்கு ஓட்டளிக்க முற்படும் பொழுது தம் மனவிருப்பப்படி இல்லாமல் வாக்குப்பெட்டியின் வரிசைப்படி வாக்களித்து விட்டால் மதிப்பெண்கள் தலைகீழ் ஆகிவிடும். மதிப்பெண்கள் அளிக்கப்படும் முறை எல்லோருக்கும் புரியாது. புரியாத ஒரு செயலை செய்யச் சொல்லி வாக்குப்பெறுவது வாக்காளரை ஏமாற்றுவது போலாகும் என்று சிலர் வாதித்தனர்.

ஒரு சில கட்சிகள், ஏற்கனவே கணிணியில் முன்னேற்பாடு செய்யப்பட்டு ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு எந்தப் பொத்தானை அழுத்தினாலும் மதிப்பெண்கள் கூடும்படியான மென்கருவிகள் நிறுவப்படும் வாய்ப்புகள் அதிகம் என்று தமது அச்சத்தைத் தெரிவித்தன.

இது மக்கள் விரோத தேர்தல்; இதை திணிப்பதானால் தேர்தல்களைப் புறக்கணிப்போம் என்று சில தலைவர்கள் அறிக்கை விட்டனர்.

ஆனால் மக்களிடையே புது தேர்தல் முறை வரவேற்பை பெற்றது. இத்தகைய முறையில் கட்சிகள் இரண்டாவது மூன்றாவது ஓட்டுக்களை தக்க வைத்துக்கொள்ளவாவது நல்ல வேட்பாளர்களை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதன் மூலம் சட்டப் புறம்பான அடியாட்களின் ஆதிக்கம் குறைவதற்கான வாய்ப்புகள் பெருகும் என்று தொலைக்காட்சி கருத்து கணிப்புகளில் தெரிவித்தனர்.

விடாமுயற்சியினால் சிரோமணியும் ஞானதீபனும் மற்றும் ஒத்தக் கருத்துக் கொண்டிருந்த சமூக நல அமைப்புகளும் சில வருடங்கள் போராடி ஒரு வழியாக புதிய தேர்தல் முறைக்கு பாராளுமன்றத்தின் ஒப்புதலை நிறைவேற்றினர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே தேர்தல் தினமும் அறிவிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிரத்யேகமான வாக்குப்பெட்டிகள் அதன் செயல் முறை, திறந்த முறை (Transparent operations) செயல்பாட்டு விளக்கங்கள் தொலைக்காட்சிகளிலும் பத்திரிக்கைகளிலும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.

வாக்காளர்களுக்கு எவ்வித குழப்பமும் இருக்கவில்லை. "என்ன சார் இது! ஒன் டே கிரிகெட்-ல் இல்லாத ரூலா ! அதையே எல்லாரும் கரைச்சு குடிச்சிருக்காங்க. மூணு பேருக்கு நம்ம இஷ்டப்படி பர்ஸ்ட், செகண்ட் தர்டு சொல்லத் தெரியாதா ? என்று கிண்டலடித்தார்கள்.

கட்சிகளுக்கிடையே மக்கள் செல்வாக்குப் பெற்றவர்களை வளைத்துப்போடும் போட்டி துவங்கியது. சிவனே என்றிருந்த சில பழைய தலைவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கதவைத் தட்டியது. வேட்பு மனு தாக்கல் துவங்கிய தினத்தன்று மாலையே ஒரு அதிர்ச்சி தரும் செய்தி வந்தது. செய்தியின் விவரம்.

(உங்களுக்கு பிடித்த செய்தி வாசிப்பாளரின் நடையில் படித்துக் கொள்ளவும்)

" தேர்தல் ஆணையத்தில் பெரும் குழப்பம். தேர்தலை நடத்தமுடியுமா என்பதே சந்தேகத்திற்கு இடமாகியுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் இருநூறுக்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பாதி பேரை தகுதி நீக்கம் செய்தாலும் சுமார் நூறு பெயர்களை இடம்பெறச் செய்யும் மின் வாக்குப்பெட்டிகள் தேவை. ஆனால் இப்போது உள்ளவை ஐம்பது பேர்களை மட்டுமே கொள்ள வல்லது. மேலும் இரு பெட்டிகளை இணையாக இயக்கி தேவையைப் பூர்த்தி செய்யலாமென்றால் அதில் interlock வேலை செய்யாது. இந்த தொழில்நுட்பத் தேவைக்கென இந்திய வல்லுனர்களை தொடர்பு கொண்டபோது தேவையான மாற்றங்களை செய்து தர பல மாதங்கள் பிடிக்குமென தெரிகிறது. மின்வாக்குப் பெட்டிகளை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பிவைக்க கோரியுள்ளனர். இந்நிலையில் தேர்தல் நடத்துவதை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆலோசகர்களுடன் கலந்து முடிவு செய்வாரெனத் தெரிகிறது................."

அதை ஒட்டிய பல ஒளிப்பதிவு காட்சிகளும் விவரமாக காட்டப்பட்டன.

உயர்மட்ட ஆலோசனையில் பலிக்கடாவைத் தேடினர் சில அதிகாரிகள். "ஆர்டரிலேயே நூறு பெயர்களுக்காக என்று குறிப்பிட்டிருந்தால் இந்த குழப்பத்தைத் தவிர்த்திருக்கலாம்" என்று தேர்தல் ஆணையத்தின் கொள்முதல் அதிகாரியை குற்றம் கண்டனர் சிலர். இதுவரை எந்த தேர்தலிலும் அதிகபட்சமாக முப்பத்திரெண்டு வேட்பாளர்களே எட்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு தொகுதியில் தாக்கல் செய்திருந்தனர். சராசரியாக பத்து முதல் பதினைந்தே வேட்பாளர்கள் நாம் எதிர்பார்ப்பது. ஆகவே ஐம்பது என்பதே மிக அதிகமாகக் கருதப்பட்டது என்று தேர்தல் ஆணையம் தன் நிலையை எடுத்து சொல்லியது. தேர்தலை இரண்டு அல்லது மூன்று கட்டங்களில் நடத்தக்கூடிய சாத்தியக் கூறுகளை ஆராய தலைப்பட்ட போது மூன்று அல்லது நான்கு மடங்கு செலவுகள் கூடும் என பயமுறுத்தினர் கணக்குத் துறை பிரிவினர்.

இது மிகப்பெரிய சதிதிட்டம் என குற்றம் சாட்டினர் சிரோமணியின் ஆதரவாளர்கள்.

மக்கள் விரோத கொள்கைகளுக்கு மக்களே பதிலடி கொடுத்து விட்டனர் என்று கொக்கரித்தனர் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் அரசியல்வாதிகள்.

அற்புதத் தீவின நடைமுறைக்கு பொருந்தாது என்று நீதிமன்றத்தில் புதிய தேர்தல் முறையை ரத்து செய்யக் கோரி சிலர் மனு தாக்கல் செய்தனர்.

இந்த குழப்பங்களுக்கிடையே வேறொரு இடத்தில் சில கோடிகள் கைமாறிக் கொண்டிருந்தன. " இன்னாங்க இது ஒவ்வொரு தொகுதிக்கும் இருநூறு பேர் ஆள் புடிச்சு அவனுங்களுக்கு வேண்டிய பத்திரமெல்லாம் உஸாரா தயாரிச்சு டெபாசிட் கட்டி, அவுனங்களை வண்டியில கூட்டியாந்து ஆபீஸர் முன்னாடி கையெழுத்து போட வக்கறது வெளயாட்டா? ஒண்ணர மாசமா எவ்ளோ அலஞ்சிருப்போம்" என்று தமது உழைப்புக்கேற்ற ஊதியத்தை பெறுவதில் கண்ணும் கருத்துமாக இருந்தனர் பல தாதாக்கள்.

நேரமின்மைக் காரணமாகவும், நிதிப் பற்றாக்குறையாலும் அற்புதத் தீவில் தற்காலிகமாக மீண்டும் பழைய முறையிலேயே தேர்தல் நடத்துவது என்று உயர் மட்டக் குழு பரிந்துரை செய்தது. அதை ஜனாதிபதியும் ஏற்றுக் கொண்டார்.

தன் முயற்சியில் சற்றும் மனம் தளரா விக்கிரமன் ,மன்னிக்கவும், சிரோமணி பேரா. ஞானதீபனுக்கு , மாலை தேநீரில் கலந்து கொள்ள அழைப்பு அனுப்பினார். வேறெதற்கு எல்லாம் தேர்தல் சீர்திருத்தங்களை விவாதிக்கத்தான்.

No comments: