Sunday, April 29, 2007

அற்புதத் தீவில் தேர்தல் சீர்திருத்தங்கள்

முதல் பாகம்:

அற்புத தீவு என்பது ஆங்கிலேயர்களின் கப்பற்படைத் தளமாக இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்டது. அங்கே பெரும்பாலும் இந்திய வம்சாவழியினரே குடிமக்களாக இருப்பதால் அவர்களின் மனப்போக்கும் இந்திய மக்களைப் போலவே இருந்ததில் ஆச்சரியம் இல்லை. அத்தீவின் மக்கள் தொகை ஐம்பது லட்சத்திற்கும் குறைவே. ஆயினும் அவர்களுள் எத்தனை போட்டி, பொறாமை !!. என்னென்ன பெயர்களைச் சொல்லி மக்களைப் பிரித்து வைக்க முடியுமோ அத்தனையும் அங்கே அரசியல்வாதிகளால் வெற்றிகரமாக நிறைவேற்றி வைக்கப்பட்டிருந்தது.

ஆங்கிலேயர் அத்தீவை விட்டு வெளியேறியபின் அங்கே ஜனாதிபதி முறை குடியாட்சி அமலுக்கு வந்தது. அதாவது மக்கள் நேரடியாக ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பர். ஆனால் அன்றாட அலுவல்களை பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மை கட்சி கவனிக்கும். அவசர நிலை நடவடிக்கைகளை நிறைவேற்ற தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கும்.

அற்புத தீவின் அரசியல் அலங்கோலமாக இருந்தது. எந்த ஒரு கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை என்பது துர்லபமாக இருந்தது. அடிக்கடி கட்சி மாற்றங்களும் ஆட்சி கவிழ்ப்புகளும் நிலையற்ற ஒரு தன்மையை உண்டு பண்ணியது. பத்து ஆண்டுகளில் பதிமூன்று ஆட்சிகள் வந்து போயின. இதனால் அத்தீவின் முன்னேற்றம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது.


அதிருஷ்டவசமாக அத்தீவிற்கு ஒரு நல்ல ஜனாதிபதி வாய்த்திருந்தார். நல்லவர், வல்லவர், சிந்திக்கத் தெரிந்தவர். அவர் பெயர் கௌரவ் சிரோமணி. அவருடைய தந்தையார் மக்களிடம் மிகுந்த செல்வாக்குப் பெற்றத் தலைவராய் இருந்து சுமார் நாற்பது ஆண்டுகள் ஜனாதிபதியாக இருந்தவர். அவருடைய காலத்திற்குப் பின் சிரோமணிக்கு அப்பதவிக்கு வருவதில் எந்த சிரமமும் இருக்கவில்லை. உலகின் மிக உயர்ந்த பல்கலைகழங்களில் கற்றுத் தேர்ந்தவர். எதையும் விஞ்ஞான பூர்வமாய் அணுகுபவர். எத்தகையப் பிரச்சனைக்கும் ஒரு விஞ்ஞான தீர்வு கண்டறிவதில் நாட்டம் உடையவர்.

இனம் இனத்தோடு சேரும். நல்ல ஜனாதிபதியான கௌரவ்சிரோமணிக்கு ஒரு நல்ல ஆலோசகர் இருந்தார். அவருடைய பெயர் Prof. ஞானதீபன். பல நாடுகளின் அரசியல் முறைகளை ஆராய்ந்தறிந்தவர். அற்புத தீவுகளின் அரசியல் முறையில் உள்ள குறைபாடுகளை அவர் சுட்டிக்காட்டினார்.

- பெரும்பான்மை இடங்களை வென்ற கட்சி மொத்த ஓட்டுப் பங்கில் மிக குறைவாகவே முன்னிலையில் இருக்கிறது. ஆகவே ஓட்டளிப்புக்கும் வெற்றி பெற்ற இடங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லாதிருப்பது ஜனங்களின் உண்மை மன நிலையை பிரதிபலிப்பதாகாது.

- பெரும்பாலான மக்கள் தாம் ஓட்டளித்தவர் தோற்று விட்டால் தமது ஓட்டு வீணாகிவிட்டது என்ற வருத்தப்படும் வகையை சேர்ந்தவர்கள். அவர்கள் அதிக வெற்றி வாய்ப்புள்ளவர்க்கே தனது ஓட்டு என்று தீர்மானிக்கின்றனர். இதுவும் உண்மை நிலையை பிரதிபலிப்பதில்லை.

- எல்லாவற்றிலும் முக்கியமாக நல்லவர்கள், சமுதாயத்திற்கு நன்மை விரும்பிகள் தேர்தலைக் கண்டாலே அஞ்சி ஒதுங்கிவிடுகின்றனர். இதனால் சுயநலமிகள் அரசியலில் பெருமளவில் ஆட்டம் போட ஏதுவாகிறது.


ஜனாதிபதி சிரோமணியும் ஞானதீபனும் பலநாள் ஆலோசனைக்குப்பின் ஒரு புதிய தேர்தல் முறையை அறிமுகப் படுத்தத் துணிந்தனர். அதன்படி மேற்க் கண்ட குறைகளை எல்லாம் பெருமளவில் களைய முடியும் என்று எண்ணினர். அவர்களின் முறைப்படி முன்கூட்டியே வெற்றி வாய்ப்புகளை கணக்கிடும் பத்திரிக்கைகள் மற்றும் பொது கணிப்புத் தேர்வுகள் இவைகளின் கணிப்பு முறையை தகர்த்தால் பொதுமக்கள் தம் சுய சிந்தனையுடன் ஓட்டளிக்க வழியுண்டாகும் என்று கருதினர். உடனடியாக சர்வதேச அமைப்புகளின் உதவியோடு சிரோமணி தமது திட்டத்திற்கு பக்கபலம் கூட்ட ஆரம்பித்தார்.

அதற்கு ஒரு காரணம் இருந்தது. உள்நாட்டில் அரசியல் கட்சிகள் தன்னுடைய திட்டத்திற்கு ஆதரவு தரும் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கவில்லை. அக்கட்சிகள் திட்டத்தை முறியடிக்க எதை வேண்டுமானாலும் செய்ய ஒற்றுமையுடன் (இந்த ஒரு விஷயத்தில்) செயல் படும் என்றும் அறிந்திருந்தார். ஆகவே பேரா. ஞானதீபன் மூலம் அதை வெளிநாட்டுப் பத்திரிக்கைகளிலும், கருத்தரங்கங்களிலும் ஆதரவான விமரிசனங்களை திரட்டினார்.

பேரா. ஞானதீபன் பிரபலப்படுத்திய அத் தேர்தல் முறைதான் என்ன?

அம்முறைப்படி வாக்காளர்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு வாக்களிக்க அவர்கள் விரும்பிய வரிசையில் வாக்களிக்க முடியும். அதாவது ஓட்டு என்பது ஒருவருக்கு மட்டுமே அன்றி மூன்று அல்லது ஐந்து வாக்களர்களுக்கு ஓட்டு பதிவு செய்ய இயலும்.

மின்வாக்குப்பெட்டி ஒருவருக்கான ஓட்டை ஒருமுறைதான் பதிவு செய்யும். ஒருவரே பலமுறை ஒரு வேட்பாளருக்கு ஓட்டளிக்க முடியாது.

வாக்காளர்களின் தேர்வு படி முதல் பதிவாளருக்கு அதிக மதிப்பெண்களும்(points) இரண்டாமவர்க்கு அதிவிட குறைந்த மதிப்பெண்களும் மூன்றாமவர்க்கு அதற்குண்டான மதிப்பெண்களும் கணிணியில் தானே பதிவாகிவிடும்.

தேர்தலின் முடிவு மொத்த மதிப்பெண்களைக் கொண்டே தீர்மானிக்கப்படும். ஒருவரின் கணிப்பில் முதலாம் இடத்தில் உள்ள வேட்பாளர் இன்னொருவர் கணிப்பில் மூன்றாம் இடத்தில் இருக்கக் கூடும். ஒரு வேட்பாளர் யாருடைய கணிப்பிலும் முதலிடம் பெறவில்லை என்றாலும் இரண்டாம் இடத்திலோ மூன்றாம் இடத்திலோ இருந்து கொண்டு மதிப்பெண்களை அள்ளிக் கொண்டிருக்க வாய்ப்புண்டு. இதை weighted average கணிப்பு என்பர் ஆங்கிலத்தில்.

ஞானதீபன் கருத்தரங்களில் பயன்படுத்திய ஒரு உதாரண தேர்தல் முறையையும் முடிவுகளையும் பார்ப்போம். வேட்பாளர்கள் ஆறு பேர்.



அவர்கள் பிண்ணணி : பப்பூ குப்பா -பெரிய தொழில் சங்கத் தலைவன்.
வீரமணி ராஜாவும் மொய்தீனும் இரு பெரும் கட்சிகளின் வேட்பாளர்கள். மற்ற மூவரும் சுயேச்சைகள். இதில் சுரேன் பாக்சி ஒரு மருத்துவர். மக்களிடையே அவருக்கு நல்ல பெயர் இருந்தது. தன்னலமில்லாமில் தொண்டாற்றுபவர் என்று மக்கள் அவரை அறிந்திருந்தனர்.

இவர்களுக்குக் கிடைத்த ஓட்டுக்களும் மதிப்பெண்களும் கீழே அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளது. முதல் விருப்பத்திற்கு 3, இரண்டாம் விருப்பம் 2 மற்றும் மூன்றாம் விருப்பம் 1 மதிப்பெண்களும் பெறும்.



வாக்காளரகள் 971 : மொத்தம் அளிக்கப்பட்ட வாக்குகள் : 971 x 3 = 2913. அதிகப்பட்ச மதிபெண்கள்ஒரு வேட்பாளர் பெறக்கூடியது 2913. இதன் பொருளென்ன? அத்தனை வாக்காளர்களும் ஒருவருக்கே முதல் வாக்கைத் தந்திருந்தால் பெறக்கூடிய குறியீடுகள் 2913 ஆகும். இந்த ஆறு பேரும் பெற்ற மதிப்பெண்களை அட்டவணையில் காணலாம்.

வழக்கமான தேர்தல் முறைப்படி 291 ஓட்டுகள் பெற்ற வீரமணியே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படும். ஆனால் சிரோமணி ஞானதீபன் முறைப்படி வேறுவிதமான முடிவு வந்தது.

மிக பலம் வாய்நத கட்சிகளைச் சேர்ந்த வீரமணியும் மொய்தீனும் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் பின்னுக்குத் தள்ளப்பட்டனர். பொதுநலத் தொண்டர் பாக்சீ மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் முன்னுக்கு வந்து விட்டார். அவருக்கு கிடைத்தது = 58 x 3 +280 x 2+ 430 x1 = 1164

ஆனால் பெரும்பாலோர் அவருக்கு கொடுத்த இடமோ மூன்றாவது.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் மக்களின் எண்ணங்களை மேலும் முறையான வழியில் அறிந்து கொள்ள முற்பட்டால் வெளியாகும் முடிவுகளும் சரியான விதத்தில் அதை பிரதிபலிக்கக் கூடும்.

இக்கருத்தை ஞானதீபன் வெற்றிகரமாக நிலைநாட்டி பல நாட்டு அறிஞர்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தினார். பத்திரிக்கைகள் இது நல்லவர்களை அரசியல் வட்டத்திற்குள் கவர்ந்திழுக்க ஒரு நல்ல வழி என்று பாராட்டின. பணமுதலைகளின் ஆட்டத்திற்கு இது ஒரு முடிவு என்றும் கருத்துக்கள் வெளியாயின. ரவுடிகளின் ராஜ்ஜியம் இனி அரசியல்வாதிகளின் ஆதரவுக்காக அலைய வேண்டிருக்கும்; கருத்துக் கணிப்புகள் அர்த்தமற்ற கூட்டல் கழித்தல் ஆகிவிடும் என்றெல்லாம் பேசப்பட்டன.

(அற்புத தீவில் தேர்தல் நடந்ததா முடிவுகள் என்ன என்பதை அடுத்த பதிவில் காணலாம் )

No comments: