Thursday, February 7, 2008

சிரித்து வாழ வேண்டும் பிறர்...சினா-சோனா-4

என்னமோ தெரியல, இப்போ எல்லாம் பதிவுக்கு தலைப்பு வைக்கணும்-னா உடனே சினிமா பாட்டுதான் ஞாபகம் வருது.அந்த அளவுக்கு இந்த பாட்டெல்லாம் நம்மோட பின்னி பிணஞ்சு போச்சுங்க. இந்த பாட்டுக்கும் சினா சோனா சொல்ல வர்றதுக்கும் என்ன சம்பந்தம்?

ரொம்ப இருக்குங்க.முதல் படம், பாட்டுல முதல் வரிக்கு பொருந்தும். இரண்டாவது வரி இரண்டாவது படத்துக்கு பொருந்தும். என்ன ரொம்ப ப்ளான் பண்ணி சினா-சோனா சொன்ன மாதிரி இருக்குல்ல!

அக்டோபர் 5 : "One cannot think ill of anyone, while one is singing "


ஜாலியா பாடிக்கிட்டு இருக்கிறவங்களுக்கு பிறத்தியாரப் பத்தி தப்பா நெனைக்க தோணாதாம். இதை முதல் முதல்ல படிச்ச போது பெரிசா ஒண்ணும் தோணலை. பின்னால என்னோட 'Boss ' ஒரு நாள் என்னப் பாத்து ஒண்ணு சொன்னதும் திரும்ப இது நெனப்புக்கு வந்துச்சு.

அப்போ (1981)வேலைக்கு சேர்ந்த புதுசு. சின்மயா நகரிலிருந்து தரமணிக்கு ஒரே பஸ் 5D. அதனோட டையத்துக்குத்தான் நாம போயாகணும். இப்படியா எட்டு மணி ஆபீசுக்கு ஏழேகாலுக்கே போய் விடுவேன். அதை விட்டா எட்டரைக்குத்தான் போகமுடியும்.

பொதுவா நான் தான் போயி கடையத் தொறக்கணும். ஒரோரு சமயம் யாராவது தொறந்து ஆபீசக் கூட்டிக்கிட்டு இருப்பாங்க. அன்னிக்கு யாராவது ஸ்பெஷல் கெஸ்ட் வர்ற நாளா இருக்கும்.

ஒருநாளைக்கு, நான் தொறந்து கெடந்த ஆபீஸுக்குள்ள ஜாலியா (கல்யாணம் ஆகவில்லை!!) பாடிக்கிட்டே உள்ளே போனேனா, எம்பேரச் சொல்லி எங்க டைரக்டர் கணீர்ன்னு கூப்புடறது கேட்டது. அவரு அப்படித்தான் வெங்கல கடையில புகுந்த யானை மாதிரி. எங்க அப்பாவோட வயசு அவருக்கு. இந்த மனுஷன் எட்டுமணிக்குத்தான வருவாரு. இப்போ எப்படிங்கற கேள்வியோட நாடியெல்லாம் ஒடுங்கி போய் அவரு ரூமுக்குள்ள எட்டிப்பாத்து 'குட்மார்னிங் சார்' அப்படீன்னேன்.

ஹிண்டு பேப்பர பிரிச்சு பாத்துக்கிட்டு இருந்தவரு தலைய வெளிய எடுக்காமெயே 'என்ன சீக்கிரம் வந்துட்டீங்களா?'ன்னு கேட்டார். அத கேக்கிறதிலேயும் ஏதோ தப்பு பண்ணியவன விசாரிக்கிற மாதிரி ஒரு தோரணை.

“ எஸ் ஸார். இதுதான் என் பஸ் டைம். அடுத்த பஸ்ஸுன்னா லேட் ஆயிடும்” அப்படீன்னு ஏதோ முணு முணுத்தேன்.

'குட். நல்லா பாடுவீங்களா ?' கிண்டலா குத்தலா புரியல. 'எதுக்கு குட். சீக்கிரமா வந்ததுக்கா' அப்படீன்னு மனசுல ஒரு போராட்டம்.

”ஸாரி சார். நீங்க இருக்கீங்கன்னு தெரியல”

உடனேயே ஒண்ணும் சொல்லாம, பேப்பர மடிச்சு டேபிள் மேல தொப்புன்னு போட்டு, நாற்காலிய வேகமா பின்னுக்குத் தள்ளி என்னத் தாண்டிக்கிட்டே வெளில ஷெட் பக்கமா போனாரு. நானும் பின்னாடியே ஓடினேன். அங்கிருந்த 'புல்லட்'ட ஸ்டார்ட் செஞ்சு 'நோ,நோ. அப்படித்தான் ஜாலியா இருக்கணும். ஐ ஆம் ஹாப்பி'ன்னு சொல்லிட்டு வீட்டுக்குப் போய் விட்டார்.

அப்படியே ஸ்டன்னாயி நின்னுட்டேன். இன்னிக்கு ஏன் புல்லட்-ல இவ்வளவு சீக்கிரமா வந்தாரு? அவரோட ஜிப்ஸி எங்க போச்சு? இப்படி பல கேள்வி மனசுக்குள்ள. அதுக்கான விடையெல்லாம் இந்த பதிவுக்கு சம்பந்தம் இல்லேங்கறதுனால எழுதலை. ஆனா அவரு பெரிய விஞ்ஞானி மட்டுமல்ல பெரிய சைகாலிஜ்ஸ்ட் கூட. அவரு பெயரு Dr.C.V.சேஷாத்ரி, திவான் பகதூர் Sir C.P.ராமஸ்வாமி அய்யர் அவர்களின் பேரன்.

காலப்போக்கில புரிஞ்சிக்கிட்டேன். கள்ளம் இல்லா மனசுலதான் சந்தோஷம் இருக்கும் சந்தோஷம் இருக்கிற எடத்துலதான் பாட்டு இருக்கும். நான் சந்தோஷமாயிருக்கிறதப் பார்த்து அவரு சந்தோஷப் பட்டிருக்காரு. ரொம்ப பெரிய மனசு !

இதைத் தான் சினா சோனா கொஞ்சம் மாத்தி சொல்லியிருக்காரு. “பாட்டுப் பாடிக்கிட்டு இருக்கிற நேரத்துல கெட்ட எண்ணங்கள் வராது”. இது சாதாரண ஜனங்கள் விசயத்துல அனுபவ பூர்வமான உண்மை. அதனால எப்போவெல்லாம் மனசு தளர்ந்து பொகுமோ அப்போதெல்லாம் சத்தம் போட்டு பாடுங்க. யாரு என்ன நெனப்பாங்களோங்கற கவலையெல்லாம் வேணாம். எதிர்மறை எண்ணங்கள் ஓடிப்போயிடும். பாட்டரி சார்ஜ் ஆயிடும்.

ரெண்டாவது சினா-சோனா வும் (அக்டோபர் 6) நல்லா யோசிக்க வேண்டிய விஷயம் தான். இதுல odd even ங்கிற வார்த்தைகளை நல்லா பயன் படுத்தியிருக்காரு. At odds அப்படின்னா சரியா புரிஞ்சுக்க முடியாம சங்கடப்படுவது. get even அப்படீன்னா சரியாப் போச்சு, புரிஞ்சுக்கிட்டதா அர்த்தம். ஒரு சுய பரிசோதனை.

“ Most men remain at odds with themselves trying to get even "

“பெரும்பாலான மக்கள் தங்களை தாங்களே புரிஞ்சுக்கிறதுக்காக ரொம்ப சங்கடப்படுறாங்க”

உதாரணத்துக்கு, சிலருக்கு சட்டு புட்டுன்னு மூக்குக்கு மேல கோவம் வரும். எதிர்ல இருக்கிறவரை சரியோ தப்போ திட்டிடுவாங்க.

அப்புறம் உக்காந்துகிட்டு 'சே ஏன் தான் இப்படி இருக்கேனோ' அப்படீன்னு யோசிக்கிறாங்க பாருங்க அது தாங்க சுய பரிசோதனை. அப்படி யோசிக்கிறதே ஒரு நல்ல அறிகுறிதான். கொஞ்சம் கொஞ்சமா மாறிடுவாங்க!

ஆரம்பத்துல சினிமாப் பாட்டோட ரெண்டாம் லைன் ரெண்டாவது படத்துக்கு பொருந்தும்னு சொன்னேன். ”...பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே”

சுய சோதனை செஞ்சுகிட்டு நம்மோட தப்பு தண்டாவெல்லாம் நாமே மாத்திக்கிட்டாத்தானே இன்னொருத்தர் நம்மப் பார்த்து சிரிக்காம வாழ முடியும்.

என்ன சொல்றீங்க ? 'சினா சோனா சொன்னா சரிதான்' இல்லே !

No comments: