Thursday, December 13, 2007

Chiனா-Choனா சொன்னது என்னா ?

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் பல ஆண்டுகாலம் Ching Chow என்கிற கேலிச் சித்திரத் துணுக்கு ஒன்றைப் பிரசுரித்து வந்தது. இதை Chicago Tribune என்ற அமெரிக்கப் பத்திரிக்கையினிடமிருந்து பதிப்புரிமை பெற்று வெளியிட்டது.

1927ல் ஸிட்னி ஸ்மித் என்பவரும் ஸ்டான்லி லிங்க் என்பவரும் அப்பத்திரிக்கையில் கருத்துப்படத் தொடர் ஒன்றைத் துவங்கினர். நம் தினத்தந்தியில் வரும் சாணக்கியன் சொல் போல என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் ஆட்டு தாடி சாணக்கியனை போல் வெறுமனே நின்று கொண்டிருக்காமல், சீனத்துக் குடுமி வைத்த சிங்-சோவ் ஏதாவது ஒரு செயலில் ஈடுபட்டிருப்பது போலவோ அல்லது இக்கட்டில் சிக்கிக் கொண்டிருப்பது போலவோ அவர்கள் கேலிப்படம் வரைந்தனர். பிற்காலத்தில் குடுமியை மாற்றி அவனது சிகையை நவீன முறையிலேயே சித்தரிக்க ஆரம்பித்தனர்.

மேலும் விவரங்களுக்கு இங்கே சுட்டவும்.

சிங் சோவ் கேலிச் சித்திரங்களில் மெல்லிய நகைச்சுவையும் உட்கருத்தும் பொதிந்திருக்கும். ஒரு சிலவற்றில் ஆங்கில வார்த்தைகளை வைத்து சிலேடைகள் இருக்கும். பல இடங்களில் சித்திரம் இல்லாமல் புரியாது. இவை தவிர உப்பு சப்பு இல்லாமல் வந்த துணுக்குகளும் உண்டு.

கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நாட்களில் இதனால் கவரப்பட்டு என்னிடம் காலியாக இருந்த நாட்குறிப்பேட்டில் தினமும் வரைந்து வைத்துக்கொள்ள ஆரம்பித்தேன். சிங் சோவ் மட்டுமல்லாது அன்றைய தேதியில் வெளியான Think it over யும் சேர்த்தே எழுதி வைத்துக்கொண்டேன்.

மாலையில் வீடு திரும்பியதும் காபி குடித்துக் கொண்டே முதலில் செய்யும் காரியம் இது தான். இதற்கு தேவைப்பட்ட நேரம் சுமார் பத்து நிமிடங்கள். பலரும் இதை பாராட்டவே சுமார் நான்கு வருட காலம் (1978-1982)தொடர்ந்து செய்து வந்தேன். அதாவது நான்கு டைரிகள்.தொடராததற்குக் காரணம் அந்த தொடர் நின்று போனது தான். இப்பொழுது என்னிடம் உள்ளது இரண்டு டைரிகளே. இன்னும் இரண்டு யாரிடம் உள்ளது என்று தேடிக்கொண்டிருக்கிறேன்.

பிற்காலத்தில் அவற்றை புரட்டிப் பார்க்கும் போது முன்பு புரியாதிருந்த பல கருத்துப் படங்கள் புரிந்தன. பல நிர்வாக உண்மைகள் புரிய ஆரம்பித்தன. மீண்டும் மீண்டும் புரட்டும் பொழுது என் அனுபவத்திற்கேற்ப பல புது பரிமாணங்கள் தெரிந்தன. இதில் எனக்குப் பிடித்த சிலவற்றை அவ்வப்போது நம் இணைய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்கிற எண்ணத்துடன் "சினா-சோனா சொன்னது என்னா" என்ற தலைப்பில் பதியவிருக்கிறேன்

சிங்-சோவ் (Ching Chow)என்பதை சினா சோனா என்று நாம் தமிழ் படுத்திக் கொள்வோம். அதனோடு எனக்கு தோன்றும் கருத்துகள் இருப்பின் அவற்றையும் சொல்லுவேன். படித்தபின் உங்களுக்கு தோன்றுவதை நீங்களும் சொல்லுங்கள்.

Give a big hand to Chiனா Choனா


'its wisely written
More important than seeing through things is, seeing things through

பனிமழையில் முன்னே இருப்பதை பார்க்க முடியவில்லை என்பதால் பயணத்தை ரத்து செய்யாமல் காரியமே கண்ணாக பயணத்தை தொடர வேண்டும் என்று தனக்குத் தானே சொல்லிக் கொள்வது போல் உள்ளது இந்த படம்.

சற்று யோசித்துப் பார்த்தால் seeing through things என்பது நடப்பனவற்றை கவனித்துக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல் நிகழ்சிகளின் உள்நோக்கங்களையும் ஆராய்வது. "Seeing things through" என்பது எடுத்த காரியத்தை வெற்றிகரமாக நடத்திச் செல்வது.

நாம் அன்றாடும் காணும் உண்மை ஒன்று.

ஒரு முக்கியமான project-ல் உள்ள உறுப்பினர்கள் அதை வெற்றிகரமாக முடிக்க செயல்படுவது seeing things through ஆகும். அங்கே உட்பூசலும் குழப்பமும் இருந்தால் ஒருவரின் செய்கையை, முடிவுகளை மற்றவர் சந்தேகக் கண்கொண்டு அணுகுவதே seeing through things. வெற்றிக்கு எது தேவை ?

சினா-சோனா சொல்வது சரிதான்!
More important than "seeing through things" is, "seeing things through

2 comments:

cheena (சீனா) said...

கபீரன்ப, நல்லதொரு தொடக்கம். தேவையான பதிவு. தாங்கள் கைப்பட எழுதி இருக்கும் எமர்சனின் பொன்மொழி போற்றத்தகுந்தது.
நல்வாழ்த்துகள்

KABEER ANBAN said...

நன்றி சீனா.ஆங்கில மேற்கோள்கள் புத்தகங்களிலும் இணையத்திலும் அள்ளிக் கிடக்கின்றன. ஆகையால் தான் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டேன். உங்களைப் போல் பலரும் விரும்பி படிக்கலாம் என்பதால் இனி அதையும் தனியே எடுத்து எழுதி விடுகிறேன்.