Thursday, June 29, 2023

Smart socket and UPS inverter :

இந்த தலைப்பை தமிழில் எழுதத் தெரியவில்லை. அதனால் ஆங்கிலத்திலேயே எழுதிவிட்டேன். சரி, விஷயத்திற்கு வருவோம்.    

  கர்நாடகாவில் மின்சாரத்துறை  குழப்பங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. முதலில் இலவசம் என்ற அறிவிப்பு ஒருபுறம்.  மறுபுறம் யூனிட்க்கு  ரூ 4/லிருந்து ரூ 7/க்கு கட்டணம் அதிகரிப்பு.  இதைத் தவிர உபரி வரிகள்.  இலவசம் என்பது ஆகஸ்ட் மாதத்திலிருந்து அமலாகும், அதுவும் கடந்த வருட சராசரி பயன்பாட்டைப் பொறுத்து முடிவாகும் என்று நாளுக்கு ஒரு அறிவிப்பு யார் யார் மூலமாகவோ வந்து கொண்டிருக்கிறது.

என் நண்பருக்கு கவலை பிடித்துக் கொண்டது. அவர் மாதம் 120 முதல் 180 யூனிட்டுகளுக்கு குறைவில்லாமல் கட்டி வந்திருக்கிறார். பேச்சு வாக்கில் பயன்பாட்டை குறைப்பது பற்றிக் கேட்டார். வழக்கமான கேள்விகளில் தெரியவந்தது அவர் வீட்டில் வெந்நீருக்கு கீஸர் ஒன்றைத் தவிர பெரியதாக மின்சார பயன்பாட்டைஅதிகரிக்கும் இயந்திரங்கள் எதுவும் இல்லை. ஒரே ஒரு ஃபிரிட்ஜ், அதுவும் இன்வெர்டர்  பிரிட்ஜ்.  அதனால் ஒரு நாளைக்கு ஒரு யூனிட்டுக்கும் குறைவாகவே இருக்கும். வாஷிங் மிஷன், மிக்ஸி, கிரைண்டர்  போன்ற  இயந்திரங்களே இல்லை. மற்றபடி  தொலைக்காட்சிப் பெட்டி, மின் விசிறிகள், குழாய் விளக்கு  போன்றவைதான்.  ஒரு UPS  இன்வெர்டர் 12 வோல்ட் பாட்டரியுடன் மின்தடை காலங்களின் பயன்பாடு கருதி இணக்கப்பட்டிருந்தது.

அதுவும் சரியாக பராமரிக்கப்படாமல் பாட்டரியின் நீர் அளவு குறைவாகவும்  உப்புப் பூத்த டெர்மினலுடன் காணப்பட்டது.  என் கணக்குப்படி முதல் திருடன் இதுதான். இது கண்டிப்பாக பெரும் விரயத்தை ஏற்படுத்துகிறது என்று தோன்றியது.  கீஸரிலாவது   ஆட்டோ சிவிட்ச் ( thermostat) மூலம்  மின்சார விரயம் குறைக்கப்படுகிறது. 

UPS-ஸில் ஆட்டோ ஸ்விட்ச்  பாட்டரியில் சேமிக்கப்பட்ட மின் அளவைப் பொருத்து செயல்படும். பாட்டரியின் எந்த ஒரு செல் பகுதி பலவீனமானாலும் அது முழு சார்ஜ் ஏற்காது. அதனால் இன்வெர்டர் அதை எப்போதும் சார்ஜ் செய்து கொண்டே இருக்கும்.

.சரியாக பராமரிக்கப்படும் பாட்டரியில் கூட 20  வாட்ஸ் வரையிலும் தொடர்ந்து இழப்பு இருந்து கொண்டே இருக்கும். அதாவது ஒரு நாளைக்கு 480 wh  அல்லது  ஒரு நாளைக்கு அரை யூனிட் . மாதம் 15 யூனிட்கள்.  இது ஸ்டாண்ட் -பை  ( standby loss) இழப்பு எனப்படும்.  நமது  அளவுக்கூடக் கூட  இதுவும் கூடும்.  

பெரும்பாலும்  இதைப்பற்றிய விழிப்புணர்வு இல்லாமலே பெரும்பாலானோர் இருக்கிறார்கள். ஏனெனில் இதை  அளப்பதற்கு சரியான கருவிகள் இல்லை.

அப்படி எனக்கொரு கருவி கிடைத்து அதை கடந்த ஒன்றரை வருடங்களாக உபயோகித்து வருகிறேன். ஆனால் அதை வாங்கியபோது அது இப்படி பயன்படும் என்று அறிந்திருக்கவில்லை.

அது ஸ்மார்ட் ப்ளக் ( Smart plug ) எனப்படும்,  கணினி, கைப்பேசி மூலமாக இயக்கக்கூடிய மின் இணைப்பு முறையாகும். இதன் மூலம் நமக்கு தேவையான குறிப்பிட்ட கருவியை குறிப்பிட்ட நேரத்தில் இயக்கவோ நிறுத்தவோ முடியும்.  அதை எங்கிருந்தாலும் இணைய இணைப்பு இருந்தால் செய்ய முடியும்.  தானியங்கி செயல்பாடுகளை முன் கூட்டியே திட்டமிட்டு இதில் சேமித்து விட்டால் அக்குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிடப்பட்ட செயலை நிறைவேற்றும்.  உலகில் நீங்கள் அதன் செயல்பாட்டை எங்கிருந்து வேண்டுமானாலும் கண்காணிக்கலாம்.

அப்படி ஒரு ஸ்மார்ட் ப்ளக்கை இணைய தளத்திலிருந்து வாங்கி என் வீட்டு சோலார் இன்வெர்டருடன் இணைத்தேன்.  என்னுடைய தேவை பாட்டரியின் பயன்பாட்டை அதிகப்படுத்தி மின்வாரியத்தின் புழக்கத்தை குறைப்பதே. இதன் மூலம் தானியங்கி ப்ளக்கைக் கொண்டு -அனுபவத்தின் அடிப்படையில் - பருவ நிலைக்குத் தக்கவாறு  கண்காணித்து செயல்படுத்தி வருகிறேன்.

நான் எதிர்பார்க்காத ஒரு விஷயம் என்னவென்றால் நாம் எந்த எந்திரத்துடன் இணைத்துள்ளோமோ அதன் தனிப்பட்ட மின்னளவு பயன்பாட்டை துல்லியமாக தொடர்ந்து கணித்து அதை எப்போது வேண்டுமானாலும் நம் ஸ்மார்ட் ஃபோனில் பார்க்கின்ற வசதியை தயாரிப்பாளர்கள் செய்திருக்கிறார்கள். இதனால் என்னுடைய இன்வெர்டர் ஒவ்வொரு நாளும்  பயன்படுத்தும் நிகழ்நிலையிலேயே ( Real time) அதைத் தெரிவிக்கிறது.

உதாரணத்திற்கு இந்த படத்தில் என்னுடைய கடந்த சில மாதங்களுக்கான  இன்வெர்டரின் பயனளவை காட்டியிருக்கிறேன்.  ( இரவு 12 மணி முதல் காலை 7:45 மணியளவிலேயே 130 wh உபயோகித்திருக்கிறது. 1000 wh = 1 kwh அல்லது 1 யூனிட் எனப்படும்) )



இதில்  2022 ஆம் வருடம் ஜூன் ஜூலை மாதங்களில் நாங்கள் ஊரில் இல்லாதபோதும்  7 அல்லது 8 யூனிட்டுகளை அது உபயோகித்திருக்கிறது. நான் நல்ல முறையில் என் பாட்டரிகளை பராமரித்து வருவதால்  அதன்  மின் இழப்பு வேகம் குறைந்திருக்கலாம். இழப்பு குறையும் போது ஈடுகட்ட வேண்டிய மின்தேவையும்  குறையத்தானே செய்யும்!  

அதிக அளவில் மின்தேவை ஏற்படும் பொழுது இன்வெர்டர் எடுத்துக் கொள்ளும் அளவும் ( self maintenance ) அதிகரிக்கிறது.  இதை மாதாந்திர உபயோகத்தின் அளவுகளைக் கண்டு புரிந்து கொள்ளலாம். 


கீழே இருக்கும் எண்கள் இன்வெர்டர் யூனிட்டுகள் மேலே உள்ளவை அந்தந்த மாதத்திற்கான பயனீட்டு அளவு.  சராசரியாக இன்வர்டர் மட்டும் மாதம் 24 யூனிட்டுகளுக்கு காரணமாகிறது.  அதிக அளவு மின்சாரம் இன்வெர்டர் மூலம் இழுக்கப்படும் பொழுது சூட்டைத் தணிக்க அதிலுள்ள cooling fan  அதிகம் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. ஆகையால் அன்றைய  தட்ப வெப்பத்தைப்பொருத்தும் தினசரி வேறுபாடுகள் இருக்கும்.

இதையெல்லாம் ஏன் குறிப்பிடுகிறேனென்றால்  UPS  சேவை மிக அவசியம் என்று  நாம் பெரும்பாலும் தேவையின்றி பாட்டரியை சார்ஜ் செய்து கொண்டு  அதிகப்படியான மின்கட்டணம் கட்டி வருகிறோம்.

பயனீட்டின் அளவு அதிகரிக்கும் போது இன்வெர்டரின் தேவை  65 வாட்ஸ் வரை கூட போகலாம்  என்று இணையத்தில் பலருடைய அனுபவங்கள் வாயிலாக அறிகிறேன்

அப்போது  இன்வெர்டரின் பயன்பாடும் அதிகரிக்கிறது. இதை தவிர்க்க முடிந்தால் 30 யூனிட்டுகளை குறைக்க முடியும்.  அதாவது மாதம் ரூ 210 + உபரி வரிகளை குறைக்கலாம். 

இன்வெர்டர் UPS வைத்து இருப்பவர்கள் பாட்டரியை வாரம் ஒரு முறை சார்ஜ் செய்து அதை மெயின் லைனிலிருந்து switch off  செய்து விடுங்கள்.  மின்தடை ஏற்படும்பொழுது மட்டும் அதை ON செய்து கொண்டால் போதுமானது. இதனால் தேவையின்றி இன்வெர்டர் இயங்காது. சூடாகாது.  அது போல் பாட்டரியின் இழப்பு வேகமும் மிகக் குறைவாகவே இருக்கும். 

முக்கியமாக பாட்டரியின் ஆயுட்காலம் எத்தனை முறை செறிவூட்ட சுழற்சி (Charging cycles) என்பதைப் பொருத்தது. எப்பொழுதும் மின் இணைப்பிலேயே வைத்திருக்கும் பொழுது மிக விரைவிலேயே சுழற்சி எண்ணிக்கையை எட்டி விடுகிறது. இதனால்  ஐந்து வருட காலம் என்பது மூன்றாக சுருங்கி போய் விடும் வாய்ப்புகள் அதிகம். மேலும் பராமரிப்பு சரியில்லாமல் இருந்தால் அதிக அளவில் மின் இழப்பை ஏற்படுத்தும்.  

மேலே கூறிய அனைத்தும் வெறும் இன்வெர்டர் UPS வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே. 

பின் குறிப்பு :  இந்த சேமிப்பின் பரிமாணம் என்ன?
மாதம் ரூ 200 என்று வைத்துக் கொண்டால் வருடத்திற்கு ரூ2400/
 ஐந்து வருடத்தில் சேமிப்பின் அளவு ரூ 12000/

அதாவது அடுத்த பாட்டரி வாங்குவதற்கான பணத்தை முறையான கண்காணிப்பினாலேயே சேமிக்க வழியுண்டு என்பதை புரிந்து கொண்டாலே போதும்.



2 comments:

கோமதி அரசு said...

பயனுள்ள பதிவு.

KABEER ANBAN said...

நன்றி கோமதி மேடம்