Saturday, March 3, 2018

உலகுக்கு ஆன்மாவின் கடன்

      இன்று (மார்ச் 3, 2018)   நயீப் சுபேதார்  சஞ்சய் குமார் க்கு பிறந்த நாள். அவருடைய சிறப்பு ,பரமவீர் சக்ரா விருது படைத்து உயிர் வாழும் மூன்று வீரர்களில் அவரும் ஒருவர்.  அவர் புரிந்த வீரச் செயல் ‘கார்கில்’ போரில் மிகவும் அடிபட்டு ரத்தம் ஒழுகிய போதும் மூன்று எதிரிகளை ஓட ஓட விரட்டி அவர்களை கொன்று  தம்முடைய போர் நிலையை காப்பாற்றினார்.

உயிரைப் பயணம் வைத்து நாட்டுக்காகப் போராடும் வீரர்களுக்கு அளிக்கப்படும் மிகப் பெரிய விருது அது. அவருடைய வீரத்திற்கும் தியாகத்திற்கும் தலை வணங்குவோம்.




டிவிட்டரில் இப்படிப்பட்ட தியாகிகளின் Remember and Never Forget   @FlagsofHonour  என்ற முகவரியில் பெறலாம்.


இப்படி  தம் உயிரைப் பணயம் வைத்துப்  போரிடும் தியாகிகளின் மனநிலைப் பற்றி டி.வி.ஜி. என்ன சொல்கிறார் பார்ப்போம்.

ಹತ್ಯೆಯೋ ಹನ್ಯತೆಯೊ ವಿಜಯವೋ ಪರಿಭವವೊ ।
ಕ್ಷತ್ರಿಯಂ ಸ್ವಾರ್ಥಮಂ ಗಣಿಸುವನೆ ರಣದೊಳ್ ।।
ಕೃತ್ಯನಿರ್ಣಯ ಬಾಹ್ಯಲಾಭನಷ್ಟದಿನಲ್ಲ ।
ಆತ್ಮಋಣವದು ಜಗಕೆ ಮಂಕುತಿಮ್ಮ ।।

(ஹத்யெயோ ஹன்யத்யெயோ விஜயவோ பரிபவவோ
க்ஷத்ரியம் ஸ்வாதர்மம் கணிசுவனே ரணதொள்||
கிருத்ய நிர்ணய பாஹ்ய லாபனஷ்டதினல்ல|
ஆத்மருணவது ஜககே மன்குதிம்மா|| )

கொல்வதோ கொல்லப்படலோ, வெற்றியோ தோல்வியோ |
வீரனும் சுயநலத்தைக் கணிப்பதில்லை போரிலே ||
கர்ம நிர்ணயம் புற லாப நட்டத்திலில்லை |
ஆன்மாவின் கடனது உலகுக்கு -மக்குத் திம்மா||

தான் வாழும் சமூகத்திற்காக தன்னையே மறக்கிறான் வீரன். போராடும் நேரத்தில் லாப நஷ்ட கணக்கில்லை.  வெற்றி பெறுவோமோ இல்லையோ எனக்கிடப்பட்ட கட்டளையை செவ்வனே செய்ய வேண்டும் என்ற குறிக்கோள் ஒன்றே முன் நிற்கிறது

  ஆன்மா என்ற சொல்லை டி.வி. ஜி. ஏன் கையாண்டார் என்கிற கேள்வி மனதில் எழுந்தது.  ஆன்மீகத்தில் சொல்லப்படுவது,  மனது ஆன்மாவில் லயக்கும் பொழுது  தூல உடலை  மறக்கும் நிலையை எய்துகிறது.  அனைத்து உயிருள்ளும் ஒளிரும் ஆன்மா ஒன்றே என்பது அத்வைத சித்தாந்தம். அதனால் எல்லா ஆன்மாக்களும் ஏதோ ஒரு வகையில் ஒன்றுக்கொன்று  கடன்பட்டவையே.

அதனால்தானோ என்னவோ திருவள்ளுவரும்,  “அஞ்சாது போராடும் செயல் பேராற்றலே ஆயினும் பகைவர்களுக்கு ஏதேனும் இடையூறு நேர்ந்தால் அவருக்கு உதவிசெய்தல் அதைக்காட்டிலும் கூர்மையுடையது ”(773)  என்பதாக ஆன்ம ஒற்றுமையை வலியுறுத்துவது போல் சொல்லியிருக்கிறார்.

பேராண்மை என்பதறுகண், ஒன்றுற்றக்கால் 
ஊராண்மை மற்றதன் எஃகு

அட்ரினல் சுரப்பி அதிகமாக அட்ரினல் ஹார்மோனை சுரப்பதால்  அந்த கண நேர வீரத்தை உடல் தோற்றுவிக்கிறது என்பது மருத்துவ விஞ்ஞானிகளின் கூற்று.  ஆனால் மனதிற்கு உடல் மேல் உள்ள ஆதிக்கத்தையே இதுவும் குறிக்கிறது.

ஒரு சமுதாயக் கூட்டமாக மக்கள் வாழத் தொடங்கும் போதே ஒருவரை சார்ந்து மற்றவர் இருக்க வேண்டிய கட்டாயம் உருவாகி இந்த ‘ருண பந்தம்’ ஆரம்பிக்கிறது. அதையே உலகிற்கு நாம் படும் கடனாக கொள்ளலாம்.

போர் முனைக்கு செல்லாத குடிமக்கள்,  இந்தக் கடனை பிறருக்கு சேவை செய்வதன் மூலம் தீர்க்கலாம். பசி பிணி போக்குவது, கல்வி அளிப்பது என்று எவ்வளவோ வாய்ப்புகள் உண்டு. 

அது சரி,  பகல் கொள்ளையாக வங்கிகளை ஏமாற்றி கோடிக் கணக்கில் கடன் பெற்றவர் எப்படி தீர்க்கப் போகிறார்கள் என்று கேட்கிறீர்களா !

“தன் வினை தன்னைச் சுடும்” என்பதையும் சொல்லி வைத்திருக்கிறார்கள்.  நாம் நம் தியாகிகளைப் போற்றக் கற்றுக் கொடுத்தால் வரும் தலைமுறைகளாவது நல்ல முறையில் வர வாய்ப்புண்டு.

4 comments:

yrskbalu said...

Good. Post in regularly

கோமதி அரசு said...

நாம் நம் தியாகிகளைப் போற்றக் கற்றுக் கொடுத்தால் வரும் தலைமுறைகளாவது நல்ல முறையில் வர வாய்ப்புண்டு//

நன்றாக சொன்னீர்கள்.
அருமையான பதிவு.
உலகுக்கு ஆனமாவின் கடன் தலைப்பு அருமை.

குடும்ப உறுப்பினர்களுக்கு எல்லாம் செய்து முடித்து விட்டால் கொஞ்ச்சம் சமுதாயபணிக்கு மனதை செலுத்தலாம்.

மனிதன் சமுதாயத்தாலும் வளர்க்கப்படுகிறான் அதனால் சமுதாயத்திற்கு கடன் பட்டு இருக்கிறான், சமுதாயத்திற்கு முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்பது அவன் கடமையாக கொள்ள வேண்டும் தான்.

நயீப் சுபேதார் சஞ்சய் குமார் அவர்களுக்கு வணக்கங்கள், அஞ்சலிகள்.

KABEER ANBAN said...

நல்வரவு பாலு சார். //Post in regularly// முயற்சி செய்கிறேன் :-)

KABEER ANBAN said...

நல்வரவு கோமதி மேடம்

///மனிதன் சமுதாயத்தாலும் வளர்க்கப்படுகிறான் அதனால் சமுதாயத்திற்கு கடன் பட்டு இருக்கிறான், சமுதாயத்திற்கு முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்பது அவன் கடமையாக கொள்ள வேண்டும் தான்.///

உண்மைதான். சமுதாயத்தில் இருந்தால்தான் மனிதன் வளர்ச்சி காண முடியும். அதனால் அவனும் அதில் பங்கேற்கக் கடமைப்பட்டவன் தான்.
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி