Wednesday, March 9, 2016

மின் அழுத்தம் கூட குறையும் மன அழுத்தம்

கற்கை நன்றே-வில் பதிவு எழுதி பல நாட்களாகி விட்டனவே ஏதேனும் உபயோகமாக எழுதுவோமே என்று நினைத்தபோது மனதிற்கு வந்தது கர்நாடக அரசின் மூலம் மான்ய விலையில் விற்கப்படும்  எல்.இ.டி விளக்குகள் தான். கர்நாடகத்தில் வசிக்கும் பதிவர்கள் உடனடியாக இதன் மூலம் பயன்பெறலாமே என்ற எண்ணத்தில் எழுந்ததுதான் இந்த பதிவு.

வெயில் காலம் வந்தாலே மின் அழுத்தக் குறைவால் குறிப்பிட்ட நேரங்களில் பவர் கட் என்பது பெங்களூரில் சர்வ சாதாரணம். அது அரைமணியாக இருக்கலாம் அல்லது ஒரு மணி நேரம் கூட ஆகலாம். ஆனால் உத்திர பிரதேசத்தை போல இன்வேர்டர் சார்ஜ் செய்யக் கூட நேரம் இல்லாமல் 12, 15 மணி நேரம் போகாது. அது வரையில் அதிருஷ்டசாலிகள்.


மின் அழுத்தம் ஏன் குறைகிறது? உற்பத்தியை விட நுகர்தல் கூடும் பொழுது அதிக கரெண்ட் தேவைப் படுகிறது. மின்சக்தி ஒரு குறிப்பிட்ட அளவே உற்பத்தி ஆகும் பொழுது 220 வோல்ட் அழுத்தத்தில் குறிப்பிட்ட கரெண்ட் மட்டுமே நுகரப்பட வேண்டும். நாம் எத்தனைக்கு எத்தனை சாதனங்களை பயன்படுத்துகிறோமோ அவை ஒவ்வொன்றும் அதற்கென்று குறிப்பிட்ட கரெண்டை உபயோகிக்கத் தொடங்கும். இதனால் கரெண்ட் தேவையை பூர்த்தி செய்ய டிரான்ஸ்போர்மர் வோல்டேஜை குறைத்துக் கொள்கிறது. அதன் காரணமாக மின் அழுத்தக் குறைவு ஏற்படுகிறது. அப்படி குறைந்த அழுத்தத்தில் வேலை செய்தால் நம் உபகரணங்கள் முழுவதுமாக பழுதடைய வாய்ப்புகள் இருப்பதால் மின் வாரியமே மின் வினியோகத்தை கட்டுப்படுத்துகிறது. பவர்கட்டை தவிர்க்க வேண்டுமானால் ஒன்று நாம் சுயக் கட்டுபாட்டுடன் நம் தேவைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் அல்லது உபகரணங்களை மேம்படுத்தி குறைந்த சக்தியில் (அதாவது குறைந்த கரெண்ட்-ல்) இயங்குபவனாக வடிவமைக்க வேண்டும்.

இரண்டாவதைத்தான் இப்போது கர்நாடக அரசு எல்.இ.டி பல்பு வினியோகத்தின் மூலம் செய்ய முற்பட்டிருக்கிறது.

சுமார் ரூ.350 விலையாகும் பல்பு ரூ.100 க்கு விற்கப்படுகிறது. கள்ள சந்தையை தவிர்க்க நமது நுகர்வோர் எண்ணை பதிந்து கொண்டு ஒரு குடியிருப்புக்கு 10 பல்புகள் மட்டுமே கொடுக்கப் படுகின்றன. ஆனால் இதனால் ஏற்படும் மின்சக்தி சேமிப்பு மிகக் கணிசமானது.  
உதாரணத்திற்கு 60 வாட் உள்ள சாதாரண பல்பின் வெளிச்சத்தை 9 வாட் திறனுள்ள எல்.இ.டி விளக்கு தரும். அதாவது ஆறு மடங்குக்கும் குறைவான சக்தியே தேவைப்படுகிறது. ஸி.எஃப்.எல். குழல் விளக்கை விட 1.6 மடங்கு திறன் வாய்ந்தது.  
ஆனால் இதன் விலையோ சாதாரண விளக்கை விட 30 மடங்கும் ஸி.எப்.எல் விளக்கை விட 3 மடங்கும் அதிகம் என்று சொல்பவர்களுக்கு இதன்  ஆதரவாளர்கள் கூறும் பதில் இதன் பயனளிக்கும் நேரக்கணக்கே. ஒரு நாளைக்கு நான்கிலிருந்து ஐந்து மணி நேரம் உபயோகிப்போம் என்று வைத்துக் கொண்டால் பதினைந்து வருடங்களுக்கும் மேலாக உழைக்கும் என்று சொல்கின்றனர். இதை மணிக்கணக்கில் சொல்வதானால் 25000 மணி துளிகள் எல்.இ.டி க்கும் 5000 மணித்துளிகள் ஸி.எப்.எல் க்கும்   1000 மணித்துளிகள் சாதாரண விளக்குக்கும் சொல்லப்படும் வாழ்வு காலமாகும்.
ஆகையால் எல்.இ.டி விளக்குக்கு கொடுக்கும் அதிக விலை உண்மையிலேயே ஒரு நல்ல முதலீடு போலவே அன்றி ஒரு தொடர் செலவு அல்ல. இதனால் தனிப்பட்ட சேமிப்பு மற்றும் அன்றி நாட்டிற்கும் பெருமளவு மின்சக்தி மிச்சப்படுகிறது. ஒரு  பல்பு ஒரு வருடத்தில் ரூ.118 சேமிக்கும் என கர்நாடக அரசின் பிரசுரம் அறிவிக்கிறது ஆகையால்தான்  இதை ரூ.நூறுக்கு விற்பனை செய்ய முன் வந்துள்ளார்கள்.
  மேலும் அதிக விவரங்களுக்கு பல்பின் அட்டைப் பெட்டியில் காணப்படும் தகவல்களையே படம் பிடித்து போட்டு விடுகிறேன்.
ஒரு சந்தோஷமான சமாசாரம். இது MADE IN INDIA ( சீனா அல்ல ) 






இது தமிழ் நாட்டிலும் செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதை விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கலாம். சற்றே பொறும்  பிள்ளாய், யார் கண்டார்கள், இலவசமாகவே கூட கிடைக்கலாம்.

5 comments:

Geetha Sambasivam said...

நல்ல தகவல்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் கபீரன்பன், வாழ்க வளமுடன்.
நீண்ட நாட்களுக்கு பின் தேவையான காலத்தில் தேவையான பதிவு.
நாங்கள் எல்.இ.டி பல்புகளை பலவருடங்களுக்கு முன்பே பயன்படுத்த ஆரம்பித்து விட்டோம். நீண்ட நாள் உழைக்கும், மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம் என்று பேசிக் கொள்வோம். கர்நாடக அரசு குறைந்த விலைக்கு விற்பனை செய்வது நல்ல விஷயம்.

கோமதி அரசு said...

எல்.இ.டி பல்புகள் வர ஆரம்பித்தவுடன் வாங்கிவிட்டோம்.

KABEER ANBAN said...

@கீதா மேடம் : நல்ல தகவல்களுக்கு என்றும் தங்கள் ஆதரவு உண்டு என்பது தெரியும். வாசிப்புக்கு நன்றி.

@ கோமதி மேடம் : எல்.இ.டி பல்புகளை ஆரம்பகாலத்திலே வாங்கிவிட்டீர்களா? அப்படியானால் மான்ய விலையில் கிடைத்திருக்காதே. என்ன தாராள மனசு உங்களுக்கு ! மிகவும் பொறுப்பான குடிமக்கள் உங்கள் குடும்பத்தவர்கள் ! வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி.

கோமதி அரசு said...

எங்களுக்கு மானிய விலையில் கிடைக்காது. அதிகவிலைகொடுத்துதான் வாங்க வேண்டும். நீண்ட நாள் உழைப்பு, மின்சார கட்டணம் குறைவதும் நமக்கு நன்மைதானே.