Saturday, June 2, 2007

தருமம் பண்ணுங்க ஐயா சாமி, ஒரு ரேஷன் கார்டு

அரசாங்க அலுவலகங்களின் முன்னே மேற்படி பிச்சையெடுக்காத குறை ஒன்றுதான் பாக்கி. அதைத் தவிர எல்லாம் செய்து பார்த்தாகி விட்டது. தெய்வத்தின் கடைக்கண் எப்போது திறக்குமோ தெரியவில்லை.

இப்படி அலுத்துக் கொள்ளுமளவுக்கு என்ன ஆகிவிட்டது என்கிறீர்களா ? ஐயன்மாரே நம்ம வீட்டிலே அடுப்பு எரியணும்னா இப்போ தமிழ் நாட்டிலே ரேஷன் கார்டு அவசியம்.

தெரியாத்தனமா தில்லியிலிருந்த வேலையை விட்டு கோவைக்கு வந்தாலும் வந்தோம் பிடிச்சது ரேஷன் கார்டு என்னும் சனி.

இண்டேன் பதிவு செய்ய போன இடத்தில் முதல் கேள்வி 'ரேஷன் கார்டு காப்பி குடுங்க"
"ரேஷன் கார்டு இல்லியே.நாங்க ரேஷன் கார்டே வச்சுக்கல. வேணும்னா பாஸ்போர்ட் I D தர்ரோம்"
"அட்ரஸ் புரூவ் க்கு வேணும். ரேசன் கார்டு வாங்கியாங்க''
"இப்பத்தானே வந்திருக்கோம். அதுக்குள்ள எப்படி அட்ரஸ் புரூவ் தரமுடியும்? நீங்களே வந்து செக் பண்ணிக்குங்க''

PAN CARD, வங்கி கணக்கு என்பது போன்ற எந்த அத்தாட்சிகளும் அவர்களுக்கு ஆகாதாம். அர்த்தமற்ற வாக்குவாதமாகி ஏஜென்ஸி முதலாளியிடம் போனது விஷயம்.
"சார் நாங்க ஒண்ணும் பண்ணமுடியாது. இப்ப இன்ஸ்பெக்ஷன் எல்லாம் ரொம்ப ஸ்ட்ரிக்ட். வேணும்னா ரெண்டு மாசத்துக்குள்ளே 'ரேஷன் கார்டு இல்லே'ன்னு ஒரு சர்டிபிகேட் தாஸில்தார்கிட்டேர்ந்து தர்றோம்-னு எழுதி கொடுங்க சிலிண்டர் ரிலீஸ் பண்றேன்"

அப்பாடா பிரச்சனை ஒருவழிக்கு வந்தது என்று பெரு மூச்சு விட்டு வீடு சேர்ந்தோம். இரண்டு மாதத்திற்குள்ளாக BSNL தொலைப்பேசி பில் ஒன்றை விலாசத்திற்கான அடையாளமாக சமர்ப்பித்து வேலை முடிந்தது என்றிருந்தேன். அப்பொழுதே முதல் எச்சரிக்கை திருமதியாளிடமிருந்து வந்தது. "இது பத்தாதுங்க. நாம தாஸில்தார் சர்டிபிகேட்-ன்னு எழுதி கொடுத்திருக்கோம். அதுக்கு விசாரிங்க". செவிடன் காதில் ஊதிய சங்காக ஆனது எச்சரிக்கை.

முதல் சிலிண்டர் தீர்ந்து புக் செய்த போது நல்லவிதமாக சிலிண்டர் வழங்கப்பட்டது. அதற்குள் மூன்று மாதங்கள் ஓடி விட்டன. No Ration-Card certificate ஐப் பற்றி நான் சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ளவில்லை. ஐந்தாம் மாதம் இரண்டாம் முறையாக புக் செய்ய தொடர்பு கொண்டபோது வெடித்தது குண்டு

" மேடம் நீங்க இன்னும் ரேஷன் கார்டு குடுக்கல. அதனால ப்ளாக் பண்ணியிருக்காங்க மேடம்' என்ற பதில் கிடைத்தது திருமதியாளுக்கு.

அவளுடைய கோபம் என் மேல் வெடித்தது. ' ஆனாலும் ரொம்ப அலட்சியம். எல்லாருமே சொல்றாங்க.இங்கே ரேஷன் கார்டு குடுத்தே ஆகணுமாம். அதுக்கு வழியப் பாக்காமா எப்பப்பாத்தாலும் கம்ப்யூடரக் கட்டிக்கிட்டு அழுவறது' என்று தொடங்கி முற்றுப்புள்ளியில்லாமல் நீண்டது. கடைசியில் என்னை நம்பி பயனில்லை என்பது புரிந்து (அது பல வருடங்களாயிற்று) தானே அந்த அலுவலகத்திற்கு சென்று விசாரித்தபோது "நீங்க முன்னே இருந்த எடத்துலேந்து சர்டிபிகேட் வாங்கிட்டு வாங்க" என்ற பதில் கிடைத்தது. ஒரு ரேஷன் கார்டுக்கு இன்னொரு ரேஷன்கார்டு சர்டிபிகேட் !!

பந்து மீண்டும் என் கையில். எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலை. யாரைப் பார்த்தாலும் ரேஷன்கார்டு புராணம்தான். ஒரு அன்பர் ரூபாய் நூற்று ஐம்பதுக்கு வேலையை முடித்துத் தருவதாகக் கூறி விண்ணப்பத்தோடு பணம் வாங்கி சென்றவர் இரண்டு நாள் கழித்து "இப்போ அந்த சர்டிபிகேட் குடுக்கறத நிறுத்திட்டாங்களாம் சார் " என்று கைவிரித்தார். சாட்சிகாரன் கால்ல விழற்த விட சண்டைககாரன் (ஏஜென்ஸி) கால்ல விழுவதே மேல் அணுகு முறைப்படி இன்னொருமுறை வாய்தா வாங்கி சிலிண்டர் பிரச்சனை தற்காலிகமாக தீர்க்கப்பட்டது.

கவனிக்கவும்.செயப்பாட்டுவினை. கால்ல விழுந்தது நானல்ல.

ஆனா கால சுத்தின பாம்பு இன்னும் விடவில்லை. இதற்கு ஒரு வழி பண்ணனும் என்கிற தீர்மானத்தோடு இணைய வலையில் புகுந்து INDANE எரிவாயு வலையைப் பிடித்து நுகர்வோர் பகுதியில் விலாவாரியாக எழுதி எல்லா மட்ட அதிகாரிகளுக்கும் மின்னஞ்சல் செய்தேன். ஒரு பெரிய காரியம் செய்த ஒரு வரட்டு பெருமையில் சில நாட்கள் கழிந்தன. இதற்கிடையில் புது விண்ணப்பப் படிவம் வாங்கி வந்து புகைப்படம் ஒட்டி எங்கோ கிடந்த SSLC சர்டிபிகேட் தேடி பிரதியெடுத்து அதனோடு இணைத்து புது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பத்தையும் அலுவலகத்தின் உதவியாளர் மூலமாக அனுப்பிவைத்தாயிற்று.

பிரச்சனைத் தொடர்ந்தது. விண்ணப்பம் கொடுக்கும்பொழுது ஒரு டோக்கன் தருவார்களென்றோ அதை கொண்டுப்போய் ஏஜென்ஸியிடம் கொடுத்திருந்தால் அதை ஏற்றுக்கொள்ள வாய்ப்பிருந்தது என்றோ தெரியாமல் விட்டுவிட்டு தாஸில்தார் "எப்போ வருவாரோ" என்று காத்திருந்தோம். இரண்டு மாதங்கள் ஓடியது. தாஸில்தாரும் வரவில்லை. இன்னொரு சிலிண்டரும் தீர்ந்தது. மீண்டும் Booking Blocked.

நான் அலுவலகம் கிளம்பும் போது 'போற வழியில அவனப் பாத்துட்டு நல்லா திட்டிட்டு போங்க' என்ற அம்மணியின் உத்தரவு வந்தது. என் சாரதியிடம் வழியில 'அந்த கேஸ் ஏஜென்ஸில ரெண்டு நிமிஷம் நிறுத்துப்பா' சொல்லி வேறு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தேன். 'ஸார் கேஸ் கம்பெனி' என்று நினைவூட்டபட்டதும் இறங்கிச் சென்றேன். அப்போதுதான் இன்னும் கூட்டி பெருக்கிக் கொண்டிருந்தனர். கேஸ் புக் பண்ணனும் என்று ஏதுமறியாதவன் போல பேச்சை ஆரம்பித்தேன். 'இதோ பாப்பா வந்துரும். பாத்துரலாம்' என்றார் பெரியவரொருவர். சிறிது நட்புத் தன்மை காணப்பட்டதால் பேச்சுவாக்கில் அவரிடம் 'ஏனிப்படி எல்லாரையும் ரேஷன்கார்டுக்காக ப்ளாக் பண்ணி தொந்தரவு பண்ணுறீங்க' சற்று உரிமையுடன் கேட்டேன். அவரோ அப்படி ஒண்ணுமில்லையே சார். நாங்க எதுவும் ப்ளாக் பண்றதுல்லையே. ஒங்க நம்பரச் சொல்லுங்க என்று கேட்டார். சந்தோஷத்துடன் அம்மணியை கைப்பேசியில் கூப்பிட்டு பதிவு எண்ணைக் கொடுத்தேன். சார் இது நம்ம ஏஜென்ஸி நம்பரே இல்லே. அவங்கள (எங்களின் ஏஜென்ஸி) தாண்டி வந்துட்டீங்க. அங்கே போய் கேளுங்க. நீங்க ரேஷன்கார்டு அப்ளிகேஷன் டோக்கன் கொடுத்தாலும் போதும்" என்றார் அவர். முகத்தில் வழிந்த படி அசடை துடைத்துக்கொண்டு சாரதியை முறைத்தேன். அவனும் அசடு வழிந்தான்.

நேரமாகிக் கொண்டிருந்தபடியால் நேரே அலுவலகம் அடைந்து அம்மணியை தாஸில்தார் ஆபீசுக்கு விரட்டி டோக்கன் நம்பரைத் தெரிந்து கொண்டு வரச் சொன்னேன். அங்கே இருந்த ஒரு மேடத்துடன் நடந்த உரையாடல்

"அப்ளிகேஷன் கொடுத்த தேதியை சொல்லுங்கள்"
"சுமார் ஒண்ணரை மாசம் ஆயிருக்கும்"
"அப்படி சொன்னா முடியாது. கரெக்டான தேதி வேணும் இல்லாட்டா தேடமுடியாது"
"தேதி ஞாபகம் இல்லியே. வேணும்னா நானே தேடிப்பாக்குறேன் ரிஜெஸ்டரை குடுங்க"

"அதையெல்லாம் ஒங்ககிட்டே கொடுக்க முடியாது. சரியான தேதி சொன்னாதான் பார்த்து சொல்லமுடியும்"

பக்கத்து மேஜைக்காரர் சற்று உதவும் நோக்கத்தோடு " மேடம் நெனச்சா செய்யலாம். மனசு வைக்கணும் " என்று திருமதியாளுக்கு ஒரு சிக்னல் கொடுத்துப்பார்த்தார். அந்த பாஷை புரியாத அம்மையார் திட்டிக்கொண்டே வெயிலில் இரண்டு பஸ் பிடித்து பசியோடு வீடு சேர்ந்தார். மாலையில் என்னுடைய நிலைமையை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.

அடுத்த நாள் காலையில் ஒரு விவரமான கடிதம் எழுதி Indian Oil Corporation அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அலுவலரை அணுகி ரேஷன் கார்டு தேவையில்லை என்ற விசேஷ அனுமதி பெற்று வர அம்மணியை அவருடைய சிநேகிதி துணைக்கூட்டி அனுப்பி வைத்தேன்.

" அந்த மாதிரியெல்லாம் தரமுடியாது. வேணும்னா இந்த ஒரு தடவைக்கு மட்டும் குடுக்கச் சொல்றேன். சீக்கிரம் ரேஷன் கார்டு வாங்கி குடுத்துடுங்க" என்றாராம் அந்த அதிகாரி. ஏதோ கடையில் கிடைக்கிற சாமான் போல சாதாரணமாக சொல்லியிருக்கிறார்.

"யாரும் எந்த சர்டிபிகேட்டும் தரமாட்டேனென்கிறார்களே நாங்க என்ன செய்ய முடியும்?"
"மேடம் நாங்க எங்களுக்கு வர்றர இன்ச்ட்ரக்ஷன தான் சொல்லமுடியும். நீங்க வேணும்னா கலெக்ட்ர போயி பாருங்க."

(இவர்களுக்கு பின்னால் நின்றிருந்த மனுஷன், தான் இதே ரீதியில் பலமாதங்களாக எல்லாவித அரசு அலுவல்களுக்கும் திரிந்து கொண்டிருப்பதை சொல்லிக் கொண்டராம். அவர் சொன்ன கொசுறு விஷயம்; நீங்க பதிவு பண்ண டோக்கனை கொண்டு போனாலும் அதை ஏஜெண்டுகள் ஏற்க மறுக்கின்றனர்.)

"பிரமாதம். தாஸில்தார் ஆபீஸிலிருந்து கலெக்டர் ஆபீஸுக்கு ப்ரமோஷன்" என்று திருமதியாளை கிண்டல் செய்தேன். 'இனிமே நான் எங்கேயும் போக முடியாது. அடுத்த சிலிண்டர் வரலைன்னா நான் எங்க அம்மா வீட்டுக்கு போயிடுவேன். நீங்க ஓட்டல்ல சாப்பிட்டுக்குங்க" செய்யக்கூடியவள் தான். பிறந்த வீடு கொஞ்சம் ஸ்ட்ராங் பார்ட்டி.

இன்றைய நிலைமை இதுதான். IOCL ஆபீஸர் கொடுத்த லெட்டர் புண்ணியத்துல ஒரு சிலிண்டர் ஓடிகிட்டு இருக்கு.

ஏனிப்படி ஒரு அர்த்தமில்லாத சட்டம் என்று நினைத்து கூகிள் ஆண்டவரிடம் முறையிட்டேன். gas supply ration card என்று கீ செய்து பார்த்ததில் ஒன்று புரிந்தது. சிலிண்டர்கள் திருட்டுத்தனமாக தொழில் உற்பத்திக்கென விற்கப்படுவதை தடுக்கவே இந்த சட்டமாம். (அது சரி திருட்டு ரேஷன் கார்டுகளை எப்படி கண்டுபிடிக்க போகிறார்களாம்)

கலெக்டர் பேர் அடிபட்டதால் சிறிது அதைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம் என்று வலையில் சுற்றினேன். http://www.coimbatore.com/collector/suggestion.htm வலைப்பக்கம் கிடைத்தது. முன் போலவே இங்கும் என் குறையை, வயிற்றெரிச்சலை, பதிந்து வைத்திருக்கிறேன். ஒருவாரம் ஆயிற்று. இதுவரை எந்த பதிலும் இல்லை. எதிர்பார்க்கவும் முடியாது. இன்று http://cbeonline.wordpress.com/collector என்ற வலப்பூவை கண்டு எல்லோரும் பார்க்கும் வண்ணம் அந்த கடிதத்தின் நகலையும் பதிந்து வத்துள்ளேன்.

ரூபாய் ஐநூறு கொடுத்தால் வேலையை முடித்துத் தருவதாக ஒரு தூண்டில் போடப்பட்டுள்ளது. மாட்டிக்கொள்வதா வேண்டாமா என்ற சிந்தனையில் நாட்கள் போய் கொண்டிருக்கின்றன.

யாரோ திருட்டு சிலிண்டர் விற்பதைத் தடுக்க யார்யாரெலாமோ அர்த்தமற்ற கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்று பாரதி கூறுவதும் இதைத்தானோ ?

4 comments:

Well Wishes said...

same same puppy same...

எனக்கும் இதே அனுபவம் தான். நீங்களாவது மேல் மட்டத்தில் மோதி பார்த்திருக்கின்றீர்கள். ஆனால், நான் கீழ் லெவலோடு சரி. நீங்கள் கோயமுத்தூர்னா, நான் நாகப்பட்டனம். அப்ளிகேசன் போட்டது அம்மா ஆட்சில, ஐயா ஆட்சி மாறி இன்னும் வந்துகிட்டே இருக்கு என்னுடைய ரேசன் கார்ட்.

KABEER ANBAN said...

வருக ஹபீப். என் எரிச்சல் (பலருடையதும் தான்)என்னவென்றால் சட்டங்கள் பிறப்பிக்கும் போது விளைவுகளை ஆராயாமல் செய்வதும் விளைவுகளை எடுத்துச் சொல்லிய பின்னரும் அதை பொறுப்பான முறையில் தீர்க்க வழி வகுக்காமல் இருக்கிறார்களே என்பதுதான்.

சிவகுமார் said...

அடடா அவரவர் ஆளூக்கு இரண்டு, மூன்று திருட்டு கார்டுகள் வைத்துக் கொண்டு மண்ணென்னை வியாபாரம் செய்து கொண்டு உள்ளார்கள். நியாயமா வேண்டியவர்களுக்கு இப்படிதான்...

KABEER ANBAN said...

நன்றி சிவகுமார். உண்மை வெற்றி பெறுமோ இல்லையோ சாகடிக்கப் படாமல் இருந்தால் சரிதான்.