Thursday, November 13, 2025

சட்டுன்னு சொல்லுங்க

 சமீபத்தில் தூரதர்ஷனின் கன்னட சந்தனா தொலைக்காட்சி "தட் -அன்த- ஹேளி"  ("சட்டுனு சொல்லுங்க") என்ற தலைப்பில் ஒரு வினாடி வினா நிகழ்ச்சியை ஐந்தாயிரம் முறை  நடத்தி ஒரு சாதனை புரிந்ததைக் கொண்டாடியது. 

ஜனவரி 2002 ஆண்டு முதல்  தொடர்ந்து நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சி மக்களை வெகுவாக கவர்ந்த ஒன்று.   திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9:30 க்கு ஒளிபரப்பப் படுகிறது.  வழக்கமாக நாம் காணக்கூடிய நெறியாளரின் பரப்பரப்பான பேச்சோ உச்சஸ்தாயில் கூவி கைத்தட்டச் சொல்வதோ  உணர்ச்சிகளை தூண்டுவதோ இன்றி மிக மிக அமைதியான முறையில் நடந்துவரும் ஒரு நல்ல நிகழ்ச்சி.

இந்த  நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் மூன்று பேர்கள் மட்டுமே. கேட்கப்படும் கேள்விகள் இருபத்திநான்கு .  சரியான பதிலுக்கு ஒரு நல்ல புத்தகமே பரிசு.

புத்தகங்கள் இலக்கியம், சமூக நாவல்,  சிறுகதை தொகுப்பு, கவிதை,  மொழித் திறனாய்வு, குழந்தை இலக்கியம், பயணக்கட்டுரைகள் என்று எந்த தலைப்பிலும் இருக்கலாம். 

ஒரு நிகழ்ச்சியில் இருபது புத்தகம் என்றாலும் சுமார் ஒரு லட்சம் புத்தகங்கங்கள்  இந்த 23 வருடங்களில் பரிசாகத் தரப்பட்டுள்ளன.  இந்த  நிகழ்ச்சியின் வெற்றியை கண்டு பல புத்தக வெளியீட்டாளர்கள் தாமே முன் வந்து தமது வெளியீடுகளை  இலவசமாக தந்து உதவியிருக்கின்றனர்.

நானும் இந்நிகழ்ச்சியை கடந்த பத்து -பன்னிரெண்டு வருடங்களாக் கவனித்து வருகிறேன். இதில் பங்கேற்பவர்கள், கர்நாடகத்தின் அனைத்து  பகுதிகளிலிருந்தும் வருகின்றனர். வயது வரம்பு கிடையாது.  விவசாயிகள், தொழில் நுட்ப வல்லுனர்கள், குடும்பத் தலைவிகள், சிறுவர்-சிறுமியர், கல்லூரி மாணவர்கள் என வாழ்க்கையில் அனைத்துத் தட்டு மக்களும் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுகின்றனர்.   இதுவே இதன் பிராபல்யத்திற்கு காரணமாகக் கூட இருக்கலாம்.


இரண்டு வருடங்கள் கொரோனா தொற்றினால் யாரும் வெளியே வர முடியாத நிலையிலும் தூரதர்ஷன் தொழில்நுட்ப வல்லுனர்கள் வீட்டிலிருந்தபடியே பங்கெடுக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியை வடிவமைத்துக் கொடுத்து மக்களின் பெரும் ஆதரவைப் பெற்றனர்.

துவக்கத்திலிருந்து 23 ஆண்டுகளாக இந்நிகழ்ச்சியை நடத்தி வரும் டாக்டர் என். சோமசேகர் அவர்களின் அமைதியான, அளவான  நகைச்சுவை கலந்த பேச்சும் இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு பெரும் காரணம் என்றால் மிகையாகாது.

 ஆனால் அவர் இதன் முழுப் பெருமையும்  திரைக்குப் பின் நின்று செயலாற்றும் தூரதர்ஷனின் குழு என்பதை அடிக்கடி நினைவூட்டுகிறார்.

எவ்வித ஆரவாரமும் இன்றி, விளம்பரங்கள் இன்றி பொது ஜனத்தை ஈர்க்கும் வகையில் நிகழ்ச்சிகளை தயாரிக்க முடியும் என்பதற்கு தட்-அன்த-ஹேளி ஒரு சிறந்த உதாரணம். பெரும்பாலான ஒளிப்பரப்புகள் யூ-ட்யூபில் சேகரிக்கப்பட்டுள்ளன. மாதிரிக்கு ஒரு நிகழ்ச்சியின் கடைசி பகுதியை மட்டும் கீழே இணைத்துள்ளேன்.


முனைவர் சோமசேகர் அடிக்கடி பயன்படுத்தும் "யாருக்கும் பதில் தெரியாததால் இந்த புத்தகம் என்னிடமே  இருக்கும்"  என்ற சொற்றொடரை மையப்படுத்தி  கேலி சித்தரமும் வந்ததுண்டு.


 இப்போ,  'சட்டுன்னு சொல்லுங்க'
இம்மாதிரி  ஒரு நிகழ்ச்சி பொதிகையிலோ அல்லது தனியார் தொலைக்காட்சியிலோ நடைபெற்றால் தமிழ்நாட்டில் வெற்றி பெறுமா ?


Thursday, December 14, 2023

ஹைடிரோபானிக்ஸ்- என் பரிசோதனைகள்-2

 இதன் முதல் பகுதியில்  நீரியல் வளர்ப்பு எனப்படும் ஹைட்ரோபானிக்ஸ் முறையில் தாவரங்களை வளர்ப்பதன் மேன்மைகளைச் சொல்லி அதில் என் ஆரம்ப அனுபவங்களை பகிர்ந்து கொண்டேன்.  

அதைப்பற்றி தெரிந்து கொள்ள.....  

இதை எழுதி ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. நான் என் பரிசோதனைகளை சிறிய அளவில் நடத்திக் கொண்டிருந்தாலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எதையும் சாதிக்கவில்லை.  என் வீட்டு மாடியில் மழைநீர் சேகரிப்பு, Green House 130 சதுர அடி என சில முஸ்தீபுகளை செய்து கொண்டு தீவிரமான முயற்சியில் இறங்குவதற்கு இவ்வளவு காலம் பிடித்தது. 

க்ரீன் ஹவுஸ் ஏன் தேவைபடுகிறது என்றால்  திறந்த வெளியில் அதிக காற்று மழை அடிக்கடி பாதிப்பு ஏற்படுத்துவதால் நமக்கு சரியான முடிவுக்கு வரமுடியாமலே பரிசோதனை கெட்டுப் போய் விடுகிறது. 

குறைந்த இடத்தில் அதிகப்பயிர் என்னும் படியான தொழில்நுட்பத்தை க்ரீன்ஹவுஸ்-னுள் புகுத்திப் பார்க்க- Tower Cultivation எனப்படும்-  நெட்டையான குழாய்களில் வளர்க்கும்  முறையை இணையத்தின் மூலம் வாங்கி என்னுடைய புதிய சோதனைகளை இந்த வருடம் மே மாதக் கடைசியில் ஆரம்பித்தேன்.

இது நம் கோவில்களில் உள்ள கொடிமரத்தை நினைவுபடுத்துவதால்  கொடிமரக்குழாய் வளர்ப்பு என்றே பெயரிடுவோம்.

கொடிமரக் குழாயின் அடிப்பாகத்தில் உள்ள சிறிய நீர் இறைப்பான் ( submersible pump)  நீரை மேலிருந்து -உட்புறத்தில்-வடிய செய்வதால் நீரின் சுழற்சியில் செடிகளுக்கு தேவையான நீர் (அதன் மூலம் ஊட்டச்சத்து) மற்றும் பிராணவாயு தொடர்ந்து கிடைக்கிறது. ஐந்தரை அடி உயரமுள்ள குழாய்களில் 32 செடிகளுக்கு இடம் அளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.  இதன் செயல்முறையை பல டியூப் சானல்களில் காணலாம்.

இதிலுள்ள பம்பு தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. செடிகளின் வேர்களில் எப்போதும் ஈரம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அதனால் நான்  'இரண்டு நிமிடம் இறைப்பு' 'பத்து நிமிடம் ஓய்வு' என்ற சுழற்சி முறையை ஒரு Timer மூலம் நடைப்படுத்தினேன்.

மிக மிக திருப்திகரமாக வேலை செய்து வருகிறது. 18 வாட்ஸ் பம்பு ஒரு நாள் முழுதும் இந்த சுழற்சியில் ஓடினால் ஆகும் மின் அளவு 72 Wh. அதாவது  இரண்டு வாரங்களுக்கு ஒரு யூனிட் மின்சாரம் செலவாகும்.

மேலும் க்ரீன் ஹவுஸ் உள்ளேயே இருப்பதால் பூச்சித் தாக்குதல் அறவே இருக்கவில்லை. ஆவியாகும் தண்ணீரை இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை அளவு பார்த்து நிரப்பவேண்டும்.  இது ஒரு நாளைக்கு  2 லிட்டருக்கும் குறைவாகவே இருந்தது. மாதம் ஒன்றிற்கு 70 முதல் 80 லிட்டர் அளவிலேயே தேவைப்பட்டது. இதற்கு நான் சேமித்து வைத்திருக்கும் மழைநீரையே முழுவதுமாக பயன்படுத்தினேன்.

தாவரங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து கரைசல்  ஒரு லிட்டருக்கு 300 லிருந்து 400 மிகி மட்டுமே. 15 லிட்டர் கரைசலுக்கு தேவைப்படும்   NPK கூட்டு உரத்தின் அளவு 6.00 முதல் 10 கிராம் மட்டுமே.  இதில் வீணாய் போகிறது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒரு மாதத்திற்கு 100 லிட்டர் என்று வைத்துக் கொண்டாலும் 40 கிராம் உரத்திற்கான விலை ரூபாய் ஐந்திற்கும் குறைவே.  இப்படியாக எப்படிப்  பார்த்தாலும் சிக்கனமான வளர்ப்பின் பயனை உணர முடிந்தது.  

ஒரே சமயத்தில் எட்டு விதமான  செடிகளை  கொடிமரக் குழாயில் வளர்க்க ஆரம்பித்தேன். அதில் கீரை வகைகள் இரண்டு மூன்று வாரங்களுக்குள்ளேயே வளர்ந்து அறுவடைக்கு வந்துவிட்டன.  அதற்குள் தக்காளி  சாமந்தி போன்றவை கிளை பிரிந்து இலைகள் பெரியனவாகி வேறு செடிகளை வளரவிடாமல் தடுத்து விட்டன. கீழே உள்ள தொகுப்பில் அவற்றின் வளர்ச்சியைக் காணலாம். 


(படத்தை சொடுக்கி பெரிதாக்கிப் பார்க்கலாம்)


     கடந்த ஆறு மாத காலத்தில் என் அனுபவம்  உற்சாகமாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது.  பூச்செடிகளான காசித்தும்பை, துலுக்க சாமந்தி,  பூஜைக்கான துளசி, தும்பை,  கீரைவகைகளான புதினா, பாலக்,  செர்ரி டொமேடொ எனப்படும் சிறிய வகை தக்காளி ( இன்னமும் காய்த்துக் கொண்டிருக்கிறது!) என்பதாக பலவகை செடிகளின் மிக ஆரோக்கியமான வளர்ச்சியை காணமுடிந்தது. மேலும் வேர்தாக்கலால் வரக்கூடிய  நோய்களும் இருக்கவில்லை.  

அடிக்கடி வெளியூர்களுக்கு போவதானாலும் "தண்ணீர் விட வேண்டுமே... செடிகள் காய்ந்து விடுமே" என்ற கவலையில்லை. 

இதில் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனை என்னவென்றால் குழாயினுள் எல்லாச் செடிகளின் வேர்களும் மிக அடர்த்தியாக வளர்ந்து பின்னிப்பிணைந்து கொள்கின்றன. இதனால் சில செடிகளை அதன் காலம் முடிந்ததும் எடுத்துவிடலாம் என்றால் சிக்கல் இன்றி எடுக்க முடிவதில்லை.

அடுத்ததாக தொட்டி  வளர்ப்பில் குத்தாக வளரும் செடிகள் இந்த கொடிமரக்குழாயில் கோணலாக வெளிவந்து பின்னர் நிமிரத்தொடங்குகின்றன.  இதனால் பெரிய இலையுள்ள பாலக் போன்ற செடிகள் சிறிய இலை கொண்ட  கொத்துமல்லி புதினா இவற்றின் வளர்ச்சியை பாதிக்கின்றன.  கொடிமரக் குழாயைப் பயன்படுத்தும்  வகைகளை நிதானமாக முறைப்படுத்தி  குறுகிய காலத்தில் அதிகப் பயனடைவது எப்படி என்று கண்டறிவதே அடுத்த கட்ட பயணம்.
குறிப்பாக வேறு காய்கறி செடிகளை எப்படி பயிரிடலாம், அவை எல்லாவற்றின் ஊட்டச்சத்துத் தேவைகளும் ஒரே மாதிரி இருக்குமா  எந்த செடிகளோடு எவை எவை ஒத்துப்போகும்  எனப்பலவகையான கேள்விகள் எழுகின்றன.

அடுத்த பொங்கலுக்குள் (2024) மேற்கொண்டு என்ன செய்வது என்று திட்டம் போட்டு செயல் படுத்த வேண்டும். ஏனெனில் பல வகை செடிகளின் பலனளிக்கும் காலமே 60 அல்லது 90 நாட்களுக்குப் பிறகு தான் தொடங்குகிறது. அதுவரை புசு புசு என்று அடர்த்தியாக வளரும் இலைகளை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். அவைகளை கத்தரிக்கலாமா வேண்டாமா என்ற கவலை என்போன்ற அனுபவமில்லாதவர்களுக்கு ஏற்படும்.

எல்லாமே ஒரு நல்ல படிப்பினைதான்.