Sunday, February 22, 2026

செயற்கை நுண்ணறிவு என்னும் சுனாமி

    இந்த வாரம் புது தில்லி நகரமே பரபரப்பானதற்கு காரணம் அகில உலக செயற்கை நுண்ணறிவுக்கான உச்சி மாநாடு அங்கே கூடியது. அனைத்து மென்பொருள் வல்லுனர்கள், கட்டமைப்பு நிபுணர்கள் உலகெங்குமிலிருந்து அங்கே கூடி விவாதித்த செய்திகள் பெருமளவில் பேசப்படுகிறது.  நமது நாடு முன்னின்று இதற்கான ஏற்பாடுகளையும் முதலீடுகளையும் ஊக்குவிக்கிறது.  

"ஸர்வ ஜன ஹிதாய -ஸர்வ ஜன ஸுகாய" என்பதே இதன் அடிப்படை கொள்கை. 

"அனைவருக்கும் பொது-அனைவருக்கும் நலம்" தருவதாக இந்த  வளர்ச்சி இருக்கவேண்டும் என்ற பொது நோக்கு முன் வைக்கப் படுகிறது. முறையான கொள்கைகள் வகுக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டால் தனிப்பட்ட ஒரு சில நாடுகளிடமோ நிறுவனங்களிடமோ சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கான முன்னெடுப்பு இது.  இதுவும் Carbon Exchange and Trading வகையில் போகுமா அல்லது உண்மையிலேயே பொதுவுடமை ஆகுமா என்பது போகப் போகத் தான் தெரியும்.

நிற்க -

Chat GPT,  Google Gemini, Perplexity, Grok  போன்ற பலவகை நுண்ணறிவு சாதனங்களைக் கொண்டு பல நாட்கள் செய்ய வேண்டிய வேலையை சில மணித்துளிகளிலேயே செய்து விடலாம் என்றும் பல மென்நுட்ப வல்லுனர்கள் தங்கள் வேலைகளை இழக்கப் போகிறார்கள் என்றும் பரவலாகப் பேசப்படுகிறது. வேறு சில நிபுணர்கள் இதனால் பல்வேறு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் கூறுகிறார்கள். 

    தினம் தினம் ஒரு புது மாடல் வாகனம், அலைபேசி  சந்தைக்கு வருவது போல புது புது மென்பொருட்கள் பயன்பாடுகள் ஒரு பேரலை போல அடுத்தடுத்து வந்துகொண்டிருக்கின்றன. அவற்றோடு  ட்ரோன்கள், ரோபோட்  போன்ற வன்பொருட்களின் புரட்சியும் அதனோடு இணந்து ஓட்டுனர் இல்லா தானியங்கி வாகனங்களும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. 

இவை எல்லாவற்றிற்கும் அடிப்படையாவது செயற்கை நுண்ணறிவு. இதன் வளர்ச்சி எதை சார்ந்தது என்றால் சிப்-ப்ராஸசிங் வேகம் ( Chip processing Speed). 

கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை படம் பிடிப்பது போல எல்லா சூசகங்களும், தகவல் துறையில் ஒரு பெரும் சுனாமி வரப்போவதை குறிக்கின்றன. இதன் பரிமாணம் என்னவாக இருக்கப் போகிறது, மனிதர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்குமா அல்லது பொறுப்பற்றவர்களின் கையில் சிக்கி அழிவுக்கு வழி கோலுமா என்பதை காலம் தான் தீர்மானிக்கும்.

இந்தியா பலதுறைகளிலும் தன்னிறைவு பற்றி பேசும் பொழுது உலகளாவிய ZOHO நிறுவனத்தின் வெற்றிகரமான பயணத்தை நடத்திவரும் பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு இது பற்றி சொல்லும் கருத்தை கீழேயுள்ள காணொளியில் காணலாம்.


பலகோடி மக்கள் அகல கண்களுடன் காத்திருக்கும் வேளையில் என் கண்ணில் விழுந்து எனக்குப் பட்ட -தெரிந்த- சில செயற்கை நுண்ணறிவு-அரிச்சுவடி - நுட்பங்களை வரும் தினங்களில் பகிர்ந்து கொள்வேன்.

1 comment:

Gopalakrishnan K V said...

You have shared very interesting points about influence of AI going to be on our lives. Look forward to more such blogs from you Umesh.