Sunday, October 14, 2007

சரக்கு வண்டியின் விடுதலை வேட்கை


ஓடாத ஓட்ட மில்லை,
காணாத தேச மில்லை
திரியாத சாலை யில்லை,
நிற்காத சந்தை யில்லை

ஏற்றாத சரக்கு இல்லை,
சேராத இலக்கம் இல்லை
குண்டு குழியும் கணக்கில் இல்லை,
கோடை குளிர் பார்ப்பதில்லை

பனி மழை பயந்ததில்லை
பகல் இரவு அறியவில்லை
இல்லையில்லை இல்லையெமக்கு
ஓய்வு என்பதில்லையே

சுற்றிச் சுற்றித் தேயும் தேகம்,
சகடம் பூட்டி சுற்றும் இவர்க்கும்
இல்லையில்லை இல்லையென்றும்
இரக்கம் என்பதில்லையே

போதும் போதும் அம்மா போதும்

வேண்டும் எமக்கு விடுதலை

வீதி நடுவே முரண்டு செய்வோம்

வேண்டி எங்கள் விடுதலை!

(போராட்டக்களம் சிகந்திராபாத்-உ.பி. வருடம் 2005)

மனிதர்களின் பணத்தாசையினால் இந்த வரலாறு காணாத போராட்டம் காணாமலே போய் விட்டது என்பதை அடிமைப்பட்டு உழலும் சரக்கு வண்டிகளின் சார்பில் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

4 comments:

வல்லிசிம்ஹன் said...

சரக்கு வண்டியே,
உனக்கு நன்றி.
கண்காணாத தேசங்களிலிருந்து
உருண்டு உருண்டு களைத்து,மீண்டும்
காடு மேடுகளுக்கு அலையும்
உன் சக்கிரங்களுக்கும் நன்றி.

தேயும் வரை ஓட வேண்டியதுதான். தேய்ந்துவிட்டால் உண்டு விடுதலை.

KABEER ANBAN said...

வருக வல்லியம்மா :))

நம் வாழ்க்கையும் இப்படித்தானே போய் கொண்டிருக்கிறது. பொறுப்புகளிலிருந்து விடுதலை என்பது உடல் தேயும் வரை கிடையாது போலிருக்கிறது.

cheena (சீனா) said...

கவிதை அருமை அதை விட அருமை பின்னூட்டம். பொதுவாக பெண்களுக்கு பொறுப்பிலிருந்து விடுதலை உடல் தேயும் வரை கிடையாது. ஆண்களுக்கு பணி ஓய்வு பெற்றாலே பொறுப்புகள் குறைந்து விடுகின்றன

KABEER ANBAN said...

நன்றி சீனா.
பொறுப்பு என்பதை சிலர் முன்வந்து எடுத்துக் கொள்வர்.தட்டிக் கழித்து தள்ளி விடுவோரும் உண்டு. ஆண்களுக்கு வீட்டுப் பொறுப்புகள் ஒரு பொருட்டாகத் தெரிவதில்லை.ஏனெனில் அதைவிட மிக மிகப் பெரிய பொறுப்புகளை வேலை செய்யும் இடங்களில் சுமந்திருப்பதனாலும் இருக்கலாம.