Monday, May 18, 2009

பறக்குது :காகிதப் பட்டங்கள்

பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் அவர்களின் பழையத் திரைப்படப்பாடல் ஒன்று (குலதெய்வம் -1956).

கோழியெல்லாம் கூவையிலே
குறட்டை விட்டார்

வாய் கொப்பளிக்கும் முன்னே

கொஞ்சம்
காப்பியையும் குடித்து விட்டார்.

குளிக்காமல் சாப்பிட்டு ஏப்பம் விட்டார்

தன்னை குழந்தை போல் எண்ணிவிட்டார்

எங்க சின்ன மச்சான் - இப்போ

பட்டம் விட புறப்பட்டு விட்டாரைய்யா

பட்டம் விட்டாரையா -எட்டாத

உயரத்திலே விட்டாரைய்யா
பட்டம் விட்டாரைய்யா
பறக்க விட்டாரைய்யா

ஆராரோ பட்டம் விட்டு

பேராசை வட்டமிட்டு

ஆடி ஓடி போனதைப் போலே

விட்டாரையா - அணை

கட்டாத ஏரி தண்ணி
கடலோடு போனது போல
கற்றதெல்லாம் காற்றோடு

விட்டாரைய்யா


டா பட்டம், டீ பட்டம்
ஜமீன் பட்டம், சாமி பட்டம்

ஜாதி பட்டம்,பகதூர் பட்டம்
லேடி பட்டம் கேடி பட்டம்

வாலறுந்து நூலறுந்து

போன இடம் தெரியலே-இந்த

வேலையத்த மச்சான் வெறும்

காகித பட்டம் கட்டி
விட்டாரைய்யா -ஓட
விட்டாரைய்யா

பலவித பட்டங்களை பெறுவதாலேயே தங்களை அறிஞர்களாகவோ, சமூகத்தில் பெரும் புள்ளிகளாவோ காட்டிக்கொள்ளும் முயற்சி அந்த காலத்திலிருந்து இருந்து வந்திருக்கி்றது. பலர் அதையே பெரும் சாதனையாக நினைத்துக் கொள்கின்றனர். அவைகளெல்லாம் வாலறுந்து, நூலறுந்து போன கதைதான். எத்தனை திவான் பஹதூர்களை உலகம் நினைத்துப் பார்க்கிறது? மந்திரி பதவி இருந்தால் டாக்டர் ’பட்டம்’ உண்டு. பணம் (கொடை) கொடுக்கும் நடிகர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் கூட அது சுலபமாக கிடைக்கும்.

இன்றைய காலத்தில் ”பத்ம“ பட்டங்கள், கலைமாமணி, இத்யாதிகளும் உண்டு. இதைத்தான் ”ஆராரோ பட்டம் விட்டு பேராசை வட்டமிட்டு ஆடி ஓடி போனதை போலே” என்று பட்டுக்கோட்டையார் கேலி செய்கிறார்.

இப்படி ஒரு வாழ்க்கை முழுவதும் போலி வெற்றிகளுக்காக போராடும் வாழ்க்கையைப் பற்றி சினா சோனா சொல்வதை பார்ப்போம்.



A LONG LIFE MAY NOT BE GOOD ENOUGH
BUT A GOOD LIFE IS LONG ENOUGH

எவ்வளவு காலம் வாழ்ந்தோம் என்பதைக்காட்டிலும் எப்படி வாழ்ந்தோம் என்பதே முக்கியம்.

Good Life என்பது அணைகட்டிய நீர். ஒரு ஒழுங்குபாடு உள்ளது. அதனால் பல நன்மைகள் சமுதாயத்திற்கு உண்டு. பிறருக்கு எவ்வகையிலேனும் பயன்படாத வாழ்க்கையானால் அவர்கள் எவ்வளவு காலம் பூமியில் வாழ்ந்தென்ன ? அவர்கள் எவ்வளவு படித்திருந்தென்ன ! பட்டுக்கோட்டையார் சொல்வது போல் “கற்றதெல்லாம் காற்றோடு விட்டாரைய்யா” என்கிற நிலைதானே !

மாபெரும் சாதனையாளர்கள் எனப் போற்றப் பெறுபவர் அனவரும் பெரும்பாலும் சாதனைகளை மிக இளம் வயதிலேயே சாதித்துள்ளனர். ஆதிசங்கரர், விவேகானந்தர், ஸ்ரீனிவாஸ ராமானுஜம், பாரதியார், பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் போன்றவர்கள் தமது நாற்பது வயதுக்குள்ளாகவே தத்தம் துறையில் சாதனை படைத்து அமரத்துவம் எய்திவிட்டனர்.

அவர்களால் உலகம் பயனடைந்திருப்பதனால்தான் அவர்களை இன்றளவும் நினைத்துப்பார்க்க முடிகிறது. அவர்களுடைய வாழ்க்கை உண்மையிலே Good Life.

No comments: