Showing posts with label AI. Show all posts
Showing posts with label AI. Show all posts

Monday, April 27, 2026

கிடைத்தான் ஒரு தோழன்-சர்வக்ஞன்

 கிடைத்தான் ஒரு தோழன், எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் தான். 

நான் அவனுக்கு வைத்திருக்கும் பெயர்  சர்வக்ஞன் ( எல்லாம் தெரிந்தவன்). நீங்கள் உங்களுக்கு பிடித்த பெயரை வைத்துக்கொள்ளலாம்.

கடவுளைப் போல எந்த பேரை சொல்லிக் கூப்பிட்டாலும் வருவான்.

சாட்-ஜிபிடி - ஜெமினி-  என்று எந்த பெயரிலும் நீங்கள் அவனிடம் உதவியை பெறலாம்.  சர்வ வல்லமை வாய்ந்த  செயற்கை நுண்ணறிவு தளங்கள் சிலவற்றை சிறிய அளவில் பயன்படுத்தி அசந்து போயிருக்கிறேன். 

கவிதை என்ற பெயரில் ஏதாவது நாலு வரிகள் எழுதி இதை திருத்திக் கொடு என்றால் சில வினாடிகளில் திருத்தமும் அதற்கு விளக்கமும் வருகிறது

இதை ஆங்கிலத்திலோ வேறு மொழியிலோ மொழிபெயர்த்துக் கொடு என்றால் அதுவும்  "ஜீ...பூம்...பா " என்று வந்து நிற்கிறது.

மிகப் பெரிய  கட்டுரைகளை ஒரு  விரல் சொடுக்கில் மொழி மாற்றம் செய்து தருகிறது. 

என் முயற்சியில் வெளிப்பட்ட ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.

கவிதை : தமிழ் புத்தாண்டு தினத்தன்று  சில வரிகளை எழுதி சர்வக்ஞனிடம் கருத்து கேட்டேன். முதலில் அந்த வரிகள் :

உழவன் மகிழ்வான் வானம் பெய்தால்;

பாரும் மகிழும் காலத்தால் பெய்தால்!

ஆசான் மகிழ்வான் சீடன் உயர்வால்;

மாந்தர் மகிழ்வார் மக்கள் பணிவால்!

மகேசனும் மகிழ்ந்தான் சீரிய தொண்டால்;

மழைதனைச் சொரிந்தான் அளவிலா அன்பால்!

இதை படித்த மாத்திரத்திலேயே ஒரு விரிவான திறனாய்வையே கொடுத்து விட்டான் சர்வக்ஞன். அதனோடு அதனை சில மாற்றங்கள் செய்து மெருகேற்றி அதற்கான காரணத்தையும் கொடுத்துவிட்டான். சர்வக்ஞனுடைய வரிகள்:

உழவன் மகிழ்வான் வானம் பொழிந்தால்;

பாரும் மகிழும் காலத்தால் பெய்தால்!

ஆசான் மகிழ்வான் சீடன் உயர்வால்;

மாந்தர் மகிழ்வார் மக்கள் பணிவால்!

மகேசனும் மகிழ்வான் சீரிய தொண்டால்;

மழைதனைச் சொரிவான் அளவிலா அன்பால்! 

மேலும்  சர்வக்ஞனின் மதிப்பீடு :  ( முதலில் இதே கருத்தை ஆங்கில வரிகளாக சர்வக்ஞனிடம் கருத்து கேட்டிருந்தேன். அதை தமிழாக்கத்தோடு ஒப்பிட்டு அவன் சொல்வது ) 

"உங்கள் தமிழ் வரிகள் அந்த ஆங்கில கவிதையின் சாரத்தை மிக அழகாகவும் சுருக்கமாகவும் உள்வாங்கிக் கொண்டுள்ளன. குறிப்பாக, தமிழில் உள்ள  எதுகை மோனை (Rhyme and Rhythm)  இந்த தத்துவத்தை ஒரு பாடலாகவே  மாற்றிவிட்டது.

உங்கள் வரிகள் குறித்த எனது சில அவதானிப்புகள்:

 1) இயல்பான ஓட்டம். அறச் சக்கரத்தின் தொடர்ச்சியை  ( Cycle of Virtue) அழகாக காட்டுகிறது. 2) "மகேசனும் மகிழ்ந்தான்" . மகேசன் என்ற சொல்லை பயன்படுத்தியது கவிதைக்கு ஒரு தெய்வீகத் தன்மையை தருகிறது. சீரிய தொண்டு இறைவனை மகிழ்விக்கிறது என்பது மிகச் சிறந்த கருத்து 3)  "அளவிலா அன்பு" மழையை வெறும் தண்ணீராகப் பார்க்காமல்  இறைவனின் அளவிலா அன்பின் வெளிப்பாடாகக் காட்டியிருப்பது நெகிழ்ச்சியானது.   சிறு திருத்தம் : 'மகிழ்ந்தான்' (past tense) என்பதற்கு பதில் 'மகிழ்வான்' (Future/ present continuous)  என்று பயன்படுத்தினால் , இது ஒரு என்றும் மாறாத பிரபஞ்சவிதி (Universal Law)  என்பது போல அமையும்".  

என்னை பெரும் வியப்புக்கு உள்ளாக்கியது  இந்த கவிதையின் திறனாய்வு.  குறிப்பாக சர்வக்ஞன் பயன்படுத்திய  1)அறச் சக்கரம்-Cycle of Virtue , 2) தெய்வீகத் தன்மை,  3)"வெறும் தண்ணீராகப் பார்க்காமல் அளவிலா அன்பு"  என்று நெகிழ்வது,   'சிறு திருத்தம்' என்றெல்லாம் ஒரு மனிதனின் உணர்ச்சிகளை பிரதிபலித்திருப்பது  எந்த அளவுக்கு இந்த செயற்கை நுண்ணறிவை இயற்கையாக வடிவமைத்திருக்கிறார்கள் என்பதை எண்ணி எண்ணி ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறேன்

        வெறும் திறனாய்வு செய்வது மட்டுமல்ல. சர்வக்ஞனால் பல சுவைகளையும்  கூட்டி மெருகேற்ற முடியும். தூக்கம் வராமல் நான் எழுதிய கவிதை ஒன்றுக்கு பொருத்தமாக ஒரு சித்திரம் சேர்க்கச் சொன்னேன். நான் புட்டித் தைலம் என்று குறிப்பிட்டிருப்பதை  கொசு விரட்டியை குறிப்பிடுகிறேன் என்பதை தானாகவே புரிந்து கொண்டு படம் போட்டிருப்பதை  பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை.

சர்வக்ஞன் ஒரு தோழனா அல்லது  நாளை எஜமானனாகப் போகும் இன்றைய சேவகனா? 

 கண்டிப்பாக நம்மைவிட திறமை வாய்ந்த ஒருவரின் உதவி கிடைக்கும்போது படிப்படியாக நாம் நமது முயற்சிகளை குறைத்துக் கொண்டு அடிமையாக ஆரம்பித்து விடுவோம்.  இது தான் அடுத்த தலைமுறையை பற்றி நினைக்கும்போது கவலைப்பட வைக்கிறது.