Saturday, November 14, 2020

ப்ளாப்பியின் புது அவதாரம் -New avatar of Floppy disc

 எல்லோருக்கும்  "சத்தமில்லா தீபாவளி "  நல்வாழ்த்துகள்.

முன் எப்போதையும் விட இப்போது சுற்றுப்புறத் தூய்மை பாதுகாப்பு அதிமுக்கியத்துவம் பெற்று வருகிறது. 

ஒரு நாள் பட்டாசு வெடிப்பதால்  காற்றின் மாசு அதிகரிக்கிறது என்று சொல்லும் அரசாங்கம்  பிளாஸ்டிக் பொருட்கள் எங்கும் இறைந்து கிடப்பதை கண்டு கொள்வதே இல்லை. அதை பரிகரிக்கும் செயல்திட்டங்களை அமல்படுத்துவதிலும் மெத்தனத்தைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை.  

இவற்றிற்கு மேலாக இப்பொழுதெல்லாம் ஈ-குப்பை   (e-waste ) எனப்படும் உபயோகமற்ற எலக்ட்ரானிக், கணினி , அலைபேசிகள் மற்றும் அவை   சம்பந்தமான எலக்ட்ரிக் உபகரணங்கள் யாவற்றையும் எப்படி கையாளுவதே என்று தெரியாமல் விழிக்கும் நிர்வாகங்கள் இன்னும் சுற்றுச் சூழல் பிரச்சனையை பெரிதாக்கிக் கொண்டே போகின்றன.

இதை கையாளவே  ஈ -பரிசரா  என்னும் நிறுவனம் பெங்களூரில் வணிக ரீதியாகவே செயல்பட்டு வருகிறது.  அவர்கள் பல முக்கிய நகரங்களில் உங்கள் வாயிலுக்கே வந்து  ஈ-குப்பையை பத்திரமாக அப்புறப்படுத்தி பின்னர்    கண்ணாடி ,பிளாஸ்டிக்  உலோகம்  என்று  வகைப்படுத்துகின்றனர்.  பின்னர் உயர்ந்த உலோகங்களான தங்கம் வெள்ளி போன்றவற்றை மின்னணு கலங்களைப் பயன்படுத்தி   பிரித்தெடுத்து  மீண்டும் பயன்பாட்டுக் கொண்டு வருகின்றனர். பெல்ஜியம் ஜெர்மனி போன்ற நாடுகளில் இதே துறையில் உள்ள நிறுவனங்களுடன் கூட்டுறவு ஒப்பந்தங்கள் செய்து கொண்டு பிரிண்டட் போர்ட் குப்பைகளை ஏற்றுமதி செய்கின்றனர். 

மொத்தத்தில் குப்பை என்பது கிடையாது, முறையாகக் கையாண்டால் எதையும் பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியும்  என்பதை உறுதி செய்கின்றனர்.

என்னிடம் பழைய கணினிகளில் பயன்படுத்தப்பட்ட  பிளாப்பிகள் தற்போது உபயோகமில்லாமல் கிடக்கின்றன.  இதற்காக ஈ-பரிசராவைத் தேடிக்கொண்டு போகமுடியுமா ? அல்லது அவர்களை வரச்சொல்வதும் நியாயமாகுமா?  என்ன செய்வது என்று பல நாட்களாக யோசித்தேன்.

யூ டியூபிலும் உபயோகமான  தகவல் ஒன்றும் கிடைக்கவில்லை. 

திடீரென்று ஒரு யோசனை ..ஏன்  இதை உணவு மேஜையில் கோஸ்டர்ஸ் (Coasters)  ஆக பயன்படுத்தக் கூடாது?

இப்போது பிளாப்பிகள் மறு அவதாரம் எடுத்திருப்பதை தான் கீழே உள்ள படத்தில் காண்கிறீர்கள்'


நான் செய்ததெல்லாம் வீட்டில் இருந்தபடியே இணையம் வழியாக ஒரு  டேப் ரோல்  ஆர்டர் செய்தேன். மற்றும்  ஒரு  ஸ்டிக்கர் டிசைன் செய்து அதை  வேறொரு நிறுவனம் மூலம் பிரிண்ட்  செய்தேன்.  சென்ற வாரம் வந்து சேர்ந்தது. இரண்டும் வாட்டர்  ஃப்ரூப். முப்பது  உருப்படிகளுக்கு  ஆகும் செலவு ரூ. நானூற்று ஐம்பது மட்டுமே.

 இன்று தீபாவளி ரிலீஸ்!!  இனி பலருக்கும் இதை அன்பளிப்பாக கொடுத்து ஒரு புது யுக்தியை பரவலாக்கலாம்.

கொசுறு : ஈ-பரிசராவை  தொடங்கி, நடத்தி வருவது என் னுடன் படித்த  கல்லூரித்  தோழர்  திரு   Dr. பார்த்தசாரதி. அப்துல்கலாம் உட்பட பல ஜனாதிபதிகளிடம்  அவருடைய சிறப்பான முயற்சிக்கு விருதுகள் பல வாங்கியவர்.  அவருடைய சாதனைகளுக்கு  முன் என்னுடைய இந்த  யோசனை தங்கத்தின் முன் பித்தளை இளித்தது போலத்தான். ஆனாலும் ஒரு சிலருக்கு பயன்படலாம் என்ற எண்ணத்தில் வலையேற்றுகிறேன்.

5 comments:

கோமதி அரசு said...

//எல்லோருக்கும் "சத்தமில்லா தீபாவளி " நல்வாழ்த்துகள்//

இங்கு மாலையிலிருந்து சத்தமான தீபாவளியாக இருக்கிறது. விடாமல் வெடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

பிளாப்பிகள் புது அவதாரம் அருமை.

உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

தீபத்திருநாள் வாழ்த்துகள்...

KABEER ANBAN said...


மிக்க நன்றி
கோமதி மேடம்,
நண்பர் தனபால் ஐயா
தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துகள்.

AVN School said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள் சார் 🙏

KABEER ANBAN said...

@ AVN School
தங்கள் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இன்னும் கொரானா விடுப்பு முடியவில்லை போலும் ! வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி