Saturday, March 17, 2007

ஆபிரஹாம் லிங்கனின் கடிதம்

பல நாட்களாகத் தேடிக்கொண்டிருந்த இக்கடிதம் இரண்டு நாட்கள் முன்னர்தான் அகப்பட்டது. லிங்கன் எனக்கு கடிதம் எப்படி எழுதியிருக்க முடியும் என்று யாரும் ஆராய்ச்சியில் இறங்க வேண்டாம். {கல்கி காலத்து கடி ஜோக் :( }. நான் விரும்பிப் படித்து சேர்த்து வைத்த குப்பையிலே, கிளறிய போது கிடைத்தது. இந்த கடிதம் லிங்கன் தனது மகனின் பள்ளி ஆசிரியருக்கு எழுதியதாகக் கூறப்படுவது. உண்மையிலேயே அத்தகைய சூழ்நிலையில் எழுதியதா அல்லது இதை ஒரு சொல் யுக்தியாகக் கையாண்டாரா என்பது எனக்குத் தெரியாது. தெரிந்தவர்கள் அவசியம் கூறவும்.
இங்கே அதன் தமிழாக்கத்தைத் தர முயல்கிறேன். இது கவிதையா கட்டுரையா ? நானறியேன்.சாற்றை உறிஞ்சி சக்கையை விட்டு விடுங்கள்.

அவன் கற்றேத் தீர வேண்டும், தெரியும் எனக்கு
எல்லா மனிதரும் நீதிமான் அல்லர்
எல்லா மனிதரும் சற்குணரும் அல்லர்
ஆயினும் கற்றுத் தருவீர் அவனுக்கு (உலகில்)
ஒவ்வொரு கயவனுக்கும் ஒரு கனவான் உண்டு;
ஒவ்வொரு தன்னல அரசியல்வாதிக்கும்
ஒரு தன்னலமில்லா தலைவனும் உண்டு;
கற்றுத் தருவீர் அவனுக்கு
எதிரியென்று ஒருவன் உண்டெனில்
நண்பனென்று ஒருவனும் உண்டு.

விலக்குவீர் அவனைப் பொறாமைப் பிடியிலிருந்து;
முடிந்தால் சொல்லித்தாருங்கள்
சிரிக்கும் இரகசியத்தை மௌனமாயிருந்து.

கற்கட்டும் அவன் விரைவிலேயே
துச்சரை அழிப்பது மிக எளிதென்றே,
முடிந்தால் சொல்லிக் கொடுங்கள்

நூல்களின் அருமை பெருமைகளை;
விரிந்த விசும்பின் புள்ளினங்களையும்
வெய்யிலில் திரிகின்ற தேனீக்களையும்
பச்சை மலைத்தொடரின் பூக்களையும்கண்டு
வியந்திட நேரமும் கொடுங்கள்.

பள்ளியில் சொல்லிக் கொடுங்கள்
மோசம் செய்தலைக் காட்டிலும்
தோல்வியே பெரும் கௌரவம் என்றே;
கற்றுத் தருவீர் அவனுக்கு
சுய சித்தாந்தத்தில் உறுதியுடன் நிற்க
ஊரே கூடி அதைத் தவறென்று உரைப்பினுமே;
கற்றுத்தருவீர் அவனுக்கு
மெலியருக்கு மெலியனாய்
வலியருக்கு வலியனாய் பழகிடவே.


என் மகனுக்கு
கும்பலைத் தொற்றிச் செல்லும்
கூட்டத்தை பின்தொடரா
மனவலிமைதனைக் கொடுக்க முயலுங்கள்.
கற்றுத்தருவீர் அவனுக்கு
அனைவரது வாதங்களையும் செவிமடுக்க;
ஆயின் உண்மையெனும் சல்லடையில்
அதை சலித்து நன்மைகளைத்
தேர்ந்தெடுக்கவும் அவன் அறியட்டும்.


கற்றுத்தருவீர் அவனுக்கு, முடிந்தால்
வருத்தத்திலும் சிரித்திடும் குணத்தினை;
கற்றுத் தருவீர் அவனுக்கு
கண்ணீர் என்பதில் ஏதும் வெட்கம் இல்லை;
புல்லிய நெஞ்சினரிடை வேண்டும் உதாசீனம்
வேண்டும் எச்சரிக்கை தேனொழுகும் பேர்களிடம்.

கற்றுத் தருவீர் அவனுக்கு
தினையும் புத்தித் திண்மையும்
அதிக விலை கொடுப்போர்க்கே;
ஆயின் நேயத்திற்கும் அன்பிற்கும்
என்றும் கிடையாது விலையே.

கற்றுத் தருவீர் அவனுக்கு
கும்பலின் ஓலங்களுக்கு செவிகளை மூடட்டும்
நியாயமென்று நினைப்பின் போராட நிற்கட்டும்
அன்புடன் நடத்துவீர் அவனை
ஆயின் அளவு மிஞ்சிய பரிவும் வேண்டா
பழுக்கக் காய்ச்சிய இரும்புதான்
பின்னர் உறுதியைக் கொடுக்கும்.

அவனுள் பொறுமை இழக்கத் தைரியம் வரட்டும்
அவன் தீரனாகத் திகழ பொறுமையும் இருக்கட்டும்
கற்றுத் தருவீர் அவனுக்கு எப்பொழுதும்
தன்னம்பிக்கையின் காணறியா ஆற்றலை
அதுவே கொடுக்கும் அவனுக்கு
மனித குலத்திடை நினைத்தறியா நம்பிக்கை

மிகப்பெரிய எதிர்பார்ப்பு இது
முயற்சியுங்கள் முடியும் மட்டும்.

அவனொரு நன்மகன், இன்குணன், என்மகன் !

முதலில் மொழிபெயர்ப்பை முடித்ததும் ஏதோ ஒரு நெருடல். ஆங்காங்கே தொடர்பு இல்லாதது போல் வாக்கியங்கள் காணப்பட்டன. என்னிடம் இருந்த குறிப்பு துண்டு 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி எகனாமிக் டைம்ஸ், தில்லி ! வலையில் கூகிளிட்டேன். கிடைத்தது முழு கவிதையும். என் ஊகம் சரிதான். எகனாமிக் டைம்ஸ்-காரன் இடப் பற்றாக் குறையோ, பசி தூக்கக் கலக்கமோ என்னவோ, அங்கங்கே பல வரிகளை சாப்பிட்டுவிட்டிருந்தான். ஆங்கில மூலத்தைக் காண இங்கே சொடுக்கவும்.

No comments: