Saturday, February 3, 2007

பண்ணிய பயிரில் புண்ணியம்

பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும் என்று சொல்லும் ஔவைப் பாட்டியின் வரிகள் ஒரு ஆழமான கருத்தை மிக எளிமையாக புரிய வைப்பனப் போல் தோன்றுகிறது. 'பயிர்' என்பது மனிதனின் முயற்சியையும் 'புண்ணியம்' என்பது கிடைக்கின்ற பலனைப் பற்றியதும் என்று கொள்ளலாம். இதில் சற்று குழப்பமும் ஏற்படுகிறது

ஒரு சிலருக்கு பெரிய செயலாற்றல் இல்லாமலே சமய சந்தர்பங்களினாலே பெரும் வெற்றிகளை அடைகின்றனர். வெற்றி என்பது எடுத்த செயலை குறித்த விதத்தில் பலரும் பாராட்டும் விதமாக செய்து முடிப்பது. அதன் பயனாக உத்தியோக உயர்வோ, புகழோ அல்லது செல்வசிறப்போ தேடி வரலாம். வேறு ஒருத்தன், முதலில் சொன்னவனை விட புத்திசாலியாக இருந்தும் மாங்கு மாங்கென்று உழைத்த பின்னும் -உழைக்கத் தயாராக இருந்தும் - அவனை கண்டு கொள்ள யாரும் இருப்பதில்லை. இங்கே தவறான வழிகளில் ஈடுபடுவர்களைப் பற்றி மறந்து விடுவோம்.

உலக வழக்கில் சொல்வது "அவனோட டயம் நல்லா இருக்கு. தொட்ட தெல்லாம் பொன்னாகும்" . இந்த 'டயம்' என்பது என்ன? ஜாதக அமைப்பின் படி கிரக பலன்களா? ஜாதகம் கணிப்பவர்கள் 'பதவி பூர்வ புண்யானாம்' - அதாவது பூர்வ ஜென்ம பாவ புண்யங்களை ஒட்டியே பதவி (அ) வெற்றி அமையும்- என்றே எழுத துவங்குவார்களாம் !

இன்னொரு பக்கம் கண்ணனோ "கர்மத்தை செய்வது மட்டும் தான் உனது கடமை. அதன் பலன்களில் அல்ல" என்று சொல்லி விட்டான்

பகவான் இரமணரும் உபதேச சாரத்தின் முதல் உபதேசத்திலேயே சொல்வது

"கர்த்ரு ஆஞ்ஞயா ப்ராப்யதே பலம். கர்ம கிம் பரம், கர்ம தத் ஜடம்"

நாம் செய்யும் கர்மங்களெல்லாம் வெறும் ஜடம் தானாம். கிடைக்கின்ற பலன்களெல்லாம் "அவனுடய" ஆணைப்படிதானாம்.

பின் வாழ்க்கையில் நம் முயற்சிகளின் பொருளென்ன ?

ஆன்மீகத்தில் ஓரளவு ஈடுபாடுடையவர்கள் சற்று மனம் தளரும் வேளைகளில் மருந்தாகவும், ஒரு பேருண்மையின் அருகே நம்மை இட்டுச் செல்லும் வழியாக, ஒரு நம்பிக்கையோடு, இதை ஏற்க வேண்டியிருக்கிறது.

ஆனால் இத்தகைய எண்ணங்கள் சாதாரண மனிதனை 'விதிப்படி நடக்கட்டும்' என்ற Fatalist appraoch க்கு தள்ளி விடாமல் இருப்பதற்குத்தான் "முயற்சி திருவினயாக்கும்", "ஊக்கமது கைவிடேல்" என்றும் கூறி வைத்திருக்கிறார்கள் போலும் !!

எந்த ஜென்மத்து 'முயற்சியோ'

எந்த ஜென்மத்தில் 'திருவினை' யோ ?

யாமறியோம் பராபரமே

No comments: