Tuesday, October 2, 2018

நம்மிடையே ஒரு பழுத்த காந்தீயவாதி


காந்திஜி இரயிலில் மட்டுமே பயணம் செய்தார். அதுவும் பெரும்பாலும் மூன்றாம் வகுப்புப் பயணமாகவே இருக்கும். மக்களுடன் தன்னை அவர் இணைத்துக் கொண்ட விதம் அப்படி.

அவர் வருவதைத் தெரிந்து கொண்டு எல்லா புகை வண்டி நிலையங்களிலும்  அவருடைய தரிசனத்திற்காக கட்டுப்பாடு செய்யவே கடினமானதான மக்கள் கூட்டம் கூடி விடும்.  அப்படிப்பட்ட  ஒரு சமயத்தில் ஒரு சிறிய புகைவண்டி நிலைய அதிகாரிக்கு காந்திஜி தன்னைஅழைப்பதாகக் கேட்டதுமே தலைகால் புரியாத சந்தோஷம்.

அவரைக் கண்டதுமே காந்திஜி தன் உதவியாளர் வி.கல்யாணத்தைக் காட்டி “ இவருக்கு ஒரு பயணச்சீட்டுக்கான பணத்தைப் பெற்றுக் கொண்டு அதை வழங்கவும். என் பயணத்தை ஏற்பாடு செய்தவர்கள் அவர் உடன் வருவதை அறியார்கள்” என்று கேட்டுக் கொண்டார். அந்த அதிகாரியோ “உலகமே கொண்டாடும் உங்களிடம் பயணச்சீட்டுக் கேட்க முடியாது “என்று மறுத்தார். அதற்கு காந்திஜி “ நீங்கள் உங்கள் கடமையிலிருந்து தவறுகிறீர்கள். நான் உங்கள் மேலதிகாரிகளிடம் புகார் கொடுக்க நேரிடும்” என்று பயமுறுத்தியதும் திரு கலியாணத்திற்கான பயணச்சீட்டு வழங்கப்பட்டது.

இன்று 96 வயதாகும் திரு V கல்யாணம் காந்திஜியின் கடைசி நான்கு வருடங்கள் அவருடைய தனி உதவியாளராக இருந்தவர்.  1944 -ல்  ஆங்கில அரசாங்கத்தில் ரூ.250 மாத சம்பள வேலையை உதறிவிட்டு காந்திஜியிடம் உதவியாளராக சேர்ந்தார். “என்னால் அறுபது ரூபாய் மட்டுமே கொடுக்க முடியும்” என்று காந்திஜி சொன்னதற்கு “ ஆசிரமத்தில் எனக்கு உணவும் உடையும் மட்டும் போதும். நான் சேவையாகவே இதை செய்கிறேன்” என்று வார்தா வில் உள்ள சேவாக்கிராமத்தில் சேர்ந்து கொண்டார்.

“ அவருக்கு வரும் கடிதங்களை பிரித்து அடுக்கி வைப்பது, பின்னர் அவர்
சொல்லும் பதில்களை குறிப்பெடுத்து தட்டச்சு செய்வதே எனக்கிடப்பட்ட கடமையாக இருந்தது.  நான் எத்தனையோ முறை தவறுகள் செய்த போதிலும் அவர் ஒரு போதும் என் மீது கோபம் கொண்டது இல்லை. பொறுமையாகத் திருத்துவார். பிறர் மனம் நோகப் பேசுவதையே அஹிம்சைக்கு எதிரானது என்பதை உறுதியாக எண்ணிய மகான் அவர். நாட்கள் கூடக் கூட அவர் மேலான மதிப்பு கூடிக் கொண்டே போனது” என்கிறார் சென்னையில் வசிக்கும் திரு கல்யாணம்.

இன்றும் தனது 96 ஆவது வயதில் சுறுசுறுப்பாக தனது தேவைகளை தானே கவனித்துக் கொண்டு  துணி துவைப்பது, சமையல் செய்வது, காய்கறிகளை விளைவிப்பது மட்டுமன்றி சுற்றுச் சூழலை தூய்மையாக வைத்துக் கொள்வதில்  அவர் காட்டும் அக்கறை அவருடைய ஆசிரமப் பணியின் தொடர்ச்சிதான்.

’ஒருவன் தனது தேவைக்கு மீறி சேமிப்பது தேவையற்றது அதை பங்கிட்டு உண்ண வேண்டும்’ என்ற கொள்கையை உறுதியாகக் கடைபிடிக்கும் அவர் தனது மாதாந்திர ஓய்வு தொகையான ரூ.பத்தாயிரத்தில் ஒன்பதாயிரத்தை அனாதை இல்லங்களுக்கும் பிற சேவா காரியங்களுக்கும் நன்கொடையாகக் கொடுத்து விடுகிறார்.

எல்லோரும் திரு கல்யாணத்தை போல் வாழ்ந்து விட்டால் ஒரு பொற்காலமே மலர்ந்து விடும்.

இது ரேடியோ சாயி-ல் இன்று வெளியான ஒரு கட்டுரையின் சிறு பகுதியே. முழுக் கட்டுரையையும் படிக்க “ Story of Gandhiji;s Secretary -Mr V Kalyanam...."
[Pics : Thanks to Radiosai] 

-------------------------------------------------------------------
இன்று காந்தி ஜெயந்தி . இந்திய வரலாற்றை மாற்றியமைத்த  அந்த மகானுக்கு  அர்ப்பணம்

Sunday, July 29, 2018

ஹைட்ரோபானிக்ஸ்-ஸில் என் பரிசோதனைகள்-1

மாடித் தோட்டம் என்பதை சற்று புதுமையாக செய்ய வேண்டும்  பலருக்கும் பலனளிக்கும் வகையில் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் உந்த பலருடைய அனுபவங்களை யூட்யூப் வீடியோக்களில் பார்த்த வண்ணம் இருந்தேன்.

என்னைக் கவர்ந்தது நீரியல் வளர்ப்பு என்றழைக்கப் பெறும் ஹைட்ரோபானிக்ஸ் முறையில் செடிகளை வளர்க்கும் முறைதான்.

இம்முறையில் நீரின் தேவை மிகக் குறைவு. அதாவது 10% மட்டுமே !!!

மேலும் இது மண்ணில்லா வளர்ப்பு முறை.  செடியின் வேர்கள் நேரடியாக நீருக்குள் சென்று வளர்ச்சியை கொடுக்கிறது.

ஆனால் என் தேடலில் இதை வெற்றிகரமாக தமிழகத்தில் செய்து வருபவர்கள் அதி நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்துகின்றனர். இதைத் தொழில் ரீதியாகத் தான் செய்யவேண்டுமே ஒழிய பொழுது போக்காக செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு முதலீடு செய்து கட்டுபடியாகாது.

எனவே இதனை எளிமைப்படுத்த வேண்டியது என் முதல் முயற்சியாக இருக்க வேண்டும் என்று தோன்றியது.  இனி படிப்பதற்கு சுலபமாக கேள்வி-பதில் பாணியில் தருகிறேன்.

1)  எளிமை படுத்த முடிந்ததா?

பரிசோதனையின் முதல் படியிலேயே வெற்றியை எதிர்பார்க்கக் கூடாது. யூடியூபில் தேடியதில் சிலர் Kratky  முறையில் சிறிய தொட்டிகளில் அல்லது பாட்டில்களில்  ஊட்டக் கரைசலை விட்டு கீரை, காய்கறிகள் போன்றவற்றில் அதிக விளைச்சலை காண முடிவதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் இவை அத்தனையும் செயற்கை இரசாயன உரமாகக் காணப்பட்டது. என்னுடைய குறிக்கோள் இயற்கை உரங்களால் வளர்க்கப் படவேண்டும் என்பதாக இருந்தது. இது பரிசோதனைக்கு இரண்டாம் கட்டமாயிற்று.

2) முதல் கட்டத்தை தாண்டினீர்களா?

ஓரளவு ஆம் என்றே சொல்லலாம். கீழே உள்ள படங்களைப் பாருங்கள். எப்படி உபயோகமற்றது என்று தூக்கிப் போடும் தண்ணீர் பாட்டில்களை செடி வளர்ப்புக்காக பயன்படுத்தப் படுகிறது என்பதைக் காணலாம்.



நீரியல் முறையில் வளர்ப்பதற்காக வலை போன்ற சிறிய கிண்ணங்கள் விற்கப்படுகின்றன. மூன்று அங்குலம் உள்ள கிண்ணம் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலுக்கு பொருத்தமாக இருக்கிறது.   விதைகள் இளம் செடிகளாக  இந்த வலைக்கிண்ணத்தில் வேர் விட்டதும் அவற்றை நீருள்ள பாட்டிலுக்கு மேலே அமர்த்தி விடலாம். எல்லா உயிர்கட்கும் இறைவன் கொடுத்திருக்கும் அதிசய ஆற்றல்  காரணமாக வேர்கள் கீழறங்கி நீரை எட்டி விடுகின்றன. இதன் பின்னர் நாம் பாட்டிலில் நீரின் அளவை கவனித்து குறையாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். வாரம் ஒரு முறை பார்த்துக் கொண்டால் போதும்.


( படத்தை சொடுக்கி பெரிதாக்கி படிக்கலாம்)


 3) ஆம் வேர் அடர்த்தியாக வெளிப்பட்டிருக்கிறது. ஆனால்  படத்தில் எல்லாம் கீரை வகைகளாகவே உள்ளனவே?

கீரைகள் வேகமாக வளரும் என்பதால் முதலில் அவற்றை முயற்சித்தேன்.  இவை எனது நம்பிக்கையை பலப்படுத்த பெருமளவு உதவி செய்தன. ஒரு வகையில் உற்சாகம் ஊட்டுவதாகவும் இருந்தது.  அதனால் தக்காளிச் செடியையும்  “கிராட்கி” முறையில்  வளர்த்துப் பார்த்தேன்.



சில நாட்களிலேயே இரண்டிற்கும் வித்தியாசம் புலப்படத் தொடங்கியது. தொட்டி மற்றும் பைகளில் வளர்ச்சி வேகம் அதிகமாகவும் நீரியல்-கிராட்கி முறையில் குறைவாகவும் காணப்பட்டது.  ஊட்டச் சத்துக் குறைவாகிக் கூடாதென்று தினமும் கம்போஸ்ட் டீ எனப்படும் இயற்கை உரத்தை காலையிலும் மாலையிலும் நீரியல் பாட்டில்களுக்குக் கொடுத்தாலும் அதிக முன்னேற்றம் காணப்படவில்லை.

                                                                                                                                                                    4) இதற்கான காரணம் என்ன ?                                       

எனக்குத் தோன்றுவது செடியின் வேர் இயற்கையாக வளர வேண்டிய விட்டம்  8 அல்லது 10 அங்குலமாக இருந்து அதை மூன்று அங்குல அளவிலே குறுக்குவது ஒரு காரணமாக இருக்கலாம் எனத் தோன்றியது. இது ஒரு பெரிய மரத்தை போன்சாய் தொட்டிக்குள் வளர்ப்பது போல எனலாம். ஆனால் செயற்கை இராசயன கரைசல்களில் இந்த பிரச்சனை இருப்பதாக யாரும் தெரிவிக்கவில்லை.  ஆகையால் அதிக அளவு (இயற்கை) ஊட்டச்சத்து பெரிய பைகளில் கிடைப்பதாலும் இருக்கலாம் என்றும் தோன்றியது.

5) அப்படியானால் கிராட்கி முறை எதிர்பார்த்த பலனை தரவில்லை எனச் சொல்லலாமா ?

இப்போதே அதை முடிவு கட்டமுடியாது. அடுத்ததாக, வலைக்கிண்ணத்தின் விட்டத்தை தொட்டியின் அளவுக்கு (8 அங்குல அளவிற்கு) பெரிதாக்கி முயற்சிக்க இருக்கிறேன்.

6) அதனால் என்ன பயன்? கிண்ணம் பெரிதானால் அதில் நிரப்ப வேண்டிய தேங்காய் நார்கழிவும் அதிகம் தேவைப்படுமே ?

அதிகம் தேவைப்படினும் ஒரு தொட்டியில் இடப்படும் மண் (அல்லது நார்கழிவை) ஐந்தாறு பெரிய கிண்ணங்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.  அடிப்படை நோக்கம் என்னவென்றால் பராமரிப்புத் தேவையை குறைத்துக் கொள்வதே.  வேர்கள் நேராக நீரின் தொடர்பில் இருக்கும் போது நமக்கு நீர் மேலாண்மை சுலபமாகிறது.

7) இந்த குறைபாடு தக்காளிக்கு மட்டுமா ? கீரைகளில் வளர்ச்சி வித்தியாசப்படவில்லையா ?

கீரைகளிலும் வித்தியாசம் அதிகமாகவே இருந்தது. உதாரணமாக தொட்டியில் பசலைக் கீரை (spinach) காட்டிய வளர்ச்சி வேகம்   நீரியல் முறையை விட அதிகமாகவே இருந்தது.

8) இதில் நீர் மேலாண்மை நிலவரம் எப்படியிருந்தது ?

கண்டிப்பாக  நீர் மிச்சப்படுகிறது. தெர்மோகோல் பெட்டியுள் நீர்  3 லிருந்து 4 அங்குல உயரம் எப்போதும் இருப்பதால்  அதில்  தினமும் நீர் ஊற்றத் தேவை இல்லை. ஆனால் தொட்டி வளர்ப்பில் மிக வேகமாக நீர் ஆவியாகி உலர்ந்து போவதால் காலையும் மாலையும் குறைந்தது அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் வரை ஊற்ற வேண்டி இருந்தது. அந்த வகையில் நீரியல் வளர்ப்பில் கண்டிப்பாக சேமிப்பு  இருக்கிறது.

9) வேறு ஏதாவது பயன் காணப்பட்டதா?

வளர்ச்சி சற்றுக் குறைவாக காணப்பட்டாலும்  இலைகள் மிக ஆரோக்கியமாக வளர்கின்றன. எதிலும் பூச்சித் தாக்குதலோ வேறெந்த வகையான நோய் அறிகுறியோ தென்படவில்லை.  வெயில் கடுமையாக இருந்தால் எடுத்து நிழலில் வைப்பது அல்லது  மழை நேரத்தில் இடம் மாற்றுவது என்பது சுலபமாக இருந்தது.

10) நீரியல் வளர்ப்பு முறையில் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் என்னென்ன ?

வலைக்கிண்ணத்தில் உள்ள நார்கழிவுக்கு - மண்ணைப் போலல்லாமல் -திடத்தன்மை குறைவாக இருப்பதால்  வேர்களுக்கு பிடிமானம் ஆரம்பநிலையில்  போதுமானதாக இருப்பதில்லை. அதிகக் காற்று செடியின் நாற்றுகளை நிலைகுலையச் செய்கின்றன. அடுத்ததாக  இதில் தரப்படும் ஊட்டச் சத்தின் அளவை நிர்ணயிக்க கடினமானதாக இருக்கிறது. நீரிலேயே இயற்கை உரங்களை கரைத்து கொடுக்கும் முயற்சியும் நம்பிக்கைத் தரவில்லை. அந்த கலங்கிய நீரில் பிராணவாயு குறைந்து செடிகள் வேர் அழுகல் நோயினால் தாக்கபட்டன. இதனால் எப்போதும் சுத்தமான நீரையே வேர்களுக்கு கொடுக்க வேண்டியதாகிறது. அப்போது தினசரி ஊட்டக் கரைசல் சொட்டு சொட்டாக கொடுக்கும் அவசியம் ஏற்படுகிறது.  சற்று பெரிய அளவில் செய்யும் போது இதை சொட்டு நீர் முறைக்கு மாற்றி  நார்கழிவில் உறிஞ்சப்பட்டு செடிகளுக்கு சேரும் வகையில் வடிவமைக்க வேண்டும்.



வாசகர்களுக்கு  நீரியலில் அனுபவங்கள் இருப்பின் அவசியம் பகிரவும். இது பலருக்கும் பயன்படும். அடுத்தக்கட்ட  பரிசோதனைகளுக்குப் பின்னர்  இதன் அடுத்த பகுதி வெளியாகும்.