Tuesday, April 14, 2020

சீனர்தம் சீதனம் -தீருமோ துயரம்?

அனைத்து வாசகர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்து

காலையிலிருந்து ஒரு நச நசப்பு. "சீனர்தம் சீதனம்" என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் மனதை அரித்துக் கொண்டே இருந்தது. அதன் காரணமாகவோ என்னவோ புத்தாண்டு வாழ்த்து சொல்லலாம் என்று முயலுகையில் இந்த சீனத்து சீதனத்திலிருந்து விடுதலை கிடைக்க பிரார்த்திப்பதே இன்றைய கட்டத்தில் பொருத்தமாகும் என்று தோன்றியது.

அதைத் தொடர்ந்து எழுந்ததுதான் இந்தக் கவிதை.

பின்னர் இதை வாட்ஸ் அப், டிவிட்டர் யாவற்றிலும் பகிர்ந்து கொண்டாயிற்று. என்னுடைய வலைப்பூ வாசகர்களுக்காக  இங்கும் வலையேற்றுகிறேன்.
சார்வரி ஆண்டில் அனைத்து குழப்பங்களும் மறைந்து உலகம் மீண்டும் சகஜ நிலைக்கு வருவதாக.

சார்வரியில் தீருமோ துயரம்

கலக்கத்தில் பிறக்குதே சார்வரி
கலக்கத்தை போக்கிடு ஈஸ்வரி

சீனர்தம் சீதனம் என சீண்டும் உலகம்-தம்
சீமைக்குள் வரவிடவும் காட்டுமே தயக்கம்

‘சீமானே எட்டி நில்லு’ ஆச்சுதே மந்திரம்
சீக்காளி ஆகாமல் தப்பிடவே தந்திரம்

மூடிய முகங்கள், மூடிய கோவில்கள்
மூடாத ஒரே இனம் காட்சி ஊடகங்கள்

ஊரடங்கி உயிரடங்கி கிடக்கையிலே
ஊடகங்களில் செவி கிழியக்  கூச்சலே

கொரோனா- கொரோனா- கொரோனா !!

அகந்தையிலே அழிவை தேடும் மனிதருக்கு
புகட்டுவேன் பாடம் என வந்தாயோ ? 

மமதையிலே மனம் போன போக்கில் சென்றவனை
மண்ணுக்குள் உன் இடம் தூரமில்லை என்றாயோ ?

மனித நேயம் மலரவும் இது தருணம் 
மக்களின் பசி யாம் அறிந்திட நீ ஒரு காரணம்

உழவனுக்கு சந்தை இல்லை
உழைப்பவனுக்கு வேலை இல்லை
தினக்கூலி இல்லாமல்
தின்பதற்கும் ஏதுமில்லை

கையில் காசிருந்தும் கடைகளில்லை- பாவம்
வாங்கித் தின்ன உணவகம் திறப்பதில்லை

ஏழையின் பாடு பெரும் பாடு 
போக்கிடு நீயும்  -சார்வரியே ! 

போதும் போதும் விகாரி தந்த பாடமே
போதாது எம் சேமிப்பு, வீட்டில் முடங்கிடவே

தீர்வொன்றை தந்திடு, சுலபமாய் குணமாக்கிட
மருந்தொன்றை அளித்திடு, மனக்கிலேசம் போக்கிட 
மாரியை பொழிந்திடு பாரெங்கும் செழித்திட 
வாழிய வையகம் வாழிய வாழியவே

Wednesday, March 25, 2020

இடர் அடி காக்க : Social distancing


    ஊரடங்கு உத்தரவு  இருபத்தியொரு    நாட்களுக்கு வந்தாச்சு. கண்ணிற்குப் புலப்படாத கொரானா வைரஸ்  வல்லரசுகளை மண்டியிட வைத்துள்ளது.  

       யாவரிடமும் எட்டி நின்று  பழகும்படி அரசாங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.  எப்படி நடந்து கொள்ள வேண்டும் அல்லது கூடாது என்பது பற்றி நூற்றுக்கணக்கான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றன.

 பல நாட்டு அதிபர்களும் ‘இந்திய’ முறை  வணக்கத்தை வணக்கத்துடன் ஏற்றுக் கொள்வதே சிறந்தது என்று பரிந்துரைக்கிறார்கள்.  

    இதற்கு இன்றைய நவீனப் பெயர் பொது விலகல் அல்லது  சமூக விலகல் ( Social distancing).  “எட்டி-நில்”  என்றும் வைத்துக் கொள்ளலாம்.

    ஆனால் எப்படிப் பார்த்தாலும் இந்த சொற்றொடர்கள் ஆங்கிலத்தில் உள்ள அந்த உணர்வை சரியாகப் படம் பிடிக்கவில்லை என்றே தோன்றுகிறது.

 சமூக விலகல் : சமூகத்திலிருந்து விலகி நிற்க என்பதாகப் பொருள் தொனிக்கிறது
எட்டி-நில் என்பதில் நீ வேண்டாதவன் என்ற பொருள் தொக்கி நிற்கிறது

அப்படியானால் சரியான உணர்வை பிரதிபலிக்க வேண்டுமானால் சாலையில் வண்டியோட்டும் போது பயன்படுத்தப்படும் Defensive driving என்கிற  சொற்றொடரின் கோணத்திலிருந்து பார்க்கலாம்.

தன்னைப் பாதுகாத்துக் கொள்வது முக்கிய நோக்கம் ஆதலால் அதையொட்டி ஒரு பெயரை யோசிக்கலாம்.

சில வருடங்களுக்கு முன் - சோப்பு விளம்பரமோ அல்லது பற்பசை விளம்பரமோ நினைவில்லை- விளம்பரத்தில் அவர்கள் அடிக்கடி  காட்டிய படம் ஒரு “பாதுகாப்பு வளையம்”.

கொரானோ போன்ற தொத்து வைரஸ்களிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் ஒரு தற்காப்பு வளையத்தை நம்மைச் சுற்றி நாமே வகுத்துக் கொள்ள வேண்டும். அதை  ஆறடி தூரம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.  

அதைவிடக் குறைவானால் அது தொத்து என்னும் இடர் தரும் தூரமாகும். எனவே  "இடர் அடி காக்க"  என்பதாக எச்சரிக்கைக் கொள்ளலாம். சுருக்கமாக இடரடி காப்போம்.

இதை சுய வேலி என்றோ அல்லது தனி அரண் என்றோ அழைக்கலாம்.  அப்படி குறிப்பிடும் போது வேறு எந்த வகையிலும் தவறாக புரிந்து கொள்ள முடியாது.

Maintain social distance =  இடரடி விலக்கு   ; சுய வேலிக்குள் இருங்கள்.

இப்போது கடைகளில் ஒருவரோடு ஒருவர் தொட்டுக் கொள்ளாமல் இருக்கும் பொருட்டு  முன்னெச்சரிக்கை  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

ஆனாலும் நம் எச்சரிக்கையில் நாம் ஒரு சுயவேலி அமைத்துக் கொண்டால் அதற்குண்டான இடைவெளி விட்டு நடமாடினால் சிறந்த தற்காப்பு ஓட்டுனராகலாம்.



    எவ்வகை இடர் வரினும்  சம்பந்தர் பெருமான் அருளிய திரு நீற்றுப்பதிகம் அதைப் போக்கக் கூடியது. அது  எல்லா வகை நோய்களினின்றும் காப்பாற்ற வல்லது என்பது அடியார்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.  

  கூன்பாண்டியனின் தீராத வெப்பு நோய் சமணர்களால் தீர்க்க முடியாதிருந்தது. அப்போது  இப்பதிகத்தை ஓதி சிவபெருமானை துதி செய்து அவனுக்கு திருநீறு வழங்கினார். மன்னனது நோயும் நீங்கி சம்பந்தப் பெருமானின் பாதங்களைத் தொழுதார்.

   கொரோனாவின் இடர் களைய, நம்பிக்கையுள்ளவர்கள், இப்பதிகத்தை சொல்லி திருநீற்றையணிந்தால் தம்மைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக் கொண்டவராவார்கள்.

முதற்பாடல் மட்டும்
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு  துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
செந்துவர் வாய் உமைபங்கன் திரு ஆலவாயான் திருநீறே

உலகம் ஒரு கடினமான கால கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. விரைவிலேயே  அந்த இறைவன் அருளால் யாவரும் நல்ல வண்ணம் மீள, வாழப் பிரார்த்திப்போம்.

திருச் சிற்றம்பலம்.