Saturday, September 22, 2007

தினமொரு சுனாமி

"சீக்கிரம் சீக்கிரம்" என்றபடி வேலை துரிதமாக நடந்து கொண்டு இருந்தது.

"ராணியம்மா அவசரப்படுத்துறாங்க. சாயந்திரதுக்குள்ள முடியணுமாம். அப்புறம் மழை வந்திடுமாம்" என்ற பேச்சும் அவசரத்துக்கு காரணமாய் இருந்தது.

"பேசாம இழுத்துக்கிட்டு போயிடுவோமா. வெட்டி கூறாக்கிக் கொண்டு போணும்னா இன்னிக்கு முடியாதும்மா"

"அதென்ன இழுத்துக்கிட்டு போற மாதிரியா இருக்கு. இம்மாம் கனம் கனக்குதே! யம்மாடி" என்று ஓரிரு பெருமூச்சுக்கள்.

"இன்னும் நூறு பேர் வந்தாலும் முடியாது போலிருக்கே. அங்க பச்சபுள்ளைங்க சோத்துக்கு அழுதுகிட்டு இருக்கும்"

" ராணி என்ன சொன்னாங்க. இந்த மாதிரி சந்தர்ப்பம் ஆயுசுல எப்பனாச்சம் ஒரு வாட்டிதான் வருமாம்.அப்புறம் ஆயுளுக்கும் சோத்து பிரச்சனை இருக்காதுன்னு சொல்லிட்டாங்களே! "

"ஆமா அப்ப மாத்திரம் உக்காந்து சாப்பிட முடியுமா இந்த ஆம்பிளைங்க மாதிரி" என்று ஒரு அலுப்புக் குரல்.

சிறிது நேரம் அமைதியாக வேலை தொடர்ந்தது.

திடீரென்று "இதென்னாடி இது. இப்பவே மழ வந்துடுச்சு போல இருக்குதே. எல்லாம் அப்படியே கெடக்கட்டும். போட்டு திரும்புங்க " என்று ஒரு குரல்.

அதுவரை ஒரே சீராக போய்க்கொண்டிருந்த வேலையினிடையே ஒரு பெரும் பரபரப்பு. திசை தெரியாத ஒரு ஓட்டம்.

"அடியே ! எங்கேடி போய்டீங்க?"

"பாதி பேரக்காணோமே"

"அய்யோ இது சுனாமி. மழை இல்ல"

என்று பல விதமானக் கூக்குரல்கள்.

நான் ஒரு குற்ற உணர்வோடு குளியலறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தேன்.

எப்படி இவ்வளவு அஜாக்கிரதையாகி விட்டேன்?


சிறிது நேரத்திற்கு முன் தான், முகச்சவரம் செய்து கொள்ளும் போது இந்த சிற்றெறும்புகள் செத்து போயிருந்த கரப்பான் பூச்சியைச் சுற்றி மொய்த்துக் கொண்டு நடத்திய உணவு வேட்டையை ரசித்துக் கொண்டிருந்தேன். சிறிது சிறிதாக அவைகள் தம்மிலும் பல ஆயிரம் மடங்கு பெரிய கரப்பானை நகர்த்த முயலுவது கலிவர்- லிலிபுட் கதையை ஞாபகப்படுத்தியது.

அது கடினம் என்று உணர்ந்து பின் அதையே கொஞ்சமாக கொறித்து கொறித்து வேக வேகமாக எடுத்துச் செல்வதையும் கண்டு படைப்பில் எல்லா ஜீவன்களுக்குள் இயங்கும் அந்த அபார சூட்சும அறிவை அல்லது சக்தியை எண்ணி அதிசயித்தேன்.

மனித சமுதாயமும் இவ்வெறும்புகளைப் போல் இணைந்து இயங்க கற்றுக் கொண்டால் இந்த உலகம் ஒரு அமைதி பூங்கா ஆகிவிடுமே. அவைகள் எப்படி பேசிக்கொள்ளுகின்றன ? சாலமன் கதையில் வரும் பீர்ஷீபா ராணியைப் போல் எறும்புகளின் பாஷையை தெரிந்திருந்து கொள்ளும் திறமை நமக்கும் இருந்திருந்தால்..........

இப்படி பலவகையான சிந்தைகளுக்கிடையில் ஷவரைத் திருகி குளியலை முடித்தேன். விளைவு சிற்றெறும்புகளின் சுனாமி. அவைகளின் விதியை எதிர்பாராத விதமாக நானே முடித்து விட்டேன். ஒரு சில எறும்புகள் நீர் திவலைகளுக்கிடையே திக்கித் திணறி வெளியேறும் வழி தேடிக்கொண்டிருந்தன. மனதில் குற்ற உணர்வு என்னவோ செய்தது. தினம் தினம் எத்தனை கோடிக் கணக்கான ஜீவன்கள் இப்படி பிறந்து மறைகின்றன !

இயற்கையின் பார்வையில் நாமும் வெறும் துரும்புதானே. ஒரு பூகம்பம் புயல் அல்லது சுனாமி போன்ற பெரும் அழிவு என்று நாம் வகைப்படுத்துவது இயற்கைக்கு ஒரு சிறிய அட்ஜஸ்ட்மெண்ட் தான். உட்கார்ந்திருக்கும் போது நாம் அடிக்கடி கால் மாற்றிக் கொள்வது போல. அந்நேரங்களில் கால்களின் கீழே என்ன உள்ளது என்று யோசித்திருப்போமா அல்லது யோசிக்கத்தான் போகிறோமா ?

"என்ன பாத்ரூம்ல கரப்பானெல்லம் செத்துக் கெடக்கு, கவனிக்கிறதே இல்லையா ?" என்று சொல்லியபடி என் மனசாட்சியைத் திசைத்திருப்ப சத்தம் போட்டு யாருக்கோ சொல்வது போல் சொல்லிக் கொண்டு போனேன்.
அதற்கெல்லாம் யாரும்செவி கொடுப்பது இல்லை என் வீட்டீல்.

எறும்புகளைப் பற்றி நானறிந்த குறிப்பு : தேனீக்களைப் போலவே பெண் எறும்புகள் தான் வேலை செய்யும். ஆண் எறும்புகள் சோம்பேறிகள். எறும்புகள் முட்டையை எடுத்துக் கொண்டு சுவரேறினால் அன்று மழை வரும். எறும்புகளுக்கும் ராணி எறும்புதான் தலைவி.

மேலே உள்ள உரையாடலில் "....உக்காந்து சாப்பிட முடியுமா இந்த ஆம்பிளைங்க மாதிரி" என்ற கிண்டல் வரை குளியலுக்கு முன் நான் செய்து வைத்திருந்த கற்பனை. மேலும் எப்படி கொண்டு செல்வது என்று திணறிக் கொண்டிருந்த நேரத்தில் ’உரையாடல் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும்’ என்பதாக நிகழ்வுகள் தாமே முடிவுக்கு கொண்டு சென்று விட்டன.

Sunday, August 5, 2007

சனிபெயர்ச்சியும் நம் (போறாத) காலமும்

காலையிலிருந்து ஒலிபெருக்கி மூலம் சனீஸ்வரனை திருப்திபடுத்தும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. இன்றைய பெயர்ச்சி மூலம் என் ராசி தப்பித்துவிட்ட தைரியத்தில் இதை எழுதவில்லை. எனக்கும் சனீஸ்வரனை கண்டால் பயமும் பக்தியும் உண்டு. ஆனாலும் நம்மவர்கள் சில விஷயங்களை அளவுக்கு மீறி பெரிது படுத்தி (குட்டையை குழப்பி) வியாபாரத்தை (மீன்) பிடிக்கின்றனர். ஆடித் தள்ளுபடி, வேலன்டைன் டே போன்றே இந்த பெயர்ச்சி விவகாரமும். செல்வம் ஒரு கையிலிருந்து மற்றொரு கைக்கு மாறுவதற்கு இதுவும் ஒரு வழி போலும். இருப்பவர்கள் கொடுக்கட்டும். நமக்கென்ன ?

சில வருடங்களுக்கு முன் ஒரு ஆராய்ச்சி மாநாட்டின் இடைவேளையில் இத்தகைய நம்பிக்கைகளைப் பற்றி உரையாடலில் பங்கு கொள்ள நேரிட்டது. அப்போது சொன்ன சில கருத்துகளை வைத்து எழுதப்பட்டது.

கேள்வி- பலரும் பல நூற்றாண்டுகளாக கேட்டுக்கொண்டிருப்பது தான்- எங்கோ உள்ள கிரகங்கள் இங்குள்ள மனிதர்களை எப்படி பாதிக்க முடியும் ?

பதில் : கிரகங்கள் எதுவும் வந்து யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை. அவை தம் வழியே தமக்கென்று வகுத்துள்ள வான வெளிப் பாதையில் சுற்றி வருகின்றன.

கேள்வி : அப்படியானால் ஜாதகம், சோதிடம் எல்லாம் பொய்யா ?

இதற்கு பதில் காண்பதற்கு முன் ஒரு பதில் கேள்வி. உங்களால் ஜப்பானில் நவம்பர் மாத தட்ப வெப்ப நிலையையும் மடகாஸ்கரில் பிப்ரவரி தட்ப வெப்ப நிலை மழை, காற்று நிலவரம் பற்றி சொல்ல முடியுமா ?

ஒரு பூகோளப் புத்தகத்தை எடுத்துப்பார்த்தால் முடியும்.

பூகோளப் பாடத்தில் அது எவ்வகையில் விளக்கப் பட்டுள்ளது ?

அவ்வூரின் தட்ப வெப்ப நிலையை அது அமைந்துள்ள அட்சரேகை, தீர்கரேகை கணக்கு கொண்டு கணிக்க முடியும்.

பூமியின் மேல் யார் அட்சரேகை தீர்கரேகை என்பதை நிர்ணயித்தது ?

பூகோள அறிஞர்கள் தான்.

போகட்டும். இந்த வருடம் மழை வந்ததே அடுத்த வருடம் அதே தேதியில் மீண்டும் வருமா?

வரலாம், வராமலும் போகலாம். அட்ச தீர்க ரேகைகள் வெறும் கணிப்பதற்கான ஒரு சாதனமே தவிர அவைகளே எல்லாவற்றையும் நிர்ணயிப்பதில்லை.

உங்களுடைய முதல் கேள்விக்கு இப்போது பதில் வந்து விட்டது.

எப்படி? புரியவில்லையே !

எப்படி அட்ச ரேகையும் தீர்க ரேகையும் ஒரு பகுதியின் பொதுப்படையான காலமாற்றங்களை குறிக்க இயலுமோ அது போலவே குறிப்பிட்ட கோள்களின் நிலையை கொண்டு பொதுவான சில விளைவுகளை கணிக்கும் முறை சாத்தியம் தானே ?

நீங்கள் சொல்வது பூகோள ரீதியாக உணரப்படுவதானால் ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் தனி மனிதர்களின் வாழ்க்கையில் எப்படி தாக்கல் இருக்க முடியும்?

அதுவும் கணிப்பிற்கு உரியதுதான். சற்று அதிகமான விவரங்கள் தேவைப்படுகின்றன. பிறந்த இடம், நேரம், நட்சத்திரம் போன்ற கூடுதல் விவரங்களை வைத்து கணிக்கும் முறையை ஏற்படுத்தியுள்ளனர்.

அப்படியானால் ஒரே தேதியில் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் பிறந்த இருவரின் வாழ்க்கையும் ஒரே மாதிரி இருக்குமா?

இருக்கவேண்டிய அவசியமில்லை. வினைப்பயன் என்ற முக்கியமான இன்னொரு விவரம் நம் எல்லோரிடத்தும் மறைக்கப்பட்டுள்ளது. கணிக்கப்படும் எல்லா பலன்களையும் ஒரு அளவுக்குத்தான் புரிந்து கொள்ள முடியுமே தவிர உண்மையான பரிமாணம் அந்த காலக்கட்டத்தில் அனுபவிக்கும் பொழுதுதான் புரியும். ஏனெனில் பலன்களும் யாவும் அவரவர் வினைப்பயன் பொறுத்ததே. நீங்கள் குறிப்பிட்ட இருவருக்கும் முப்பது வயதிற்கு மேல் கஷ்டங்கள் (ஏழரை சனி) வருமென்றால் ஒருவர் செய்யும் தொழிலில் பெரிய கஷ்டங்களை சந்திக்கலாம். இன்னொருவர் உடல் நல ரீதியான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம்.

எல்லாம் வினைப்பயன் என்றால் கோள் பெயர்ச்சிகளை நம்பி ஆவதென்ன ?

தேவையில்லை. நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும் நடப்பது நடக்கத்தான் போகிறது.

பின் எதற்காக இந்த வழிபாடு என்ற கூத்து ?

நமக்கு வீட்டை விட்டு வெளியே போக வேண்டிய கட்டாயம். முக்கியமான ஒரு வேலை; உடனே செய்தாகவேண்டும். ஆனால் பலத்த மழை வந்து கொண்டிருக்கிறது. கையிலே ஒரு குடை எடுத்துச் செல்லுகிறோம். கஷ்ட காலம் என்கிற மழைக்காலத்தில் நம்பிக்கை என்பதான குடை சிலருக்கு பயன்படுகிறது. அவர்கள் அதை பிறர் கண்களைக் குத்துவது போல் பிடித்துச் செல்லாமலிருந்தால் போதும்.

ஆனாலும் இதை ஒரு விஞ்ஞானம் என்று ஒப்புக்கொள்ள முடியவில்லையே ?

விஜய் தொலைக்காட்சியில் Grand Master G.S.Pradeep இருபத்தியொரு கேள்விகளுக்குள்ளாக நாம் நினைத்துக்கொள்ளும் ஒரு பிரபலமான நபரையோ, இடத்தையோ அல்லது வரலாற்று நிகழ்சியையோ சொல்லி விடுவதை பார்க்கிறோம். அதற்கு பிண்ணணி அவர் தெரிந்து வைத்திருக்கும் விஷயஞானமும் கேள்விகளை கொண்டு செல்லும் விதமும்தான். அது போல ஒவ்வொரு கிரகத்தின் குணங்களும், பன்னிரெண்டு ராசிகளில் அவைகளின் நிலைப்பாட்டின் விளைவுகளும் புத்தகங்களிலே கிடைக்கப்பெற்றாலும் சேர்க்கை விளைவுகளை (Combined effect) கணிக்கும் பொழுது அதற்கு தனித்திறமை தேவைப்படுகிறது, இது பிரதீப்பின் திறமை போன்றது. அவரவர் திறமைக்கு ஏற்றார் போல் பலன்கள் கணிக்கப்படுகின்றன. கேட்டுச் சென்றவர் அனுபவத்திற்கு ஏற்ப நம்பிக்கையோ அவநம்பிக்கையோ எழுகிறது.

( இது போல் விவாதங்களில் நடுநிலை வகிக்க விழைவோரின் பயனுக்காக எழுதப்பட்டது.)